Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, March 13, 2014

சினிமா: ஆவணப்படுத்தலின் அவசியம்

மண் சாலைகளில் மரங்களோடு மாட்டு வண்டிகளும் டிராம் வண்டிகளும் போகும் பழங்கால சென்னையை, புகைப்படங்களில் பார்த்திருக்கலாம். ‘இந்த இடமா? அப்ப இப்படியா இருந்திருக்கு?’ என்கிற ஒப்பீடு அதைப் பார்த்ததும் வந்து போகிறது மனதில். ஒரு பழங்கால சினிமா என்றால், அந்த காலகட்ட மனிதர்களின் உடைகள், சிகை அலங்காரங்கள், சாலைகள், கோயில், குளம், பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் காட்டும் பொக்கிஷமாக இருக்கிறது. அந்த சினிமாவில், ‘ஏம்பா அண்ணாசாலையில இருந்து மயிலாப்பூருக்கு 20 பைசா கேட்கிற?’ என்று ஒருவர் ரிக்ஷாக்காரரிடம் பேசினால், அதுதான் கவனிக் கப்பட வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம். அந்த 20 பைசா அப்போதையை பொருளாதாரத்தைப் பேசுகிறது. அது பேசாத விஷயங்கள் நிறைய. இது ஒரு உதாரணத்துக்குத்தான்.

இப்படி நம் சமூகப் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருக்கும் சினிமாக்களை ஆவணப்படுத்தும் அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று சொல்லி சொல்லியே மறைந்து விட்டார் இயக்குனர் பாலு மகேந்திரா.

‘எனது, ‘வீடு’, ‘சந்தியாராகம்’, ‘மறுபடியும்’ படங்களின் நெகட்டிவ்கள் வீணாகிவிட்டன. இனி அவற்றைப் பார்க்க முடியாது. என் மூன்று பிள் ளைகள் என் கண்முன்னே இறந்துவிட்டது போல ஒரு சோகம் என்னைக் கவ்விக்கொண்டது’ என்ற பாலுமகேந்திராவின் வார்த்தைக்குள் பெரும் வலி இருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

1987, 1993&ம் வருட படங்களுக்கே இந்த நிலை என்றால் பழங்கால படங்களுக்கான நிலை என்ன? நாம் போற்றிய, நம் முன்னோர்கள் பாராட்டிய திரைப்படங்கள் இப்போது என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

சினிமாவில் முங்கி, சினிமாவில் எழும் இனம், நம் இனம். அப்படி சினிமாவை நேசிக்கிற, சுவாசிக்கிற இனத்தின் பண்பாட்டை ஆவணப் படுத்து தலின் மூலமே அடுத்தத் தலைமுறைக்கு அதைக் கொண்டு செல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் சினிமா அடைந்திருக்கும் வளர்ச்சி, உள்ளடக்கம், உருவம் மற்றும் கதை சொல்லும் உத்தி, அதன் மாற்றம் போன்றவற்றை ஆராய்கிற திரைப்பட மாணவர்கள், திரைப்படகாப்பகம் இன்றி அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆய்வு நோக்கத்துக்கு மட்டுமன்றி நம் பழங்கால சினிமாக்களை அறிய நினைக்கிற எதிர்கால சந்ததியினருக்கு காட்சிவழியாக, நம் அடையாளங்களை, பழக்க வழக்கங்களை, கடந்த கால பிரச்னைகளைக் கொடுக்க, ஆவணப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும்.

பிலிம்யுகமும் இன்று முடிவுக்கு வந்துவிட்டது. நெகட்டிவ் ஓய்ந்து விட்டது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்றொரு படத்தை இப்போது திரையிட நினைத்தால் கூட சாத்தியமில்லை. ஏனென்றால் தியேட்டர்கள் டிஜிட் டலுக்கு மாறிவிட்டன. மொத்தமாக டிஜிட்டல் ஆக்கிரமித்துவிட்டது. இந்த காலகட்டத்தில் ஆவணப்படுத்துதல் என்பது எளிதானதுதான். மொத்தமாக படப்பெட்டிகளைப் பாதுகாக்கும் நிலைமை போய், டிஸ்க்கில் பாதுகாக்கும் முறை இப்போது வந்திருக்கிறது.

அதை தனிநபர் செய்வதென்பது முடியும் காரியமல்ல. சினிமா தயாரிக்கும் கார்பரேட் நிறுவனங்கள், தயாரிப்பாளர் சங்கம் போன்ற திரைப்பட அமைப்புகள் அல்லது தமிழக அரசே முன்னெடுத்தால் மட்டுமே அது சாத்தியம்.

தினகரன் தலையங்கம் 03.03.1214

Friday, March 7, 2014

சினிமா : ஒரு புதிய முயற்சி

கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது. அதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. காலங்கள் இல்லை. எல்லையின்றி விரியும் விசித்திர இயந்திரம் அது. மனித கனவுகளின் உச்சத்தை அல்லது யாதார்த்த வாழ்வின் ரசனையை, திரை வழி கொண்டு வருகிறது சினிமா. அந்தக் காட்சியின் வழி மனம் லேசாகிறது அல்லது கனமாகிறது. அதனால்தான் அதற்கு கனவுத் தொழிற்சாலை என்றும் பெயர்.

கோடிகளில் ஆட்டம் ஆடும் திரையுலகம் அவ்வப்போது மாற்றங்களை ஏற்றுக்கொண்டே வந்திருக்கிறது. சமீபத்தில் பிலிம் யுகம் முடிந்து டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறது சினிமா. டிஜிட்டலின் வழி சினிமா எளிமையாகி இருக்கிறது. புகைப்படம் எடுக்கும் கேமராவில் கூட இன்று சினிமா எடுத்துவிட முடியும் என்கிற டெக்னாலஜி நமக்கு வரம். இதன் மூலம் புதிய இயக்குனர்கள் உருவாகி இருக்கிறார்கள். அவர்களின் வழி, புதிய சிந்தனைகள் வெளிப்பட்டிருக்கின்றன. இன்னும் பலர், கனவுகளை கண்களில் வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு காத்திருக்கிறார்கள். கோடம்பாக்கம் இவர்களாலும் நிரம்பி இருக்கிறது. இவர்களின் அடுத்த நம்பிக்கையாக வந்திருக்கிறது, ‘கிரவுடட் பண்ட்’ சினிமா.

பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வாங்கி அதை கொண்டு படம் பண்ணுவது. படத்தின் வியாபாரத்துக்குப் பிறகு அவர்கள் பணத்தை லாபத்துடன் திருப்பிக்கொடுப்பது. இதற்காகவே சில இணையதளங்கள் இப்போது உருவாகி இருக்கின்றன. அதில் விவரங்களை ஏற்றிவிட்டால் போதும். பிடித்திருந்தால் எங்கிருந்தோ முகம் தெரியாத பலர் முதலீடு செய்கின்றனர். அப்படி உருவாகி வெற்றி பெற்ற கன்னட படம், ‘லூசியா’. (இது, தமிழில் ரீமேக் ஆகிறது). இந்தியில் ‘லஞ்ச்பாக்ஸ்’, ‘ஐ எம்’ உட்பட சில படங்கள் இப்படி உருவாகி இருக்கின்றன.

ஒரு வகையில் இது திரைப்புரட்சி மாதிரி தோன்றினாலும் இதிலும் இருக்கிறது சிக்கல்கள்.

‘கிரவுடட் பண்ட் புதிய விஷயமில்லை. தமிழில் பல படங்கள் அந்த முயற்சியில் நடந்திருக்கின்றன. ஆனால் இதற்கு திட்டமிடல் முக்கியம். ‘லூசியா’ 85 லட்சம் ரூபாயில் எடுக்கப்படம். படத்தின் இயக்குனரே பணத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சொன்ன நாளில், சொன்ன தேதியில், சொன்ன முதலீட்டில் அவரால் படத்தை எடுக்க முடிந்தது. தமிழில் அது சாத்தியமா?’ என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

சரிதான். நாற்பது நாளில் படத்தை முடிக்கிறேன் என்று சொல்லும் பல இயக்குனர்கள், ஐம்பது நாள், ஐம்பத்தை நாள் என்றுதான் முடித்திருக்கிறார்கள். இதனால் பட்ஜெட் ஏறியதுதான் மிச்சம். அப்படி பட்ஜெட் ஏறினால் இதில் சிக்கல்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சரியான திட்டமிடல் இருந்தால், கிரவுடட் பண்ட் புதிய இயக்குனர்களுக்குச் சரியான வாய்ப்பு.

குறைகள் இல்லாமல் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் டிஜிட்டல் வந்த போது அதில் பிக்சல் பிரச்னைகள் இருக்கத்தான் செய்தன. இப்போது டிஜிட்டல் முழுமையாக ஆக்ரமித்த மாதிரி, கிரவுடட் பண்ட் சினிமா ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஆரம்பித்தால், பல புதிய இயக்குனர்களின் கண்களில் தேங்கும் கனவுகள், திரையில் வெளிப்படும்.

தினகரன் தலையங்கம் 17.02.2014.

Tuesday, October 18, 2011

ஆணாதிக்க சினிமா!

நடிகை நிகிதா விவகாரம், சின்ன உதாரணம்தான்.
கன்னட நடிகர் தர்ஷன், அவர் மனைவி விஜயலட்சுமிக்குமான பிரச்னைக்கு காரணம் எனக் கூறி, நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிக்க தடைவிதித்தது கன்னட தயாரிப்பாளர் சங்கம். அதற்கடுத்து எழுந்த கண்டனங்களால் அதை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள்.

எந்த அடிப்படையில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது? நிகிதாவால் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதில் தர்ஷனுக்கும் சம்மந்தம் இருந்திருக்காதா? விஜயலட்சுமி இப்படியொரு புகாரைச் சொன்னால் கூட அது உண்மைதானா என்று ஏன் ஆராயவில்லை?, புகார் சொன்ன மறுநிமிடமே தடை போட்டதெப்படி? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இப்படியொரு முடிவை எடுக்க, ஒரே ஒரு காரணம்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அது ஆணாதிக்கம்!

சினிமா, பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் விஷயம்தான் இது என்றாலும் இப்போது இன்னும் வேரூன்றி வளர்ந்திருக்கிறது, ஆணாதிக்க மனநிலை. சினிமாவில் படைப்பு ரீதியாக பெண்களை கையாளும் விதம், இன்டஸ்ட்ரியில் பெண்களின் நிலை என இரண்டு விதமாக பார்க்கலாம். இரண்டிலுமே ஆணாதிக்க மனோபாவம் எல்லையின்றி விரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

‘சார், இந்த காட்சியை இப்படி வச்சுக்கலாமே...', ‘பெட்ரூம் சீனை மேலோட்டமா எடுக்கலாமே?' என்று ஏதாவது ஒரு ஹீரோயின் சொன்னால், அவர்கள் எப்படி பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்கு பத்மப்ரியாவிலிருந்து ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கிறது தெரிந்தும் தெரியாமலும். ஒரு இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ தங்கள் வேலையில் இன்னொருத்தர் கருத்து சொல்வதையோ, ஆலோசனை சொல்வதையோ ஏற்க மறுக்கிறார்கள். ‘இவ என்ன நமக்கு ஐடியா சொல்றது?' என்கிற ஈகோவை ஆலமரமாக வளர்த்து வைத்திருக்கிறது சினிமா. சினிமா கூட்டு முயற்சி என்றாலும் அதில் பெண்களை அனுமதிக்க மறுக்கிறது ஆணாதிக்க சிந்தனை.

தன் உடல் நிலையை கருத்தில்கொண்டு ஆற்றில் முங்கும் காட்சியை இன்னொரு நாள் படமாக்கலாம் என்றார் பிரபலமான அந்த நடிகை. சரி என்று தலையாட்டிய அந்த நல்ல இயக்குனர், வேறு சில காட்சிகளை எடுத்துவிட்டு, அந்த இன்னொரு நாளில் ஆற்றில் முங்கும் காட்சிக்கு வந்தார். நடிகை ஜாக்கெட்டுக்குள் பிரா போடக்கூடாது என்பது முதல் கண்டிஷனாக இருந்தது இயக்குனரிடமிருந்து. சேலையால் மறைத்துக்கொள்ளலாம் என்று நடிகையும் முதலில் கண்டு கொள்ளவில்லை. நான்கு டேக்குகள் போனது. டைரக்டர் ஒன் மோர் சொல்லிக்கொண்டே இருந்தார். கடுப்பானவர், ‘முங்கி எழறதுக்கு ஏன் இவ்ளோ ஷாட்?' என்று இயக்குனரிடம் நியாயம் கேட்க, நடிகைக்கு விழுந்தது அர்ச்சனை. இப்படியொரு அசிங்கத்தை வேறு எங்கும் எதிர்பார்த்திருக்க மாட்டார். நூறு, நூற்றம்பது பேருக்கு முன்னால் அவளை கேவலமாக அவமானப்படுத்த நினைக்கிற டைரக்டருக்குள் இருந்தவன் அந்த ஆணாதிக்க அரக்கன்.

வேண்டிய நண்பர்களிடம் இந்த விஷயத்தை நடிகை சொன்னபோது, அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீருக்குள் ரத்தம் இருந்ததை அந்த இயக்குனர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

‘இயக்குனருக்கு சரியான மரியாதை (?!) தராத நடிகைகளும் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் சினிமாவில் புதிதல்ல. இந்த மரியாதை விஷயம் கொஞ்சம் காமெடியானது. இப்போதைய மும்பை நடிகைகள் எல்லோருமே மாடர்ன் பெண்கள். அவர்கள் எல்லோரையும் போல ‘ஹாய்' என்று அழைக்கிறார்கள் தயாரிப்பாளரையும் இயக்குனர்களையும். ஆனால், கையெடுத்து கும்பிடாமல் இந்த ‘ஹாய்' தன்னை அவமானப்படுத்திவிட்டது என நினைத்து, அவர்களை காட்சிகளில் பழிவாங்கும் போக்கை சினிமா இன்றும் கடைபிடித்து வருகிறது. சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் ஒரு இயக்குனருக்கு தடை விதித்தை மறந்திருக்க முடியாது.

சமீபத்திய இன்னொரு உதாரணம், நித்யா மேனன்.

இவர், மலையாள படம் ஒன்றிற்காக திருவனந்தபுரத்தில் ஷூட்டிங்கில் இருந்தார். இவரிடம் கதை சொல்வதற்காக மலையாள தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆண்டோ ஜோசப், நண்பர்களுடன் போனார். தான் வந்திருப்பதாக நடிகையிடம் சொல்ல சொல்கிறார் உதவியாளரிடம். அவர் போய் சொன்னதும், ‘இங்கு எப்படி கதை கேட்பது? என் மாஜேனரிடம் பேசச் சொல்லுங்கள்' என்றார் நித்யா. இதை தயாரிப்பாளரிடம் சொன்னார் உதவியாளர். ‘என்னிடமே இப்படி நடந்துகொள்கிறாளா? என்ன செய்கிறேன் பார்' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் சொல்லியிருக்கிறார். மூத்த தயாரிப்பாளரை அவமானப்படுத்திவிட்டதாகத் தடை விதித்திருக்கிறார்கள்.

இதில் எங்கே அவமானம் வந்தது? நித்யா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? எல்லா நடிகர், நடிகைகளுமே மானேஜர் மூலம் தேதி வாங்கிதான் கதை கேட்கிறார்கள். தயாரிப்பாளர் சங்க நிர்வாகி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இது நிஜமாகவே ஆணாதிக்க காமெடியாகத்தான் இருக்கிறது.

சினிமா கேமரா வைக்கப்பட்டிருக்கும் வேனுக்குள், பெண்கள் இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு ஏதோதோ காரணம் சொன்னாலும் அதை நியாயப்படுத்த முடியாததாக இருக்கிறது. இன்டஸ்ட்ரியில் பெண்களின் நிலைக்கு இது ஒரு சாம்பிள்.

‘வாய்ப்பு தருகிறேன், திருமணம் செய்கிறேன்' என்ற ஆசை காட்டி பெண்கள் சூறையாடப்படுவதும் சினிமாவில் அதிகம். இப்படியொரு பிரச்னையில், மூன்று முறை தேசிய விருது பெற்ற இந்திப் பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மீது, சமீபத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது மும்பை கோர்ட்.

சம்பள விஷயங்களிலும் ஹீரோக்களின் கோடிகளை, ஹீரோயின்கள் தொட்டுவிட முடியாத நிலைதான் இருக்கிறது. ‘‘ஹீரோக்களை மையப்படுத்தியதுதான் சினிமா வியாபாரம். இங்கு யாருக்கு என்ன விலை என்பதை மார்க்கெட்தான் நிர்ணயிக்கிறது. ஹீரோவை முன்னிலைப்படுத்தும் சினிமா சந்தையில், ஆணாதிக்க மனோநிலைதான் இருக்கும். அதை மாற்றுவது சாதாரண விஷயமில்லை'' என்கிறார்கள் சினிமா வியாபாரத்தை முன்னிலைப் படுத்துபவர்கள்.

படைப்பு ரீதியாக, பெண்களின் பிரச்னைகளை பேசும் சினிமா என்பதில் கூட ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவே காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால், பெண்குரல் சினிமாவில் இல்லை. அதாவது பெண்ணுக்கு ஏற்படுகின்ற காதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஆண்களால் எழுதப்பட்டு பாடலாகிறது, அல்லது வசனமாகிறது. ஆணின் குரலிலேயே பெண்கள் பிரச்னைகள் பேசப்படுவதால், அதில் ஆணாதிக்க சிந்தனைதான் இருக்கும் என்கிறார்கள்.

‘‘இது ஆணாதிக்க சமூகம். இங்கிருந்து அப்படிப்பட்ட படைப்புகள்தான் வரும். அசுத்தமாக இருக்கும் மனிதனிடமிருந்து சுத்தமான படங்களை எதிர்ப்பார்க்க முடியாது. ரவுடிகளின் சமூகத்தில் ரவுடிகள் பற்றிய படம்தான் வரும். பல்வேறு இயக்குனர்களின் படங்களில் பெண்களின் பிரச்னைகள் அலசப்பட்டிருந்தாலும் அது ஆணாதிக்கச் சிந்தனையைதான் கொண்டிருக்கிறது. பெண்ணிய படம் என்று சொல்கிற படங்களிலும் பெண்ணடிமைத்தனம்தான் இருக்கிறது'' என்கிறார் கலை விமர்சகர் இந்திரன்.
‘‘சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அறிஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் உட்பட எல்லாருமே சினிமாவை கொச்சையாகப் பார்க்கும் போக்கு இருக்கிறது. அரசே, அப்படித்தான் பார்த்தது. அதனால்தான் 1931-ம் வருடம் பேசத் தொடங்கிய சினிமாவை 26 வருடம் கழித்து (1957-ம் ஆண்டு) கலையாக அங்கீகரித்தது அரசு. ஆரம்ப காலத்தில் ரெட்லைட் ஏரியாவில் இருக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க மறுத்தார்கள் என்பதே சினிமாவை எப்படி பார்த்திருக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பது புரியும். இதைத்தாண்டி, கே.பி.சுந்தராம்பாள், டி.பி.ராஜலட்சுமி, அஷ்டாவதனி பானுமதி போன்றவர்கள் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். தனியுடமை சமூகத்தில் பெண் அடிமையானாள். பொதுவுடைமை சமூகத்தில்தான் பெண் சுதந்திரமடைவாள்'' என்கிறார் இயக்குனர் ஜனநாதன்.

‘‘பெண்களால் ஒரு படைப்பு வெளிப்படும்போதுதான், பெண்களின் குரல் அதில் வரும். அப்படி அவள் பேசும்போது என்ன பேசுவாள்? அப்படிப்பட்ட குரலை கேட்க ஆர்வமாக இருக்கிறது சினிமா'' என்கிற ஜனநாதன், ஆணாதிக்க மனோபாவத்தை போக்க, பெண் படைப்பாளிகள் சினிமாவில் அதிகரிக்க வேண்டும் என்கிறார்.

‘‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் போன்ற துறைகளில் பெண்கள் கவனம் செலுத்துவதன் மூலம், சினிமாவில் பெரிய அளவில் அவர்கள் இடம்பெற முடியும். சில பெண் எழுத்தாளர்கள் செய்திருந்தாலும், படையெடுப்பு போல் வந்தால்தான் ஆணாதிக்கத்திலிருந்து சினிமாவை விடுபட வைக்கலாம்'' என்கிறார் ஜனநாதன்.

இருந்தாலும் அது முடியுமா என்றால், ம்ஹூம்தான் பதில். பெண் படைப்பாளிகள் அதிகரித்தாலும் ஆணாதிக்கத்திலிருந்து சினிமாவை விடுபட வைக்கும் முயற்சி நடக்குமே தவிர, முழுமையாக ஒழித்துவிட முடியாது.

ஏனென்றால், சினிமா ஆணாதிக்கத்தின் வேர்!

(நாளிதழ் ஒன்றுக்காக எழுதப்பட்ட அவசரக் கட்டுரை)