Monday, January 5, 2015

பொங்கல் நினைவுகள்


'என்ன மாப்ள பொங்கலு வருது. பொங்கபுடி எப்பம்?'

-சைக்கிளில் போய்க்கொண்டே யாராவது கேட்பார்கள். பொங்கல் துட்டும் பொங்கல் இனாம் பேச்சும் மார்கழி முதலிலே ஆரம்பித்துவிடும். பொங்கலுக் கான கொண்டாட்ட மனது அங்கிருந்துதான் தொடங்கும்.

தீபாவளியின் பட்டாசோ, சித்திரை விசு தேரோட்டமோ, மந்திரமூர்த்தி கோயி ல் கொடையோ, அம்மன் கோயில் கரகாட்டமோ தந்திராத மகிழ்ச்சியை, அப்போது பொங்கல் மட்டுமே எனக்குத் தந்தது. காரணம் என்னவென்று தெரியவில்லை. காரணமற்ற சந்தோஷமாகவும் அதைக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு காரணம். என்னவென்று அறியாத காரணம்.

வயக்காட்டில் ஆற்றுப்பாலத்தில், பிள்ளையார் கோயில் எதிரில் இருக்கிற ஆலமரத்தில், மாமன், மச்சினன்களுக்கான கிண்டல் கேலியில்தான் பொங்கல் பேச்சு தொடங்கும்.

'என்னடே, தல பொங்கலுலா. மாமனாரு வீட்டுலருந்து ரெண்டு லாரிக்கு வந்திருமே சீரு'- என்பான் ஒருவன்.

'ஆமா. வருது. இவனுவ தருவானுவோன்னுதான் காத்திருக்கேன்'- என்பான் அவன்.

'தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டு எம்மச்சான்மாருவோ என்னத் த கொடுத்துட்டானுவோங்க. நாலஞ்சு காய்கறியும் ரெண்டு கரும்பும்தான். இத நான் வாங்கிக்கிட மாட்டனாடெ? சீராம் சீரு'

'ஏல, அதுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்த நாள்ல இருந்து வருஷா வருஷம் பொங்கப்புடி கொடுத்திட்டே இருப்பாவுளா? கேக்காம் பாரேன்?- இப்படியும் நடக்கும்.

அவிச்ச அல்லது சுட்ட பனங்கிழங்குடன் பெரியாச்சி உட்கார்ந்துகொள்வாள் வாசல் ஓரத்தில். காதில் பாம்படம் ஆட, சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டு உரித்து உரித்து ஓலை பெட்டியில் போடுவாள். சுட்ட பனங்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்குவாள். அவளைச் சுற்றி நானும் அக்காவும் சித்தி மகள்களும் மாமா வீட்டுப் பிள்ளைகளுடன் உட்கார்ந்து கொள்வோம். எச்சில்  ஊறும் வாயுடன் பனங்கிழங்கைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

'எல்லாரும் எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க. ஆனா, எங்கூட சரலு மண்ணு எடுக்க பொட்டிய தூக்கிட்டு வந்திரணும், கேட்டேளா, பிள்ளைலா?'
'ம்ம்' என்ற கோரஸுடன் பெட்டிக்குள் போட்டிப் போட்டு கையைப் போடு வோம். கிடைத்ததைச் சுருட்டி அங்கேயே சண்டை போட்டுப் பிடுங்கி, ஓடி தின்று முடித்ததும் சிறிய நார்ப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஐயமார் தெருவுக்குப் பின்னால் இருக்கிற, கருவேல மரங்கள் நிறைந்திருக்கிற இடத் துக்குப் போவோம்.

மம்பட்டி கொண்டு வருகிற பெரியாச்சி, ஏற்கனவே இருக்கிற கிடங்கு அல்லது புதிதாக ஓர் இடத்தில் மண் வெட்டுவாள். அதில் மஞ்சளும் கற்களுமாக இருக்கிற அந்த சர சர சரல் மண்ணை அள்ளிப் பொட்டியில் போடுவாள். ஒவ்வொரு பெட்டி நிறைந்ததும் தூக்கிக்கொண்டு போக வேண்டும். அக்கம் பக்கத்தில், கிடங்குகளில் பக்கத்து வீட்டுக்காரர்கள் தோண்டிக் கொண்டிருப் பார்கள். வேகவேகமாக ஓடி, வீட்டு வாசல் முன் கொட்டிவிட்டு வரவேண்டும். நான்கைந்து நடை முடிந்ததும் வியர்த்து விறுவிறுக்கும் ஆச்சி, அவளுக்கே மனசு வந்து, 'சரி போதும் பிள்ளைலா. எல்லாரும்  வாய்க்காலுக்கு வாங்க. கை, காலு கழுவிட்டு வருவோம்' என்று அழைத்துச் செல்வாள்.

வீட்டுக்குத் திரும்பினால் மாமாமார்கள், அந்த சரல் மண் கொண்டு சமதள மாக்கி இருப்பார்கள் தரையை. தண்ணீர்த்தெளித்து, பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும். படுத்து உருளலாம் போலிருக்கும். 'ராத்திரி, நான் இங்கதான் படுப் பென்' என்று இடத்துக்கு நடக்கும் சண்டை. பிள்ளைகளின் கூக்குரலில் சின்ன ஆச்சிக்குச் செவ்வியடைக்கும்.

'ஏல வெளிய போயி சத்தம் போடுங்க. காது விண்ணு விண்ணுங்குலா' என் பாள் அவள்.

காலையில் செம்மண் கொண்டு அடுப்புக் கட்டி செய்வார்கள் அம்மாவும் ஆச்சியும். எப்படி வரவேண்டும் என்று நினப்பார்களோ அப்படி வராது அது. சதுரமாகவோ அல்லது வேறொரு வடிவிலோ இருக்கும் அந்த அடுப்புக்கட்டி. 'சரி இது போதும்' என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிவிட்டு மச்சியில் காய வைத்துவிட்டு வருவார்கள்.

வீட்டில் வெள்ளையடித்துப் படிகளுக்கு காவி பட்டை அடித்திருப்பார்கள். தேவையில்லாத சட்டைகளும் சேலைகளும் தலையணை ஆனது போக, கிழிந்து தொங்கும் துணிகள் பொட்டலம் கட்டி, பழையன கழிதலுக்காக, கழனித் தொட்டி ஓரத்தில் காத்திருக்கும்.

ஆற்றுக்குப் போகும் வழியில் இருக்கிற தோப்பில் பனை ஓலைகளை வெட்டிக் காய வைத்திருப்பார்கள். பரமசிவத்திடம் சொல்லி  காய்ஞ்சதாகப் பார்த்து கொஞ்சம் அள்ளிக்கொண்டு வருவார் பெரிய மாமா. தோப்பில் காய்ந்து தொங்கும் தென்னமட்டைகளும் சில்லாட்டைகளும் தூக்கணாங் குருவி கூடுகளும் ஏற்கனவே வீட்டின் ஓரத்தில் விறகாவதற்கு காத்திருக்கும். இந்த விழாவுக்காகவே கருவேலப் பிறை அருகில் விறகு கட்டுகள் விற்ப னைக்கு வைத்திருப்பார்கள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கட்டுகளுக் கான பேரத்தில் ஈடுபட்டிருப்பார்கள் தெருக்காரர்கள்.

ஊரில், கொஞ்சம் ஃபேமஷான லட்சுமண தாத்தா கடையில், பொட்டல் புதூரில் இருந்து காய்கறிகளை இறங்கி இருப்பார்கள். வழக்கமாக இருக்கும் கடைக்கு வட பக்கமும் இடபக்கமும் இருக்கும் பகுதியையும் சேர்த்து கடை எக்ஸ்டன்சன் ஆகியிருக்கும். தரையில் சாக்குகளை விரித்து காய்கறிகளை பரப்பி இருப்பார்கள். கரும்புக்கட்டுகளும் மஞ்சள் குலைகளும் பழத்தார் களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக அங்கு வரும்போது அடிக்கும் புளியும் கருப்பட்டியும் கலந்த வாசனை இப்போது இருக்காது. மஞ்சள் வாசனையும் பழத்தார்கள், பனங்கிழங்கு வாசனைகளும் சேர்ந்து புதுவித வாசனையை தரும். வியாபாரம் மூன்று நாட்களுக்கு முன்பே சூடு பிடித்திருக்கும். கூட்டத்தை சமாளிக்க லட்சுமண தாத்தாவின் சொந்தக்காரர் கள் தற்காலிகமாக வேலைக்குச் சேர்க்கப்பட்டிருப்பார்கள்.

மூன்று நான்கு நாட்களுக்கு முன்பே முத்தையா மாமா டெய்லர் கடையில்  துணி வாங்க கூட்டம் கூடியிருக்கும். அவர், நாளைக்கு நாளைக்கு என்று பொங்கலுக்கு முந்தினநாள் தருவார் துணிகளை.

இரவு முழுவதும் வீட்டுக்குள்ளும் வெளியிலும் மாக்கோலம் போடுவது, சாமி படங்களைத் துடைப்பது, விளக்கைக் கழுவுவது என வேலைகள் இருக்கும் எல்லோருக்கும்.

வீட்டுக்குப் பின்பக்கம், மைக் செட் வைத்திருக்கிற மந்திர மாமா  பொங்கலை முன்னிட்டு, அவர் வீட்டு இரவு வேலைகளுக்காக, எம்.ஜி.ஆர். படப் பாடல் களைப் போட்டிருப்பார். அந்த ராத்திரியில் அது ஊரெங்கும் மெல்லிசாகக் கேட்டுக் கொண்டிருக்கும். திடீரென்று கிட்னம்மா சித்தி அந்தப் பாடலுடன் தானும் சேர்ந்து பாடுவது இனிமையாக இருக்கும். வாய்க்காலில் தண்ணீர் எடுக்க ராத்திரியிலும் பெண்கள் கூட்டமாகச் செல்வார்கள். இவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு என்பது மாதிரி, எப்போதும் முகத்தில் பவுடர் அப்பியிருக்கிற, மதுரா கோட்சில் வேலைபார்க்கிற முருக மாமா, அந்தக் கூட்டத்தில் செல்லும் தனது காதலிக்காக, ஒரு கணைப்பைக் கொடுத்து விட்டு, நாற்பது வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தின் முன் உட்கார்ந்து கொண்டு தன் னைக் காட்டுவார்.

'வேலை' பார்த்த, விளையாண்ட அசதியில் எப்படி தூங்கினோம் என்று தெரி யாது. பனி, பதம் பார்க்கும் அதிகாலை நான்கு மணியளவில், கதற கதற எழுப்பப்பட்டு வாய்க்காலுக்கு குளிக்கச் செல்வோம். கும்மிருட்டில் நடக்கும் போதே குளிரும். தூக்கம் வேறு கண்ணை இழுக்கும். கொட்டாவி விட்டுக் கொண்டே  வாய்க்கால் கரையில் நிற்கும்போது  சலசலத்து ஓடும் வாய்க்கால் தண்ணீரின் சத்தம் ஓர் இசையை போல இனிமையை தரும். அதைக் கேட்டுக் கொண்டே, பார்த்துக்கொண்டே நின்றால் பெரிய அத்தை ஒவ்வொரு வரையாகத் தண்ணீருக்குள் பிடித்துத் தள்ளுவாள். தண்ணீர் தெறித்து கரையில் நிற்பவர்கள் மேல் பட்டதும் வரும் சிலிர்ப்பு, ஒருவித பய படபடப்பு. ஒரு முங்கு தான். பிறகு குளிர் தெரியாது. ஆனால் அந்த ஒரு முங்குக்குள் உயிர் போய் வந்துவிடும்.

வீட்டுக்கு வந்ததும் சட்டையின் ஓரத்தில் மஞ்சள் தடவி வைத்திருக்கிற துணி மணிகளை அணிந்து கொண்டு வாசலுக்கு வரவேண்டும். அங்கு பெரிய வாழை இலையில் , புது அரிசி, தேங்காய், பழங்கள், காய்கறிகளில் இருந்து எல்லாம் வைக்கப்பட்டிருக்கும். அதன் முன் அடுப்புகட்டிகள் வைக்கப் பட்டு, மஞ்சள் குலை கட்டிய புதிய பொங்கல் பானை ஏற்றப் பட்டிருக்கும். அடுப்பில் மூன்று பக்கமும் நாங்கள் உட்கார்ந்துகொண்டு பனை ஓலைகளையும் சில்லாட்டைகளையும் அள்ளி அள்ளி அடுப்பினுள் திணிப்போம். அப்போது வருகிற வெக்கை, குளிருக்கு இதமாக இருக்கும். சூரியன் வருவதற்கு முன்பே பொங்கல் விட்டு முடித்திருப்போம். சட்டியை இறக்கி சாமி படங்களுக்கு முன்பு வைத்துவிட்டு அடுப்பில் அனைத்து காய்கறிகளும் கலந்த குழம்பு வைப்பார்கள். அதன் மணமே இனிமையாக இருக்கும்.

மொத்தக் குடும்பமும் சாமி படத்தின் முன் விழுந்து கும்பிட்டு நெற்றியில் நாமம் போட்டுவிட்டு கரும்பு வெட்டு நடக்கும். வாழை இலையில் இருக்கும் பழங்களையும் கிளிமூக்கு மாங்காயையும் எடுக்க கைகள் பரபரக்கும். சாமி கும்பிட்டுவிட்டுதான் எடுக்க வேண்டும் என்பதால் முடிந்த மறு நிமிடமே மாங்காய் எடுக்க எங்களுக்கு நடக்கும் சிறு சண்டை. பிறகு சித்தியின் புண்ணியத்தில் அது வெட்டப்பட்டு பங்கு வைக்கப்படும்.

 இன்னும் விடிந்திருக்காது. அதற்குள் அடுத்த வீட்டில், கீழ வீட்டில், மேற்கே எங்கோ ஒரு வீட்டில் என பொங்கல் விட்ட குலவை சத்தம் இடை வெளிவிட்டு வந்து கொண்டே இருக்கும். அந்த சத்தம் தரும் இனிமையை அடுத்த வருட பொங்கல் வரை பாதுகாத்து வைத்திருப்போம்.

மாலையில், தெருக்களில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். பரிசாக வருகிற சோப்புடப்பாவோ, பவுடரோ, டிபன் பாக்சோ கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எல்லா போட்டியிலும் சேர்ந்துவிடுவது வழக்கம். பெரியவர்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் அடிதடி சண்டை கூட பொங்கல் ஸ்பெஷல்தான்.

சென்னையின் அடுக்குமாடி புறா கூண்டு வீட்டில், ஸ்டவ்வில் வைக்கப் படும் இப்போதைய பொங்கலில், ஏராளமான நினைவுகளும் ஏக்கங்களும் மட்டுமே பொங்கி பொங்கி வருகிறது.

1 comment:

துபாய் ராஜா said...

மனமெல்லாம்
வாசம் தந்த
மலரும் நினைவுகள்...

என்றென்றும்
மறக்க முடியாது
தாங்கள் தொகுத்த
பொங்கல் நிகழ்வுகள்....