Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Monday, January 5, 2015

பொங்கல் நினைவுகள்


'என்ன மாப்ள பொங்கலு வருது. பொங்கபுடி எப்பம்?'

-சைக்கிளில் போய்க்கொண்டே யாராவது கேட்பார்கள். பொங்கல் துட்டும் பொங்கல் இனாம் பேச்சும் மார்கழி முதலிலே ஆரம்பித்துவிடும். பொங்கலுக் கான கொண்டாட்ட மனது அங்கிருந்துதான் தொடங்கும்.

தீபாவளியின் பட்டாசோ, சித்திரை விசு தேரோட்டமோ, மந்திரமூர்த்தி கோயி ல் கொடையோ, அம்மன் கோயில் கரகாட்டமோ தந்திராத மகிழ்ச்சியை, அப்போது பொங்கல் மட்டுமே எனக்குத் தந்தது. காரணம் என்னவென்று தெரியவில்லை. காரணமற்ற சந்தோஷமாகவும் அதைக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு காரணம். என்னவென்று அறியாத காரணம்.

வயக்காட்டில் ஆற்றுப்பாலத்தில், பிள்ளையார் கோயில் எதிரில் இருக்கிற ஆலமரத்தில், மாமன், மச்சினன்களுக்கான கிண்டல் கேலியில்தான் பொங்கல் பேச்சு தொடங்கும்.

'என்னடே, தல பொங்கலுலா. மாமனாரு வீட்டுலருந்து ரெண்டு லாரிக்கு வந்திருமே சீரு'- என்பான் ஒருவன்.

'ஆமா. வருது. இவனுவ தருவானுவோன்னுதான் காத்திருக்கேன்'- என்பான் அவன்.

'தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டு எம்மச்சான்மாருவோ என்னத் த கொடுத்துட்டானுவோங்க. நாலஞ்சு காய்கறியும் ரெண்டு கரும்பும்தான். இத நான் வாங்கிக்கிட மாட்டனாடெ? சீராம் சீரு'

'ஏல, அதுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்த நாள்ல இருந்து வருஷா வருஷம் பொங்கப்புடி கொடுத்திட்டே இருப்பாவுளா? கேக்காம் பாரேன்?- இப்படியும் நடக்கும்.

அவிச்ச அல்லது சுட்ட பனங்கிழங்குடன் பெரியாச்சி உட்கார்ந்துகொள்வாள் வாசல் ஓரத்தில். காதில் பாம்படம் ஆட, சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டு உரித்து உரித்து ஓலை பெட்டியில் போடுவாள். சுட்ட பனங்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்குவாள். அவளைச் சுற்றி நானும் அக்காவும் சித்தி மகள்களும் மாமா வீட்டுப் பிள்ளைகளுடன் உட்கார்ந்து கொள்வோம். எச்சில்  ஊறும் வாயுடன் பனங்கிழங்கைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

'எல்லாரும் எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க. ஆனா, எங்கூட சரலு மண்ணு எடுக்க பொட்டிய தூக்கிட்டு வந்திரணும், கேட்டேளா, பிள்ளைலா?'
'ம்ம்' என்ற கோரஸுடன் பெட்டிக்குள் போட்டிப் போட்டு கையைப் போடு வோம். கிடைத்ததைச் சுருட்டி அங்கேயே சண்டை போட்டுப் பிடுங்கி, ஓடி தின்று முடித்ததும் சிறிய நார்ப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஐயமார் தெருவுக்குப் பின்னால் இருக்கிற, கருவேல மரங்கள் நிறைந்திருக்கிற இடத் துக்குப் போவோம்.

மம்பட்டி கொண்டு வருகிற பெரியாச்சி, ஏற்கனவே இருக்கிற கிடங்கு அல்லது புதிதாக ஓர் இடத்தில் மண் வெட்டுவாள். அதில் மஞ்சளும் கற்களுமாக இருக்கிற அந்த சர சர சரல் மண்ணை அள்ளிப் பொட்டியில் போடுவாள். ஒவ்வொரு பெட்டி நிறைந்ததும் தூக்கிக்கொண்டு போக வேண்டும். அக்கம் பக்கத்தில், கிடங்குகளில் பக்கத்து வீட்டுக்காரர்கள் தோண்டிக் கொண்டிருப் பார்கள். வேகவேகமாக ஓடி, வீட்டு வாசல் முன் கொட்டிவிட்டு வரவேண்டும். நான்கைந்து நடை முடிந்ததும் வியர்த்து விறுவிறுக்கும் ஆச்சி, அவளுக்கே மனசு வந்து, 'சரி போதும் பிள்ளைலா. எல்லாரும்  வாய்க்காலுக்கு வாங்க. கை, காலு கழுவிட்டு வருவோம்' என்று அழைத்துச் செல்வாள்.

வீட்டுக்குத் திரும்பினால் மாமாமார்கள், அந்த சரல் மண் கொண்டு சமதள மாக்கி இருப்பார்கள் தரையை. தண்ணீர்த்தெளித்து, பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும். படுத்து உருளலாம் போலிருக்கும். 'ராத்திரி, நான் இங்கதான் படுப் பென்' என்று இடத்துக்கு நடக்கும் சண்டை. பிள்ளைகளின் கூக்குரலில் சின்ன ஆச்சிக்குச் செவ்வியடைக்கும்.

'ஏல வெளிய போயி சத்தம் போடுங்க. காது விண்ணு விண்ணுங்குலா' என் பாள் அவள்.

காலையில் செம்மண் கொண்டு அடுப்புக் கட்டி செய்வார்கள் அம்மாவும் ஆச்சியும். எப்படி வரவேண்டும் என்று நினப்பார்களோ அப்படி வராது அது. சதுரமாகவோ அல்லது வேறொரு வடிவிலோ இருக்கும் அந்த அடுப்புக்கட்டி. 'சரி இது போதும்' என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிவிட்டு மச்சியில் காய வைத்துவிட்டு வருவார்கள்.

வீட்டில் வெள்ளையடித்துப் படிகளுக்கு காவி பட்டை அடித்திருப்பார்கள். தேவையில்லாத சட்டைகளும் சேலைகளும் தலையணை ஆனது போக, கிழிந்து தொங்கும் துணிகள் பொட்டலம் கட்டி, பழையன கழிதலுக்காக, கழனித் தொட்டி ஓரத்தில் காத்திருக்கும்.

ஆற்றுக்குப் போகும் வழியில் இருக்கிற தோப்பில் பனை ஓலைகளை வெட்டிக் காய வைத்திருப்பார்கள். பரமசிவத்திடம் சொல்லி  காய்ஞ்சதாகப் பார்த்து கொஞ்சம் அள்ளிக்கொண்டு வருவார் பெரிய மாமா. தோப்பில் காய்ந்து தொங்கும் தென்னமட்டைகளும் சில்லாட்டைகளும் தூக்கணாங் குருவி கூடுகளும் ஏற்கனவே வீட்டின் ஓரத்தில் விறகாவதற்கு காத்திருக்கும். இந்த விழாவுக்காகவே கருவேலப் பிறை அருகில் விறகு கட்டுகள் விற்ப னைக்கு வைத்திருப்பார்கள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கட்டுகளுக் கான பேரத்தில் ஈடுபட்டிருப்பார்கள் தெருக்காரர்கள்.

ஊரில், கொஞ்சம் ஃபேமஷான லட்சுமண தாத்தா கடையில், பொட்டல் புதூரில் இருந்து காய்கறிகளை இறங்கி இருப்பார்கள். வழக்கமாக இருக்கும் கடைக்கு வட பக்கமும் இடபக்கமும் இருக்கும் பகுதியையும் சேர்த்து கடை எக்ஸ்டன்சன் ஆகியிருக்கும். தரையில் சாக்குகளை விரித்து காய்கறிகளை பரப்பி இருப்பார்கள். கரும்புக்கட்டுகளும் மஞ்சள் குலைகளும் பழத்தார் களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக அங்கு வரும்போது அடிக்கும் புளியும் கருப்பட்டியும் கலந்த வாசனை இப்போது இருக்காது. மஞ்சள் வாசனையும் பழத்தார்கள், பனங்கிழங்கு வாசனைகளும் சேர்ந்து புதுவித வாசனையை தரும். வியாபாரம் மூன்று நாட்களுக்கு முன்பே சூடு பிடித்திருக்கும். கூட்டத்தை சமாளிக்க லட்சுமண தாத்தாவின் சொந்தக்காரர் கள் தற்காலிகமாக வேலைக்குச் சேர்க்கப்பட்டிருப்பார்கள்.

மூன்று நான்கு நாட்களுக்கு முன்பே முத்தையா மாமா டெய்லர் கடையில்  துணி வாங்க கூட்டம் கூடியிருக்கும். அவர், நாளைக்கு நாளைக்கு என்று பொங்கலுக்கு முந்தினநாள் தருவார் துணிகளை.

இரவு முழுவதும் வீட்டுக்குள்ளும் வெளியிலும் மாக்கோலம் போடுவது, சாமி படங்களைத் துடைப்பது, விளக்கைக் கழுவுவது என வேலைகள் இருக்கும் எல்லோருக்கும்.

வீட்டுக்குப் பின்பக்கம், மைக் செட் வைத்திருக்கிற மந்திர மாமா  பொங்கலை முன்னிட்டு, அவர் வீட்டு இரவு வேலைகளுக்காக, எம்.ஜி.ஆர். படப் பாடல் களைப் போட்டிருப்பார். அந்த ராத்திரியில் அது ஊரெங்கும் மெல்லிசாகக் கேட்டுக் கொண்டிருக்கும். திடீரென்று கிட்னம்மா சித்தி அந்தப் பாடலுடன் தானும் சேர்ந்து பாடுவது இனிமையாக இருக்கும். வாய்க்காலில் தண்ணீர் எடுக்க ராத்திரியிலும் பெண்கள் கூட்டமாகச் செல்வார்கள். இவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு என்பது மாதிரி, எப்போதும் முகத்தில் பவுடர் அப்பியிருக்கிற, மதுரா கோட்சில் வேலைபார்க்கிற முருக மாமா, அந்தக் கூட்டத்தில் செல்லும் தனது காதலிக்காக, ஒரு கணைப்பைக் கொடுத்து விட்டு, நாற்பது வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தின் முன் உட்கார்ந்து கொண்டு தன் னைக் காட்டுவார்.

'வேலை' பார்த்த, விளையாண்ட அசதியில் எப்படி தூங்கினோம் என்று தெரி யாது. பனி, பதம் பார்க்கும் அதிகாலை நான்கு மணியளவில், கதற கதற எழுப்பப்பட்டு வாய்க்காலுக்கு குளிக்கச் செல்வோம். கும்மிருட்டில் நடக்கும் போதே குளிரும். தூக்கம் வேறு கண்ணை இழுக்கும். கொட்டாவி விட்டுக் கொண்டே  வாய்க்கால் கரையில் நிற்கும்போது  சலசலத்து ஓடும் வாய்க்கால் தண்ணீரின் சத்தம் ஓர் இசையை போல இனிமையை தரும். அதைக் கேட்டுக் கொண்டே, பார்த்துக்கொண்டே நின்றால் பெரிய அத்தை ஒவ்வொரு வரையாகத் தண்ணீருக்குள் பிடித்துத் தள்ளுவாள். தண்ணீர் தெறித்து கரையில் நிற்பவர்கள் மேல் பட்டதும் வரும் சிலிர்ப்பு, ஒருவித பய படபடப்பு. ஒரு முங்கு தான். பிறகு குளிர் தெரியாது. ஆனால் அந்த ஒரு முங்குக்குள் உயிர் போய் வந்துவிடும்.

வீட்டுக்கு வந்ததும் சட்டையின் ஓரத்தில் மஞ்சள் தடவி வைத்திருக்கிற துணி மணிகளை அணிந்து கொண்டு வாசலுக்கு வரவேண்டும். அங்கு பெரிய வாழை இலையில் , புது அரிசி, தேங்காய், பழங்கள், காய்கறிகளில் இருந்து எல்லாம் வைக்கப்பட்டிருக்கும். அதன் முன் அடுப்புகட்டிகள் வைக்கப் பட்டு, மஞ்சள் குலை கட்டிய புதிய பொங்கல் பானை ஏற்றப் பட்டிருக்கும். அடுப்பில் மூன்று பக்கமும் நாங்கள் உட்கார்ந்துகொண்டு பனை ஓலைகளையும் சில்லாட்டைகளையும் அள்ளி அள்ளி அடுப்பினுள் திணிப்போம். அப்போது வருகிற வெக்கை, குளிருக்கு இதமாக இருக்கும். சூரியன் வருவதற்கு முன்பே பொங்கல் விட்டு முடித்திருப்போம். சட்டியை இறக்கி சாமி படங்களுக்கு முன்பு வைத்துவிட்டு அடுப்பில் அனைத்து காய்கறிகளும் கலந்த குழம்பு வைப்பார்கள். அதன் மணமே இனிமையாக இருக்கும்.

மொத்தக் குடும்பமும் சாமி படத்தின் முன் விழுந்து கும்பிட்டு நெற்றியில் நாமம் போட்டுவிட்டு கரும்பு வெட்டு நடக்கும். வாழை இலையில் இருக்கும் பழங்களையும் கிளிமூக்கு மாங்காயையும் எடுக்க கைகள் பரபரக்கும். சாமி கும்பிட்டுவிட்டுதான் எடுக்க வேண்டும் என்பதால் முடிந்த மறு நிமிடமே மாங்காய் எடுக்க எங்களுக்கு நடக்கும் சிறு சண்டை. பிறகு சித்தியின் புண்ணியத்தில் அது வெட்டப்பட்டு பங்கு வைக்கப்படும்.

 இன்னும் விடிந்திருக்காது. அதற்குள் அடுத்த வீட்டில், கீழ வீட்டில், மேற்கே எங்கோ ஒரு வீட்டில் என பொங்கல் விட்ட குலவை சத்தம் இடை வெளிவிட்டு வந்து கொண்டே இருக்கும். அந்த சத்தம் தரும் இனிமையை அடுத்த வருட பொங்கல் வரை பாதுகாத்து வைத்திருப்போம்.

மாலையில், தெருக்களில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். பரிசாக வருகிற சோப்புடப்பாவோ, பவுடரோ, டிபன் பாக்சோ கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எல்லா போட்டியிலும் சேர்ந்துவிடுவது வழக்கம். பெரியவர்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் அடிதடி சண்டை கூட பொங்கல் ஸ்பெஷல்தான்.

சென்னையின் அடுக்குமாடி புறா கூண்டு வீட்டில், ஸ்டவ்வில் வைக்கப் படும் இப்போதைய பொங்கலில், ஏராளமான நினைவுகளும் ஏக்கங்களும் மட்டுமே பொங்கி பொங்கி வருகிறது.

Sunday, February 24, 2013

மனதின் விளையாட்டு

மனம் ஒரு பெருங்கடலை, புயலை, அன்பை, ரணத்தை, வன்மத்தை, காதலை தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் ஆழ்கருவி. அந்த கருவி, கனவை நனவாக்கும் நனவை கனவாக்கும். நல்லவன் & கெட்டவன் என்கிற எதிர்ப்பதங்களை உருவாக்கும். எல்லோருக்குள்ளும் இருக்கும் சிறு நோயை பெரு நோயாக்குவதும் அதுதான். அப்படிப்பட்ட நோயை தாங்கியவனாகத்தான் நாராயணன் என்கிற நாரா இருந்தான். அவனை மனநோயாளி என்று சொல்லிவிடமுடியாது. சொல்லாமலும் இருக்க முடியாது. அவன் தோற்றமும் நடை, உடை பாவனைகளும் அதிகம் படித்தவனைப் போல் தெரிந்தாலும் அவன் அப்படியில்லை. உள்ளூரில் எட்டாம் வகுப்பை முடித்துவிட்டு படிப்புக்கு டாடா காட்டியவன். அவன் முகத்தில் தெரியும் கம்பீர களையும் அணியும் உடைகளும் பணக்கார வீட்டுப் பிள்ளையாகத் தோன்றும்.

‘‘ஏலெ நாரை, ஒன்ன மட்டும் பாரதிராசா பாத்தார்ன்னா, நடிக்க கூட்டிட்டுப் போயிருவார்ல’’ என்று வீட்டு வாசலில் நெல்லை காயப்போட்டுக் கொண்டே மூக்கம்மா சித்தி சொல்வாள். அவளுடன் சேர்ந்துகொண்டு, ‘‘பெறவு நாரைக்கு பொண்ணுகொடுக்க ஊரெல்லாம் போட்டிதான், போ’’ என்பாள் பிரேமா அத்தை.

‘‘நாரை நாரைன்னு கூப்புடாதியோ’’ என்று வெறுப்பை காட்டிவிட்டு, ‘‘புது நெல்லு புது நாத்து, சூட்டிங்கு நம்ம கொளத்து கரையிலதான நடந்தது. அப்பம் பாரதிராசாவ பாத்தேன். எங்க நடிக்க கூப்டுருவாரோன்னு நா தான் அவருகிட்ட போவல’’ என்பான் நாரா.

‘‘அப்டியா?’’ என்றவாறு பேச்சு நடக்கும். எடக்கும் பேச்சுமாக எப்போதும் அலையும் அவனை ஊரில் எல்லோருக்கும் பிடிக்கும். போகிற வருகிறவர்கள் எவராக இருந்தாலும் அழைத்து பேசிவிட்டு செல்கிற பாசக்காரன். பெண்கள் என்றால் ஒவ்வொருவருவருக்கும் ஒரு உறவு முறை வைத்துவிடுவான்.

‘‘ஏ மல்லிகாத்த. வயலுக்கா போறியோ. களையெடுக்கணும்னு மாமா நேத்து சொன்னாவோள?’’ என்று ஆரம்பிப்பான். பிறகு, எதிர்படுகிற ஆட்கள். இரண்டு மூன்று சுமைகளை யாராவது தூக்கிச் சென்றால் ஓடி போய், ‘‘இப்டியா மூசு மூசுன்னு தூக்கிட்டுப் போவாவோ? கழுத்து கிழுத்து புடிச்சுக்கிட்டுன்னா என்ன பண்ணுவ? கொண்டா, ஒன்னை. நா தூக்கிட்டு வாரென்’’ என்று உரிமையோடு வாங்கிக் கொள்வான்.

கேரள மாநிலம் புனலூரில் அணை கட்டுவதற்காக ஊரில் இருந்து பெருங்கூட்டம் ஒன்று அங்கு புறப்பட்டது. விளையாட்டு, வேடிக்கை என்றிருந்த நாராவும் முதன் முதலாக வேலைக்கென புறப்பட்டான். வேலை என்பதை விட்டுவிட்டு அவனது நோக்கம் ஊர் சுற்றிப் பார்ப்பதில் இருந்தது. வெளியூருக்கு அவனை அனுப்புவதில் வீட்டில் உடன்பாடில்லை. அவனது அம்மா புண்ணியத்தாயி, எவ்வளோ சொல்லியும் போயே தீருவது என்றான். அப்பாக்காரர் கண்டுகொள்ளவில்லை. ‘‘வெளிய போய்ட்டு வந்தாதான் நாலு வெவரம் தெரியும்’’ என்று மனைவிக்கு அறிவுரைச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘கூட நாங்கதானெ போறோம். வேற ஆளுவோ கூடயா ஓம் மவன அனுப்புதெ?’’ என்று பக்கத்து வீட்டு செல்லையா, சொன்னதை அடுத்து புண்ணியத்தாயி சம்மதித்தாள்.

இதையடுத்து சனிக்கிழமை இரவு ஊரில் இருந்து கிளம்பிய லாரியின் மீதமர்ந்து ஊர்காரர்களோடு பயணப்பட்டான் நாரா. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை லீவு. ஊர் சுற்றிப்பார்க்கச் சென்றுவிட்டு திங்கள் கிழமையில் இருந்து வேலை தொடங்கியது. அங்கேயே தங்குவதற்கு வீடு கொடுக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இங்குள்ள கிராமத்தை குட்டியாக அங்கே உருவாக்கி இருந்தார்கள்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை கேரளாவில் இருந்து யாராவது ஊருக்கு வந்து, போய் கொண்டிருந்தனர். அவர்கள் வழி மற்றவர்கள் பற்றிய செய்திகள் வரும். நாராவும் அவ்வப்போது வந்து கேரளாவின் அதிசயங்களை, ஆச்சர்யங்களை ஊரில் பரப்பிக்கொண்டிருந்தான். இதுமட்டுமல்லாமல், அங்கிருந்து வரும் சிலருடன் மலையாளத்தில் பேசி மற்றவர்களை வெறுப்பேற்றிக் கொண்டும் அலைந்தான்.

அவ்வப்போது கேரளாவில் இருந்து வந்த தகவல்கள் ஊரில் ஆச்சரியத்தை கிளப்பும். வேலைக்குப் போன நடராசன் அங்கேயே ஒருத்தியை திருமணம் செய்துகொண்டதாக முதல் தகவல் வந்தது. இத்தகவலை அடுத்து புண்ணியத்தாயிக்கு பயம். தனது அண்ணன் மகளை நாராவுக்கு கட்டிக்கொடுக்கலாம் என்று எடுத்திருக்கும் முடிவில் அவன் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவானோ என நினைத்தாள். அவள் நினைத்ததே நடந்தது. 

பலசரக்கடை வைத்திருக்கும் ஒருவரின் மகளை, நாரா காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்ற செய்தி கேட்டு துடித்துப் போனாள் புண்ணியத்தாயி. பிறகு மனைவியுடன் வந்து அம்மா, அப்பாவிடம் ஆசி வாங்கினான். மாமனாரின் கடையில் வேலை பார்த்து வந்த நாராவை, சில வருடங்களில் திடீரென ஊருக்கு வந்து கொண்டு சேர்த்தார் மாமனார். அங்கு ஏதோ பிரச்னை என்றார்கள். பிறகுதான் ஊரே அவனை ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கியது.

அதாவது தினமும் காலையில் ஒன்பது மணிக்கு அம்மன் கோவில் வாய்க்காலுக்கு வந்துவிடுவான். குளித்து முடித்து கோயிலில் திருநீறு பூசிவிட்டு ஆலமரத்திண்டில் அமர்வான். பிறகு அவன் முகம் கோணலாக மாறும். கண்களை மூடிக்கொள்வான். மலையாளத்திலும் தமிழிலும் ஏதோ உளறுவான். சில ஆங்கில வார்த்தைகளும் வந்து விழும். கைகளை ஆட்டியபடி அவன் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அந்த வார்த்தைகளின் உளறல் ஒன்றும் புரியாது.

அவன் முன்னால் யாரும் நின்று உலுக்கினாலும் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே இருப்பான். சரியாக அரை மணி நேரம்தான். அதற்கு மேல் எதுவும் நடக்காத மாதிரி சகஜமாகி விடுவான். அந்த உளறல் சத்தம் வாய்க்கால் கரை, அதைத்தாண்டிய ரைஸ் மில், பெருமாள் கோயில் தெரு, நாராயண சாமி கோயில் தெரு என எங்கும் பறந்துகொண்டிருக்கும். முதல் இரண்டு மூன்று நாட்கள் இந்த சத்தம் கேட்டு பயந்தவர்கள், மேல கோயில் அருகில் வசிக்கும் சரஸ்வதியும் பகவதியும். வயலுக்கு களை எடுக்கப்போனவர்கள் அப்படியே பயந்து நின்றுவிட்டார்கள். இப்போது கேட்டாலும் அந்த பயத்தை திகிலாக விவரிப்பார்கள் இருவரும்.

என்ன மழை, பனி அடித்தாலும் காலையில் சரியாக ஒன்பது மணிக்கு இங்கு வருவதும் அரைமணி நேரம் உளறுவதும் நாராவின் வேலையாக இருந்தது. ஸ்கூலுக்குப் போகும் பயல்கள், ‘‘இங்கரு, நாரா இப்பதாம்ல கோயில் திண்டுக்குப் போறாம். இன்னும் ஒம்பது மணி ஆவல’’ என்று சொல்லிவிட்டு மெதுவாக நடப்பார்கள்.

ஒரு நாள் உளறல் முடிந்து தெளிந்த நாரா, எதிரில் ஆட்கள் நின்று பார்ப்பதைக் கண்டு கேட்டான். ‘‘ஏம் எல்லாரும் என்னயவே பாத்துட்டிருக்கியோ’’ என்று. அப்போதுதான் அவனுக்கே தெரியாமல் அது நடக்கிறது என்று புரிந்தது. ஆனால் மற்ற நேரங்களில் பழைய நாராவாகவே பழகி வந்தான். சித்தி, அத்தை, மைனி, மாமா என அதே உறவு முறை அழைப்பு. வீட்டில் மாட்டை குளிப்பாட்டுவது, வண்டி அடிப்பது, வயல்களுக்குப் போய்வருவது உள்ளிட்ட வேலைகளை சரியாகவே செய்து வந்தான்.

 ‘‘ச்சே. இந்த பயலுக்கு போய், இப்டி வந்திருக்கெ?’’ என்று ஊரில் பரிதாபப்பட்டார்கள். நாராவின் இந்த பிரச்னை பற்றி அவனது மாமனார், தெரிந்த மருத்துவரிடம் சொல்லி, தெரியாமல் அவனுக்கு மருந்து கொடுத்துப் பார்த்தார். கேட்கவில்லை. அந்த அரை மணி நேர வியாதியை எப்படி எடுத்துக்கொள்ள என்று தெரியாமல்தான் ஊரில் கொண்டு வந்து விட்டார். நாராவை குணபடுத்த அவனது அம்மாவும் அப்பாவும் அக்கம் பக்க ஊர்களுக்கு சென்று குறி கேட்டு வந்தனர். தாயத்துகளும் கறுப்பு கயிறுகளும் அவனது உடலில் கணக்கில்லாமல் ஏறியிருந்தன. ஆனால் ஒன்பது மணி பேச்சு மட்டும் நிற்கவே இல்லை. பிறகு அவனை விட்டுவிட்டனர். எவ்வளவுதான் பார்க்க?

தெருக்காரர்கள், ‘‘மலையாள மாந்தீரிகன வச்சு எவனோ இப்டி பண்ணிட்டானுவோ. அவன் பொண்டாட்டிக்காரிக்கு சொந்தக்காரனுவ கூட பண்ணியிருக்கலாம். யாரு கண்டா?’’ என்று பேசிக்கொண்டார்கள். ‘‘மாந்தீரிகம் பண்ணி அவன இப்டியாக்க என்ன காரணமாக இருக்கும்?’’ என்றும் கேள்வி வந்தது. ‘‘பொண்ணு பிரச்னையில ஆயிரம் நடக்கும்டெ’’ என்று ஆணித்தரமாகச் சொல்லி விஷயத்தை ஊதினாள் பெரியாச்சி. ஆச்சிகள் விவரமானவர்கள். இல்லாத கதையை கூட இருப்பதாகச் சொல்பவர்கள்.

இதையடுத்து, ஊரில் அவனுக்கு ‘ஒன்பது மணி கோட்டி’ என்ற புது பெயர் உருவாகி இருந்தது. இந்த உளறல் காரணமாக அவனை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றால் இரவுக்குள் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். தென்காசியில் ஒரு துஷ்டிக்கு சென்ற போது கூட, அதிகாலையில் முதல் பஸ் பிடித்து ஊருக்கு கூட்டி வந்துவிட்டார்கள் அவனை. வெளியூரில் உளறி அங்கு ஏதும் பிரச்னை என்றால் எப்படி தாங்க?

ஊரை விட்டு வேறொரு இடத்தில் இருந்தால் இந்தப் பிரச்னை வருகிறதா என்பதை டெஸ்ட் பண்ணியே பார்த்தார்கள். அவனது மாமா செல்லையாவும் சித்தப்பா கந்தையாவும் எட்டு எட்டரை மணிக்கு பஞ்சாயத்து போர்டு திண்டுக்கு பேசிக்கொண்டே அழைத்துப் போனார்கள். முந்தாநாள் பார்த்த படம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாகச் சிரித்துக் கொண்டிருந்தான் நாரா. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் போய்கொண்டிருக்க, அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அவர்களிடம் எதுவும் சொல்லாமல் விறுவிறு என்று அம்மன் கோவில் வாய்க்காலைப் பார்த்து திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டான். வேக வேகமான நடை. அந்த நடையில் இருந்த ஆக்ரோஷத்தில் அவனது மாமாவும் சித்தப்பாவும் வாயடைத்து விட்டார்கள். பிறகு குளித்து முடித்துவிட்டு அதே உளறல்.

அவன் வந்தால் இளம்பெண்கள் ஓடிப் போய் ஒளிந்துகொள்வார்கள். இல்லையெனில் தூரமாக நின்றுகொள்வார்கள். ஆரம்பத்தில் இப்படி இருந்தவர்கள், பிறகு அன்றாட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என அவனது அரை மணி நேர உளறலை கண்டுகொள்ளாமல் போய்வந்தார்கள். அவன் மனைவி, கேரளாவில் இருந்து அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போனாள். மகன் அங்கு படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

இப்போது அப்படியில்லை நாரா. எதுவும் நடக்காத மாதிரி, காலை ஒன்பது மணிக்கு ரைஸ்மில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் நண்பர்களுடன். கல்லூரி படிக்கும் மகன் பைக்கில் அவரை கொண்டு போய் விட்டு வருகிறான். மலையாளம் கலந்த தமிழில் தெருக்காரிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறாள் அவன் மனைவி. ‘‘அந்த கோட்டிக்கார பேச்சு எப்டி நின்னுச்சுன்னே தெரில. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால திடீர்னு அதுவா நின்னுட்டு பாத்துக்க. ஒன்பது மணிக்கு வாய்க்காலுக்கு ஓடுதவன் ஒரு நாலு நாளா வீட்டுலயே இருந்தான். பெறவுதான் அவ்வோ ஆத்தாளுக்கு ஒணரு வந்து, ஒடம்பு சரியா போச்சுன்னு தெரிஞ்சுதாம்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் பலசரக் கடை மணி. எனக்கு மீண்டும் முதல் வரிதான் ஞாபகத்துக்கு வந்தது.

Monday, February 11, 2013

களவு போகும் நிலம்

மாடுகளுடன்தான் செவனுவை எப்போதும் பார்க்க முடியும். அவை இல்லையெனில் ஏதாவது வெள்ளாட்டுக்குட்டியுடன் காணலாம். அப்படியொரு பிரியம் அவனுக்கு. அவனது உலகம் மாடு, ஆடுகளுடனாகவே இருக்கும். ‘‘நம்ம செவளைக்கு கால்ல புண்ணு. மஞ்சள போட்டும் கேக்கலெ. என்ன செய்லாம்?’’ என்று கேட்டால், திண்ணையில் உட்கார்ந்து மதியம் வரை பண்டுவம் சொல்வான் செவனு. ஊரில் அவனை கிட்டத்தட்ட வெட்னரி டாக்டராகவே பார்த்தார்கள். சிறுவயதில் இருந்தே மாடுகள் மேய்ப்பதை மட்டுமே செய்து வருவதால் ஆடு, மாடுகள் விஷயத்தில் அவன் அத்துபடி.

மேலத்தெருவில் இருக்கிற பெரும்பாலான மாடுகளில் பாதியை இவனும் மீதியை குத்தாலமும் மணியும் பிரித்து மேய்த்து வந்தார்கள். செவனுக்கு சொந்தமாக பத்து மாடுகள் இருந்தாலும் பிற மாடுகளை கூலிக்காக மேய்த்துவந்தான். ஒரு மாட்டுக்கு மாதம் 30 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. இவர்கள் தவிர, கிழக்கே இருந்து கிட்டுவும் சுடலையும் மாடு மேய்ப்பவர்கள். இவர்களோடு ஆடுகள் மேய்க்க, இருக்கிறான் பரமசிவன். இதில் செவனு சீனியர் என்பதால் அவனுக்கு மரியாதை இருந்தது. ஒன்பது, பத்துமணி வாக்கில்தான் இவர்கள் மாடுகளை பத்த ஆரம்பிப்பார்கள். வீட்டுக்காரர்கள் கருவேலப்பிறை அருகே மாடுகளை கொண்டு வந்து விடுவார்கள். கையில் கம்புடனும் சோற்றுச் சட்டியுடனும் செவனு, குத்தாலம், மணி வந்துவிடுவார்கள். பாட்டையா கடையில் டீ குடித்துவிட்டு சிறுது நேரம் ஊர்க்கதை நடக்கும். பிறகு ஆடுகளை பத்திக்கொண்டு பரமசிவம் வந்து சேர்ந்ததும் மாட்டைப் பத்துவார்கள்.

தெருவை அடைத்துக்கொண்டு மாடுகள் போகும். மரகதமாச்சி பிரம்பு கூடையைத் தூக்கிக்கொண்டு மாடுகளோடு வருவாள். ஏதாவதொரு மாடு சாணம் போடப்போவது தெரிந்தால் ஓடிப்போய் அதில் கூடையை ஏந்துவாள். அப்படியே பஞ்சாயத்து போர்டு திண்டு வரை வருவாள். அதுவரை மாடுகள் போடும் சாணம் அவள் கூடைக்கு.

பாபநாசம் ரோடு வழியாக மாடுகள் போகும். நேராக ரயில்வே கேட் தாண்டியதும் வலதுபக்கம் திரும்பினால் குளத்துக்கருகில் புற்கள் முளைத்து கிடக்கும். அங்கு மேய்க்கலாம். ஆனால், இவர்கள் வழியிலேயே வாத்தியார் வயல்களை கடந்து தோப்புக்குள் மேய்க்க விடுவார்கள். இடையில் வந்து சேர்ந்துகொள்வார்கள் கீழத்தெரு கிட்டுவும் சுடலையும். புற்களும் செடிகளும் ஏகமாக வளர்ந்து நிற்கும். பெரிய தோப்பு. உள்ளே யார் நின்றாலும் வெளியே தெரியாத அளவு மரங்கள். அங்கு எதையாவது பயிர் வைக்கலாம். ‘இப்பலாம் முன்ன மாரி வேல பார்க்க முடியல’ என்று அங்கு எதையும் பயிர் வைக்கவில்லை வாத்தியார். அவர் வெளியூருக்கு போயிருக்கிறார் என்று தெரிந்தால் தோப்பில் ஐந்தாறு இளநீர்களை பறித்துவிடுவார்கள். ஒரு குலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறித்தால் தெரியாது. அரவம் இல்லாமல் இளநீரை குடித்துவிட்டு கூந்தல்களை வாய்க்கால் கரையில் வீசிவிடுவார்கள். செத்தைக்குள் கிடக்கும் என்பதால் யாருக்கும் தெரியாது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு எதுவும் நடக்காத மாதிரி இருக்கும். இது அரசல் புரசலாக வாத்தியாருக்கும் தெரியும் என்றாலும் கண்டுகொள்ள மாட்டார்.

உச்சி வெயில் அடிக்கும்வரை அங்குதான் மேயும். பிறகு அடுத்த தோப்புக்குள் மாடுகள் போகும். அது வேலுவின் மாந்தோப்பு. அத்தோப்பின் ஒருபகுதியில் ஈராய்ங்கமும் வாழையும் போட்டிருந்தார். ஈராய்ங்கச் செடிகள் பச்சை ரப்பர் டியூப் மாதிரி முளைத்து நிற்பதை பார்க்க அழகாக இருக்கும். சேட்டை பிடித்த நீட்டுக்கொம்பு எருமையும் கிடாரியும் அதில் புகுந்து சிதைத்து விட்டு போவதை வழக்கமாக வைத்திருக்கும். ‘‘தெனமும் இப்டிலா பண்ணுதுவோ’’ என்று அடி துவைத்து எடுத்தான் செவனு. அது கேட்பதாகத் தெரியவில்லை.

ஒரு முறை, ‘‘ஏலெ செவனு. இன்னொரு தட வயலுக்குள்ள விழுந்தா பவுன்டிக்கு பத்திட்டு போயிருவென். பெறவு ஆத்தான்னாலும் முடியாது. ஐயான்னாலும் முடியாது’’ என்றார் வேலு. இதன்பொருட்டு மேய்க்கும் இடத்தை ஆற்றுபக்கமாக மாற்றினான். நான்கைந்து நாட்கள் அங்கு மேய்க்கப் போனான். அங்கும் பிரச்னைதான். தோப்புக்கருகில் ஏகப்பட்ட புற்கள் கிடந்தாலும் நீட்டுக்கொம்பு எருமைக்கு நெற்பயிர்கள் மற்றும் கீரைகள் மீதுதான் குறி. அங்கும் சுப்பையாவின் கீரைத்தோட்டத்தில் வாயை வைத்து பிரச்னையாகிவிட்டது. மாடுகள் பண்ணிய பிரச்னைக்கு செவனுக்கு ஏச்சு. நீட்டுக்கொம்பு எருமையின் உரிமையாளரான சுப்பிரமணியிடம், ‘‘இதையெல்லாம் வீட்டுல கெட்டிப்போட்டுதான் வளக்கணும். சனியன், எம் பிராணனல்லா வாங்குது’’ என்று விட்டுவிட்டு போய்விட்டான். பிறகு அந்த மாடு குத்தாலத்தின் கைக்குப் போனது வேறு கதை.

பெரிய வாய்க்கால் பகுதி வயல்களில் உளுந்து விதைத்திருந்த நேரத்தில், செவனுவின் கிடாரி ஒன்று இரவில் கயிற்றை அத்துக்கொண்டு வயலில் விழுந்துவிட்டது. ராத்திரி நேரத்தில் அங்கு யாரும் வருவதில்லை. ஆனால் எதற்காகவே அந்த நேரத்தில் வந்து தொலைத்த வயல்காரன் கண்ணன் பார்த்துவிட, பிரச்னைதான். மாட்டை அப்படியே பிடித்து ஆழ்வார்க்குறிச்சி பவுன்டியில் கட்டிப்போட்டுவிட்டான். காலையில் செவனு மாட்டைத் தேடினான். பகல் முழுவதும் தேடிவிட்டு வீட்டுக்கு வந்தபோதுதான் விஷயம் தெரிந்தது. பிறகு ஊர்த் தலைவரில் முன்பு விவகாரம். மாடு தின்ற பயித்துக்கு தெண்டம் விதிக்கப்பட்டது. கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு மாட்டை வீட்டுக்கு இழுத்த கதை அவனுக்கு மறக்கவில்லை.

தோப்பை தாண்டியதும் பம்புசெட் அறை இருக்கும். அங்கு வந்ததும் ரெண்டு மணி கொல்லம் ரயில் போவது தெரியும். அந்த ரயில்தான் இவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை தீர்மானிப்பது. ரயில் தாமதமாகப் போனால் கூட, ‘இன்னும் ரயிலே வரலை, பெறவு எப்டி சாப்பிட?’ என்று காத்திருப்பார்கள்.

கஞ்சித் தண்ணீருக்காக மாந்தோப்பில் கிளி மூக்கு மாங்காய் ரெண்டு பறித்து வந்திருப்பார்கள். சாப்பிட்டு முடிப்பதற்குள் செண்டு சித்தி வயலில் மாடுகள் வாயை வைத்திருக்கும். ‘‘ஏல மாட்டை பத்துங்கெ. வயல்ல வாய வக்கி’’ என்று அவள் சத்தம் கொடுப்பாள். எச்சிக் கையோடு மெதுவாக நடந்து பத்துவான் குத்தாலம். ‘‘வாயில்லா ஜீவனு, ரெண்டு பயித்த தின்னாதான் என்னா? இப்டி அவயம் போடுதியெ சித்தி?’’ என்பான்.

‘‘சர்தாம்ல. அப்பம் ஒங்க வெதப்பாட்டுலயே நீ மாட்டெ மேய்க்கலாம்லா. ஏங் அங்க இங்கனு அலையுத?’’ என்பாள் அவள். சிரித்துக் கொண்டே வருவான். சாப்பிட்டு முடிந்ததும் மரங்களின் நிழலில் தூங்கலாம் போலத் தோன்றும். துண்டை தரையில் விரித்து லேசாகக் கண்ணை மூடுவார்கள். காற்று ஜிலு ஜிலுவென்று அடிக்கும். செவனும் பரமசிவனும் பீடியை பற்ற வைப்பார்கள். இவர்களில் பரமசிவன், செவ்வாரம் முறையில் ஆடு வளர்த்து வந்தான். இதில் அவனுக்கு கொள்ளை லாபம். அதாவது ஒன்றிரண்டு ஆடு வைத்திருப்பவர்கள் மேய்க்க இயலாது என்றால் பரவசிவனிடம் கொடுத்துவிடுவார்கள். அவன் மற்ற ஆடுகளோடு இதையும் மேய்ப்பான். இதற்கு கூலி கிடையாது. ஆனால், அந்த ஆடுகள் குட்டிப் போட்டால்&அதாவது ரெண்டு குட்டிப் போட்டால் ஒன்று பரமசிவத்துக்கு கொடுத்துவிட வேண்டும். இந்த முறையில் ஏகப்பட்ட குட்டிகள் பெருகிவிட்டது அவனுக்கு. ஆத்திர அவசர காசுக்கு வீட்டுக்குத் தெரியாமல் குட்டிகளை விற்றுவிட்டு குதூகலிப்பவன்.

மாடுகளும் ஆடுகளும் ஏரியாவை தாண்டி குளத்துக்கு அருகில் சென்றிருக்கும். அங்குதான் பக்கத்தூர்க்காரிகள் துணி துவைத்துக் குளித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ரோஸ்மேரியை செவனுக்கு நன்றாகத் தெரியும்.

''என்னெ, மாடு எப்படியிருக்கு’’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பாள். ‘‘அதெ மாட்டுட்டலா கேக்கணும்?’’ என்பான் செவனு. அவன் கிண்டலாகப் பேசி முடித்துவிட்டு குளத்தின் பாறைக்கு வந்ததும் குத்தாலமும் பரமசிவமும், ‘‘பேச்செல்லாம் ஒரு மாதிரியாதான் போது. ஊர்ல அத்தை மவா இருக்கா. மறந்துராதெ’’ என்பார்கள். ‘‘ச்சீ. சும்மா பேசுனா பொண்டாட்டி ஆயிருவாளோல. கூறுகெட்டவனுவளா?’’ என்று சொல்லிவிட்டு குளிக்க இறங்குவான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் இறங்குவார்கள். இவர்கள் குளிப்பதற்கு அருகில் பெண்கள் குளித்துக்கொண்டிருப்பார்கள். அப்படியே முங்கு நீச்சலில் போய் அவர்களின் காலை கிள்ளிவிட்டு வர இருப்பதாகச் சொல்வான் மணி. அவனை அடக்குவான் செவனு.

கரைக்கு மேலே பரந்து விரிந்த பகுதியில் எள்ளு விதைத்திருக்கும் சண்முகம் மாமா, பனையோலை குடிலுக்குள் இருந்துகொண்டு எட்டிப்பார்ப்பார். ‘‘செவனா குளிக்காம்’’ என்று கண்களின் மேல் கையை வைத்துவிட்டு சத்தம் கொடுப்பார். இவன் ஆமா என்றதும் ‘‘சீக்கிரம் குளிச்சுட்டு வா. ரெண்டு மரத்துல ஏறணும்’’ என்பார். குளித்துவிட்டு அவரது தென்னை மரத்தில் ஏறி காய்ந்த தென்னஓலை மற்றும் சில்லாட்டைகளை இழுத்து போட்டுவிட்டு, தேங்காய்களைப் பறிப்பான். இதற்கு கூலியாக மரத்துக்கு மூன்று தேங்காய்கள். அதில் மற்றவர்களுக்கும் சும்மா பங்கு கொடுப்பான். பிறகு அங்கிருந்து மாடுகளைப் பற்றிக்கொண்டு சாஸ்தா கோயில் அருகே போவார்கள். கோயில் திண்டில் தாயம் விளையாட்டை ஆரம்பிப்பார்கள். தாயக்கட்டைக்குள் மனசு இருந்தாலும் அடிக்கடி ஒரு கண்ணால் மாட்டையும் பார்த்துக்கொள்வார்கள். சிறிது நேரம் போகும் ஆட்டம்.

மாடுகள் பக்கத்து கரைகளில் மேய்ந்துகொண்டிருக்கும். சூரியன் மேற்கே இறங்கத் தொடங்கியதும் ரயில்வே லைன் பக்கமாக மாட்டை பத்துவார்கள். இந்நேரத்தில் ரயில் கிடையாது என்பதால் சாவகாசமாக ஆற்றை நோக்கி மேய்ந்துகொண்டே போகும். ரயில்வே பாலத்தின் கீழே மாட்டை இறக்குவார்கள். அப்படியே தண்ணீருக்குள் இறங்கி படுத்துக்கொள்ளும். வயல்களில் விளைந்திருக்கும் கடலை, பயித்தங்காய் உள்ளிட்டவற்றை கொறித்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். சிறிது நேரத்தில் மாடுகள் கரைக்கு ஏறும். அதட்டலிலேயே அவற்றை கரையில் மேய்த்துக்கொண்டு நடப்பார்கள்.

இதெல்லாம் கதையாகிவிட்டது. ஆடு, மாடுகளோடு அடைந்துகிடக்கும் ஊர், இன்று அவை ஏதுமின்றி பளிச் என இருக்கிறது. நடுரோட்டில் நின்று பஸ் டிரைவர்களின் பிரஷரை ஏற்றும் எருமைகளை காணமுடியவில்லை. அவற்றை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் கொத்தனார் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.‘‘இங்கரு. முன்னால மாரி இல்லப்பா. எல்லா எடத்தயும் ப்ளாட் போட்டுட்டானுவோ. மாடு மேய்க்க எடமே இல்ல பாத்துக்க. ஒரு மாடுக்கு எரநூறு ரூவா தாரம்னாலும் மேய்க்கதுக்கும் ஆளில்லை. பேருக்கு ஒண்ணு ரெண்டை வச்சுக்கிட்டு எல்லாரும் மாடுவோள வித்துட்டாவோ. நானும் வித்துத் தொலைச்சுட்டு நம்ம குட்டி கூட கையாளா போயிட்டிருக்கேன்’’ என்கிற செவனின் கண்களில், காணாமல் போன மேய்ச்சல் நில ஏக்கம் அதிகமாகவே தெரிகிறது.

Monday, February 4, 2013

கனவுகளின் ரசிகன்

மாடசாமி அண்ணனின் தோட்டத்துக்குள் இருக்கும் குச்சில்தான், எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்துக்கான இடமாக இருந்தது. காளை மற்றும் பசுமாடுகளின் மணிகள், வில் வண்டிக்கான தார்க்குச்சிகள், அதில் அமர்வதற்காகச் செய்யப்பட்ட இலவம்பஞ்சு தலையணைகள், ஏர்க்கலப்பை, மரமடிக்கும் பலகைகள், கயிறுகள், மாட்டின் மணிகள் உள்ளிட்ட பொருட்கள் அடைந்து கிடக்கும் இடத்தில், ஓர் ஓரமாக உடைந்த மேஜை. அருகில் சிறு சேர். நான்கைந்து முக்காலிகள். மேஜையின் பின்பக்கச் சுவரில் பலவித போஸ்களில் எம்.ஜி.ஆர் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். ரசிகர் மன்றத்துக்கான அடையாளமாக இதுவே போதுமானதாக இருந்தது.


மன்றதுக்கு வெளியே எம்.ஜி.ஆர் மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, தண்டால் எடுக்க இரண்டு ஆட்டு உரல்களும் கர்லா கட்டைக்காக கருவை மர தூர் ஒன்றும் கிடக்கும். எப்போதும் எம்.ஜி.ஆர் பாடலை டேப் ரெக்கார்டரில் கேட்பது, அவர் மாதிரியே நடப்பது மற்றும் பேசுவதுதான் மாடசாமி அண்ணனின் வேலை. அந்த இருட்டு குச்சிலுக்குள் எப்போதும் கருப்பு கண்ணாடியை அணிந்துகொண்டு அண்ணன் பண்ணுகிற அழிச்சாட்டியம்தான் உறுத்தலாக இருக்கும்.

‘ஏ கூறுகெட்டவன. வண்டி மை நெறத்துல இருந்துட்டு கண்ணாடி வேறயா, கழத்துல? எவனும் கல்ல கொண்டி எறிஞ்சிர போறான்'என்று மன்றத்து ஆட்கள் முன்பு, அண்ணனின் பாட்டி கேவலப்படுத்துவது அவனுக்குத் தாங்க முடியாத பிரச்னை.

‘மொதல்ல இவ கழுத்த நெறிக்கணும்'என்று முணு முணுத்துவிட்டு டேப்பில் சத்தத்தை கூடுதலாக வைப்பான். அண்ணன்தான் மன்றத் தலைவர். செயலாளர் எனச் சொல்லப்பட்ட முருகன், வயலில் ஏர்க்கலப்பையை பிடித்துக்கொண்டு தனது கொடுமையான குரலில், ‘விவசாயி... விவசாயி'என்று இழுத்து பாடும்போது, பக்கத்து வயலில் நிற்பவர்கள், ‘‘எய்யா ரொம்ப முக்காத. கழுத கிழுத வந்துரப்போது'' என்பார்கள். இதையெல்லாம் கண்டுகொள்கிற ஆளில்லை அவன். தனது பாடலில் அவன் உறுதியாக இருப்பான். பொருளாளரான சைக்கிள் கடை தீ என்கிற தீனதயாளன், நறுக் மீசை வைத்துக் கொண்டு கைகளில் கட்ஸ் தெரிகிற மாதிரி சட்டையை டைட்டாகப் போட்டுக்கொண்டு அலைபவன். இவர்கள் மூவரும் பத்து பதினோரு மணிக்கு மேல் மன்றத்துக்கு வருவார்கள்.

‘‘ஆழ்வாரிச்சி தியேட்டர்ல வேலை பாக்காம்லா சங்கரு. அடுத்த வாரம், ‘உரிமைக்குரல்'போடுதாம்னான். என்ன செய்யலாம்?'' என்று விவாதம் நடக்கும். அக்கம் பக்கத்து ஊர் திரையரங்குகள், அரசு குறிப்பிடும் நடமாடும் திரையரங்கு வகையை சேர்ந்தவை. அதாவது டூரிங் தியேட்டர் என்பதால், புதிதாக ரிலீஸ் ஆகிற படங்கள் இங்கு வர வருடங்கள் ஆகும். அதனால் இருக்கவே இருக்கிறது பழைய படங்கள். போனமுறை கோட்டைவிளைபட்டி பாபி தியேட்டரில், ‘ஆயிரத்தில் ஒருவன்'போட்டபோது, முதல் நாள் எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்தார்கள். இதில் மாடசாமி அண்ணன், பெண்கள் கவுன்டருக்கு அருகில் நின்று சாக்லெட் கொடுத்து புண்ணியம் தேடி கொண்டான். சாக்லெட்டுக்கான காசை டீக்கடை பாலு கொடுத்தார். இவர்களை விட வயதில் சீனியரான பாலுவுக்கு இப்படி உதவி செய்வதில் அலாதி பிரியம். அதனால் அவருக்கு மன்றத்தில் கவுரவ தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

‘உரிமைக்குரலு’க்கான விவாதத்தில் ‘தீ’தான் இப்படியொரு ஐடியாவை கொடுத்தான்.

‘‘படத்துல மாங்கா திருடி திங்கிற பெண்ணே மாசம் எத்தனையோ’ன்னு பாட்டு வருது. அதனால...''

‘‘மாங்கா கொடுக்கலாங்கியோ?''

‘‘மாம்பழம்?''

நல்ல ஐடியாவாக இது ஏற்கப்பட்டு மாம்பழத்துக்கு பட்ஜெட் அதிகம் என்பதால் ஊரில் உள்ள கடைகளில் காசு வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. டீக்கடை பாலு இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். நூற்றி ஐம்பது சிறு மாம்பழங்கள் பொட்டல்புதூர் மார்க்கெட்டில் வாங்கப்பட்டன. தியேட்டருக்கு கொண்டு போவதற்குள் ஆளுக்கொரு மாம்பழத்தை ருசி பார்த்துவிட்டார்கள். அங்கு கூட்டத்தை பார்த்ததும் கெதக் என்றானது மாடசாமி அண்ணனுக்கு. நிற்க இடமில்லாமல் அலைமோதியது கூட்டம்.

‘‘இந்த கூட்டத்துக்கு இது எப்டில பத்தும்?'' என்றான் முருகன். ஆபரேட்டர் ரூமில் இருந்து வந்த சங்கர், மாடசாமி அண்ணனிடம் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டு நான்கு மாம்பழங்களை அள்ளிக்கொண்டு போனான். பிறகு, பெண்கள் கவுன்டரில் மட்டும் மாம்பழம் கொடுப்பது என்றும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கொடுக்கத் தொடங்கினான்.

காலையில் தோப்பில் விழுந்த கிடந்த மட்டைகளை அள்ளிக்கொண்டு வந்து தோட்டத்தில் போட்டுவிட்டு, மன்றத்தில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணனை, அவனது பாட்டி அழைத்தாள்.

‘‘ஏலெ. நம்ம சொள்ளமுத்து மவளுவோ, மீனா பிள்ளெயும் செல்லம்மாவும் சினிமாவுக்கு வந்தாவோளாம். நீ எல்லாத்துக்கும் மாம்பழத்த கொடுத்துட்டு இவ்வோளுக்கு கொடுக்கிலியாமே? காலேல படித்தொறல வச்சு, என்னா பேச்சு பேசுது, அந்த பிள்ளெ'' என்று அவள் சொன்னதும் இது, புது வில்லங்கமாக இருக்கிறதென்று நினைத்தான்.

‘‘நாங்க என்ன ஒண்ணுமில்லாமயா இருக்கோம். எங்கள பாத்து எளக்காரமா ஒம் பேரனுக்குன்னு சண்டைக்குலா வருது. எல்லாத்துக்கும் கொடுத்தவன் அவ்வோளுக்கு கொடுத்தாதான் என்ன?'' என்றவளிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது எனத் திணறிக் கொண்டிருந்தான். ரசிகர் மன்ற வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்றான் தீ. செயலாளரான முருகனுக்கு சொல்லமுத்து வீடு சொந்தம் என்பதால், மாடசாமியுடன் சேரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை மீறியதுதானே நட்பு.

அவ்வப்போது இது போன்ற பிரச்னைகள் வந்துகொண்டிருக்க, இன்னொரு பிரச்னையும் அவர்களுக்கு ஊரில் இருந்தது. அது சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் ‘சிவாஜி'வேம்பு. இவர்களை கண்டாலே முறைத்துக்கொண்டு அலைகிறவன். பேச்சுவார்த்தை கூட, ஏடா கூடமாகத்தான் இருக்கும். மாடசாமி அண்ட் கோ மாம்பழம் கொடுத்ததற்கு அடுத்த நான்காவது நாள், ‘வசந்த மாளிகை'போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. உள்ளூர் தியேட்டர் என்பதால் பிரச்னை இல்லை. வேம்புவுக்கு, மாடசாமி அண்ணன் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் வீடு. அங்கு மன்றம் என்ற ஒன்று இல்லையென்றாலும் அவன் வீட்டின் பின்புற சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் சிவாஜி போஸ்டர், பெரிதாக ஒட்டப்பட்டிருந்தது. சிவாஜி ரசிகர்களின் மீட்டிங் பிளேசாக புளியரமரங்கள் அடர்ந்திருக்கும் வடக்குத் தெரு இருந்தது.

‘‘ஏலெ. அவனுவோ, மாம்பழம் கொடுத்திருக்கானுவோ. நாம அதை விட புதுசா கொடுக்கணும்'' என்றபடியே கூட்டம் ஆரம்பித்தது. வேம்பு, சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அதன் கேரியரில் உட்கார்ந்திருந்தான். எதிரில் இருந்த கட்டமண் சுவரில் ரசிகர் மன்ற நிர்வாகிகளான சுடலை, வைத்தி, சைலு, கல்யாணி ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள்.

‘‘படத்துல தலைவர் ஸ்டைலா சரக்கு அடிப்பாரு'' என்று சொல்லிவிட்டு சுடலை கேப் விட்டதும் வேம்பு அவன் முதுகில் மிதித்து ‘‘உருப்டியா எதாவது சொல்லு'' என்றான். பிறகு சிறிய வகை கடலை மிட்டாய் பாக்கெட் கொடுப்பது என்று முடிவானது. மாம்பழத்துக்கு கடலை மிட்டாய் ஈடானது அல்ல என்றாலும் பொருளாதார பிரச்னை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் அவர்கள் மாம்பழத்தை எல்லோருக்கும் கொடுக்காதது குறையாகச் சொல்லப்பட்டு வந்தது. இவர்கள், எல்லோருக்கும் கொடுப்பது என்ற முடிவோடு இருநூற்றைம்பது சிறிய கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கினார்கள். இத்தகவல் முதல் நாளே தியேட்டர் ஓனரான நைனாவுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

சிவாஜி ஸ்டைலில் வெள்ளை நிறச்சட்டையும் பேண்டும் அணிந்து வேம்பு நின்றுகொண்டிருக்க, விளக்கெண்ணெய் தேய்த்து பணிய வைக்கப்பட்ட தலைமுடி மட்டும் சப்பென்று அமுங்கி கிடந்தது. அதை முன்பக்கம் இழுத்து சுருட்டி விட அவன் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ‘‘அப்டியே சிவாஜி மாரியே இருக்கல'' என்று சைலு உசுப்பேற்றி விட, அதை நிஜமென நம்பிக்கொண்டு அடிக்கடி பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு ஆளில்லாத ஏரியாவில் அங்கும் இங்கும் தலையை ஸ்டைலாகத் திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். ஆறரை மணி காட்சிக்கு மூன்று மணிக்கே தியேட்டருக்கு வந்திருந்தார்கள். தியேட்டர் ஓனரான நைனாவின் வீடு எதிரில் மாந்தோப்புக்குள் இருந்தது. அவர் தற்செயலாக இவர்களைப் பார்த்துவிட்டு, ‘‘என்ன வேம்பு, அதுக்குள்ள வந்துட்டெ. கல்லமுட்டாய கொண்டாந்தாச்சா?'' என்று கரிசனையாகக் கேட்டார். இவர்கள் ஆமாம் என்றதும் இரண்டு பாக்கெட்டை எடுத்துக்கொண்டு போனார்.

ஐந்தே முக்கால், ஆறு மணிக்குதான் ஒவ்வொருவராக வந்தார்கள். அன்று திருமண நாள் என்பதால் பக்கத்து ஊரான தாட்டாம்பட்டியில் கல்யாண வீட்டுக்கு வந்திருந்த கோஷ்டி அப்படியே ஆறு மாட்டு வண்டிகளில் வந்து இறங்கினார்கள். வந்தவர்கள் எல்லோரும் ‘சிவாஜி'வேம்புவை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடி, கடலைமிட்டாய் கட்டுபடியாகாது என்ற நிலை ஏற்பட்டது. இவர்களும் பெண்களுக்கே கொடுக்க நினைத்து கொடுத்தார்கள். வழக்கம் போல் குறைந்துவிட்டது. மறுநாள் பிரச்னை.

‘‘வெளியூர்க்கார பொம்பளை பிள்ளைலுக்கு கொடுக்காம் ஒங்க அண்ணன். எங்கள பாத்ததும் பேசாம போயிட்டாம். நாங்க என்ன கல்லமுட்டாயிக்கா அலையுதோம்'' என்று மேலத்தெரு தோழி சொன்னதாக, ‘சிவாஜி' வேம்புவின் தங்கச்சி புகார் வாசித்தாள். இப்புகாரை அடுத்து இனி இலவசங்களை கைவிட்டுவிட்டு, ஸ்லைடுகளில் ரசிக மகாஜனங்களை வரவேற்றால் போதுமானது என்று முடிவு செய்யப்பட்டது. பொட்டல்புதூரில் ஸ்லைடு எழுதும் பரணியிடம் சொன்னதும், ‘‘மன்றத்துக்கு என்ன பேர் வச்சிருக்கியோ? ‘வசந்த மாளிகை'சிவாஜி ரசிகர் மன்றம்னு போடவா, ‘புதிய பறவை'ரசிகர் மன்றம்னு எழுதவா?'' என்று கேட்டு குழப்பினான். இப்படியொரு யோசனை நமக்கு வரவில்லையே என்று நினைத்த வேம்பு, ‘வசந்த மாளிகை’க்கு ஓ.கே.சொன்னான்.

இதே போல மாடசாமி அண்ணனும் ‘உலகம் சுற்றும் வாலிபன்'எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்ற ஸ்லைடை ரெடி பண்ணினான். சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற இலவசப் போருக்குப் பிறகு ஸ்லைட் போர் ஆரம்பமானது உள்ளூர் மற்றும் அக்கம் பக்கத் தியேட்டர்களில். ஆழ்வார்க்குறிச்சியில் ‘அன்பே வா'படமும் உள்ளூரில் ‘பட்டிக்காடா பட்டணமா'படமும் வெளியான நேரத்தில் இரண்டு கோஷ்டிக்கும் சண்டை வந்து சேர்ந்தது. ஊனி கம்பும், உருட்டு கட்டையுமாக வந்த சண்டையை தீர்க்கப் பெரும்பாடாகிவிட்டது, ஜெய்சங்கர் ரசிகர் மன்றத்துக்காரர்களுக்கு.

இச்சண்டைக்குப் பிறகு வேம்புவும் மாடசாமி அண்ணனும் பெரும்பகையாளி ஆனார்கள். எதிரெதிர் சந்தித்துக் கொண்டால் கூட முகத்தை திருப்பிக்கொண்டு நடக்கலானார்கள். ‘‘மாடசாமியும் வேம்பும் மோறய தூக்குத மாரிலா தூக்குதானுவோ'' என்று வேறோர் சண்டைக்கு உவமை பொருளானார்கள். பயல்களுக்குள் மாடசாமி கோஷ்டி என்றும் வேம்பு கோஷ்டி என்றும் புது கோஷ்டி உருவாகி இருந்தது.

இன்று அப்படியில்லை. கோயில் கொடை ஒன்றுக்காக ஊருக்குச் சென்றிருந்தபோது, மாடசாமி அண்ணனும் வேம்புவும் ஆலமரத்திண்டில் அருகருகில் உட்கார்ந்துகொண்டு பாசமாகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ‘‘எப்பவோ சொந்தக்காரனுவோ ஆயிட்டானுவளெ'' என்றான் நண்பன். அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பேசிக்கொண்டிருப்பது போலவே இருந்தது.

Sunday, January 27, 2013

கண்களில் துடிக்கும் பேரழகு

சத்தங்கள் படபடப்பூட்டுபவை, பயமூட்டுபவை, உள்ளுக்குள் இறங்கி உயிரை அசைத்துவிட்டு போகும் தன்மை கொண்டவை, சிலிர்ப்பூட்டுவை, ஜில்லிப்பாக்குபவை... இவற்றைத் தாண்டி காமம் தருவதாகவும் இருப்பவை. அப்படியொரு சிரிப்பு சத்தம் வரும் வீடாகத்தான் அந்த வீட்டை சொல்வார்கள். அந்த வீடு ஊரின் நடுவில்தான் இருந்தது. சாலை வழியே சென்றால், கருவை முட்கள் படர்ந்திருக்கிற தோட்டத்துக்கு இடது புரத்தில் சின்னதாக ஒரு ஒற்றயடி பாதை. அதில் நடந்தால் காம்பவுண்ட் சுவர் போடப்பட்ட மச்சி வீடு. அந்த வீட்டிலிருந்து பெரும்பாலும் அந்த சிரிப்பு சத்தம் வரும். கிளர்ச்சியூட்டுகிற, உடலின் வழி காமத்தை விதைக்கிற சிரிப்பு சத்தமாக அது இருக்கும். பக்கத்து ஊரில் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு வரும் நேரங்களில் கூட அந்த சிரிப்பு சத்தம் கேட்பதற்காகவே அங்கு இறங்கி நடப்பார்கள்.


அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு என்ன பெயர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், சில்க்கு வீடென்றால் யாராலும் அடையாளம் சொல்கிற வீடாக அது இருந்தது. அவளது பெயர் என்னவாக இருக்கும் என்பது பற்றி யாரும் மெனக்கெடவில்லை. அது எதுவாக இருந்தால் என்ன, சிலுக்கு என்ற அடையாளப் பெயர் அவளுக்கு பொருத்தமாக இருப்பதாகவே சொன்னார்கள். அவளும் அந்தப் பெயரை விரும்புகிறவளாக இருந்தாள். அவள், வேறு ஏதோ ஊரில் இருந்து இங்கு வீடு வாங்கி குடியேறியவள். எந்த ஊர்க்காரி என்பது பற்றியும் ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். அவளுக்கு கணவனும் ஒரு மகனும் இருந்தார்கள். கணவனானவன் எங்கோ வெளிமாநிலம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து செல்பவனாகவும் இருந்தான். அது அவளது உண்மையான கணவனா என்பது பற்றியும் திண்ணைகளில் விவாதம் நடந்து வந்தது. ஆனால் அவளது மகன் கணவனின் சாயலையே கொண்டிருந்தான். அவளது தொழில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததுதான். அதற்காக ஒதுக்கி வைக்க முடியுமா என்ன?

‘என்ன இப்டி சொல்லிட்டெ. இப்டி இருக்கவா வீட்டு பக்கத்துல, சடங்கான பிள்ளைலயும் பொண்டாட்டியையும் வச்சுக்கிட்டு காலங்கழிக்க முடியுமாவே? இதுக்கு ஒரு முடிவெடுக்கணும், ஆமா' என்று அவள் குடியிருந்த தெருக்காரர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், பக்கத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் அவள் ஒரு நாள் வந்திறங்கிய போது மூச்சடைத்துப் போனது தெருக்காரர்களுக்கு. வீட்டுக்குள் நின்று ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தார்கள். அந்த இன்ஸ்பெக்டர், ‘ஏதும் பிரச்னைன்னா சொல்லு, வரட்டா' என்று தெருவில் நின்று சத்தமாகச் சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறிப் போனார். ‘‘சரிங்கெ' என்ற சிலுக்கு வீட்டுக்குள் போகும்போது சிரித்த சிரிப்புப் பற்றி தெருக்காரப் பெண்கள் மெதுவாகப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். இதே போல சில அரசு அதிகாரிகளின் அம்பாசிடர் கார்களும் தெருவுக்குள் அவ்வப்போது வந்து செல்கிற சம்பவத்துக்குப் பிறகு அவள் பற்றி பேச வேண்டுமென்றால் ரகசியமாக மெதுவாகவே பேசத்தொடங்கி இருந்தார்கள்.

உயரமாக, இளம் மஞ்சள் நிறமாக, மூக்கும் முழியுமாக, பேரழகைக் கொண்டவளான அவளுக்கு வெளியூர்க்காரர்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக இருந்தனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர்க்காரர்களும் வாடிக்கையாளர் ஆனார்கள். லாரி டிரைவரான சுப்பையாதான் ஊருக்குத் தெரிந்து அவள் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று வருபவனாக இருந்தான். அவளுடன் அதிக நட்புக் கொண்டவனாகவும் இருந்தான். இவனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் சில இளவட்டங்கள் அவள் வீட்டுக்குச் சென்று வருவதை கருவை முட்களின் வழியாகப் பார்க்க முடியும். பெரிய மனிதர்கள் என்கிற பேராசைக் கொண்டவர்களில் இருந்து ஊரில் மதிக்கப்படுகிறவர்கள் வரை, அவள் வீட்டுக்கு ரகசியமாக சென்று வந்தனர். இதற்காக அவளுக்கு கொடுக்கப்படும் பணம் எவ்வளவாக இருக்கும் என்பது பற்றி தெப்பக்குள திண்டுகளில் பேச்சு நடக்கும்.

இவ்வளவு பேரழகு கொண்ட சில்க், ஏன், எப்படி இந்த தொழிலுக்கு வந்தாள் என்கிற கேள்வி, மாடுமேய்க்கும் இடத்தில் அடிபடும். அவளிடம் கேட்டால், ஏதாவதொரு துக்கக் கதை சொல்பவளாக இருப்பாள். அவளின் கதை என்னவாக இருக்கும் என்கிற கற்பனைகள் பறக்கும். ஏற்கனவே சினிமா படங்கள் காட்டியிருக்கிற பாலியல் தொழிலாளிகள், கட்டாயத்தின் பேரிலேயே இத்தொழிலுக்கு வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். இவளும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற நினைப்பும் வரும்.

இது ஒருபக்கம் இருந்தாலும் அவளுக்கு திடீரென்று நல்ல பெயர் ஏற்பட்டு வந்தது. ஊரில் தபால் ஆபீஸை அடுத்து அவள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. ஆத்திர அவசரத்துக்கு அவள் வீட்டில் போன் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. வெளிமாநிலங்களில் வசிக்கிற உள்ளூர்க்காரர்களுக்கு அவசரத் தேவைக்கு அவள் வீட்டு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. இதை விருப்பமுடனேயே சில்க் செய்துவந்தாள்.

யாருக்கு கஷ்டம் என்றாலும் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்பதையும் கடமையாகச் செய்தாள். இப்படி கொடுப்பதன் மூலம் ஊரின் மதிப்பை பெற முடியும் என்று நினைத்தாளோ என்னவோ? இந்த கடன் விஷயங்களுக்காக அவளது உறவுக்காரன் எனச் சொல்லப்பட்டவன் இருந்தான். அவனை, வக்கெட்டை என்றுதான் அழைப்பார்கள். அப்படிச் சொல்லும்போது அவனுக்கு கோபம் வருவது போல காட்டிக் கொள்வான். அவளிடம் பழக வேண்டும் என்பதற்காகவே வக்கெட்டையிடம் சிலர் நட்பு வைத்திருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

‘போன வாரம் கோயில் கொடை. ஊர்க் கூட்டத்துல தலைகட்டுக்கு எரநூறுன்னு வரி வச்சுடானுவோ. வரிக்குன்னு வச்சிருந்த ரூவாயை தங்கச்சி மவ சடங்குக்கு செலவழிச்சாச்சு. திடீர்னு ரூவாய்க்கு எங்கெ போவ? எவண்டயாவது கேட்டாலும் தருவானுவளா, சொல்லு? வீட்டுல வெறவு வெட்டுததுக்கு ஒரு நாளு கூப்டுச்சு அந்த பிள்ளெ. கள்ளங்கபடம் இல்லாம பேசுச்சு. அந்த பழக்கத்துல அவ வீட்டுக்குப் போயிட்டென். ‘கொஞ்சம் கடனா ரூவா கெடெக்குமா தாயி’ன்னு வெக்கத்த விட்டு, கேட்டென். அசலூர்க்கார பிள்ளைட்ட போயி கடன் கேக்கோமேன்னு கேவலமாதான் இருந்துச்சு. வேற என்ன செய்ய சொல்லுதெ? மறுபேச்சு பேசலயே. வீட்டுக்குள்ள போயி, பெட்டியை தெறந்து ரூவாயோட வந்துட்டா மவராசி. தை மாசம் தாரன்னுட்டு வாங்கிட்டு வந்தென்? இல்லைன்னா, வரி கொடுக்காம ஊர்ல கேவலலா பட்டிருப்பென்? அவ என்ன தொழிலும் பண்ணிட்டும் போட்டுண்டா. அந்த மனசு ஒனக்கு வருமாடே? சொந்தக்கார பயலுவோ கடன் கொடுப்பானுவளாடா? மீன் வித்த துட்டு என்ன, நாறாவால போது?' என்று விறகுக்குப் போகும் முத்தையா, ஊரில் அவள் பெருமைப் பேச ஆரம்பித்துவிட்டார். இதைத் தொடர்ந்து பலர் அவளிடம் கடன் கேட்டு நிற்கத் தொடங்கி இருந்தனர்.

இந்த கொடுக்கும் குணம் காரணமாக அவளிடம் பேசவே தயங்கும் பெண்கள் அவளின் தோழிகளாகி இருந்தனர்ர். அவள் மகனுக்கு தெருவில் சேக்காளிகள் கிடைத்தார்கள். இருந்தாலும் அனாவசியமாக அவள் ஊருக்குள் அலைவதில்லை. இரண்டு வேளை மட்டுமே அவள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவாள். ஒன்று அதிகாலையில் வாய்க்காலில் குளிப்பதற்கு. மற்றொரு முறை பக்கத்து டவுணில் படிக்கிற மகன் பஸ்சில் இருந்து இறங்கியதும் அழைத்துப் போவதற்கு. இந்நேரங்களில் அவளைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் கூடும். காலையில் இவள் குளிக்கும் இடத்துக்கு கொஞ்சம் மேற்கு பக்கமாக இருக்கிற தெப்பக்குள திண்டில் ஒரு கோஷ்டி அமர்ந்திருக்கும். மாலையில் சுடலை மாட சுவாமி கோயில் சுவர். இவர்களுக்கான பிரச்னை, ‘‘இவ்வளவு பேரழகு கொண்டவள், தங்களை ஏற்றுக்கொள்வாளா?' என்பதுதான்.

மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் கூனையன், அவள் வீட்டுக்குப் போய்விட்டு வந்ததை பிள்ளையார் கோவிலுக்குப் பின் பக்கம் அமர்ந்து பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான். ‘‘ஆயிரஞ் சொல்லுலெ. அவா பேசுனாலெ போதும். என்னா கொரலுங்கெ. கேட்டுட்டே இருக்லாம் போல்ருக்கும்' என்று ஆரம்பித்து அவன் விவரிக்கும்போது அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுக்கு காமம் தலைக்கேறும். இவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காகவே பொய்யாகவும் கற்பனையாகவும் சில விஷயங்களை அவன் சொல்வான். இம்மாதிரியான கதைகள் அவள் பற்றிய ஏக்கத்தை ஊருக்குள் அதிகமாக்கி இருந்தது.

புதிகாக கல்யாணம் ஆன தங்கசாமியை திருட்டு வழக்கு ஒன்றில் போலீஸ் பிடித்துச் சென்றபோதுதான் சில்கின் அதிகாரத்தை ஊர் அறிந்தது. தங்கசாமி பழைய குற்றவாளி. கடந்த சில வருடங்களாக சித்தாள் வேலைக்குப் போய்விட்டு திருந்தி வாழ்கிறவன். ஆழ்வார்க்குறிச்சியில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் இவனை பிடித்துப் போனது போலீஸ். அவனை விட அவனது புது மனைவிதான் துடித்துப்போனாள். அவன், திருடவில்லை என்று மறுத்தும், ‘ஸ்டேஷன்ல ஐயாவ பாத்துட்டு வந்துரு' என்று அழைத்துப் போனார்கள். தெருவே பரபரப்பானது. கல்யாணம் ஆன நான்கு நாட்களிலேயே இப்படி பிடித்துக்கொண்டு போனது தெருக்காரர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘‘பாளையங்கோட்டைக்குலா கொண்டு போயிருவானுவோ' என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சில்க்கிடம் இந்த விஷயத்தை யாரோ சொன்னார்கள். அவள், தங்கசாமி வீட்டுக்குப் போனாள். ‘ஒண்ணும் பிரச்னை இல்லெ. ஒன் வீட்டுக்காரன் வந்துருவான். நா பாத்துக்கிடுதென்' என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாள். அவள் சொன்னதை முதலில் யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் சொன்னது போலவே, ராத்திரி கடைசி பஸ்சில் வந்து இறங்கியிருந்தான் தங்கசாமி. காலையில் எழுந்ததும் பொண்டாட்டியுடன் அவள் வீட்டுக்குப் போனான். காலில் விழப்போனவனிடம், ‘ச்சே என்ன வேலை பார்க்க?' என்று நகர்ந்தாள். அவன் திடீரென தனது சட்டையை கழற்றி முதுகைக் காண்பித்தான். பிரம்பால் அடித்த அடி, தடம் போல் பதிந்திருந்தது. ‘‘போலீஸ்காரங்க அடிச்சே கொன்னுருப்பானுவோ. நீ மட்டும் சொல்லலைன்னா..?' என்று அழ ஆரம்பித்திருந்தான். அவனது மனைவியும் சேலை முந்தானையை வாயில் வைத்துக்கொண்டு கவலையாக நின்றாள். ‘‘அழாத. ஒண்ணும் பிரச்னையில்லை. நீ வீட்டுக்குப் போ' என்ற சில்க் இருவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள். காமம் பெருகும் இடத்தில் பாசம் பெருகிக்கொண்டிருந்தது. அவன் போகும்போது, ‘‘வாரென்க்கா' என்றான். அந்த ‘அக்கா’வை ரசித்தவளாக அவள் இருந்தாள்.

வயதாக ஆக அவளின் இளமை கூடிக்கொண்டே இருந்தது. ‘அணைய போற விளக்கு பளிச்சுனு எரியற’ மாதிரி ஒரு சித்திரையில் திடீரென இறந்து போனாள் சில்க். அவளது மரணம் யாராலும் நம்ப முடியாததாக இருந்தது. மாரடைப்பால் மரணம் என்றார்கள். ‘‘நேத்து சாய்ந்தரம் ஏங்கிட்டெ பேசிட்டுதான் படுக்கப் போனா. அதுக்குள்ளெ இப்டி போயிட்டாளெ?' என்று ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்பாச்சி. அவள் உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் எல்லாரும் கூடியிருந்தார்கள். யாரும் அழவில்லை. கடன் கொடுக்கவும் போலீஸ் பிரச்னை என்றால் சொல்லி விடுவிக்கவும் இனி யாருமற்ற ஊரில், எப்படி வாழ்வது என்கிற யோசனை எல்லோர் முகங்களிலும் தெரிந்துகொண்டிருந்தது. வேலைக்குப் போன தங்கசாமி விஷயம் கேள்விபட்டு பாதியில் திரும்பினான். வேக வேகமாக வந்தவன் அவள் உடலைப் பார்த்தான். பெரும் உணர்ச்சியில் சத்தமாக அழத் தொடங்கினான். எல்லாரும் அவனையே பார்த்தார்கள்.
அந்த அழுகை சத்தம் அவனை பயமூட்டிக்கொண்டே இருந்தது.

Sunday, January 20, 2013

பறவைகள் சாயும் காலம்

மாலை மற்றும் விடுமுறை நாட்களில், கவட்டை (உண்டி வில்) இல்லாமல் நீல் ஆம்ஸ்ட்ராங்கைப் பார்ப்பது கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடிப்பு மாதிரி, நீலுக்கு கவட்டைக் கம்பு பிடித்திருந்ததற்கு காரணம் ஏதும் தெரியவில்லை. ஆனால், அவன் வீட்டைச் சுற்றி இருக்கிற மரங்களில் தங்கும் பறவைகளுக்குத் தெரிந்திருக்கலாம். இரவு நேரங்களை விடுத்து பறவைகள் அந்த மரங்களை அண்டாததற்கு அவன் மட்டுமே காரணம் என்பதை அவனும் அறிந்திருந்தான். ‘நீல் என்கிற சாதாரண மனிதனின் கவட்டைக் கம்புக்கெல்லாம் பயங்கொள்கிற ஆள் நானில்லை‘ என்பது மாதிரி சில காகங்கள் அங்கு கூடு கட்டியிருந்தன. மரத்தில் இருக்கிற, பறக்கிற அல்லது மின்கம்பத்தில் அமர்ந்திருக்கிற பறவைகளை மட்டுமே நீல் குறிபார்ப்பதால் கூடுகள் பிழைத்திருந்தன.


நீலுடன் செல்கிற யாருக்கும் அவ்வளவு சரியாகக் குறிபார்த்து அடிக்கத் தெரியாது. அவர்கள் கத்துக் குட்டிகளாகவே இருந்தார்கள். அந்த கத்துக் குட்டிகளில் நானும் ஒருவன். ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட கூலாங்கல்லைக் கொண்டு கவட்டையை இழுத்து அவன் விட்டால் கண்டிப்பாக ஏதாவதொரு பறவை உயிரிழந்திருக்கும். பறவைகளைக் கொல்வது அவனது நோக்கமல்ல. உயிர்களைக் கொல்வது பாவம் என்பதும் அவனுக்கு தெரியாததல்ல. ஆனாலும் கொக்கு, கருவாலி, புறா உள்ளிட்டவை அவ்வளவு ருசியாக அமைந்துவிட்டதற்கு அவனையும் குற்றம் சொல்ல முடியாது. ‘கொக்கு டேஸ்ட்டு எப்படியிருக்குங்கெ? நெய்ல போட்டு எடுத்த மாரிலா இருக்கும்’ என்று நீல் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டால் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியாது.

ஊரில் எல்லோரும் ஒரே மாதிரியாக கவட்டைக் கம்பு வைத்திருந்தால் நீலிடம் வித்தியாசமானதாக இருக்கும். எல்லோரும் சைக்கிள் டியூப்பையும் மூன்று இஞ்ச் அளவு மாட்டுத்தோலையும் பயன்படுத்தி, ஆங்கில ‘வி’ வடிவம் போலான கவட்டையை உருவாக்கி இருப்பார்கள். அந்த கம்புகள் கருவை முட்களை வெட்டி எடுத்தவையாகத்தான் இருக்கும். ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்க் மாறுபட்டவன். பேட்டையில் வசிக்கிற நரிக்குறவர் ஒருவரிடம் காசு கொடுத்து, ரயில் டியூப் என்று சொல்லப்படுகிற கட்டி ரப்பரால் கட்டப்பட்ட கவட்டையை வாங்கி இருந்தான். கம்பு கூட மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒன்று. சைக்கிள் டியூப்பில் உருவாக்கப்பட்டவைக்கான ஆயுள் குறைவுதான். ஆனால் கட்டி ரப்பர் கவட்டை ஸ்ட்ராங்கானது. கல்லை வைத்துக்கொண்டு, பலம் கொண்ட மட்டும் இழுத்துவிட்டால் அடிபடுகிற எதுவும் லேசாகப் பட்டால் கூட கண்டிப்பாக விழுந்துவிடும்.

மாலை நேரங்களில் ஆளுக்கொரு கவட்டையை தூக்கிக் கொண்டு நீல் ஆம்ஸ்ட்ராங்கைப் பின்பற்றி கடனாநதி ஆற்றுக்கு நடப்போம். போகும் வழியில் ஆர்வக் கோளாறுகளான நாங்கள், மின் கம்பத்தில் அமர்ந்திருக்கிற பறவைகளில் ஏதாவது ஒன்றை குறிபார்க்க, சம்பந்தமில்லாமல் கல் எங்கோ போய் விழும். ‘போங்கலெ. நீங்கெல்லாம் ஒரு ஆளு‘ என்பது போல அந்த பறவை நெற்றிக்கு நேரே வந்து, கிண்டலாகப் பறந்து போகும். இருந்தாலும் எங்கள் முயற்சியை விடுவதில்லை. ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இயற்கையாகவே குறிபார்த்து அடிக்கும் வல்லமை இருந்தது. கருக்கல் நேரங்களில் ஆற்றோரப் பொத்தைகளில் இருந்து கருவாலிகள் கூட்டம் கூட்டமாக வரும். கோழி குஞ்சு போல இருக்கிற கருவாலிகள் சிறிது தூரம் மட்டுமே பறக்கும் தன்மை கொண்டவை. ஆனால், வேகமாக ஓடக்கூடியது. இவற்றில் நான்கைந்தை குறி பார்த்து சாய்த்து பண்ணிவிட்டால், நீலுக்கு குஷிதான். அவை அவ்வளவு சீக்கிரத்தில் மாட்டியும்விடாது. கருவாலி ருசி போரடித்துவிட்டால் இருக்கிறது புறாக்கள். சுப்பையா தோப்பில் இருக்கிற பெருங்கிணற்றில் வசிக்கிற புறாக்கள், நீலுக்கு இரையாவதற்கென்றே வாழ்ந்து வருதாகத் தோன்றும். ஒன்றை அடித்தால் மற்றவை பறக்கத் தொடங்கும். பிறகு கும்பலாக பறக்கின்றவை மீது குருட்டாம்போக்கில் அடித்தால் கூட ஏதாவது ஒன்று விழும்.

இவ்வாறு அடிபடும் பறவைகளை கறி வைப்பதற்காக, நீலின் வீட்டுக்குப் பின்பக்கம் தனி அடுப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. மசாலா உள்ளிட்டவற்றை சுப்ரும் நீலும் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கான உதவிகளை மட்டும் நாங்கள் செய்வோம். சட்டியில் கொதித்துக் கொண்டிருக்கும்போதே சங்கருக்கு எச்சில் ஊறும். கொதித்து இறக்கியதும் உடனிருக்கும் குட்ட கணேசன், ராஜா ஆகியோருக்கு இருப்பு கொள்ள முடியாது. அகப்பையில் இருந்து கொஞ்சமாக கையில் ஊற்றி நக்குவான் சங்கர். ஒரே ஒரு துண்டை மட்டும் எடுத்து வெந்துவிட்டதா என்று பார்ப்பான் சுப்ரு. வாசனை மூக்கை துளைத்து பக்கத்து வீட்டு பிச்சம்மா மைனி, ‘என்னடெ அவிக்கியோ?’ என்று கேட்டுக்கொண்டே வருவாள். அவள் போடும் அவயத்தில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு இன்னும் கொஞ்சம் சத்தமாகக் கேட்கும். வந்துவிட்டதற்காக, அவளுக்கும் பங்கு. இப்படி பங்கு வாங்குவதன் காரணமாக, சில நேரங்களில் மசாலா அரைத்து கொடுத்து உதவுவதையும் மைனி செய்து வந்தாள். அவளது மசாலாவில் காரம் அதிகமாக இருக்கும் என்பதால் அடிக்கடி அவளை தொந்தரவு செய்வதில்லை.

இப்படி விதவிதமாக சாப்பிடும் பொருட்டு வாரத்துக்கு ஒரு முறை முயல் பிடிக்கச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கான இடமாக ஆற்றுக்கு செல்லும் வழியில் இருக்கிற தோப்பு கண்டறியப்பட்டது. முயல் கறிக்கான போட்டி, தெருவில் அதிகம் இருந்ததால் குறைந்தது இரண்டு மூன்று முயல்களாவது வேண்டும். அந்த தோப்பு அவ்வளவு லேசில் சென்று வரக்கூடியதல்ல. உள்ளேயே இரண்டு மூன்று கி.மீ தூரத்துக்குப் போய்க்கொண்டே இருக்கும். இதில் எங்கு போய் முயலை பிடிப்பது என்கிற பயம் எனக்கு. அதுமட்டுமில்லாமல், மழை, வெள்ள காலத்தில் ஆற்றில் அடித்துவருகிற மலை பாம்புகள் அத்தோப்பில் குடியிருந்து வருவதாகச் சொல்லப்படும் கதைகளால் இன்னும் பயந்திருந்தேன். ‘போலெ பயந்தாங்கொள்ளி. ஹெட் லைட்டு இருக்கு. டார்ச் லைட்டெ எடுத்துக்கிடுவோம். பெறவு எதுக்கு பயப்படுதெ?’ என்பான் குட்ட கணேசன் பெரும் வீரனைப்போல.

சாயங்காலம் கிளம்புவோம். போகும் வழியில் முயலை நினைத்துக்கொண்டே நாங்கள் சென்றுகொண்டிருக்க, நீல் மட்டும் ‘கொஞ்சம் நில்லுங்கலெ’ என்பான். கருவைமுட்களின் அடியில் தெரிகிற பொந்தில் பாம்பின் தலை ஒன்று தெரியும். ‘எங்க கண்ணுக்கு ஒண்ணுமெ தெரியலெ. ஒனக்கு மட்டும் எப்டிடெ தெரிது’ என்று ஆச்சரியப்படுவோம். கவட்டையில் கல் ஏற்றப்படும். அடுத்த நிமிடம், பாம்பின் மூஞ்சில் கல்பட்டு, பொந்து சிதைந்திருக்கும். உள்ளே பாம்பு உருள, கம்பால் அதை வெளியே இழுப்பான். எங்களுக்கு பயம். தூரமாக நின்றுகொள்வோம். பிறகு அப்படியே ரோட்டில் போட்டுவிட்டு நடப்பான். பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அடிபட்டு நசுங்கி, நான்கைந்து நாட்களில் காய்ந்த முருங்கைக்காய் மாதிரி ரோட்டின் ஓரத்தில் கிடக்கும் அது. அந்த வழியாகச் செல்லும் நாங்கள், ‘நீலு அடிச்சது’ என்று பெருமைப்பட்டுக் கொள்வோம். ‘நீல் கொன்னதா?’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள் தெருக்காரப் பெண்கள்.

இருட்டத் தொடங்கிவிட்டது. தோப்புக்கு வேலி என்ற ஒன்று இருந்தாலும் குறுக்கு வழிதான் பிடித்தமாக இருந்தது. கள்ளிச்செடியை நீக்கி விட்டு உள்ளே இறங்குவதுதான் வழக்கம். இறங்கி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தோம். நெற்றியில் ஹெட்லைட் மாட்டிக்கொண்டான் நீல். வழக்கமாக அவன் பார்க்கும் இடத்தில் தேடினான். மாட்டிக்கொண்டது. ஹெட்லைட் ஒளியில் முயல் ஒன்று அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, டார்ச்சின் மண்டையால், அதன் மண்டையில் கணேசன் போட்டான் ஒரு போடு. டொப்பென சரிந்ததை தூக்கி பையில் போட்டுக்கொண்டான் சுப்ரு. இன்னும் இரண்டு வேண்டுமே. தோப்புக்குள் நடந்தோம். கிடைக்கவே இல்லை. வந்ததற்கு நான்கைந்து மாங்காய்களையும் பறித்துக் கொண்டு திரும்பினோம். ஏற்கனவே அடித்திருந்த கருவாலிகளும் கறிக்கு தயாராக இருந்தன.

வீட்டில் கறி வைத்துக் கொண்டிருக்கும்போது, பின் பக்கம் குடியிருக்கிற மல்லிகா அத்தை, ‘எங்கூட்டு கோழியெ காணலெ. எருக்கெடங்குல கோழி எறவு கெடக்கு. களவாண்டு கறிவச்சு தின்ன பாவியோ உருப்புடுவேளா நீங்கெ?‘ என்று ஆவேசங்கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள். அவள் ஜாடை மாடையாக பேசுவது எங்களைத்தான் என்பது குத்துமதிப்பாகத் தெரிய வந்தது. அவள் போட்ட அவயத்தில், ‘ஏ மல்லி, என்னட்டி சத்தம் போடுதெ‘ என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் சேர்ந்துவிட்டார்கள். நேராக, நீலின் வீட்டுக்கு வந்தவர்கள், கத்தத் தொடங்கிவிட்டார்கள். அவள் சொன்ன கோழி இறகு, கருவாலியின் இறகு. அதை அவளுக்குப் புரிய வைப்பதற்குள் பெரும் களேபரமாகிவிட்டது.

வெளியூர் சென்றிருந்த நீலின் அப்பா, சரியாக வந்து சேர்ந்தார். கூட்டத்தையும் விஷயத்தையும் கேள்விபட்டு கொதித்து எழுந்து, ‘இந்த பெயலுவோ கூட சேராதென்னு சொல்லிருக்கெம்லா. ஏம்லெ சேர்ந்தெ. ஒன்னால எனக்குதாம் கேவலமா இருக்கு‘ என்று போட்ட அடியில், நாங்கள் ஓடிவிட்டோம். பிறகு அவள் வீட்டுக் கோழி நள்ளிரவில் வந்து சேர்ந்த பின்தான் பிரச்னை முடிந்தது. இல்லையென்றால் வரலாற்றில் வீண்பழியை சுமந்தவர்களாக எங்கள் டீம் ஆகியிருக்கும்.

நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டில் நீளமான ரெட்டைக்குழல் துப்பாக்கி ஒன்று உண்டு. அவர்கள் வீட்டில் அதை தொங்கப்போட்டிருக்கும் அழகே தனி. அதைப் பார்க்கும் போதெல்லாம், கவுண்டமணி ஒரு படத்தில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, ‘எங்கெ புலி, எங்கெ புலி’ என்று அலைவது ஞாபகத்துக்கு வரும். அந்த துப்பாக்கி, நீலின் அப்பா வேட்டைக்கு செல்வதற்கு. அவர் வேட்டைக்கு செல்லும்போது, நாங்கள் கூட செல்ல முடியாது என்பதால், நீல் சொல்லும் கதைகளை நம்ப வேண்டியதாக இருக்கும்.

‘மிளாவெலாம் லேசுல சுட முடியாது தெரியும்லா. எங்கப்பா சுட்டார்னா, ஒரே சுடுல, நாலஞ்சு மிளா ஒண்ணு போல விழும்‘ என்கிற போது, ‘அதெப்படிடெ’ என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால், ஆட்டைக்கு சேர்த்துக்கொள்ள மாட்டான் என்பதால் ‘அப்டியாடெ’ என்று ஆச்சர்யம் காட்டுவோம். நீலுக்கு அந்த துப்பாக்கியை தூக்கிக்கொண்டு வந்து எங்களோடு முயல் சுட வேண்டும் என்ற ஆசை. துப்பாக்கி ரெடியாக இருந்தாலும் ‘ரவை’யை அவனது அப்பா பீரோவில் பூட்டி, எண்ணிவேறு வைத்திருப்பதால் தொட முடியாது. இருந்தாலும் ஆசை அடங்கக் கூடியதா என்ன? ஒரு நாள், ‘ரவை போட்டுக்கொடுங்கெ. மொயலு சுட போறென்‘ என்று நீல் கேட்க, ‘இதெ ஒழுங்கா புடி பாப்போம்’ என்று துப்பாக்கியை தூக்கி கொடுத்துவிட்டார். அதைத் தூக்கி நெஞ்சிக்கு மேல், தோள் பட்டையில் வைத்து குறிபார்ப்பது எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தது. அதன் நீளமும் கனமும் பிரச்னையாக இருந்ததால், ‘ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ கதையாய், ‘வேண்டாம்’ என்றான் அப்பாவிடம்.

‘‘இப்பம் துப்பாக்கியெ வச்சு சுடுதெம்னு வையென். தப்பிப் எவென் மேலயும் ரவை பட்டுட்டு வையி, சும்மா விடுவானுவெளா? நமக்கு கவட்டைதாம்டெ சரி?’’ என்று முடிவுக்கு வந்தான். போதாக்குறைக்கு பக்கத்துத் தெரு பெரிசுகள், ‘‘ஒடம்புக்கு செரியில்லடெ. மொயல் கெடச்சா, கொஞ்சம் கறி கொண்டாந்து கொடு’’ என்று பாசமாகக் கேட்டுப் போனதையடுத்து நீல், ‘கவட்டைக்காரன்‘ ஆனான்.

கவட்டையும் கையுமாக எப்போதும் அலைந்த நீல் ஆம்ஸ்ட்ராங்க், இப்போது ஆசிரியர். மலையடிவார கிராமமொன்றில் புத்தகமும் கையுமாக இருக்கிற அவனுக்கு கவட்டையும் கருவாலிகளும் மறந்திருக்கலாம். ஆனால், குருவிகளையும் மைனாக்களையும் கல்லால் குறிபார்த்து அலைகிற அவனது இரண்டாவது மகன், இன்னொரு நீலாகவே தெரிகிறான்.

Monday, January 14, 2013

போதையின் நிழல்

திருக்கிய மீசையும் சிவந்த கண்களுமாக அலையும் மாசியின் நடைதான் அவனது போதை அளவை தீர்மானிப்பதாக இருக்கும். போதையின் நடைகளை அதாவது போதையில் தள்ளாடுகிறவனின் கால் அசைவுகளை கணக்கிட்டால் அதுவும் குத்துமதிப்பாக ஏதாவதொரு நடன வகைக்கு ஒப்பானதுதான். சுமாரான போதை என்றால் கால்கள் அதிகம் அலைவதில்லை. அதிகப் போதைக்கு தாவி தாவி நடக்கும். இன்னும் அதிகமெனில் விழுந்து எழும் நடைதான். மாசி, சுமார் அல்லது அதிகம் அல்லது குறைவான போதையில் எப்போதும் இருப்பவன்.


இந்தப் போதையின் காரணமாக, உப்புச் சப்பில்லாத காரணத்திற்கெல்லாம் அரிவாளோடு வந்து அரற்றிவிட்டுப் போவது அவனது அனாவசிய நடவடிக்கைகளில் ஒன்று. இதற்காகப் பாப்பான்குளத்தில் இருந்து வாங்கிவரப்பட்ட அரிவாளைப் பயன்படுத்தி வந்தான். மாசியின் கணக்கில், இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நான்கு பெட்டிகேஸுகளும் இருந்தன. இதற்கு முந்தைய வழக்கு ஒன்றில் நான்கு மாதம் சிறைக்குச் சென்று வந்திருந்தான் என்பதால், ‘அவங்கிட்டெ சொரணாவக் கூடாதுல. பட்டுன்னு கத்திய நீட்டிருவான்' என்கிற எச்சரிக்கை உணர்வு எல்லாருக்கும் இருந்தது.

அவனது பெயரைச் சொல்லிதான் குழந்தைகளுக்குச் சோறூட்டுவார்கள் பெண்கள். 'ஒழுங்கா திய்ங்கணும். இல்லன்னா, குடிகார மாசிட்டெ புடிச்சிக்குடுத்திருவென்' என்கிற மிரட்டலில் குழந்தைகள் உணவு உண்டு வந்தனர். தெருவில் அவன் நடந்து சென்றால் வீட்டின் வெளிக்கதவை அடைத்துவிட்டு பெண்கள் உள்ளுக்குள் ஓடிவிடுவார்கள். இந்த ஓடலுக்கு, ‘ஓத்த செத்தெயில பொம்பளயோ நின்னா, பட்டுனு கைய புடிச்சு இழுத்துருவானாம்லா' என்கிற காரணம் சொல்லப்பட்டு வந்தது. இதற்காகவே ஆற்றோர வயல் மற்றும் தோப்புகளுக்கு செல்கிற பெண்கள் இரண்டு மூன்று பேர்களாகவோ, அல்லது யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டோ சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மாசியின் பிரதான தொழிலாகச் சாராயம் வடிப்பது இருந்தது. உப தொழில் விவசாயம். வடிப்பதன் பொருட்டு குடிப்பதும் உண்டென்பதால் சண்டை சச்சரவுகள் அவனுக்கு விருப்ப விஷயமானது. இதன் பொருட்டு மாசிக்கு ‘மரியாதை' தானாக ஒட்டிக்கொண்டது. உள்ளூரை விட வெளியூர்காரர்களே மாசிக்கு வாடிக்கையாளர்களாக இருந்தனர். ஊரில் மொத்தமே மூன்று நான்கு பேர்தான் குடிகாரர்கள். அவர்களும் மாசியிடம் சரக்கு வாங்கிக் குடித்துவிட்டு அரவம் இல்லாமல் வருபவர்களாகவே இருந்தனர். பக்கத்து ஊர் வாடிக்கையாளர்களான ஆழ்வார்க்குறிச்சியைச் சேர்ந்த துபாய் ஸ்டீபனும் பூவன்குறிச்சியை சேர்ந்த பாம்பே சுடலையும், சிகரெட் அட்டை சிட்டாவில் கணக்கெழுதி குடித்தும் வந்தனர். இந்த எளிய குடிகாரர்களால் ஊரில் எப் பிரச்னையும் இல்லை. இவர்கள் தினமும் குடிப்பவர்களாகவும் இருந்ததில்லை. ஆனால், இதில் மாசி விதிவிலக்கு. குடித்துவிட்டானென்றால், அரிவாளால் மிரட்டுவது, யார் வீட்டிலாவது கல்கொண்டு எறிவது என ஏதாவதொன்று நடக்கும். இதனால் ஊரில், ‘பெரும் குடிகாரன்' என்கிற தகுதியை பெற்றவனாக அவன் மட்டுமே இருந்தான்.
வழக்கமாக, அவன் சாராயம் வடிக்கும் கடனாநதி ஆற்றின், ஒற்றைத் தென்னம் பிள்ளை வேலியில் இருந்து, நடந்து சிவன் கோயில் வழியாக, ஊருக்குள் நுழைந்து விட்டால் கண்டிப்பாகச் சலம்பல் தொடங்கும். இவன்தான் சாராயம் காய்ச்சுபவன் என்றாலும் அதை வடிப்பது, அவனது சின்னக்கா மகன் உலுக்கையும் பெரியக்கா மகன் பூனைக் கண்ணனும்தான். இவர்கள் பெயருக்கு கூட குடிக்கக் கூடாது என்பது மாசி போட்டிருக்கிற கட்டளை. அதைத் தாண்டி அவர்கள் எப்போதாவது ருசி பார்த்துக் கொள்வார்கள். மாசிக்கு, உள்ளே போயிருக்கிற இளஞ்சூட்டு சாராயம் போகப் போகத்தான் ஆளைத் தூக்கும். கோயில் வந்ததும், திண்டில் படுத்திருப்பவர்களிடம், ‘‘இங்கெ யாம்லெ படுத்திருக்கியோ. வீட்டுல போயி தூங்குங்கெல'' என்று தள்ளாடியபடி விரட்டுவான். ‘‘யாரை வந்து வெரட்டுதெ. நீ ஒழுங்கா போலெ'' என்று யாராவது குரல் கொடுப்பார்கள். பிரச்னைதான். மாசி அரிவாளை தூக்க, அவர்கள் கல்லை எடுக்க ரணகளம் ஆரம்பமாகும். இது அப்படியே தொடர்ந்து, செக்கடித் தெருவில் வந்து நிற்கும் பிரச்னை.

அங்கு பலசரக்கு கடை வைத்திருக்கும் குட்டியிடம், ‘‘செயிது பீடி ஒரு கெட்டு'' என்று கேட்பான். இந்த நேரத்தில் துட்டு கேட்டால் தகராறு வரும் என்பதால், பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவான் குட்டி. கடையில் உட்கார்ந்து கதைப் பேசிக்கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நின்றுகொள்வார்கள். அவன் இவர்களைப் பார்க்க ஆரம்பித்தால் உடனே இடத்தை காலிபண்ணிவிட வேண்டும் என்கிற ரீதியில் அவர்கள் பயத்துடன் தயாராகவே இருப்பார்கள். பீடியை பற்ற வைத்துவிட்டு அரிவாளை தூக்கியபடி, கெட்டவார்த்தைகளில் பேசத் தொடங்குவான் மாசி. அதற்குள் நான்கைந்து தெரு தள்ளி இருக்கிற அவனது வீட்டுக்குத் தகவல் போகும்.

அவன் பொண்டாட்டிக்காரி, ‘‘இதெ வேலயா போச்சு. எங்கெயும் விழுந்து கெடந்துட்டு வரட்டும். நான் அங்கெ போவ மாட்டென். எனக்குலா வேசடையா இருக்கு. ஊரு ஒலகத்துலயெல்லாம் ஆம்பளெ இல்லையா? இப்டியா இருக்காவோ எல்லாரும்? இங்கெ கெடந்து கேவலப்படணும்னு எந்தலையில எழுதிருக்காம், அந்த சொல்லமாடன்'' என்று புலம்பியவாறு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு குளிக்கக் கிளம்பி விடுவாள். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினந்தோறும் என்றால் எரிச்சல் வராதா என்ன? அவன் அம்மா அனச்சிதான் இப்போதும் போவாள்.

‘‘இவன் சாவவும் மாட்டாம்போலுக்கு. எங்கெ கொதவாளயெ அறுக்கென்னெ வந்திருக்காம், சனியம் புடிச்சவன்'' என்று திட்டிக்கொண்டே வருவாள். அம்மாவைப் பார்த்ததும் மாசி சத்தத்தை இன்னும் அதிகமாக்குவான்.

வாதமடக்கி மரத்தை தவிர எதிரில் யாருமற்ற தெருவில் நின்றுகொண்டு, ‘‘எவனா இருந்தாலும் வாங்கெல. இங்ஙெனயே நிய்க்கென் வாங்கெல'' என்று சாரத்தை நெஞ்சுவரைக் கட்டிக்கொண்டு சத்தம் போடுவான். நாக்கைத் தொங்கப் போட்டவாறு ஓடிவரும் டிரைவர் வீட்டு நாய், அவனை பரிதாபமாகப் பார்த்தபடி வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். ‘‘ஏம்முன்னாலயே நின்னு வாலெ ஆட்டுதியா?'' என்று அரிவாளை ஓங்குவான். அதற்குள் நாய் ஓடியிருக்கும். ஓங்கிய அவனது கையை பிடித்துக் கொண்டு அம்மா வரச்சொல்லுவாள்.

‘‘ஏழா, நீ போழா. அவனெ வெட்டாம வரமாட்டென்'' என்று இல்லாத எதிரியை திட்டியபடி திமிறுவான். விஷயம் அவன் நண்பன் உச்சிமகாளிக்குப் போவும். யார் சொல்லியும் கேட்காத மாசி, உச்சிமகாளி சொன்னால் எதையும் கேட்பவனாக இருந்தான். ஆனால், மாசிக்கு நேரெதிரானவன் உச்சி. குடி இவனுக்கு ஆகவே ஆகாது. இவர்களின் நட்பை ஊரில் அதிசயமாகவே பார்த்து வந்தார்கள்.

‘‘ஏலெ கோட்டிக்காரப் பெயல. ரோட்டுல நின்னா சலம்புவெ. கூறுகெட்டவனெ, வா'' என்று உச்சி சொன்னதும் பெட்டிப் பாம்பாக நடப்பான். வீட்டுக்குப் போனாலும் தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருக்கும். அருகில் குடியிருக்கிற கோட்டி மணிக்குத்தான் எரிச்சல். இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்துவிட்டான். நான்கைந்து முறை சண்டையும் போட்டுவிட்டான். இப்போது பழகிவிட்டதால் கண்டுகொள்வதில்லை.

உள்ளூர் கடைகளில் மிரட்டியும் மிரட்டாமலும் மாசி, ஓசிக்கு சாமான்கள் வாங்கிப் போய்க் கொண்டிருந்ததை அடுத்து அவனுக்கு எதிராகக் கடைகாரர்கள் திடீர் கூட்டம் போட வேண்டியதாகிவிட்டது. உள்ளூர் பிரதான கடைகளைத் தாண்டி அக்கம் பக்கத்து ஊர்களிலும் காசில்லாமல் மிரட்டி சாமான்கள் வாங்கியதாக மாசி மீது குற்றச்சாட்டு. அவன் அம்மாவிடம் கேட்டால், ‘‘எனக்கு தெரியாது. ஏங்கிட்டெ கேட்டா கொடுத்தியோ. அவன் பாடு, ஒங்க பாடு. நா என்ன செய்ய முடியும்?'' என்று கையை விரித்துவிட்டாள். இப்படியே விட்டால் வியாபாரம் செய்ய முடியாது என்பதால் திடீர் கூட்டம். கூட்டத்தில் மாசி மீது போலீஸில் புகார் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மறுநாள் அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டு, தெரிந்த போலீஸ்காரர் ஒருவரை பார்த்துப் பேசிவிட்டும் வந்தார்கள்.

அவர்கள் வந்த மறுநாள், ‘‘எவம்லெ போலீசுக்குப் போவாம். பாத்துக்கிடுதென். கையெ காலெ ஒடிச்சிரமாட்டென்?'' என்று செக்கடி தெருவில் நின்று மாசி கத்தியபடி குத்துக்கல்லில் உட்கார்ந்திருக்கும் போது, போலீஸ் ஏட்டு அவன் பொடதியில் அறைந்தார். மூஞ்சி குப்புற விழப்போனவனை, இன்னொரு போலீஸ்காரர் பிடித்துக்கொண்டார். ‘‘எழுந்திர்ல'' என்று பஸ்&ஸ்டாண்டுக்கு அழைத்துப் போனார்கள். இதுவரை கத்தியபடி இருந்தவன், அவர்களின் முன்னால் வாயை பொத்தி நடந்துகொண்டிருந்தான். பஸ்&ஸ்டாண்டில் கடை வைத்திருக்கும் தங்கராசுவும் குட்டி மணியும் போலீஸ்காரர்களுக்கு கலர் பாட்டில்களை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மாசிக்கு இது ஒன்றும் புதிதில்லை. அடிக்கடி போய் வருகிற ஸ்டேஷன்தான். எல்லா போலீஸ்காரர்களுமே இவனை அடித்தவர்கள்தான். ஸ்டேஷனில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிற யாராவது வந்து அவனை மீண்டும் அடிப்பார்கள். வலி தாங்காமல் கத்துவான். பிறகு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு உள்ளூர் சிறையில் ரிமான்ட். பதினைந்து நாள் கழித்து வெளியில் வருவான். வந்து இரண்டு மூன்று நாட்கள் சும்மா இருப்பவன் மீண்டும் தொடங்கிவிடுவான்.

இப்படி ஏதாவதொரு வழக்கிலோ, போலீசுக்கு பயந்தோ அல்லது, ‘உள்ளே' சென்றுவந்தால் கூட, ‘‘கேரளாவுக்கு வேலைக்குலா போயிருந்தென்'' என்று சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால், ஊர்க்காரர்களுக்கு ஏதாவதொரு கதை கிடைத்துவிடும். ‘‘மூதி, பாளயங்கோட்டெ ஜெயில்ல குப்புற கெடந்துட்டு நம்மட்ட பிராடு உடுததெ பாரென்?'' என்பார்கள். இம்மாதிரி மாசி, எஸ்கேப் ஆகும் விஷயம் பற்றி அவனது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரிந்திருக்கும். இருந்தும் குடும்ப கவுரவம் காக்கும் பொருட்டு யாரிடமும் வாய் தவறிக் கூட சொல்லிவிட மாட்டார்கள்.

காலம் வேகமாக ஓடுகிறது. குடிகார மாசி, குடும்பத்தின் பொருட்டு திருப்பூருக்கு இடம்பெயர்ந்தான். கோயில் கொடையோ, தீபாவளி, பொங்கல் விழாக்களிலோ மட்டும் தலைகாட்டிவிட்டு போகும் மாசியை, பிறகு சில வருடங்களாகக் காணவில்லை. போதையின் அடையாளம் கொண்ட அவனது வீடு, மண் சுவர் கரைந்து, ஓடுகள் விழுந்து கருவை முட்களுடன் சிதிலமாகி கிடக்கிறது. மாசி என்கிற ஒரே ஒரு குடிகாரன் மட்டுமே இருந்த ஊரில், டாஸ்மாக் தயவில் ஏராள இளங்குடிகாரர்கள், ‘பெருமையாக' உருவாகி இருக்கிறார்கள். குடியை வெறுக்கும் மாசியின் நண்பன் உச்சி, ‘‘மருமவனெ, ஒரு கோட்டரு வாங்கி தாரும்வே?'' என்று கேட்டபோதுதான் நொறுங்கி போனேன் நான்.

Sunday, January 6, 2013

பரிசுகள் பொழியும் மரம்

மார்கழி மாத ஆரம்பத்திலேயே நிலைகொள்ளா மகிழ்ச்சி வந்துவிடும் கிட்டனுக்கு. புது தெம்போடு பாட்டும் விசிலுமாக அலையத் தொடங்கிவிடுவான். அந்த உற்சாகம் இதற்கு முன் அவனிடம் காண முடியாதது. இப்போது காண்பதற்கு பொங்கல் விழா, காரணமாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த விழாவில் நடக்கும் போட்டிகளில் கிட்டனுக்குத்தான் பேரும் புகழும். ஒவ்வொரு வருட வழுக்கு மரப் போட்டியிலும் சவால்விட்டே வெல்கிறான், அவன். கோவன்குளத்துக்கு அருகில் மாடுகளை மேயவிட்டுவிட்டு பொத்தையில் உட்கார்ந்திருக்கும் நண்பர்களிடம் ஆரம்பிக்கும் சவால். போனமுறை முயன்று தோற்றவர்கள், சவாலுக்கு ரெடியாவார்கள். எப்படி இவனை வெல்வது என்கிற யோசனை அப்போதே தொடங்கிவிடும்.

பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பரபரப்பாகும் தெருவில், அதுவரை குப்பைக் கிடங்காக இருக்கும் கீரைத்தோட்டம் விழாவையொட்டி பளபளப்பாக்கப்படும். போட்டிகள் பொங்கலுக்கு முதல்நாள் ஆரம்பமாகும் என்பதால் அதற்கு முந்தைய நாள், இலவசமாக இரண்டு மூன்று முறை ஆற்று மணல் அடித்துவிட்டுப் போவார், வண்டி கணேசன். வழக்கமான வேலைகளை விட்டுவிட்டு தெரு வேலைக்காக இளவட்டங்கள் வந்துவிடுவார்கள். ஆளுக்கொரு வேலை. குப்பைகள் அகற்றப்பட்டு, கருவை முட்கள் வெட்டப்பட்டு இடம் சுத்தமான பிறகு மணல் பரப்பப்படும். பிறகு சுண்ணாம்பு பொடி கொண்டு, கபடி மைதானம் தயாராகும். ஒவ்வொரு செட்டாக இறங்குவார்கள். மொத்தம் மூன்று செட் ஆட்கள். இதற்கே நள்ளிரவு ஆகிவிடும் என்பதால் மற்றப்போட்டிகள் மறுநாள்தான். அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான போட்டிகள். மியூசிக்கல் சேர், சாக்குக்குள் காலைவிட்டு நடப்பது, கண்ணைக் கட்டி புதைத்திருக்கும் தேங்காயை எடுப்பது போன்றவை நடக்கும். இதற்கு மறுநாள்தான் வழுக்குமரம், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள்.

இவற்றை மேற்பார்வை செய்ய, ஒத்து நியமிக்கப்பட்டிருந்தான். கீரைத்தோட்டம் அவர்களுக்கானது என்பதால் இந்த நியமனம். தோட்டத்துக்கு எதிரிலேயே அவனது வீடு. அங்குதான் மைக்செட் வைக்கப்பட்டிருந்தது. ‘பிள்ளைலுவோ விளாடுதுலா' என்பதற்காக, மூர்த்தி மாமா இலவசமாக இந்த சேவையை செய்திருந்தார்.

இந்த விளையாட்டுகளால் தெருக்கார பொம்பளைகளுக்கு குதியாட்டம்தான். சாயந்தரமாகப் போட்டித் தொடங்குவதற்கு முன்பே முகத்தில் பவுடர்களை அப்பிவிட்டு, பெட்டியில் மடித்துவைத்திருக்கிற ‘தீவாளி' சேலைகளை உடுத்திக் கொண்டு வந்துவிடுவார்கள். மல்லிகைப்பூவோ, பிச்சிப்பூவோ அவர்கள் தலையில் இருந்து கும்மென்று வாசம் வீசிப்போகும். மேல மற்றும் கீழத் தெரு ஆட்களும் விளையாட்டை பார்ப்பதற்கு கூடுவார்கள் என்பதால் இந்த மேக்கப்போடு ‘மைதானத்தின்' ஓரமாக, ஸ்கூலில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிற பெஞ்சில் உட்கார்ந்திருப்பார்கள். பாவாடை, தாவணி பெண்கள் ஓவர் வெட்கத்தோடு முகத்தை வெளியில் காட்டலாமா வேண்டாமா என்கிற பாவனையில் நின்றுகொண்டிருப்பார்கள். கரும்பை கடிக்க முடியாமல் தின்றுகொண்டும் பனங்கிழங்கை துண்டு துண்டாக வெட்டி மடியில் வைத்துக்கொண்டும் தங்கள் வேலையில் கவனமாக இருப்பார்கள் பாட்டிகள்.

கபடி போட்டி, வயதுபடி பிரிக்கப்பட்டிருக்கும். முதலில் சிறுசுகள். அடுத்து வயசுப் பையன்கள். பிறகு நாற்பது வயதுக்கு மேலானவர்கள். மில்லு மணி மைக்கை கையில் எடுத்துக்கொண்டு மைதானத்தின் ஓரமாக உட்கார்ந்துகொள்வான். அவனருகில், நேர கணக்கைப் பார்த்துக் கொள்ளவும் பாயிண்ட் குறிக்கவும் நோட்டு புத்தகத்தோடு ஒத்துவும் அவனுக்கு உதவி செய்ய, கோஸும் இருப்பார்கள். சிறுசுகள் மற்றும் வயசுப் பையன்களின் ஆட்டம் பரபரப்பாக இருக்கும். இதில் கிட்டன், சிறந்த பிடிப்பாளனுக்கான பரிசை வாங்குவான். ஏதாவது ஒரு ஓரத்தில் நின்று, பாடி வருபவர்களின் கையையே பார்த்துக் கொண்டு காலை லாவகமாகப் பிடிக்கும் திறமையை கிட்டன் பெற்றிருந்தான். இந்தப் பிடித்தலில் அவனது தோள் பட்டைகளில் காயம் ஏற்பட்டு புண்கள் உருவாகி இருக்கும். ஆனாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை. இவன் பிடிப்பான் என்பதால் இவன் பக்கம் வருவதை எதிர்க்கோஷ்டிகள் தவிர்ப்பார்கள். ஒல்லிக்குச்சி தேகம் கொண்ட கிட்டன் உயரமாக வளர்ந்திருந்தாலும் அவன் பலமானவனாகவே இருக்கிறான். இந்தப் போட்டியை அடுத்து நடக்கும் நாற்பதை தாண்டியவர்களின் ஆட்டத்தில் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்.

‘புலி வருது பாரு, புலி. மச்சானை புடிங்கெ பாப்போம். முடியுமாவே?' என்று மைக்கில் மில்லு மணி சொன்னதும், பிடித்துவிடுவார்கள் எதிர்க்கோஷ்டிக்காரர்கள். ‘என்னய்யா புலி, இப்டி மாட்டிக்கிட்டு? மச்சானுக்கு மச்சமில்ல போலுக்கெ?' என்பான். ‘அடுத்தாப்ல தொப்பெ பாலுண்ணே வாரோவோ. முடிஞ்சா புடிங்கய்யா... புடிங்கய்யா, இது சிங்கெம்லா?' என்று வீராவேசம் நடக்கும். அதற்கு ஏற்றார்போல அவரும் முண்டுவார். ஆனால் பிடித்துவிடுவார்கள். ‘சிங்கத்தையே சாய்ச்சிட்டேளேப்பா' என்பான். போட்டியை பார்த்து அவன் பேசிக்கொண்டிருந்தாலும் மைதானத்தின் ஓரமாக நின்றிருக்கும் பெண்கள் மீதுதான் அவன் கண்கள், முழுமையாக நிரம்பியிருக்கும். இது அந்தப் பெண்களுக்கும் தெரிந்ததுதான்.

மூன்றாம் நாள் போட்டிக்காக வழுக்கு மரம் தயாராகும். சங்காபீஸில் வைக்கப்பட்டிருக்கும் இரும்பு குழாயை கொண்டு வந்து, ஒத்து வீட்டுக்கு அருகில் வைத்திருப்பார்கள். முருக மாமாவும் செல்லையா மாமாவும் அதில் விளக்கெண்ணையை தேய்ப்பார்கள். அரைத்து வைக்கப்பட்டிருக்கும் காத்தாழைச் சாறுகளையும் கொண்டு வந்து கம்பியில் தேய்ப்பார்கள். கூடவே கிரீஸும். பிறகு மைதானத்துக்கு நடுவே ஏற்கனவே தோண்டி இருக்கிற ஆழமானக் குழியில் நடுவார்கள். குழாயின் உச்சியில் புது வேட்டித் துண்டும் நூறு ரூபாயும் முடிந்து வைக்கப்பட்டிருக்கும்.

மொத்தம் ஏழு, எட்டு பேர், பெயர் கொடுத்திருப்பார்கள் ஏறுவதற்கு. ஒவ்வொருவராக ஏற வேண்டும். முதல், இரண்டு, மூன்று, நான்கு என்று ரவுண்ட் போகும். ஐந்தாவது ரவுண்டில் கம்பியில் இருக்கும் வழுக்கும் விஷயங்கள், கொஞ்சம் வழுக்கி இருக்கும். இன்னும் இரண்டு மூன்று ரவுண்ட்களில் முயன்றால் ஏறிவிடலாம். இந்த நேரத்தில், ‘இன்னா, ஒண்ணுக்கு போயிட்டு வாரென்' என்று சொல்லிவிட்டு, கருவை மூடுக்கு அருகே போய்விட்டு வருவான் கிட்டன். பிறகு மெது மெதுவாக கம்பியை பிடிப்பான். ஆரம்பத்தை விட இப்போது கொஞ்சம்தான் வழுக்கும். இருந்தாலும் உடலோடு கம்பியில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு மேலேறுவான். கொஞ்ச நேரத்தில் அவன் உச்சிக்கு செல்ல, கீழிருந்து கைதட்டலும் விசிலும் பறக்கும். அந்த சத்தத்தைக் கேட்டுக்கொண்டே எடுப்பான் புது வேட்டித் துண்டையும் நூறு ரூபாயையும். வேட்டித்துண்டும் ரூபாயும் பெரிதில்லை என்றாலும் அந்த இடத்தில் கிடைக்கும் கொண்டாட்ட மதிப்பு அவனுக்கு பெரிதாக இருந்தது.

‘எப்டிலெ எடுத்தாம்?' என்று எல்லோருக்கும் ஆச்சரியம். இதை முடித்த கையோடு பானை உடைப்பு போட்டி நடக்கும். இதற்கு கண்களை கட்டிவிடும் நல்லகண்ணுவிடம், ‘என்ன மாமா இறுக்கி கெட்டி வச்சுட்டேரு. வலிக்குவே?' என்று பொய்யாக அரட்டுவான். இதனால் கட்டை கொஞ்சம் லூசாக்கி விடுவார். இது வசதியாகிவிடும் கிட்டனுக்கு. கண்ணை மேலும் கீழும் ஆட்டி பார்த்தால் எதிரில் நடப்பது லேசாகத் தெரியும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு கண்ணை கட்டி, கீழ்ப்பக்கம் பானை இருக்கிறதென்றால் மேற்கு பக்கமாகப் போய் சுற்றிவிட்டுவிட்டு வருவார்கள். கிட்டனை அப்படிச் சுற்றிவிட்டதும் நிஜமாகவே கண்ணு தெரியாதது போல நடிப்பான். கூட்டத்தில் இருப்பவர்களும் ஏதாவது சொல்லி திசைமாற்றி விடுவார்கள். பிறகு அங்கும் இங்கும் அலைவது போல அலைந்து சரியாகப் பானையை உடைத்ததும் சுற்றி நிற்கும் பொம்பளைகள், ‘கிட்டெனுக்கு யோகத்தெ பாரு' என்பார்கள். அவனுக்கு பெருமையாக இருக்கும். தொடரும் இந்த பெருமையிலேயே அடுத்த பொங்கல் வரை ஓட்டிவிடுவான் கிட்டன்.

ஒரு நாள், வழக்கமாக மாடு மேய்க்கச் செல்லும் இடத்துக்கு செல்லாமல் மேலபத்துக்கு போயிருந்தபோது, அவனோடு வந்த பொந்தனிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னான் கிட்டன். வழுக்கு மர ரகசியம். ‘யார்ட்டயும் சொல்லிராதெல கேட்டியா?' என்று கேட்டுவிட்டு சொன்னான்.

‘‘ஒண்ணுமில்லல. ஒண்ணுக்குப் போறெம்னு சொல்லிட்டு போறம்லா. அங்கெ கருவை மூட்டுல சாயந்தரமே செரட்டையில ஆலம்பாலை எடுத்து வச்சிட்டு வந்துருவென். இப்பம் அதை கால்லயும் கையிலயும் தேய்ச்சுக்கிடுவென். நெஞ்சுலயும் வயித்துலயும் கூட தேய்ப்பென். ஆலம்பாலு வெள்ளையா இருந்தாலும் ஏற்கனவே ஏறி ஏறி நெஞ்சுலாம் அழுக்கா இருக்கும்லா, அதனால தெரியாது. அந்தானிக்கு போய் ஏறுனம்னு வையி. கொஞ்சமா பிடி கெடைக்கும். இன்னும் கொஞ்சம் முக்கி மொணங்கி சமாளிச்சா ஏறிரலாம். இதாம்லெ வெஷயம்''.

கிட்டனுக்கு உறவினனான பொந்தன், இதை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அடுத்த முறை வழுக்குமர போட்டியில் ஆலம்பாலைத் தடவிக்கொண்டு அவனும் முயன்று பார்த்தான். முடியவில்லை. வழுக்கியது. ஆனால் கிட்டன் மட்டும் அதை இன்னும் சில வருடங்களுக்குத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

இதற்கிடையில், ‘வழுக்கு மரம் நன்னா ஏர்றயாமெ. எங்காத்து பாத்திரத்தை கொரங்கு தூங்கி, மரத்துல வச்சுண்டு ஆடறது. கொஞ்சம் எடுத்து கொடென்' & ஐயமார் தெரு லட்சுமியாச்சி இப்படிச் சொன்னதும் குளிர்ச்சியாக இருக்கும் அவனுக்கு. லட்சுமியாச்சி வீட்டில் மட்டும்தான் குரங்குகளும் பாத்திரங்களை அடிக்கடித் தூக்கி வைத்துக்கொள்கிறது. அதை எடுத்துக்கொடுக்கும் பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து வருபவனாக இருந்தான் கிட்டன். பிறகு அக்ரஹாரத்தில் யார் வீட்டில் குரங்கு பிரச்னை என்றாலும் அதை விரட்ட அல்லது பொருட்களை எடுத்துவரும் பொறுப்பு இவனுக்கு விடப்பட்டிருந்தது. இதற்கு கைமாறாக அவனுக்கு பில்டர் காபியோ, நெய் முறுக்கோ கிடைக்கும்.

‘அவ்வோ வீட்டு காபி மட்டும் எப்டிலெ டேஸ்டா இருக்கு? நம்ம பலாசாம் போடுதெ காப்பியெ பாரு, தண்ணில சீனியை கலக்குத மாரிதாம் இருக்கு' என்பான் வெறுப்பாக.

இது ஒருக்கம் இருந்தாலும் உயரமான மரங்களில் ஏறி கிளிபிடிப்பதையும் கிட்டன் வழக்கமாக வைத்திருந்தான். மிருதுவான மேனியை கொண்ட பச்சை வண்ணக் கிளிக்குஞ்சுகளை, மரத்தின் பொந்துகளில் கையை விட்டு எடுப்பான். வெறுங்கையில் எடுத்தால் ஈரமாக இருக்கும் என்பதால் துண்டால் எடுப்பான். வெளியே வந்ததும், கீ கீ என்று கழுத்தை சாய்த்து மெதுவாகக் குரல் கொடுக்கிற கிளியின் அழகு பற்றியெல்லாம் கிட்டனுக்குத் தெரியாது. ஆனால், கிளி வளர்க்க ஆசைப்படும் ராஜி மற்றும் மீனா அக்காவுக்காக இதை செய்து வந்தான்.

வயதாகிவிட்டது கிட்டனுக்கு. ஆடு மாடுகள் நிறைந்த அவர் வீடும் தொழுவமும் காம்பவுண்ட் சுவருக்குள் சிக்கியிருக்கிறது. மைதானமாக இருந்த கீரைத்தோட்டத்தில் முளைத்திருக்கிறது வாஸ்த்து பெயின்ட் அடிக்கப்பட்ட பிரமாண்ட வீடு. பானை உடைத்தல் போட்டி நடக்கும் செம்மண் தெரு சிமென்ட் சாலையாகி இருக்கிறது. கருவை முட்களும் கறிவேப்பிலை மரங்களும் இருந்த இடங்களில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டிருக்கிறது. குழி விழுந்த கண்களோடும் நரம்புகள் தெரியும் கைகளோடும் மாட்டு வண்டியில் தலை சாய்த்து படுத்திருக்கும் கிட்டன், ‘ஒரு காலத்துல, இங்கெல்லாம் பொங்கல் போட்டி நடத்துவோம் பாரு' என்று ஆர்வமாகக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். காதுகளை திறந்துவிட்டு அமைதியாகிவிடுகிறேன் நான்.

Monday, December 31, 2012

சைக்கிள்கள் அடையும் கூடு

வேப்ப மரத்தின் கிளையில் தொங்கும் கிழிந்த டயர்களும் டியூப்களும்தான், மந்திரதாஸ் சைக்கிள் கடையின் பிரதான அடையாளம். ஊரில் இருக்கிற ஒரே சைக்கிள் கடை என்பதால், அடையாளம் தேவையில்லை என்றாலும் கேட்கிறார்களா என்ன? ‘வெளியூர்க்காரென் வாராம்னு வையி. அவனுக்கு சைக்கிளு கடெ எங்கெயிருக்குன்னு தெரியாண்டாமா? இதுவோளப் பாத்தாம்னா, நின்னு பஞ்சரு கிஞ்சரு ஒட்டுவாம்லா?' என்று சொல்லப்பட்ட ஆலோசனையின் பேரில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன அந்த டயர்களும் டியூப்களும்.

மரத்தை அடுத்து கட்டப்பட்டிருந்தது கடை. பஸ்கள், கடை முன்தான் நிற்கும் என்பதால் எப்போதும் வெள்ளையும் சுள்ளையுமாக நான்கைந்துபேர் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்காக, மரத்தின் அருகே சுவரோடு ஒட்டி திண்ணை போன்று சிமென்ட் தளம் அமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அந்த இடத்தை பஸ்சுக்கு செல்லாதவர்களே ஆக்கிரமித்துக் கதைப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

முன்பக்கம் தென்னங்கூரை வேயப்பட்டக் கடையினுள் நேரெதிரே, கருப்பு வெள்ளையில் பெரியார், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். பத்தையூரில் இருந்து ஊருக்கு துஷ்டி சொல்ல வந்த இசக்கி, போட்டோவை பார்த்துவிட்டு, ‘‘இதுல ஒங்கப்பா யாரு மாமா. நடுவுல உள்ளவரா, மொதல்ல உள்ளவரா?' என்று கேட்டதில் நொந்து போனார் மந்திர தாஸ். இதே போல தோப்புக்கு போக சைக்கிள் கேட்ட பேச்சி தாத்தாவும், ‘ஒங்கப்பனெ மொத படத்துல வச்சிருக்கெ சரி. பக்கத்துல இருக்கவோளாம் யாருடெ?'' என்று கேட்டதற்குப் பிறகுதான் பிரச்னைக்கு முடிவு கட்ட நினைத்தார். அதாவது அவரது அப்பா போட்டோவை தேடி கொண்டு வந்து கிழக்கு நோக்கி மாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்ததை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

போட்டோக்களுக்கு கீழே, எங்கெங்கு காணினும் ஏதாவது ஒரு பொருள், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இடப்பக்கம் அழுக்கடைந்த நான்கைந்து பழைய சைக்கிள்கள் சரிந்து கிடக்க, முன் மற்றும் பின்பக்க டயர்கள் இல்லாத சைக்கிள்கள் அரைகுறையாக அனாதையாகத் தூங்கிக்கொண்டிருக்கும். அவற்றின் மேல், உடைந்த நாற்காலிகள். வாசலில் இருந்து பார்க்கும்போது சைக்கிள்கள் அடைந்திருக்கும் கூடெனத் தோன்றும். இவற்றை ஒதுக்கி, கடைக்குள்ளே மந்திரதாஸ் செல்வதென்பது அவ்வளவு லேசுபட்டதல்ல. ஆனால் தடைகளை தகர்த்து தினமும் உள்ளே சென்று வந்துகொண்டுதான் இருக்கிறார். கடையை திறந்ததும், ‘இதுவோளெ ஒரு நாளு கிளீனு பண்ணணும்' என்று தினமும் நினைத்தாலும் ஒரு நாளும் அதை செய்யத் தோன்றாது அவருக்கு.

முன் கூரையின் கீழே, பஞ்சர் பார்ப்பதற்கான டேப்புக்கட்டை (உப்புத்தாள்), சொல்யூஷன், வெட்டப்பட்ட சைக்கிள் டியூப்புகள், உட்கார்ந்து கொள்வதற்கான சிறு பலகை, டியூப்பை டெஸ்ட் பண்ணுவதற்காக, ஈயச் சட்டியில் அழுக்கு தண்ணீர். அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கும் டயர்கள் கழற்றப்பட்ட சைக்கிள்கள், கீழே நெளிந்து கிடக்கும் ரிம், வால் டியூப்புகள், நட்டுகள், பீடிகட்டு போட்டு வைக்கப்பட்டிருக்கும் சிறு டப்பா. விற்பனைக்காக ஓரத்தில் தொங்கும் சீட் கவர், கைப்பிடி கவர், பார் கவர், பூட்டு, பெடல் கவர்... இவற்றுக்கு மத்தியில் உட்காருவது என்பது மந்திர தாஸால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

கடை முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் சொல்யூஷன் வாசனையை நுகர்ந்துகொண்டே, சாரத்தை டவுசர் தெரிவதுபோல் கட்டியவாறு பலகையில் உட்கார்வார். அதற்கு முன் கர் புர்ரென இழுத்து நெளித்து சத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து ரேடியோவின் சவுண்டை குறைத்துவிட்டும், அதனருகில் பாதி வளர்ந்திருக்கும் பூவரசம் செடிக்கு வாளியில் தண்ணீர் ஊற்றிவிட்டும் வருவார். அவருக்கு இடது கண்ணில் கொஞ்சம் பிரச்னை. அதில் பார்வை பளிச்சென்று தெரியாது. அதனால் வலது கண்ணைத் தூக்கி, திருப்பிதான் ஒவ்வொன்றையும் பார்ப்பார்.

கடையில் இருந்து காற்றடிக்கப்பட்ட சைக்கிள் டியூப்பை தண்ணீருக்குள் அமுக்கி பஞ்சரான இடத்தை அவர் தேடிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது உட்கார்ந்திருக்கும்போதோ எட்டு மணி, தேவி பஸ் வரும். ஒருவரோ, இருவரோ இறங்கி, ‘நான் ஊருக்கு வந்துட்டென்' என்பது மாதிரி, மந்திர தாஸைப் பார்த்து புன்னகைப்பார்கள். அந்த புன்னகைக்கு, ‘எங்கடெ போயிட்டாரெ' என்று அவர் கேட்க வேண்டுமென்பது அர்த்தம். அவர் கேட்காவிட்டாலும், ‘புலியூருக்கு சித்தி வீட்டுக்குப் போயிட்டாரன். அங்கெல்லாம் என்னா மழைங்கெ' என்று ஆரம்பிப்பார்கள். அதை நிறுத்துவது மாதிரி, ‘நீ மொதல்ல வீட்டுக்குப் போடெ. இன்னும் வரலையென்னு தேடப் போறாவோ' என்பார் அவர்.

எட்டு எட்டரை ஆனதும் செல்லையா கடையில் இருந்து, டீ வரும். குடித்துவிட்டு முதல் பீடியை பற்ற வைத்து உட்காரவும் செய்தித்தாளோடு மீசையை தடவிக்கொண்டே வந்து சேர்வார், கந்தசாமி. அவரது கூட்டாளி. பேப்பரை வாசித்துவிட்டு இருவரும் அரசியல் பேச ஆரம்பித்தால், சண்டை நடப்பது போல்தான் இருக்கும். எதிரெதிர் கட்சித் தலைவர்களை இவர்களாகவே பாவித்துக்கொண்டு நடக்கும் பேச்சில் காட்டம் அதிகமாகவே இருக்கும். கடைக்கு பக்கத்து வீட்டுக்காரியான ராசம்மா, ‘அவயத்தை கொறெக்கெளா? மாடுவோ களெயுது' என்று முணங்கிக் கொண்டு போவாள்.

‘நீ போ தாயீ' என்கிற கந்தசாமி, ‘இப்டி ஒண்ணுந் தெரியாததுவோட்ட உக்காந்துகிட்டு என்னத்தெ அரசியல் பேசங்கெ?' என்று அலுத்துக் கொள்வார். பிறகு மெதுவாகப் பேசுவார்கள். ஆனால், திடீரென்று சத்தம் எகிறும். புதிதாக வருபவர்கள் அந்தப் பகுதியை கடக்கும்போது, நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டுதான் போவார்கள். சிறிது நேரத்தில் பால் வினியோகம் பண்ணும் சிசெர் ராமசாமியும் குட்டிக் கண்ணணும் வந்துவிடுவார்கள். ‘ஒங்களுக்கு இதெ வேலெயா போச்சு' என்று கடையில் இருக்கும் டப்பாவில் இருந்து ஒரு பீடியை எடுத்து இழுப்பான் சிசெர். இருவரும் கடையில் உட்கார்ந்துகொண்டு மந்திர தாஸுக்கு ஸ்பேனர்களை எடுத்துப் போடுவது, சாப்பிட வீட்டுக்குப் போனால் கடையை பார்த்துக் கொள்வது என எடுபிடி வேலை செய்துகொண்டிருப்பார்கள்.

அதற்குள் குட்டை சைக்கிள் எடுக்க, இரண்டு மூன்று பொடிசுகள் வரும். ‘குட்டெ சைக்கிளா? மெதுவா ஓட்டிட்டு வரணும். கீழ போட்டியோன்னா, பெறவு சைக்கிள் தர மாட்டென்' என்று அட்வைஸ் பண்ணிட்டு, ‘மணியை பாத்துக்கிடுங்கலெ. எட்டே முக்காலு. ஒன்பதெ முக்காலுக்கு வந்தெர்ணும்' என்று கொடுப்பார். இதற்கிடையில் இன்னும் இரண்டு மூன்று பொடிசுகள் அதே சைக்கிளை கேட்டு வரும். ‘ஒரு மணி நேரம் கழிச்சு வாங்கென்னா?' என்று அனுப்பிவிட்டு பேச்சைத் தொடர்வார். அந்த ஒரு மணி நேரமும் கடைக்கு அடுத்து இருக்கிற ஆலமர மூட்டில் சைக்கிளை ஆவலோடு எதிர்பார்த்து அமர்ந்திருப்பார்கள் பொடிசுகள். திண்டில் உட்கார்ந்திருக்கும் குட்டிக்கண்ணன், ‘ஏண்ணே ஒரு பிய்ஞ்ச டயரு இருந்தா தா. அண்ணன் மவென் வட்டு ஓட்டணுன்னு அழுதுட்டிருக்காம்' என்பான். கடைக்குள்ளெ ஓட்டை விழுந்து கிடக்கும் டயர்களில் ஒன்றை எடுத்துக் கொள்ள சொல்வார் அவர்.

இதைத் தாண்டி பக்கத்து ஊர்களான பூவன்குறிச்சி, தாட்டாம்பட்டி, கோட்டைவிளை பட்டி, கருத்தப்பிள்ளையூர், கல்யாணிபுரம், ஆழ்வார்க்குறிச்சி, பாப்பான்குளம் ஆகியவற்றுக்கு செல்ல சைக்கிள் கேட்டு வருபவர்களும் உண்டு. சிறு நோட்டு ஒன்றில் பெயர், நேரம் மற்றும் வண்டி எண்ணை எழுதி வைத்துக் கொண்டு கொடுப்பார். மாலை ஆறு மணிக்கு மேல் சினிமா பார்க்க சைக்கிள் கேட்பவர்களுக்கு ஆள் பார்த்துதான் தருவார் தாஸ். ஏனென்றால் வக்கெட்டெயும் கப்பக்காலனும் செய்த வேலை.

புதிதாக நான்கு சைக்கிள்களை இறக்குமதி செய்திருந்தார் தாஸ். அதில் ஒன்றை சினிமாவுக்கு போவதற்காக இவர்களுக்கு கொடுத்தார். சைக்கிளை வாங்கிய இருவரும் கோட்டைவிளைப்பட்டியில் ஓவராகப் பயினி குடித்துவிட்டு போதையில் மல்லாந்துவிட்டார்கள். தெளிந்து எழுந்தபோது கை, கால்களில் சிராய்ப்பு. முகத்தில் வீக்கம். சைக்கிளை காணவில்லை. வி.கே.புரம் போலீஸில் புகார். பிறகு தேடிப் பார்த்ததில் கிணறு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது வளைந்து நெளிந்த சைக்கிள். அது கிடைத்துவிட்டாலும், ‘குடிக்க போறதுக்கு நீதாம் ஒவ்வொருத்தனுக்கும் சைக்கிள் கொடுக்கியோ? இன்னொரு தெடவை இப்டின்னா, ஒன்னியெ தூக்கி உள்ளெ வச்சிருவென்' என்று புதிதாக வந்த எஸ்.ஐ., மந்திர தாஸை போட்டு தாக்கியதில் நடுங்கி போனார்.

‘‘தப்பு பண்ணுனது அவனுவோ. என்னெய போட்டு தாளிக்கானுவோ பாரென்' என்று நொந்து போனவர், பிறகு சினிமாவுக்கு சைக்கிள் கொடுப்பதில்லை. இருந்தாலும், பொய் சொல்லி சைக்கிள் வாங்கிக்கொண்டு பயினி குடிப்பதும் சினிமா பார்க்கச் செல்வதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மந்திரதாஸ் சைக்கிள் கடைபற்றி இன்னொரு புகாரும் சொல்லப்பட்டு வந்தது. அதை மறுத்துவந்தார் அவர்.

‘‘அதெப்படிண்ணெ, கரீட்டா, ஒங் கடெகிட்டெ வந்ததும் சைக்கிளு பஞ்சராவுது? ஆணி கீணி போட்டு வச்சிருக்கியா?'' என்று சிரித்துக் கொண்டே கிண்டலாகக் கேட்டான் அம்மாசி.

‘‘இந்தெ எடக்குலாம் இங்கெ வேண்டாம். அப்டி சோறு திய்ங்கெணுன்னு அவுசியம் இல்லெ எனக்கு'' என்பார் தாஸ். பிறகு ஜிவ்வென்று கோபம் ஏறும். மண்டை உஷ்ணமாகிவிட்டால் கட்டுப்படுத்துவது கஷ்டம். சத்தம் கேட்டு கந்தசாமி, வருவார்.

‘‘சும்மா எடக்குக்கு சொன்னதுக்கு இவ்ளவு கோவப்படுதாவோ?'' என்பான் அம்மாசி.

‘‘ச்சும்மா எப்டிலெ இந்த வார்த்தெய சொல்லுவெ. கஞ்சிக்கு வழியத்தவன்னு நெனச்சியா என்னெய. கடுவா பல்லு அந்து போவும், ஆமா''- சத்தம் எகிறும்.

‘‘சரி, சரி வுடுடா. சின்னப் பயெ தெரியாம சொல்லிட்டான். அதுக்குப் போயி, தொண்டயெ போடுதெ?'' என்று சாந்தாப் படுத்திவிட்டு, வந்தவனை தள்ளிக்கொண்டு போவார் கந்தசாமி. ‘‘அவனுக்கு ம்முன்னாலே மூக்கு செவந்து போவும். அவங்கிட்டெ போயி இப்டியா கேப்பெ. மேக்க போயி, டீயெ கீயெ குடிச்சுட்டு வா. சரிகட்டி வைக்கென்'' என்று சொல்லிவிட்டு வருவார்.

கொடூரமாக நடந்திருக்கிற எல்லாவற்றுக்கும் கோபம்தான் பிரதானம். அது உள்ளுக்குள் தீமூட்டிக் கொண்டே இருக்கிறது. ஒரு போரில், கலவரத்தில், சண்டையில், கொலையில், தற்கொலையில் எல்லாவற்றிலும் ஆணிவேராய் இருக்கிறது கோபம். மனைவியுடன் வந்த சண்டையில் அப்படியானதொரு பெருங்கோபம் அவரைப் பதம்பார்க்க, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் மந்திர தாஸ். கம்யூனிசம், புரட்சி, பகுத்தறிவு என்று பேசி வந்த தாஸ் இப்படியொரு முடிவை எடுப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. நம்பமுடியாத அவரது அகால மரணம் அதிகம் தாக்கியது கந்தசாமியைதான்.

தாஸுக்குப் பிறகு சைக்கிள் கடை காணாமல் போய்விட்டது. அவர் வைத்த பூவரசம் செடி மரமாகி, மஞ்சள் பூக்களை பூத்து வைத்திருக்கிறது பேரழகோடு. அதன் அருகில், இப்போது மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறான் மோகன். அங்கு பழுதாகி நிற்கிற பைக்குகளைப் பார்க்கும் போதெல்லாம், தாஸ் கடை சைக்கிள்களாகவே தெரிகிறது.

Sunday, December 23, 2012

சங்கீதம் பூக்கும் சாலை

தங்கம்மன், முத்தாரம்மன், மந்திரமூர்த்தி, நாராயணன், ராமர், பாண்டிராசா ஆகிய கோயில்களின் பெயரில் தெருக்கள் அழைக்கப்படுகிற ஊரில், தன் பெயரில் ஒரு தெரு இல்லாதது பிள்ளையாருக்கு வருத்தமாகக் கூட இருந்திருக்கலாம். அந்த வருத்தத்தை அல்லது கோபத்தை ஏதாவதொரு வழியில் காட்டுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. ஊருக்குப் பொதுவாக பல பிள்ளையார் கோயில்கள் இருந்தாலும் அதில் வசதியானவராக, பாபநாசம் செல்லும் சாலையில் கோயில் கொண்டிருந்த ‘ஆருத்ரா கணபதி' இருந்தார். இவர் பணக்காரர் ஆவதற்கு வியாபாரிகள் சங்கம் காரணமாக இருந்தது. மற்ற பிள்ளையார்கள் சாதாரணமாக விழாக்களை கொண்டாட, இவருக்கு மட்டும் விமரிசையாக எல்லாம் நடக்கும். அதில் ஒன்று மார்கழி பஜனை.


கோபால் பாட்டன்தான் பிள்ளையார் கோவில் பஜனையில் முதன்மைப் பாடகர். பாடகரென்றால் கர்நாடகச் சங்கீதத்தில் கரை கண்டவர் என்று நினைத்துவிட வேண்டாம். சங்கீதம் தெரியாது என்றாலும் இனிமையாகப் பாடுபவர். வயதாகிவிட்டதால் கொஞ்சம் பிசிறும் தடுமாற்றமும் இருக்கிறது என்றாலும் ஆளை மயக்குவதாகவே அவர் குரல் இருக்கும். அதனாலேயே அவர் முதன்மை பாடகர் ஆனதாக நினைத்துக் கொள்ளலாம். அல்லது அவரே, நான்தான் பாடுவேன் என்று அந்த உரிமையை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் உள்ளூர் வியாபாரிகள் சங்கத்தில் அவர் மூத்த தலைவர் என்பதாலும் கோயில் காரியங்களில் முன் நிற்பவர் என்பதாலும் அவருக்கு கொஞ்சம் அதிகப்படியான உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த உரிமையில் பஜனைக்கான லீடராகவும் கருதப்பட்டார் அவர்.

இந்த பஜனைக்கு, இரண்டு செக்குகள் வைத்திருந்த முத்துசாமி ஆர்மோனியப் பெட்டியுடனும் தச்சு வேலை செய்கிற ஐயாபிள்ளை மிருதங்கத்துடனும் நடுங்கும் குளிரில் அதிகாலை ஐந்து மணிக்கு கோயிலுக்கு வந்துவிட வேண்டும். பிறகு கோபால் பாட்டன் இந்த எழுபத்தைந்து வயதிலும் வேட்டி துண்டுடன் வெற்றுடம்போடு வருவார். இதையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் அரிசி வாங்க ஓலைப் பெட்டியையும், காசு கொடுத்தால் வாங்குவதற்கு மஞ்சள் துணி சுற்றப்பட்ட சிறு செம்பையும் தூக்கிக்கொண்டு நான்கைந்து சிறுவர்கள். அந்த நான்கைந்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.

இதில் கலந்துகொண்டால், 'நல்லா படிப்பெ' என்று சொல்லப்பட்டதை அடுத்து, குளிருக்கு இதமாகப் போர்வைக்குள் தூங்குகிற என்னை, நான்கரை மணிக்கே உசுப்பி விடுவாள் அம்மா. நடுங்கிக் கொண்டே பக்கத்து வீட்டு ராஜாவுடன் ஓடிப் போய் வாய்க்காலில் ஒரு முங்கு. விறைக்கிறது என்று கரையில் நின்றால் குளிக்க முடியாது என்பதால் ஓடிப்போய் தண்ணீருக்குள் விழுந்துவிடுவது. பிறகு எழுந்து அப்படியே வீட்டுக்கு வந்து, அதே ஓட்டத்துடன் பிள்ளையார் கோவில். பின், நெற்றி, கைகள் மற்றும் வயிற்றில் திருநீற்றுப் பட்டைப் போட்டுவிட்டு ராஜா, சிங்கியை (ஜால்ரா)யும் நான் செம்பையும் தூக்கிக்கொள்ள வேண்டும்.

கோபால் பாட்டன், ‘எல்லாரும் வந்தாச்சாடெ. சாமானெல்லாம் எடுத்துட்டேளா, பொறப்படுமா?' என்று மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு கேட்பார். அவரால் எல்லோரையும் போல வேகமாக நடக்க முடியாது. காலில் ஆணி. பஜனைக்கு செருப்புப் போடக்கூடாது என்பதால் ஆணிக் காலோடு மெது மெதுவாக நடப்பார். சிறு கல், காலில் பட்டால் கூட உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றுவிடுவார். நாங்களும் நிற்கவேண்டும். பழமையான ஆர்மோனியபெட்டி என்பதால் அதை அடிக்கடிச் சரிபண்ணிக் கொண்டே வருவார் முத்துசாமி. மிருதங்கத்தை ஐயாபிள்ளை லேசாக தட்டத் தொடங்கியதும், டீக்கடை வேலுவுக்கு இவர்கள் வருகிறார்கள் என்பது தெரியும். அதற்குள் காபி கிளாஸ்களை அடுக்கி வைத்திருப்பான். முதலில் பாட்டன் காபியை எடுப்பார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும். குடித்துவிட்டு பாடல் ஆரம்பிக்கும்.

‘நமப் பார்வதி பதியே - ஹரஹர மகாதேவா' என்பதை மட்டும் நாங்கள் கூட்டத்தோடு பாட வேண்டும். இதை, ‘நம்ம பார்வதி பஜையே... அரி அரி மகாதெவா' என்று குத்துமதிப்பாக உளறி வைப்போம். பாட்டனைத் தவிர யாருக்கும் பாடல் தெரியாது. அவர் சொல்வதை கேட்டு அரைகுறையாகத் திரும்ப சொல்லுவோம். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பிள்ளையாருக்கு பூஜை செய்கிற கொண்டை ஐயர், ‘ஐயையோ பாட்டை கொல்றேள்' என்று சரியாகப் பாடிக் காண்பிப்பார். ‘சாமி, எங்களுக்கு என்னெ தெரியுதோ அதைதானெ பாட முடியும்? நீங்கெ பிள்ளியாரெ பாருங்கெ' என்று சொல்லிவிட்டு பாடல் தொடரும்.

அதே பாடலோடு மந்திரமூர்த்தி கோயில் வழியாக, பஜனை செல்லும். நாங்கள் பெட்டியையும் செம்பையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்கவேண்டும். வாசலை பெருக்குகிற அல்லது கோலம் போட்டுக் கொண்டிருக்கிற பெண்கள், சிறு டம்ளரில் அரிசி தருவார்கள். இல்லையென்றால் துட்டு. அதுவும் இல்லையென்றால், ‘நாளெக்கு வாங்கடெ' என்பார்கள். இதில், மூன்று நான்கு தெருக்கள் சந்திக்கிற நடு தெருவில் மட்டும், நின்று நிதானமாகப் பாடவேண்டும். காரணம், நன்றாக விடிந்த பிறகே அதையடுத்து இருக்கிற புளியர மர தெருவை கடக்க வேண்டும் என்பதற்காக. அந்த புளியமரத்தின் கீழே எப்போதோ கன்னிப்பெண் ஒருத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டாளாம். அவள் இப்போதும் பேயாக அலைந்து ஒவ்வொருவரையும் பிடித்துவருவதாகப் பேசப்படுவதால் அந்த பகுதிக்கு விடியும் முன் யாரும் போவதில்லை. அப்படிப் போன பால்கார சுடலை, காய்ச்சல் வந்து ஒன்றரை மாதம் வீட்டுக்குள் முடங்கி கிடந்ததையும் அவனது உறவுக்காரப் பெண் சரஸ்வதி திடீரென இறந்து போனதையும் இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

போகிற வழியில்தான் கோபால் பாட்டனின் வீடு. அவர் வீட்டு வாசலுக்கு வந்ததும், கோலம் போட்டுக் கொண்டிருக்கிற மருமகள் எழுந்து அரிசி கொண்டு வரப் போவாள். தூக்கக் கலக்கத்தோடு வாசலில் நிற்கிற அவரது பேரன், ‘தாத்தா' என்பான். பாடலை பாதியில் விட்டுவிட்டு, பேரனை கொஞ்ச ஆரம்பித்துவிடுவார். அப்படி அவர் பாடலை விட்டதும் முத்துசாமி யும் ஐயாபிள்ளையும் தொடர்வார்கள். அதாவது ஒரே வரியை திரும்ப திரும்ப பாடிக்கொண்டே வருவார்கள். பிறகு பேரனுக்கு டாட்டா காட்டிவிட்டு, நடப்போம்.

நாங்கள் மேற்கிருந்து கிழக்கில் செல்ல, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி திருச்சங்குக்காரர் வருவார். அவரும் ஒவ்வொரு வீட்டு வாசலில் நின்று அரிசி வாங்குவார். அதற்குப் பதிலாக அவர் திருநீறு தருவார். ராமர் கோயில் வாசல் வந்ததும் அவரோடு நேருக்கு நேர் சந்திப்பு நடக்கும். சந்திப்பின் தொடர்ச்சியாக, திருச்சங்குக்காரர் தங்கப்பூண் போட்ட வெண்சங்கில், ‘பப்பர பப்பர பம்....' என்று இழுத்து ஊதுவார். சுகமாக ஒலிக்கும் அந்த சத்தத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம். முடிக்கும் போது, ‘பப பம்' என்று அவர் இழுத்து ஊதுவது இனிமையாக இருக்கும். பிறகு பாட்டன் அவருக்கு வணக்கம் வைப்பார். நாங்களும் சேர்ந்துகொள்வோம். எங்களுக்கும் அவருக்கும் அரிசியோ, காசோ தினமும் கொடுப்பதென்பது சிலருக்கு இயலாத காரியம். அதனால் அவருக்கு ஒரு நாள் கொடுத்தால் அன்று எங்களுக்கு கிடையாது என்கிற பார்முலாவை கையாண்டு வந்தனர்.

காலை ஐந்து மணிக்கு தொடங்குகிற பஜனை, அனைத்து தெருவுக்கும் சென்று சொர்ணம் டீச்சர் வீடு வந்ததும் திரும்பும். டீச்சர் வீட்டுக்கு கீழ்பக்கம் இருக்கும் பச்சையின் டீக்கடையில் இருந்து, உளுந்த வடை வாசம் குப்பென்று காற்றில் மிதந்து வரும். பாட்டன் பாடலை பாடிக்கொண்டே, முத்துசாமியையும் சுப்பையாவையும் திரும்பி பார்த்து, ‘அந்த கடைக்கு போமா?' என்று முகத்தை ஆட்டி ஆக்ஷனில் கேட்பார். சரி என்பார்கள்.

‘நம்ம பார்வதி பஜையே...' என்று கோரசாகப் பாடிவிட்டு கடைக்கு வந்துவிடுவோம். போட்டிருக்கிற பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார் பாட்டன். சுடச் சுட வடை, பேப்பரில் வைத்து கொடுக்கப்பட்டதும் முன் பற்கள் இல்லாத அவர், வடையை நசுக்கி கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துப் போடுவார். எங்களுக்கு அதை பிய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சூடு. அவர்கள் தின்று முடித்து டீ கொடுத்த பிறகுதான், நாங்கள் ஊதி ஊதிப் பிய்ப்போம். முத்துசாமி, ஐயாபிள்ளையை இடித்து, ‘திங்கெத பாரு' என்று கிண்டலடித்துவிட்டு, ஆரம்பிப்பார்.

‘‘நம்ம பாட்டன் மட்டும் மெட்ராஸுல இப்டி பாடிட்டு இருந்தார்னு வையி. இதுக்குள்ளெ சினிமால பாடுததுக்கு கூட்டிட்டு போயிருப்பானுவொ'

‘பெறவு, அவரெப் போலெ கொரலு யாருக்கு உண்டும் சொல்லு?' என்பார் ஐயாபிள்ளை. நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். வடையை முழுங்கிக்கொண்டே, ‘நீங்கெ கண்டேளோடெ அஞ்சாறெ. சினிமாவுக்குலா கூப்புடுவானாம்? சோலி கழுதெய பாருங்கெல' என்று பாட்டன் சொன்னதும் கப்சிப் ஆகும் ஏரியா.

பிறகு அரிசிப் பெட்டியை எட்டிப் பார்ப்பார் பாட்டன். ‘ஒருத்தனுக்கும் கை விளங்கெ மாட்டேங்கு பாரேன். கொஞ்சமாவே போடுதானுவோ. ஒரு காலத்துலயெல்லாம் பெட்டியை தூக்க முடியாத மாரி, அரிசி குவியும்'' என்று தன்னாலயே சொல்வார்.

ஒவ்வொரு வீடாக நாங்கள் வசூலிக்கிற அரிசியில், சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் அல்லது சுண்டல் உள்ளிட்டவை பிள்ளையாருக்கு படைக்கப்பட்டு, தினமும் மக்களுக்கு கொடுக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அரிசி என்பதால் எல்லா அரிசியும் இஷ்டத்துக்கு கலந்திருக்கும். இதில்தான் பிள்ளையாருக்கு படையல். பதினோறு மணி வாக்கில் இதற்காக கோயில் மணி அடித்ததும் அரச இலை அல்லது பூவரசம் இலைகளை பறித்துக் கொண்டு கோயிலுக்கு வருவார்கள் ஊர்க்காரர்கள். மற்ற கோயில்களை விட, இங்கு அதிகமாகவே பிரசாதம் வழங்கப்படும் என்பதாலும் ருசி அருமையாக இருக்குமென்பதாலும் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்திதான். இதை வாங்குவதற்காகவே காத்திருப்பதும் உண்டு.

வழக்கமாக ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடுகிற பஜனை, கடைசி நாளான பொங்கலன்று மதியம் வரை தொடரும். அன்று மட்டும் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் வசூல் நடக்கும். சிலர் பத்து ரூபாய் வரை கொடுப்பார்கள். குறைந்த பட்சம் ஒரு ரூபாய். சிலர் தராமலும் இருப்பார்கள். வசூல் முடிந்து கோயிலுக்கு வருவோம். பாட்டன், எல்லா பணத்தையும் எண்ணுவார். ‘நம்ம எத்தனெ பேருடெ' என்பார். ஐயாபிள்ளை, ‘ஏழு பங்கு வையும்யா' என்பார். ‘எட்டுலா. கோயிலுக்கு ஒரு பங்கு வேன்டாமா?' என்பார் முத்துசாமி. பங்கு வைத்ததும் பிள்ளையாரை வணங்குவார். பிறகு எங்களை அழைத்து, ‘ஏலெ புள்ளியாரை கும்புட்டுட்டு துட்டை வாங்கிக்கிங்கெ. வீட்டுலெ போயி கொடுக்கணும். ஒங்க வீட்டுலெ கேப்பென்' என்று சொல்லிவிட்டு கொடுப்பார். குறைந்தது முப்பது, நாற்பது ரூபாய் இருக்கும். காசை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு ஒரே ஓட்டம்.

கால் ஆணி கடுமையானதன் பொருட்டு அடுத்தடுத்த பஜனைக்கு வருவதை நிறுத்திவிட்டார் பாட்டன். அவரது பாடல் ஏரியாவை முத்துசாமி கவனித்துக்கொண்டார். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு ஐயா பிள்ளைக்கு ஆஸ்த்துமா பிரச்னை வந்ததை அடுத்து, அவரும் பஜனையை கைவிட்டார். மிருதங்கம் இல்லாத இடத்தில் சிங்கி மற்றும் ஆர்மோனிய சத்தம் அதிகமாகவே இருந்தது. அவ்வப்போது செருப்புக் காலோடு வந்து, ‘ஒழுங்கா போறேலாலெ' என்று கவனிக்கும் பாட்டன், ஒரு மார்கழியில் படுத்த படுக்கையாகிப் போனார். அடுத்து யாரும் வர தயாரில்லாததால் திடீரென கைவிடப்பட்டது தொன்றுதொட்டு வந்த பஜனை.

ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்துவிடுகிற மார்கழி, குளிரோடு ஞாபகமூட்டிப் போகிறது, நினைவாகிப் போன பஜனையை. தூக்கம் வராத அதிகாலையில் குளிருக்கு இதமாகப் போர்வையை போர்த்தியபடி ஜன்னலை பார்க்கிறேன். இனிமையாக சத்தமெழுப்பிச் செல்லும் பெருந்திரளான பறவைகளின் ஒலியில், கோபால் பாட்டனின் குரலும் கேட்பதாக இருக்கிறது எனக்கு.

Monday, December 17, 2012

கனவில் மிதக்கும் கால்கள்

மாசானத்துக்கான கோளாறு அதிகபட்சம் பத்து, பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஓர் இடத்தில் உட்கார முடியாது என்பதுதான். இப்படிச் சொல்வதால், உட்காரும் இடத்தில் பிரச்னையோ என நினைத்துவிட வேண்டாம். இது உடல் சார்ந்த பிரச்னை அல்ல. மனம் சார்ந்தது. அதாவது ஒரே இடத்தில் அதிக நேரம் அவனால் இருப்புக்கொள்ள முடியாது. இரண்டரை மணிநேரம் அடைந்துகிடக்க வேண்டும் என்பதற்காகவே, திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பவன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


‘ஒரு இடத்துல ஒழுங்கா நிய்க்க மாட்டியால? அவுத்துவிட்ட கழுதெ மாதிரி, சுத்திட்டே இருக்கெ?' என்று வீட்டில் உள்ளவர்கள் திட்டிப் பார்த்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சரி, சரி என்று சமாளித்தவனை, பிறகு யாரும் அரற்றுவதில்லை. அப்படியே அரற்றினால் கூட, அவனால் அவன் பேச்சையே கேட்க முடியாத நிலைதான்.

வெளுத்த சட்டை மற்றும் லுங்கி, தேங்காய் எண்ணெய் தேய்க்கப்பட்ட தேகத்தோடு வலது கையை மட்டும் ஆட்டியாட்டி நடக்கிற அவனிடம், ‘என்ன மாசானம், காலெலயே கார்சாண்டுக்கு போற போலுக்கு. எந்தூருக்குடெ?' என்று யாராவது கேட்டால், ‘சும்மாதான்’ என்று வேகவேகமாக நடப்பான்.

கார்சாண்டு என்று அழைக்கப்படுகிற பேரூந்து நிறுத்தம் பயணிகளை விட அதிகப்பட்சமாக கட்சிக்கொடி கம்பங்களைக் கொண்டிருந்தது. இந்தக் கம்பங்களுக்கு பாதுகாவல் மாதிரி, பக்கத்தில் சிறு அம்மன் கோவில். எதிரில் நன்றாக வளர்ந்திருக்கிற புளியமரம். இதன் கீழே, ஊர் பஞ்சாயத்தால் பயணிகளுக்காகப் போடப்பட்ட சிமெண்ட் பெஞ்ச். இதில் பயணிகளை விட, வெண்தோலில் கரும்புள்ளிகளைக் கொண்ட தெரு நாய் ஒன்றுதான் எப்போதும் படுத்திருக்கும். அது படுத்திருக்காத நாட்களில் மாசானம் உட்கார்ந்திருப்பான்.

குறிப்பிட்ட நேரத்துக்கு பேரூந்துகள் இயக்கப்படும் காலமாக அது இருந்ததில்லை. எப்போதாவது வரும் என்ற நிலைதான். அப்படி வரும் பேருந்துகளின் பெரும்பாலான ஓட்டுனர்களை மாசானம் அறிந்து வைத்திருந்தான். ஊரில் பஸ் வந்து நின்றதும் வேகமாக ஓட்டுனர் அருகே போவான். ரோட்டில் நின்றுகொண்டு, வாயெல்லாம் பல்லாக பெரும் வணக்கம் வைப்பான். ஐவிரல் நெற்றி தொட்டு அடிமனம் கிளப்பும் அன்பின் வெளிப்பாடு அது. அந்த வணக்கங்களுக்கு காசு, பணம் தேவையில்லை. ஒரு வணக்கத்தில், ஒரு புன்னகையில், ஒரு கும்பிடில் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. அது நட்பின் பிரவாகம். ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவது போல, ஒரு வணக்கம் கொடுத்து ஒன்றை வாங்குவான் மாசானம். பிறகு, போக்குவரத்துக் கழக தென்மண்டல மேலாளர் மாதிரி, ‘இன்னைக்கு லேட்டா? அப்பல இருந்தே பாத்துட்டிருக்கென், வரலயெ, வரலயென்னு. செங்கோட்டெல டூட்டி மாறுவேளோ? யாரு வருவா. சுடலைண்ணனா, மணியண்ணனா?' என்று கதை நடக்கும்.

பிறகு அடுத்த பஸ் வர, இன்னும் சில மணி நேரம் ஆகலாம். அதற்கு மேல் கார்சாண்டில் கால் நிற்காது. பாக்கியநாதன் என்கிற பாக்கி பலசரக்கு கடை நோக்கி நடப்பான். கடைக்குள் சென்று வருவதற்காக, பொருட்கள் வைக்கப்படாமல் இருக்கும் இடது ஓரத்தில் வந்து, லுங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டு அமர்ந்துகொள்வான்.

‘என்னடெ, பொட்லுதூருக்கு சாமான் வாங்கெ போலெயா?' என்று கேள்வியை போட்டவாறே, ‘ஒரு பீடி எடு' என்பான். எப்போதும் கடையிலேயே இருப்பதால் ஊர்க் கதைகளை மாசானம் மூலமாகவே தெரிந்துகொள்கிற பாக்கியநாதனுக்கு, ஒரு பீடியை தானமாகக் கொடுப்பதில் ஒன்றும் பிரச்னை இல்லை.

பீடியை அவன் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘எய்யா, மாசானம், ஒரே எடத்துல இவ்வளவு நேரம் இருக்கியெடெ. மழெ கிழெ பெஞ்சுரபோது?' என்று சொல்லிவிட்டு மல்லிகா அத்தை சிரிப்பாள். ‘அப்டியாது மழெ வரட்டுமெ' என்பான் பாக்கி.

‘ஒங்களுக்கெல்லாம் எடக்கா இருக்கு?' என்று சொல்லும் மாசானம், பீடியை இழு இழு என்று இழுத்துவிட்டு, ‘மண்டவெல்லம் இருந்தா, ஒரு துண்டு குடு' என்று வாங்கி வாயில் போட்டுக்கொள்வான். கடையில் ஆட்கள் இல்லாத நேரத்தில், ‘தங்கம்மன் கோயிலு தெருவுல நேத்து ஏதோ அடிதடின்னாவோளெ?' என்று ஆரம்பிப்பான் பாக்கி.

'ஆமா, நம்ம ஒழக்கு இருக்கார்லா, அவரு மவனுக்கும் தம்பி மவனுக்கும் சண்டெ. ஒரு பய வெலக்கு தீத்து விடலெ. நான்தான் போயி தீத்தேன். அதுக்குள்ளெ ரெண்டு பேருமே டொப்பு டொப்புன்னு மாறி பொடதில போட்டுட்டானுவோ. எடத் தகராறுதான்' என்று ஆரம்பிக்கிற மாசானம், ‘நாளைக்கு ஒங்கூட்டுலயும் இந்த பிரச்னை வரலாம்டெ. ஒங்கப்பாட்ட இப்பவே கரீட்டா எழுதி வாங்கிருங்கெ, நீயும் உன் அண்ணனும்’ என்று அறிவுரை சொன்னதற்குப் பிறகு அங்கு இருக்க முடியாது. ‘செரி பாக்கி, பஜனெ மடத்துல கல்யாணி பய இருப்பாம். பாத்துட்டு வாரென்னா?' என்று நடையை கட்டுவான்.

இவன் வரவாவிட்டால் பஜனை மடத் தெருவின் இயக்கமே நின்றுவிடுவது மாதிரி, நடப்பான் மாசானம். மாடுகளை மேய்ச்சலுக்கு பத்த தயாராக இருக்கிறவர்கள், மடத்தின் வாசல் திண்டில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். ‘இன்னுமா மாடு பத்தலெ?' என்று கேட்டுக்கொண்டே, ‘தள்ளீருங்கடெ' என்றவாறு உட்காருவான் மாசானம்.

‘ஆளெ காணலையேன்னு நெனச்சோம்?' என்கிற கல்யாணியிடம், ‘ஒம்ம வெள்ளாட்டங்குட்டி ஒண்ணு, நேத்து நொண்டிட்டே போச்செ, ஏம்ணெ? எவனும் கல்லெகொண்டி எறிஞ்சுட்டானுவளா?' என்பான்.

‘ச்சே, ச்சே. மச்சான் வீட்டுல புதுசா காளை புடிச்சுட்டு வந்துருக்காவல்லா. அதுல ஒண்ணு, இடம் புதுசா இருக்கேன்னு மெரண்டு ஓடும்போது, இது கால்ல மிதிச்சுட்டு'.

‘அதானெ பாத்தேன்' என்றவாறு பேச்சுத் தொடரும். அந்த வழியாக யாராவது சைக்கிளில் போனால், ‘என்ன சித்தப்பா, சந்ரன் கடை வழியாவா போறியோ? நானும் வாரேன்' என்றதும் சைக்கிள் நிற்கும். ‘மாப்ளெயை பாத்துட்டு வந்துருதென். இல்லன்னா, கோவப்படுவான்' என்று இவர்களிடம் சொல்லிவிட்டு ஏறிக்கொள்வான். கடையில் டீ ஆற்றிக்கொண்டு இருப்பான் சந்திரன். சைக்கிளில் இருந்து ஒரு குதி குதித்துவிட்டு, ‘என்ன மாப்ளெ, பூரிக் கெழங்கு வாசம் பசனெ மடம் வரலாவே தூக்குது' என்று ஒரு போடு. ‘இருக்காதாவே. செஞ்சது ஒம்ம மாப்ளெலா?' என்கிற சந்திரன், ‘தின்னு பாக்கேராவே?' என்பான்.



‘நான் என்னைக்கு கடெயில தின்னு பாத்தீரு? நமக்கு இதுலாம் சரிபடுமா சொல்லும்? என்னத்தெ தின்னாலும் பழைய சோத்தெ மாங்கா வச்சு திங்கலைன்னு வையும், பசி தாங்காதுவே' என்கிற மாசானம் அங்கு கிடக்கிற செய்தித்தாளை மேலோட்டமாக வாசிப்பான். கடையை கடந்து யாராவது செல்வார்கள். ‘என்னெ செல்லியா மாமா, பாக்காத மாறி போறெ?' என்பான்.

‘மருமவனெ கவனிக்கெலயே. வாரும் பஞ்சாத்து போடுக்கு போயிட்டாருவோம்' என்பார் செல்லையா மாமா. அவர் இப்படி கூப்பிடாவிட்டாலும் சிறிது நேரத்தில் மாசானம் அங்கு கிளம்புகிறவன்தான். அங்கு ஏற்கனவே நான்கைந்து பேர் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். புளியங்கொட்டையின் ஒரு பகுதியை தரையில் தேய்த்து, தாயக்கட்டை ஆக்கி இருப்பார்கள். மாசானம் போனதும் அங்கிருக்கும் குத்தாலம் சொல்வான், ‘எங்க மாசானத்தான் வந்துட்டாம். இனும எனக்கு ராசிதாம்லெ' என்று. அடுத்த நிமிடத்தில் இருந்தே எதிர்மாறாக நடக்கும். ‘யோவ் எந்திரிச்சு தூரப்போரும்யா' என்பான் அதே குத்தாலம்.

சிறுது நேரத்தில் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கிற மீனாட்சி சுந்தரம், ‘என்ன மாசானம் ஒக்காந்துட்டெ. வா தண்ணிக்கு போயிட்டு வருவோம்' என்பான் மாட்டு வண்டியில் நின்றவாறு. ‘ம்ம்' என்று கிளம்புகிறவன், வண்டியில் ஏறுவான். வேகவேகமாக தண்ணீரை குடத்தில் எடுத்து வண்டியில் நிறைப்பார்கள். ‘மாசானம், இன்னொரு ரவுண்டு வரணும்' என்றதும், ‘செரி' என்பான். அவனது கடைக்கருகில் வந்ததும் இறங்கிக் கொள்வான். ‘என்ன இறங்கிட்டெ. இன்னொரு ரவுண்டு?' என்றால், ‘தெப்ப கொளத்துக்கு போணும். கருசாமியும் பரம்சமும் ஆட்டை உட்டுட்டு நிப்பானுவோ' என்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடை தொடரும்.

தெப்பக்குளத் திண்டில் துண்டை விரித்து ஒருக்கு சாய்த்துப் படுத்திருப்பார்கள் கருப்பசாமியும் பரமசிவமும். மாசானம் போனதும் அவர்களிடம் ஆடுகள் நேற்று எங்கு மேய்ந்தது என்பது உள்ளிட்ட விஷயங்களை கேட்பான். பிறகு குளத்துக்கு அருகே வளர்ந்திருக்கிற முட்களில் இருந்து கருவை காய்களை பறிப்பான். கொஞ்சம் சேர்ந்ததும், விசில் அடித்து ஆட்டுக்குட்டிகளை அழைப்பான். வழக்கமாக இவன் இப்படி கொடுப்பவன் என்பதால் நான்கைந்து குட்டிகள் கருவை காய் ருசிக்கு ஓடி வரும். ஒவ்வொன்றுக்கும் ஊட்டி விடுவான். கொடுத்து முடித்ததும் அங்கு நிற்க முடியாது. அடுத்து, பத்தூட்டு வளவு.

வளவில் இருக்கும் வீரமணி வீட்டு திண்ணையில் பீடி சுற்றும் பெண்கள் அமர்ந்திருப்பார்கள். போய் உட்கார்ந்து, ‘என்ன எல்லாரும் எப்படியிருக்கியோ?' என்பான்.

‘ஆமா, ஏழு வருஷத்துக்கு முன்னால பாத்த மாதிரியே கேளு. ஒரு நாளைக்கு நாலுதடவெ வந்துட்டு போறெ? இதுல விசாரிப்பை பாரென்?' என்பாள் வசந்தா மைனி. ‘ஒங்களுக்கு இதே எடக்குதான் மைனி' என்று சிரித்துவிட்டு கொறிப்பதற்காக அவர்கள் வைத்திருக்கிற பொறி அரிசியில், கொஞ்சம் அள்ளி வாயில் போடுவான். அவர்கள் சிரிப்பார்கள்.

வயலுக்கு போய்விட்டுவிரும் நல்லக்கண்ணு மாமா, ‘ஏலெ உன்னெ கொளத்துக்கிட்ட பாத்தேன். அதுக்குள்ளெ இங்க வந்து நிய்க்க?’ என்பார். ‘ஒரே இடத்துலெ நிய்க்க முடியுமா? நாலு எடத்துக்கு போவாண்டாம் நான்' என்று பதில் வரும். ‘என்னமோ வெட்டி முறிக்க மாறியே பேசுததெ பாரேன்' என்று அவர் சொல்லும்போதே, ‘செரி வரட்டா. செவங்கோயிலுக்கு போணும். பாநாச தாத்தாவும் பச்சி தாத்தாவும் காத்துட்டு இருப்பாவோ' என்று சொல்லிவிட்டு நடப்பான்.

ஊரில் எல்லோரும் இவனுக்காகவே காத்திருப்பது போல நினைக்கிற மாசானம், குழந்தைக்கு ஒப்பானவன். அவனை சுடு சொல் சொல்லி, யாரும் அழைத்ததில்லை. சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் மட்டுமே வீட்டுக்கு வருகிற மாசானத்துக்கு கால்கட்டுப் போட்டால் சரியாகும் என்றார்கள் உறவினர்கள். ‘இனும ஒங்காலு ஒரே இடத்துலதான் கெடக்கும் பாரேன்' என்றார்கள் சேக்காளிகள். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் பறவக்காளியாகப் பறக்கத் தொடங்கினான். மாமனாருக்கு தாங்க முடியவில்லை. மாசானத்தின் வீட்டுக்கருகில் சும்மா கிடந்த இடத்தில் பலசரக்குக்கடை ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்தார். முதலில் வெறுப்பாக கடையில் உட்காரத் தொடங்கினான். கால் இருப்புக் கொள்ளவில்லை. அது நடக்க நினைத்தது, ஓட நினைத்தது, பறக்க நினைத்தது. இப்போது அடங்கி விட்டது.

பணம் பண்ணும் வித்தையை வாழ்க்கை கற்றுக்கொடுத்தப் பிறகு பழங்கங்கள் கூட பக்குவத்துக்கு வந்துவிடுவதை மாசானம் உணர்த்திக் கொண்டிருந்தான்.

Monday, December 10, 2012

நோய்கள் தீர்க்கும் தோட்டம்

புடி (சுளுக்கு) தடவுகிற அருணாச்சல தாத்தாவை எப்போதும் சைக்கிளோடுதான் பார்க்க முடியும். தலைசாய்ந்து கிடக்கிற டைனமோவை கொண்ட, கிரீச் கிரீச் என சத்தம் எழுப்புகிற அந்த ஹெர்குலிஸ் சைக்கிள் அவருக்கு பல வருட சொந்தம். அந்த சத்தத்தைக் கொண்டே இது அருணாச்சல தாத்தாவின் சைக்கிள் என்பதை ஓரளவுக்கு உணர முடியும். பாதி துருபிடித்திருக்கிற அந்த சைக்கிளில்தான் பயணங்களின் காதலன் மாதிரி, எப்போதும் எங்காவது போய்க்கொண்டே இருப்பார் தாத்தா. அக்கம் பக்கத்து ஊர்களில் அவரது தேவை அதிகமாக இருந்ததால் அவரும் அவர் சைக்கிளும் பிஸி. உயரம் குறைவானவர் என்றாலும் சீட்டில் உட்கார்ந்து கொண்டு நுனி காலால் இடப்புறமும் வலப்புறமும் வளைந்து நெளிந்து அவர் பெடலை மிதிப்பது அலாதியானது. அவருக்காக அந்த சைக்கிள் கிட்டத்தட்ட, குட்டை சைக்கிள் அளவுக்கு மாற்றப்பட்டிருந்தாலும் அருணாச்சல தாத்தாவுக்கு அது உயரம்தான்.


அவசரமாக எங்கும் செல்ல தேவையில்லாத நாட்களில் சைக்கிளுடன் அவர் நடந்துதான் வருவார். ஒரு கையால் ஹேண்டில்பரை பிடித்துக்கொண்டு மறு கையை முதுகுக்கு பின்பக்கம் வைத்தவாறு அவர் நடந்துவருவதில் ஓர் அழகு இருக்கும். எல்லோருக்கும் வாய்த்துவிடாது அப்படியான தோரணை. எண்ணெய் தேய்க்கப்பட்ட கை, கால்களுடன் அவர் கொண்டு வரும் சைக்கிளில், எண்ணெய் படிந்த தோல் பை ஒன்று தொங்கும். அதில் தாத்தாவின் தொழிலுக்கான எண்ணெய்கள் அடங்கிய நான்கைந்து பாட்டில்கள் இருக்கும்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான எண்ணெய். வர்மபுடிக்கு- அதாவது கைகளால் தடவ முடியாத இடங்களில், புடி ஏற்பட்டால் அதற்கு மூலிகை எண்ணெய். வெளியில் தடவுவது போலானவற்றுக்கு விளக்கெண்ணெய். மூலிகை எண்ணெய், குடிப்பதற்கென்று தனி. தடவுவதற்கென்று தனி. மூலிகை எண்ணெய், வித்தியாசமான எண்ணெய்களால் தயாரிக்கப்படுவது. நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், புன்னைக்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சில மூலிகைகள் (என்ன மூலிகை என்பது ரகசியமாம்) அடங்கியவற்றை ஒரு சட்டியில் போட்டு கொதிக்க வைப்பார்கள்.

மொத்தம் பத்து லிட்டர் என்றால் அது சுண்ட காய்ந்து மூன்று லிட்டரில் வந்து நிற்கும். வர்ம புடிக்கு இதை ஐந்தாறு சொட்டு குடிக்கக் கொடுப்பார்கள். இரவில்தான் குடிக்க வேண்டும். கசப்பாக இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஒரே முழுங்கில் விட்டுவிட வேண்டும். கசப்புக்கு கொஞ்சமாக அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம். மற்றபடி எதையும் தொடக்கூடாது. இரவில் இதை குடித்தால் விடியும்வரை தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வளவு விஷயங்களை தாத்தா எங்கு போய் கற்றார் என்பது தெரியாது.

சிறுசு முதல் பெருசுவரை யாரையுமே, ‘அய்யா’ என்று அழைக்கும் அருணாச்சல தாத்தாவுக்கு அறுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கலாம். இருக்கலாம் என்பது அவர் வார்த்தைதான். ‘எந்த வருஷம் பொறந்தேன்னு எனக்கெ யாவம் இல்லெயெ. நம்மளே ஒரு வயசெ சொல்லிக்கிட வேண்டியதாம்’ என்கிற தாத்தாவின் குத்து மதிப்பான வயதுதான் அது.

‘என்ன, தூரமா போறேரு. ஒம்மெ பார்க்கலாம்னுலா வாரென்’

‘அப்டியாய்யா?’

‘சின்ன பயலுக்கு நாலு நாளா காய்ச்செலு. ஊசிப்போட்டும் கேக்கலெ. புடி கெடக்கான்னு பாக்கணுமெ?’

‘இன்னா போங்க. வாரேன்’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறுவார். பையன் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு, ‘கொஞ்சம் தண்ணி தாங்கம்மா’ என்பார், பெண்களிடம். தருவார்கள். கை, கால்களை கழுவிவிட்டு, காய்ச்சலோடு படுத்திருக்கும் பையன் மீது கை வைத்து, சூடு பார்ப்பார். பிறகு, ‘ஒண்ணுமில்லெ ராசா, வெளியெ வாங்க’ என்று சொல்லிவிட்டு பெரிய கல் அல்லது ஸ்டூல் ஏதும் இருந்தால் அதில் உட்கார்ந்துகொள்வார். காய்ச்சல்க்காரனின் நாடி பார்ப்பார். பிறகு ஏதோ நினைத்தவராக, ‘எங்க போய் விழுந்தீரு’ என்பார். காய்ச்சல்க்காரன் முழிப்பான்.

‘முதுகுல புடி கெடக்கு’ என்று சொல்லிவிட்டு பையனை கல்லில் உட்காரச் சொல்லுவார். பிறகு சைக்கிளில் தொங்கும் தோல் பையை எடுப்பார். அதில் இருக்கும் எண்ணெய் பாட்டிலில் விளக்கெண்ணெயை எடுப்பார். கையில் ஊற்றி, புடி கிடக்கும் இடத்தில் தேய்ப்பார். சம்பந்தப்பட்ட இடத்தை தொடும்போது காய்ச்சல்க்காரன் துடிப்பான்.

‘வலிக்கோய்யா. பூப்போல தடவிருதேன்’ என்றபடியே தடவுவார். பிறகு அவனது இரண்டு கைகளையும் விரிக்கச் சொல்லிவிட்டு அதை பிடித்துக் கொள்ள சொல்வார் வீட்டில் உள்ளவர்களை. பிடிப்பார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில் வேகவேகமாக அழுத்தி தேய்த்துவிட்டு கைகளை லேசாக ஆட்டச் சொல்வார். பிறகு பேச்சுக் கொடுத்துக் கொண்டே எழுந்து நிற்பார். அவனது இரண்டு கால் பாதங்களையும் மிதித்துக்கொண்டு இரண்டு கைகளையும் மேலே லாவகமாக ஒரு இழு. டொப் என்று ஒரு சத்தம். புடி போயே போச்சு. சிறிது நேரத்தில் காய்ச்சலும் போய்விடும். ஆனால் வலி இருக்கும். பிறகு அவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொண்டு சைக்கிளை உருட்டுவார். பெரும்பாலும் காசுக்காக இதைச் செய்வதில்லை அருணாச்சல தாத்தா. அவருக்கான சொத்துபத்தும் அதிகம். இருந்தாலும், ‘எதையும் சும்மா செஞ்சா, அதுக்கு மதிப்பு இருக்காதுல்லா, அதனால கொடுத்ததை வாங்கிக்கிடுதாரு’ என்று சொல்லப்பட்டு வந்தது.


பக்கத்தூர் கொடைக்குச் சென்றுவிட்டு கும்மிருட்டில் நானும் நண்பன் முத்துசாமியும் சைக்கிளில் வந்துகொண்டிருந்தோம். ரயில்வே கேட் அருகே வரும்போது மரத்தில் மோதி விழுந்ததில், முத்துசாமிக்கு கால் சுளுக்கிக் கொண்டது. ஒரு காலில் எழுந்தவன் அடுத்த பாதத்தை தரையில் வைத்து அழுத்த முடியவில்லை. வலி. இப்படியே நொண்டிக்கொண்டே வீட்டுக்குப் போனால், அவனது அப்பா திட்டலாம். சுளுக்காகத்தான் இருக்குமென நினைத்து அருணாச்சலத் தாத்தா வீட்டுக்கு அவனோடு சைக்கிளை அழுத்தினேன். தாத்தாவின் மூன்றாவது மகன் குமரன் எங்களோடு படிப்பவன். வெவ்வேறு வகுப்பு என்றாலும் தெரிந்தவன் என்கிற நினைப்பில் சென்றோம்.


அறுபது வாட்ஸ் பல்ப் ஒன்று மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது வீட்டு வாசலில். சத்தம் போட வருத்தமாக இருந்தது. தூங்கிக் கொண்டிருப்பவர்களை எப்படி உசுப்ப என்று யோசித்துக் கொண்டிருக்கையில் நாய் குலைத்து எங்கள் வரவை காட்டிக்கொடுத்தது. ‘யாருய்யா?’ என்று வந்தார் தாத்தா. முத்துசாமியை பார்த்ததும், அவன் அப்பா பெயரை சொல்லிவிட்டு, ‘அவரு மவன்தானெ’ என்றார். அவனுக்கு பகீர் என்றது. ‘ஆமா’ என்று தலையாட்டிய பிறகு நடந்ததை விளக்கினேன். பிறகு வழக்கம் போல, புடி தடவிவிட்டு காலை உதறச் சொன்னார். ‘நாளைக்கு வரை வலி இருக்கும், பாத்துக்கிடுங்கெ’ என்று அவர் சொன்னதும் நண்பன் சொன்னான், ‘அப்பாக்கு தெரியாண்டாம்’ என்று. ‘நான் ஒங்கப்பாட்டெ சொல்லலெ. ஆனா, கால் வலி காமிச்சுக்கொடுக்காதா?’ என்றார். ‘கண்ணுல படாமெ சமாளிச்சிருவென்’ என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது, எதிரில் நின்றிருந்தார் முத்துசாமியின் அப்பா. விழுந்த அடியை அவனும், ஏச்சை நானும் வாங்கிக்கொண்டு திரும்பியதில் அவனுக்கு கால் வலி காணாமல் போயிருந்தது.

ஆண்களுக்கு என்றில்லை, பெண்களுக்கும் அவர்தான், புடி தடவி வந்தார். எருக்கெடங்கிற்கு கூடையில் சாணம் கொண்டு போன பெரியாச்சி, தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் காலும் கையும் ஒரு பக்கம் அப்படியே நின்றுவிட்டது. தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் போட்டிருந்தார்கள். காலையும் கையையும் அசைக்க முடியவில்லை. ‘இது வலிப்புதாம்னு நெனக்கென். இனுமெ சங்கடம்தாம்’ என்று பயங்காட்டிப் போனார்கள், வந்து பார்த்தவர்கள். யாரும் எதுவும் சொல்லாமல் கேள்விபட்டு வந்தார் அருணாச்சல தாத்தா. ‘விழுந்துட்டாவளாமெ’ என்றவாறு பெரியாச்சியின் பக்கத்தில் உட்கார்ந்தார். கண்கள் ஏங்கி ஏங்கி பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியாச்சி. நாடி பிடித்துப் பார்த்தவர், சைக்கிளில் இருந்த எண்ணெயை கொண்டு வந்து தேய்த்தார். ‘சாயந்தரமும் தேய்ச்சு விடுங்கம்மா. கொஞ்சம் வலிக்கும்னு சொல்வாவோ. கண்டுக்கிடாதிங்கெ. நாளெக்கு வாரென்’ என்று எண்ணெயை கொடுத்துவிட்டுப் போனார்.

பெரியாச்சிக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் நம்பிக்கை வந்தது. மறுநாள் வந்தவர், எழுந்து உட்கார வைத்தார். முடியவில்லை அவளால். அம்மாவும் சித்தியும் பிடித்துக்கொண்டார்கள். பிறகு எண்ணெய் தேய்க்கப்பட்ட காலை அங்குமிங்கும் ஆட்டியபடி ஒரு இழு. சடக் என்று சத்தம். கையையும் அப்படியே இழுத்துவிட்டதும், ஆச்சிக்கு வலி. படுத்தாள். வலி முடிந்து எழுந்தபோது அவளால், கை, காலை ஆட்ட முடிந்திருந்தது. ‘அருணாசலம் கைய வச்சு, எது நடக்காம இருந்திருக்கு’ என்று பாட ஆரம்பித்துவிட்டாள் பெரியாச்சி. இப்படி ராசிக்காரரான அருணாச்சல தாத்தா, ‘புடி தடவுவது’ மட்டுமில்லை, பாம்புக்கடிக்கும் பத்தியம் பார்த்துவந்தார்.

பாபநாசத்துக்கு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் இடதுபுறமாக இருக்கிறது தாத்தாவின் விவசாயத் தோட்டம். கரும்பு, நெல், காய்கறிகள், கொய்யா, நெல்லி மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை வளர்ந்து நிற்கும் தோட்டத்துக்குள், சுகமாகக் கட்டப்பட்டிருக்கிறது அவரது வீடு. தோட்டம் என்று சொல்லப்பட்டாலும் எப்போதும், வாசல் திறந்தே கிடக்கிற ஒரே இடம் இதுவாகத்தான் இருக்கும். இங்கு எப்போதும் யார் வேண்டுமானாலும் உதவி கேட்டு வரலாம் என்பதுதான் அவரது நிபந்தனை. இல்லாவிட்டாலும் வந்து கதவை தட்டுகிற மனிதர்கள்தான். ஆத்திர அவசரத்துக்கு இவரை விட்டால் யார் இருக்கிறார்?

மேலத்தெரு மாரியண்ணன் கடைசி பஸ்சில் தென்காசிக்கு செல்வதற்காக, புளியமரத் தெருவில் இரவு வரும்போது பாம்பு கடித்து விழுந்துவிட்டான். பேச்சுமூச்சு இல்லை. உடன் வந்தவர்கள் சைக்கிளில் தூக்கி வைத்துக்கொண்டு அருணாச்சல தாத்தாவை தேடி வந்துவிட்டார்கள். ஆனால், தாத்தா எங்கு போனார் என்று தெரியவில்லை. அவர் வர நேரமாகலாம். அதுவரை தாங்குவானா, மாரியண்ணன்? வீட்டில் இருந்த ஆச்சி, அவனது முகத்தை பாத்தாள். வீட்டுக்குள் ஓடியவள், கொஞ்சம் பச்சிலைகளை கொண்டு வந்து அவனது வாயில் கசக்கிப் பிழிந்தாள். சாறு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போகப் போக, சிறிது நேரத்தில் கண்விழித்த மாரியண்ணன் எழுந்து உட்கார்ந்துகொண்டு அழுத அழுகை, எங்கும் பார்க்க முடியாதது. செத்துப்பிழைத்தவனின் கண்ணீர் அது. அந்த கண்ணீரின் அடர்த்தியில், ஒரு உயிர் பெருங்கடனோடு அந்த ஆச்சியின் ஆன்மாவில் விழுந்துகிடப்பதை யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை.

தாத்தா வீட்டில் எல்லாருமே ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்து வைத்திருப்பவர்களாக இருந்தார்கள். நொங்கில் வண்டி செய்து ஓட்டுகிற அவரது மகள் வயிற்றுப் பேரன் கூட, விஷக்கடிக்குப் பச்சிலை தருபவனாக இருக்கலாம். பழக்கங்கள் தரும் அனுபவம் கற்றதை விட அதிகம்.

எப்போதும் சைக்கிளுடன் அலையும் தாத்தா, இப்போது இல்லை. எங்களுடன் படித்த குமரன் வெளிமாநிலம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாகச் சொன்னார்கள். எப்போதும் திறந்தே கிடக்கும் தோட்டம், காம்பவுண்ட் சுவருக்குள் பத்திரப்பட்டிருக்கிறது. பஸ்சில், அவரது வீடிருக்கும் தோட்டத்தைக் கடக்கும் போதெல்லாம் முதுகில் புடி பிடித்து, அவர் முன் வலியோடு அமர்ந்திருப்பதாகவே உணர்கிறேன்.