நம் பெயர் தாங்கிய கள்ளிச்செடியை கைகளாக்கிக் கொண்ட பிறகு, இனிமையாகவே இருக்கிறது ரணத்தின் ரசனை. துள்ளியோடும் உன் வலது கண், நேராக வந்து ஒட்டிக்கொள்கிறது என் நெஞ்சில் மூன்றாம் கண்ணாக! கண்கள், காதலின் வாசல்கள். பூட்டப்படாத வாசல்கள் பூச்சொரியும் சொர்க்கங்கள். தூரமாகவே நிற்கும் உன் இடது கண், எப்போதும் எதிரில் நின்று என்னைப் பார்ப்பதாய் உன்னைக்காட்டுகிறது. உன்னைக்காட்டுவதும் என்னைப் பார்ப்பதுமான சித்து விளையாட்டில், பிறப்பும் இறப்பும் சேர்ந்தே நடக்கிறது. வரவா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ஆடும் உன் தாவணி, என் உயிரை கட்டி முடிந்து வைத்திருக்கிறது.
திடீரென ஞாபகம் வந்தவளாய், பாவாடையில் உயிரை பொதிந்து, குபுக்கென விழுங்கி கொள்கிறாய். துடிக்கும் உன் இதயத்துக்கருகில் என்னுயிர் பம்மிக்கொள்கிறது. ஜென்மங்கள் கடந்த வாழ்வு, உன்னிதயத்தில் திரைப்படமாகிறது.
ஒரு காலத்தில் சிப்பாயாக இருந்திருக்கிறேன். குதிரையில் ஏறுவதும் வேறுநாட்டு வீரர்களை களத்தில் வெல்வதுமான் வீர வாழ்வு. கூடவே உன்னைப்பற்றியும் காட்டுகிறது படம். நீ ஏதோ ஒரு நாட்டில் மோர் விற்கும் பெண். கிருஷ்ணன் வந்தானா என்று கேட்டுக்கொண்டே, உடைந்த வெண்ணை பானையை பார்க்கிறாய். 'ஏய் கள்வா' என்கிற போது, கண்ணன் கதவின் பின்பக்கம் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போதும் கண்ணன், குழந்தையாகவே இருப்பது எனக்கு ஆச்சர்யம்.
இப்போது அடுத்த ஜென்மம். என்னால் நம்பவே முடியவில்லை. நான்தான் கபிலர் என்றால் எப்படி நம்புவது? கோழி இறகை காதில் வைத்துக் குடைந்துகொண்டே, பாடல் இயற்றுகிறேன். அசிஸ்டெண்ட்டுகள் யாரும் இல்லாததால் நானே பனையோலையில் எழுதுகோலால் அழுத்தி அழுத்தி எழுதி சிரித்துக்கொள்கிறேன்.
நீயும் வருகிறாய். உன் பெயர் காக்கை பாடினியாரோ அல்லது அவ்வையாராகவோ இருக்கலாம். நீ பேசும் பஞ்ச் டயலாக்கில், டக்கென்று திரையில் தீப்பிடிக்கிறது. இதயம் உம்மென்று, பம்மியிருக்கும் என்னை ஆக்ரோஷமாக பார்க்கிறது.
ஒவ்வொரு ஜென்மத்திலும் நாமிருவரும் யார் யாராகவோ இருந்திருக்கிறோம். இப்போதுவரை, ஒரு காலத்திலும் கணவன் மனைவியாக இல்லவே இல்லை.