Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Thursday, July 10, 2008

பைத்தியகாரனி்ன் அரிவாளும் சுகுணாவின் கழுத்தும்

சமீப காலமாகவே ஒரு கையில் அரிவாளுடனும் மறுகையில் கோணிப்பையுடனும் பைத்தியகாரன் என் நிழல் தொடர்ந்து வந்ததன் காரணத்தை புரிந்துகொண்டேன். அரிவாளுக்கு கீழே என் தலையை வைத்ததற்கு வாழ்த்துகள் (எனக்கும் நேரம் வராமலயா போயிரும்).

பைத்தியகாரனின் கேள்விகளுக்கான பதில்கள்:


1. தொடர்ந்து வட்டார வழக்கிலேயே எழுதி வருகிறீர்களே... வட்டார வழக்கு இலக்கியமாகுமா? ஆகும் என்றால் எப்படி? உலக இலக்கியங்களில் அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?

!. மனித வாழ்க்கையை திறம்பட பேசுகிற எல்லாமே சிறந்த இலக்கியம்தான். அதில் வட்டார வழக்குக்கு முக்கியமான இடம் இருக்கிறது. ஏனென்றால் அது மக்களின் மொழி. குறிப்பிட்ட வட்டார மனிதர்களின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, கொண்டாட்டங்களை சொல்லும் இலக்கியம்தான் பண்பாட்டை பேசும் இலக்கியம். நமது மண்ணின், பண்பாட்டின், கலாசாரத்தின் ஆழமான வேர் அது. ஆதி மனிதன் சைகையிலிருந்து பேச்சுக்கு மாறினான். பேச்சு எழுத்தானது. பரந்து விரிந்த அந்த எழுத்து, நவீனமான பிறகு, ஆதி வழக்கு ஆவணமாகிறது.

‘காலணாக்கு பெறாத பய
என்ன கேள்வி கேக்காம் பாரு’ & காலணா என்கிற துட்டு புழக்கத்தில் இருந்த விஷயம் இங்கே வெளியே வருகிறது.

‘நாசமத்து போறவன’& என்கிற வசவு சொல், (நாசம் + அற்று + போதல்) வாழ்த்தை குறிக்கிறது. இது தமிழின் வேரிலிருந்து/வட்டாரத்திலிருந்து வருகிற வார்த்தை.

மக்கள் பேசுகின்ற/புழங்குகின்ற வார்த்தைகளால் அவர்களது வாழ்க்கையை காட்டுவது இலக்கியம் இல்லாமல் என்ன? இப்படியான வட்டார வழக்கை ஒதுக்கி விட முடியாது.

நமது மகாபாரதமும், ராமாயணமும் வட்டார வழக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்கிறார்கள். முகமது நபியின் போதனைகளும், பைபிளும் வாய்மொழி இலக்கியத்திலிருந்து வந்தவைதானாம்.
உலகம் முழுவதும் வட்டார வழக்கு இருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பேசும் ஆங்கிலம் அவர்களது வட்டார வழக்குதான். அந்த ஆங்கிலத்திற்கும் அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களின் இலக்கியம் வட்டார இலக்கியம். ஒரே ஒரு உதாரணம்: நோபல் பரிசு பெற்ற டோனி மாரிசனின் நாவல்கள் அனைத்தும் வட்டார இலக்கிய வகையை சேர்ந்தது. ரஷ்யாவின் தாஸ்தாவோஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி உட்பட அங்கிருந்து வந்த அனைத்து நாவல்களுமே வட்டார வழக்கிலிருந்து வந்தவை என்றே சொல்லப்படுகிறது.

2. சினிமாவில் முதன்முதலில் நீங்கள் எழுதிய பாடல் எது? நயன்தாராவை புகழ்ந்து கதாநாயகன் பாடுவது போல் உங்களை பாடல் எழுதச் சொன்னால் என்ன எழுதுவீர்கள்?

முதல் பாடல் எழுதிய திரைப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இரண்டாவதாக எழுதியது மெட்டிஒலி டி.வி. தொடருக்கு.

நயன்தாராவை புகழ்ந்து எழுதினால் இப்போதிருக்கிற காதல் சண்டையில் (சிம்புவா? விஷாலா) என் டவுசரும் கிழியலாம். அதனால் இதிலிருந்து எஸ்...

பொதுவாக யாராவது
ஒரு கதாநாயகிக்கான பல்லவி:

நீ ராட்சஷ தேவியடி
என் ரகசிய போதையடி
ஒரு தேள் கடிச்சு
சிறு மீன் துடிக்கும்
ராத்திரி அவஸ்தையடி
(ரொம்ப முக்கியம்யா)

பின்நவீன சூழலை, அது சார்ந்த உரையாடலை வட்டார மொழியில் விளக்குங்கள்

'ஏட்டி நீயும் வெறவு பெறக்க வாரியா? ரெண்டு பேருக்கும் 25, 25 கொடுத்தாம்னா ஒரு நா வெறவு பெறக்க போவாம இருக்கலாம்’’

‘செரி வாரேன். ஆனா, வீட்டுக்கு வந்ததும் நீருதான் சோறு பொங்கணும்’

‘செரி’

ரெண்டு பேரும் வெறவுக்கு போனாவோ. சாயந்தரமா வெறவ வித்துட்டு கூலி வாங்குனாவோ. வாங்கிட்டு அந்த பய நேரா வீட்டுக்கு வரலை. பொத்தை மாரிட்ட போயி ஒரு கிளாஸ் சாராயத்தை குடிச்சுட்டு வந்தாம்.

வீட்டுக்காரி, அவனை மேலும் கீழும் பார்த்தா. பாத்துட்டு,

‘உனக்கு தெனமும் இதே வேலையா போச்சு. நீ சோறு பொங்கி வைக்க மாட்டேன்னுதான் நானே பொங்கிட்டேன்"

--கதை இவ்வளவுதான். வளரின் வார்த்தையில் பின் நவீனத்துவம் என்பது ஒரு சூழல்.

திருமணமான நீங்கள், சினிமாவில் உள்ள ஒரு கதாநாயகியுடன் நெருக்கமாக பழகுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. இந்த விஷயம் உங்கள் வீட்டுக்கு தெரியுமா?

இனிமேல் பைத்தியக்காரனுடன் எந்த பாருக்கும் செல்வதில்லை என்றும் போதையில் எதையும் உளற மாட்டேன் என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.

பி.கு: (பைத்தியக்காரன் ஒழிக)


சுகுணாவுக்கான கேள்விகள்:

1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)

2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?

4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...