Showing posts with label என்னத்த சொல்ல?. Show all posts
Showing posts with label என்னத்த சொல்ல?. Show all posts

Monday, March 1, 2010

வித்தைக்காரியின் நடனம்

மழை நீர் இன்னும் உதிராத சாளரத்தின் வழியே பார்வை தொடர்கிறது. வார்த்தைகளை தொண்டைக்குழிக்குள்ளேயே கொன்றுவிடுகிற வித்தைக்காரியின் நடனம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவளை குழுமி ரசிக்கும் பார்வையாளர்களிடையே பெருக்கெடுத்து ஓடுகிறது காமம்.


அதை ரசனையென்று நினைக்கும் அவளது பாசாங்கு பாதங்கள் இன்னும் வேகமாக சுழலுகின்றன. கால்களில் கட்டப்பட்டிருக்கிற பெரும்தேவதையின் ஆணவம், சுழன்று ஆடி ஆடி அசைகிறது. அவள் மிதித்திருக்கிற நிலத்தின் வழியே கண்கள் முளைக்கின்றன.

பாதையெங்கும் மினு மினுக்கும் மேனி கொண்ட, தீரா பாம்புகளின் அலைச்சல் இன்னும் அதிகரிக்கிறது.

வார்த்தைகளை கொல்பவளின் கைகளில் சிவனின் கிரீடம் சூழ்ந்த தலைமுடி. அதிலிருந்து எழும் அழுகிய வாசனையை ரசிப்பவள் தாண்டவத்துக்கு தயாராகிறாள். ராட்சஷ உலகம் பிளவுபட்டு பிறக்கிறது.

கால்கள், வானையும் பூமியையும் மிதித்து எழுகிறது. மிதிபடும் அசைவில் குலுங்கும் வானத்திலிருந்து கண்ணீர் தெறிக்கின்றன. வேலை எதுவுமின்றி அசைவற்று கிடக்கும் உடல்கள் அதிர்ந்து எழுகிறது. இன்னொரு யுத்தம் தொடங்குகிறது. எல்லா மனிதர்களின் கைகளும் ஆயுதங்களாக மாறுகின்றன. கண்களினின் வழியே பறக்கின்றன தோட்டாக்கள்.

பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் கடலின் பாதையை காட்டுகின்றன. ரத்தங்கள் கலந்து, நிறம் மாற மறுக்கும் கடல் பூமியை விழுங்குகிறது. உயிர்கள் ஆனந்தமாக தங்கள் உயிரை விடுகின்றன. இன்னொரு முறை பூமி பிறக்கிறது. உயிர்கள் முளைக்கின்றன. வித்தைக்காரி நடனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பழைய பதிவுதான். வி.தா.வா பார்த்ததால் வந்த பீலிங்.