Showing posts with label கந்தர்வன். Show all posts
Showing posts with label கந்தர்வன். Show all posts

Thursday, May 20, 2010

இடையில் சில குறிப்புகள்

ஒரு வருடத்துக்குப் பிறகு ஊருக்குப் போவது என்பது கொஞ்சம் அதிகப்படியான சந்தோஷத்தை தந்திருந்தது. கேபினுக்குள்ளும் கம்ப்யூட்டருக்குள்ளும் அடைந்துகொண்ட வாழ்க்கையின் பிரதானம் வருவாய் மட்டுமே. இதை தாண்டிய மகிழ்ச்சிகளை, தந்துவிடுவதான பாவலாவை, சினிமா பார்ட்டிகளும், ஈசிஆர் விசிட்டுகளும் ஏகாந்தமாய் செய்கின்றன.


தொழில் நிமித்தம் நடக்கின்ற இக்காணிக்கைகளை தாண்டி, அடிநெஞ்சில் அம்மணமாக எல்லாருக்குள்ளும் உலவி கொண்டிருக்கிறது பிறந்து வளர்ந்த ஊரும், பிஞ்சில் ஆடிய நினைவுகளும்.

டிவியில் ஓடுகிற--, வயக்காட்டையும் ஆற்றையும் தோப்புகளையும் கொண்டு செல்கிற ஏதாவதொரு கிராமத்து பாடல், உடைத்துவிட்டு போகிறது இப்போலி வாழ்வை. பிழைப்பின் நிமித்தம் தங்கிவிட்டாலும் எல்லோரின் சட்டைப்பைக்குள்ளும் கிராமம், சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது உறங்கிவிடாமல்.

ஆடி அசையும் குளிர்சாதன, தூங்கும் வசதிகொண்ட பேரூந்தில் திருநெல்வேலிக்கு ஏறிய போது, மணி இரவு 9.00. காலையில் 7.30க்கு நெல்லை புது பஸ்டாண்ட் வந்திருந்தது.

பிடித்து வளர்த்த மைனா குஞ்சுகளும், கிளிகுஞ்சுகளும் கண்களின் பறக்க, வளர்த்த வெள்ளாட்டு குட்டியில் முகம் புதைத்து ஆடிக்கொண்டிருந்தது மனசு. அம்பாசமுத்திரம் பஸ் பிடித்து, குட்டித் தூக்கம்.

இறங்கி,கொட்டாவி விட்டுக்கொண்டே, டவுண் பஸ்சுக்கு காத்திருந்த போது, கேட்டது குரல்.

'நீங்க ஆடுமாடுதானே'

இதென்ன கூத்தா இருக்கு என நினைத்துவிட்டு, 'ஆமா, நீங்க'

'நான் ராஜா, துபாய் ராஜா'

'அட, எப்படி சார், முகமே தெரியாம, இவ்வளவு கரெக்டா என்னை அடையாளம் கண்டீங்க?'

'உறவினர் ஊருக்கு போறாங்க, பஸ் ஏத்த வந்தேன். திடீர்னு பார்த்தா பேக்கோட நின்னீங்க. போன வாரமே சொன்னீங்கள்ல, இன்னைக்கு வருவீங்கன்னு. அதனால, குத்து மதிப்பாதான் கேட்டேன்'

சில நிமிட பேச்சுக்குப் பிறகு, அவரவர் பாதையில் பிரிந்தோம்.

எனக்கு இன்னும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

................................................

புறாக்கூண்டு வீடுகளில் வாழ பழக்கிவிட்டிருக்கிறது சென்னை. வீடு மாற்றும் பொருட்டு, (தூசிகளோடு) அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களை ஏதாவது லைப்ரரிக்கு கொடுத்துவிடுவது என்று 3 அட்டைப்பெட்டிகளை ரெடி செய்து அடுக்கி வைத்தேன். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 527 புத்தகங்கள்! வார இதழ் ஒன்றில் வேலை பார்த்தபோது விமர்சனங்களுக்காக வந்த புத்தகங்கள் அதிகம். ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டிருந்தபோது, கண்ணில் பட்டது சு.சமுத்திரத்தின் வாடாமல்லி.

'ஏ அய்யா, நான் சுத்துன ஊரைத்தானே நீயும் எழுதத... ஒரு நாளு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வா. நிறைய பேசுவோம்' என்ற சமுத்திரம், 'தோழர்' கதைக்காக பெரிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதை படித்துவிட்டு அவரது அனைத்து புத்தகங்களையும் மொத்தமாக படித்துவிடுவதென முடிவு செய்து, ஆச்சர்யத்தின் ஆழ்ந்தேன். இன்னும் பல நினைவுகள் வந்து வந்து சென்றது.

அவர் இறக்குமுன் கடைசியாக பேசியது என்னிடமாகத்தான் இருக்கும்.

இதே போல இன்னொருவர் எழுத்தாளர் கந்தர்வன்.

'பேசக்கூடாதுன்னு டாக்டரு சொல்லியிருக்காரு. இவரு பாட்டுக்கு போன்ல பேசிட்டிருக்காருப்பா... கொஞ்சம் சொல்லேன்' என்ற அவரது மனைவியின் கரிசனையை அவர் பொருட்படுத்தவே இல்லை.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களில் நினைவுகளும் புதைத்திருக்கிறது.