Sunday, September 9, 2018

மேப்படியான் புழங்கும் சாலை

ம்பிக்கூண்டு இருக்கும் லாரி, தெருவுக்குள் இருந்து ஆடி ஆடி வந்து  ஆழ்வார்க்குறிச்சி செல்லும் சாலையில் வளைந்து நின்றது. லாரியின் பின்னால் வந்த வன அதிகாரியின் ஜீப், இப்போது ஓரமாக ஏறி முன்பக்கம் வந்து நின்றது. ஜீப்பில் இருந்த பெண் அதிகாரி இறங்கி, லாரியைச் சுற்றிப் பார்த்தார். டிரைவரிடம், ``எல்லாம் சரியா இருக்குல்லா?’’ என்று கேட்டார். அவன் தலையை ஆட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில், முன்னால் நின்ற தொரட்டுவிடம் கையைக் காட்டிவிட்டு ஜீப்பில் ஏறிக் கொண்டார். 
ஊர்க்காரர்கள், எக்கி எக்கி லாரிக்குள் இருக்கும் கூண்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது தெரியவில்லை. ஏதோ ரகசியம் பேசுவதுபோல மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பக்கத்தில் இருக்கிற தட்டடி வீடுகளிலிரு ந்து பெண்கள் எட்டிப்  பார்த்தபடி ஆச்சர்யத்தோடு நின்றார்கள். அதில் சில பிள்ளைகள் கைகளைக் காண்பித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தனர். லாரியின் பின்பக்கம் ஓரமாக நின்ற இரண்டு டி.வி.எஸ் 50-களில் ஏறிக் கொண்ட நான்கு வன அலுவலர்கள், லாரியைப் பின்தொடர்ந்தார்கள்.
8, 8:30 மணிதான் ஆகியிருக்கும். வெயில் வந்துவிட்டாலும் காற்றின் குளிர் இன்னும் மறையவில்லை.
``லாரி எங்க போது தெரியுமில்லா?’’ என்று கேட்டார் தொரட்டு.
``களக்காடு மலைக்குன்னு சொன்னாவோ’’ என்றான் பால்கார இசக்கி.
``ஆமா.’’
``அப்பம், இனும இது இங்க எட்டிப்பார்க்காது, ன்னா?’’
``அதெப்படி சொல்ல முடியும்?’’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான், 7 மணி பஸ் தாமதமாக வந்து சேர்ந்தது. அது தென்காசியிலிருந்து வரும் பஸ். டிரைவர் இறங்கி, தொரட்டுக் கடையைப் பார்த்தார். கண்டக்டரிடம் ``இங்கயே சாப்ட்ருமா?’’ என்று கேட்டுவிட்டு உள்ளே போனார்கள். தொரட்டு, அவர்களைப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு `பஸ்ஸு ஏம் லேட்டு?’ என்பதாக அர்த்தம். ``மத்தளம்பாறை பக்கத்துல வீல் பஞ்சராயிட்டு. சரி பண்ணிட்டு வராண்டாமா? அதாம் நேரமாயிட்டு’’ என்று தானாகவே சொல்லிவிட்டுப் போனார் டிரைவர். 
தொரட்டுக் கடையின் முன்தான், வழக்கம்போல பஸ் நிற்கும். அதிலிருந்து இறங்கி வந்த சுப்பையா, கடையின் முன் நின்று சோம்பல் முறித்தபடி கொட்டாவி விட்டார். கையில் சிவப்பு நிற டிராவல் பை இருந்தது. அவரை இப்போதுதான் ஊர்க்காரர்கள் பார்த்தார்கள்.
``ஏண்ணே... எங்க போயி தொலைஞ்செ?’’ என்று கேட்டார் பால்சாமி. 
``கேரளாக்குலா. இப்பதாம் வாரென்.’’
``நீரு வாரதுக்குள்ள ஊரே அமளி துமளியாயிட்டே!’’
``என்னடே?’’
``ஒரு லாரி, ஜீப்பு, நாலஞ்சு போலீஸு, ஃபாரஸ்ட் ஆபீஸரு, பக்கத்து ஊர்ல இருந்துலாம் ஆளுவோ. ஊரே ஜேஜேன்னுல்லா இருந்துச்சு செத்த நேரத்துக்கு முன்ன. எதுத்தால பார்த்திருப்பியே?’’
``தூங்கிட்டுலா வந்தேன், பஸ்ஸுல.’’
``நல்லா தூங்குன போ, பத்து, பதினைஞ்சு நிமிஷம் இருக்குமா போயி?’’
``ச்சே… இப்பம்தான் போவுதுங்கென். இன்னா, தொரட்டுட்ட கேளும்…’’ - தொரட்டு டீக்கடையின் முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். அது, டீக்கடை என்று அழைக்கப்பட்டாலும் இட்லி, தோசை, பூரி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறு ஹோட்டலாகவும் இருக்கிறது. தொரட்டு மனைவியின் கைப்பக்குவத்தில் உருவாகும் சாம்பார் மற்றும் பூரிக்கிழங்குக்கு ஒரு கூட்டமே கிறங்கிக் கிடந்தது ஊரில். ``என் வீட்டுக் காரியும்தான் சாம்பாரு வைக்கா, நாக்குல வைக்க முடியுதா? உங்கையில என்னமோ இருக்கத்தான் செய்யுது?’’ என்கிற பாராட்டுகளை வஞ்சகமில் லாமல் உள்ளூர்க்காரர்கள் வழங்கியதன் பொருட்டு, தொரட்டு மனைவி கொஞ்சம் தலைக்கனத்தோடு அலைபவளாக இருக்கிறாள்.
டீயை நன்றாக ஆற்றிய பிறகு ஒவ்வொருவரையாகக் கூப்பிட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தான் தொரட்டு. 
``ஏ... கூறுகெட்டவனே, சீனிய கொறச்சு போட்டிருக்கலாம்லா’’ என்ற சுப்பையா, கடையின் எதிரில் இருந்த கட்டமண் சுவரில், உட்கார்ந்துகொண்டார். அவரைச் சுற்றி நான்கைந்து பேர் தோளில் துண்டு போட்டபடி நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார்கள்.
கீழ்ப்பக்கம் வெள்ளாட்டுக்கு ட்டிகள் இரண்டு, யாரோ பறித்துப் போட்டிருக்கும் கருவைக் காய்களைக் கடித்து அரைத்துக் கொண்ருடிந்தன. அருகில்தான் கடனாநதி அணை என்பதால், காற்று குளிர்ந்து வீசிக்கொ ண்டிரு ந்தது. அணையில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக்கிறது. வற்றாத ஜீவநதி, இந்தக் கோடையில் வற்றிவிடும் என்பது ஊர்க்காரர்களின் கவலை. 
வயலுக்குச் செல்பவர்கள், நான்கைந்து பேராகச் சேர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். கையில் அரிவாளோ, குத்தீட்டியோ, பெரும் கம்போ இருக்கிறது. சமீபகாலமாக அவர்களின் நடமாட்டம் இப்படித்தான். 
இந்தக் காலை நேரத்தில் புளிய மற்றும் வேப்பமரங்கள் மூடியிருக்கிற தொரட்டுக் கடையின் முன் இப்படி நின்று, உட்கார்ந்து பேசியபடி டீ குடிப்பது சுகமாகத்தான் இருக்கிறது. 
முழுவதும் வெள்ளையாகிப் போன தலைமுடியைக் கட்டையாக வெட்டியும் மீசையைத் திருக்கியும் விட்டிருந்தார் சுப்பையா. ``இவ்வளவு வயசாயியும் இவருக்கு முடிய பார்த்தியா, எவ்வளவு அடர்த்தின்னு. ஒத்தமுடி கொட்டல!’’ என்று அவரைப் பார்த்தால் குறைபட்டுக்கொள்வார் கள், தலையின் முன்பக்கம் முடி இழந்த இளசுகள். 
அவரிடம் மேப்படியான் வந்த விஷயத்தைச் சொன்னதும், ``ச்சே, நான் பார்க்க முடியாமபோச்சே!’’ என்று வருத்தப்பட்டார். மேனி தழுவும் காற்று, திடீரென சத்தம் கொடுத்தபடி செல்கிறது. நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில், இந்த இடத்தில் மட்டும் சிறு இடைவெளி. இதனால் எந்தத் தடையுமின்றி வரும் மேக்காத்து, இங்கு மட்டும் கொஞ்சம் வேகமாக வீசுவதுபோல் தோன்றும். அவரின் முன் நின்றுகொண்டிருந்த பால்சாமி, குளிருக்கு லேசாக உடலை ஒடுக்கி, கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னார். 

``ஆத்தாடி, என்னம்மா மொறைக்கிங்க. கண்ணுமுழியை கிட்ட நின்னு பார்த்தன்னு வையி, கொலை நடுங்கிபோவும் நடுங்கி. பல்லு ஒவ்வொண்ணும் குத்தீட்டி மாரிலாடா இருக்கு. கடிச்சு ஒரு இழு இழுத்துச் சுன்னா, ஒன்றரை கிலோ கறி வாயிக்குள்ள அல்வா மாதிரி போயிரும்னா பாரு! என்னா நீட்டம். ஆளுவோள கண்டுதுன்னா, உர்ருன்னு ஒரு சத்தம்… கொஞ்சம் பயந்தவம்னா, பேதில போயிருவாம்.’’
``சரிதாம்’’ என்றார் சுப்பையா.
அவர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்த பால்கார இசக்கி, அங்கும் இங்கும் பார்த்துவிட்டு மெதுவாக, ``கோபத்தைப் பார்த்தியோ அதுக்கு. அவ்ளவுலா வருது. நம்ம சிலுப்பி மவம் அதைப் பார்த்ததுமே மோண்டுட்டாம்லா’’ என்று சொன்னான் சிரித்தபடி.
பால்சாமி, அவன் முதுகைத் தட்டி, ``உடனே அளக்காதல கதைய. மோண்டானாம், இவம் பார்த்தாம்லா? நானும்தான் கூட நின்னன்’’ என்றார்.
சம்முவம், டீ கிளாஸை வைத்துவிட்டு, ``ச்சே, நீரு என்னய்யா, இப்படி புளுவுதேரு. சிலுப்பி மவம் என்ன பச்சப்புள்ளயா, அதைப் பார்த்து மோளதுக்கு?’’ என்றபடி அவர்களுடன் சேர்ந்துகொண்டான். 
``நான் பார்த்தேன். காலுக்கு கீழே ஒரே தண்ணீ, சளசளன்னு. நீங்க இல்லைன்னு சாதிக்கேளே... அப்பம் அவனே வந்து சொன்னாதாம் நம்புவி யோபோலுக்கு’’ என்ற பால்கார இசக்கி, ``அப்படி பொய்யச் சொல்லி எனக்கு என்னவே ஆவப்போவுது?’’ என்று எதிர் கேள்விக் கேட்டான்.
``இல்லாததைச் சொல்லிச் சிரிக்கப்பிடாதுலா?’’
``நல்லா போச்சுப் போ! இதை, சிரிக்கதுக்கா சொன்னேன். கண்ணால பார்த்தேன்ங்க. நம்ப மாட்டங்கேளே?’’
கடைக்குள் இருந்தபடி தொரட்டு இவர்களின் அவயத்தைக் கேட்டு, ``சுப்பையா மாமா... என்னவே, காலைலயே வந்ததும் வராததுமா ஆளுவோள கூட்டிட்டேரு’’ என்றான் சத்தமாக.
``எல்லாம், நம்ம மேப்படியான் வெவாரம்தாம்’’ என்ற சுப்பையா ஒரு பீடியைப் பற்றவைத்து க்கொண்டார். `மேப்படியான்’ என்று சுப்பையா சொன்னது, சிறுத்தையை. 
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது, குருவபத்து. சுமார் நூறு, நூற்றைம்பது வீடுகளைக்கொண்ட கிராமம். வயலும் காடும் என இருக்கிற இவர்களின் சமீபத்திய பயம், சிறுத்தை. முதலில் வயக்காடுகளுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்யத் தொடங்கியது, காட்டுப்பன்றிகள்தான். கிழங்கு வகைகள் என்றால், பன்றிகளுக்குக் கொண்டாட்டம். பயிர் முடிந்து அறுவடை நேரத்தில் அழித்து அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்த பன்றிகளை, வேட்டுப் போட்டு மிரட்டி க்கொண்டிருந் தார்கள். கருத்தப் பிள்ளையூர் நடேசனிடம் சொன்னால், துப்பாக்கி வேட்டை யும் நடக்கும் திருட்டுத்தனமாக. இந்த வேட்டை கறிக்காக. எப்படியோ பன்றி கள், தன் வருகையைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டன. அவற்றுக்கு வேறு எங்கோ வசமாக இரை கிடைத்துவிடுகிறதுபோல.
பிறகு கரடிகள். இவை வயல்களையும் தோப்புகளையும்தான் கபளீகரம் செய்துவந்தன. இருந்தாலும் பன்றிகளாலோ, கரடிகளாலோ உயிர் பயம் அதிகமில்லை. அப்படியே மோதவேண்டி வந்தால்கூட, சிறு சிறு காயங்க ளுடன் தப்பிவிட முடியும். ஊரில் அப்படி காட்டுப்பன்றி முட்டி, தொரட்டு மருமகனின் பின்பக்கம் காயமாகி, அவன்பட்ட அவஸ்தை ஊர் அறிந்ததுதான்.  கடந்த சில வருடங்களாக சிறுத்தைகள், ஊருக்குள் விருந்தா ளிகள்போல அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கின்றன. இதுதான் இப்போது பீதியைக் கிளப்பியிருக்கிறது.

சம்முவம் வீட்டுத் தொழுவில்தான் நடந்தது, அந்தச் சம்பவம். அதிகாலை 3:30, 4 மணி இருக்கும். வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தது குடும்பம். வெளியே நாய் குரைக்கும் சத்தம். தெருவில் சைக்கிள் அங்கோ, இங்கோ போனால்கூட, நாய் குரைக்கும் என விட்டுவிட்டார் சம்முவம். ஆனால், விடாமல் குரைத்தது நாய். சந்தேகப்பட்டு வெளியில் வந்தவர், லைட்டைப் போட்டார். கையில் டார்ச் லைட். முருங்கைமரத்தின் அருகில் இருந்து, வெருவு ஒன்று விருட்டென பாய்ந்தது. ``இது இங்க என்ன பண்ணுது?’’ என்ற சம்முவம், சுற்றும் முற்றும் பார்த்தார். வெளிச்சம் கண்டதும் ஆட்டுக்குட்டிகள் கத்தத் தொடங்கின. 
வீட்டுத் தோட்டத்தைத் தாண்டிப் போய் குரைத்துக்கொண்டிருந்தது நாய். ``இது எதுக்கு அங்க போயி கொலய்க்கு?’’ என்று சத்தம் கொடுத்துக்கொண்டு பின்னாலேயே போனார். 
``ஏம் கனைக்கெ நாயே?’’ என்று அதட்டலைப் போட்டுவிட்டு, நாய் நின்ற இடத்திலிருந்து தூரத்தில் டார்ச்சை அடித்தார். செடி செத்தைகள் அசைந்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சம்முவத்தின் சத்தம் கேட்டதும் கீழ் வீட்டிலிருந்து அருணாசலம், ``என்னடே?’’ என்று வெளியே வந்தார்.
``நாயி கொலக்கேய்ன்னு வந்தேன்’’ என்ற சம்முவம் டார்ச்சைத் தூர தூரமாக அங்கும் இங்கும் அடித்துப் பார்த்தார். வெளிச்சம் தூர தூரப் போய் விழுந்தாலும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அதற்குள் அருணாசலமும் வந்துவிட்டார்.
போன இடத்திலிருந்து ``வா நாயே, ஏம் தொண்டயபோடுதெ?’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். முகத்தில் எரிச்சல். ஏதோ நடந்திருக்கிறது என்பது அவருக்குப்  புரிந்தது. இல்லை என்றால் நாய், அவ்வளவு தூரம் போய் குரைக்காது. ``ஆடு களவாங்க எவனும் வந்திருப்பானுவளோ?`` என நினைத்தபடியே தொழுவத்தின் அருகில் வந்தார். 
இதற்கு முன் ஆடு திருட வந்தவர்களை இதே நாய் காட்டிக்கொடுத்தி ருக்கிறது. ஆடுகளை விட்டுவிட்டு இரண்டு பேர் தப்பிவிட்டார்கள். ஆனால், அதில் ஒருவனின் பின் தொடையை நாய் கவ்வியதைப் பார்த்தான் சம்முவம். அந்தக் கடியோடு அவன் ஓடி பைக்கில் பறந்துவிட்டான். விரட்டிப் போயும் ஆள் இன்னாரென்று பிடிபடவில்லை. ஆனால், கீழ ஊரில் இரண்டு பேர் மீது சந்தேகம் இருக்கிறது அவருக்கு.
அசைபோட்டபடி படுத்துக்கிடந்த எருமைகளில் இரண்டு, வெளிச்சம் கண்டதும் எழுந்து நின்று மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தன. இதற்கு கொஞ்சம் கீழ்ப்பக்கம்தான் ஆட்டுக்கிடை. வட்டவடிவ வேலி மாதிரி பட்டி கட்டி, பத்து, பதினைந்து குட்டிகளை உள்ளே விட்டிருந்தார். போன மாசம்தான் ஏழெட்டுக் குட்டிகளைப் பொட்டல்புதூர் கந்திரிக்காக விற்றிருந்தார். இல்லையென்றால், பட்டிக்குள் ஆட்டுச்சத்தம் அதிகமாகக் கேட்டிருக்கும். அவற்றில் சில கத்திக்கொண்டிருந்தன. ஆட்டுப்புழுக்கை வாசம் கப்பென முகத்தில் வந்து அடித்தது.
அருணாசலம், ``ராத்திரிபோல நாயி அவயம் போடுதுன்னா… காரணமில்லாம இருக்குமா?’’ என்றார் சம்முவத்திடம்.
``அதாம் என்னன்னு பார்க்கேன்’’ என்ற சம்முவம் டார்ச்சை அடித்தபடியே தொழுவைச் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. என்னமோ நடந்திருக்கிறது, என்ன வென்றுதான் தெரியவில்லை. குழப்பத்துடன், கோழிக்கூட்டுக்கு மேலே டார்ச்சை அடித்தவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் ரத்தக்கறைகள். ஏழெட்டுப் புள்ளிகளாக சிறிய குன்னிமுத்து மாதிரி சொட்டுச் சொட்டாகக் கிடந்தன. இன்னும் சரியாகக்கூட காயவில்லை. இப்போதுதான் நடந்திருக்கும். `என்னவாக இருக்கும்?’ என யோசிக்கும்போதே, ஆட்டுக்குட்டிகளை எண்ணினார். அடிவயிற்றில் வெள்ளை விழுந்திருக்கும் குட்டியைக் காணவில்லை. 
அருணாசலம் டார்ச்சை வாங்கித் தரையில் அடித்தார். கொஞ்ச தூரம் நூல் கோடுபோன்று சிதறியிருந்தது ரத்தம். சம்முவத்துக்குப் பயமாகிவிட்டது.
``யாரு வேலையா இருக்கும்?’’ எனக் கேட்டான். பிறகு மாடுகளின் மூத்திரம் நனைத்திருந்த மண்ணில் பதிந்திருந்த தடங்களை லைட்டை அடித்துப் பார்த்தார். புரிந்தது. `இது, அதன் வேலையாகத்தான் இருக்கும்’ என நினைத்தார்.
``நெனச்சேன். இன்னா, வந்து வேலைய காட்டிட்டெ.’’
``என்ன சொல்லுத?’’
``நாலு நாளைக்கு முன்னாலதான் தோப்புக்குள்ள, மேப்படியான் நடமாட்டத்தைப் பார்த்திருக்காம் நம்ம முத்து. இன்னிக்கு ஊருக்குள்ள வந்துட்டே?’’ என்றார் அருணாசலம். 
``இத, சிறுத்தைன்னு எப்படிச் சொல்லுதெ?’’
``அதாம் ஊருக்குள்ள நடமாடிருக்குல்லா, அதவெச்சுதாம்!’’
``ச்சே… நல்ல குட்டில்லா? வம்பாபோச்சே… எங்கெ தூக்கிட்டுப் போயிருக்கும்னு தெரியலயே?’’
``இன்னுமா உயிரோட வெச்சிருக்கும்?’’
``மலையைவிட்டு இவ்வளவு தூரம் வந்து குட்டியத் தூக்கிட்டுப் போவுதுன்னா, முன்னபின்ன வந்து நோட்டம் போட்டிருக்குமோ?’’ கேட்டான் சம்முவம்.
``ஒரு எழவும் தெரியலயே!’’
``ச்சே.. நேத்துதாம் என் சின்ன மவன், `இந்தக் குட்டி எனக்கு’ன்னு சொல்லி விளையாடிட்டிருந்தாம். இப்படியாவிபோச்சே?’’
``ம்ம்…’’
``நேத்து எம்முதுவுக்குப் பின்னால நின்னு, ம்மேன்னு போட்ட சத்தம்கூட காதுக்குள்ள இன்னும் கேக்கு.’’
``ஆளுவோ ஒத்த செத்தையில நின்னா என்னத்துக்காவும்?’’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 
கிழக்கே இருந்து ``என்னடே சத்தம்?’’ என்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள். விடியும் முன்பே பரபரப்பாகிவிட்டது ஊர். 
சம்முவமும் அருணாசலமும் ரத்தக்கறை சிந்திய வழித்தடம் பார்த்து அது போயிருக்கும் பாதையைக் கண்டுபிடிக்க முயன்றனர். அந்தப் பாதை, தொரட்டுக் கடையைத் தாண்டி கேரளாக்காரன் தோட்டத்து வழியாக மலைபாதை நோக்கிச் சென்றது. 
அருணாசலம் சொன்னார், ``பார்த்தா, தொரட்டுக் கடைக்கு மேக்கத்தான் மேப்படியான் நடமாட்டம் அதிகமா இருக்குபோலுக்கு. `அவங்கிட்ட ஜாக்கிரதையா இரு’ன்னு சொல்லிவைக்கணும்.’’

காலை 10 மணி வாக்கில் மலையடிவாரத்தில் இருந்த கேரளாக்காரன் தோட்டத்துக்கு அருகில், வயிற்றுப்பகுதி சிதைந்த வெள்ளாட்டுக்குட்டி ஒன்று செத்துக் கிடப்பதாகத் தகவல் வந்தது. அது சம்முவம் ஆடு என்பதும், அதைத் தூக்கிச் சென்றது சிறுத்தைதான் என்பதும் உறுதியானது. ஏனென்றால், சிறுத்தை மட்டும்தான் குடல், குந்தாணியைத் தவிர வேறு எதையும் தொடாது.
பிறகு ஊரே கூடி சிவசைலம் வன அலுவலகத்தில் போய் நின்றார்கள். ``புள்ளைக்குட்டியோ அலையுத இடம். நாலஞ்சு நாளுக்கு முன்னால அதுவோ நடமாட்டம் தோப்புக்காட்டுக்குள்ள தெரிஞ்சுது. இப்பம், ஊருக்குள்ளயே வந்துட்டு. என்ன செய்யன்னு தெரியல. ஒரே பயம். சின்னபிள்ளைல வெச்சுட்டு எப்படிப் புழங்கன்னு தெரியல. ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சுன்னா, யாரு என்ன பண்ண முடியும்? ஏதாவது செய்யுங்க’’ என்றதும் கூண்டு வைத்தார்கள். மூன்று நாள்களாக, கறுப்பில் வெள்ளைப் புள்ளிகொண்ட தெருநாயுடன் சம்முவம் வீட்டுத்தொழுவில் காத்திருந்தது, கொப்பும் குலைகளையும் போட்டு மூடியிருந்த பெரிய இரும்புக்கூண்டு. நாய் தினமும் உள்ளே கிடந்து கத்திக்கொண்டிருந்தது. சிறுத்தை கூண்டுக்குள் நுழைந்தால், நாய்க்கான கதவு தன்னால் வந்து மூடிக்கொள்ளுமாறு அமைக்கப்பட்ட கூண்டு அது.
அருகில் இருக்கிற பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, பங்களா குடியிருப்பு, கிராமத்து ஆள்கள் எல்லாம் தினமும் காலையில் வந்து கூண்டை எட்டிப்பார்த்துவிட்டு, ``இன்னைக்குச் சிக்கலயோ?’’ என விசாரித்துவிட்டுப் போனார்கள். கூண்டு வைக்கப்பட்ட மூன்றாவது நாள் சிக்கியது அந்த வழுவழுப்பான மஞ்சள் நிறத்தில் கருநிறப் புள்ளிகளைக்கொண்ட ஆக்ரோஷச் சிறுத்தை. 
முதலில் சம்முவம்தான், சத்தம் கேட்டு வந்து லைட்டைப் போட்டுப் பார்த்தான். கூண்டுக்குள் நின்றுகொண்டு உர்ரென முறைத்தது. அருணாசலமும் வந்துவிட்டார். இருவரும் சேர்ந்து வன அதிகாரிக்குக் காலையிலேயே போனைப் போட்டார்கள். அதற்குள் விஷயம் ஊருக்குள் பரவி, எல்லோரும் சம்முவம் வீட்டின் முன் கூடிவிட்டார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பயல், கருவைக் கம்பைக் கூண்டுக்குள் விட்டு சிறுத்தையின் முதுகில் குத்தப்போனான். திரும்பிப் பார்த்து உர்ரென பாய்ந்து முன் கால்களைக் கம்பிக்கு வெளியே நீட்டியது. அதன் ஆக்ரோஷத்தைப் பார்த்ததுமே ஓடிவிட்டார்கள், அந்த இளவட்டப் பயல்கள்.
கீழத்தெரு மாரிமுத்து, ``எடுல அந்த அருவாள, அறுத்துருவோம்’’ என்றான்  வீறாப்பாக.
``அறுக்கப் போற மூஞ்சை காமி. அந்தானி கிழிச்சிருவல நீ? கேரளாக்காரன் தோட்டத்து நாயிக்கே ஒனக்குப் பதிலு சொல்ல முடியாது. இதை என்ன பண்ணிருவெ?’’
``அதுக்கு, இப்படியா வந்து பண்ணும்?’’
``வாயிலயே, அருவாளைப் போடணும்.’’
``நீங்க எல்லாரும் சூரப்புலி யோதாம். அது கொஞ்சம் உர்ருன்னு தொண்டைய போட்டா, ஏழு கிலோமீட்டருக்கு ஓடிருத பயலுவோதானல நீங்க… பெருசா வீறாப்புப் பேச வந்துட்டியோ?’’
``இது அந்தானி, வாரதை இனும நிறுத்திரும்னு நெனக்கியோ?’’
``பெறவு?’’
``கிழிச்சுது. இனும பாரு என்னென்ன நடக்குன்னு?’’
``ஏல, வாயெ பொத்துங்கல. அஞ்சாறு தெரிஞ்ச மாரிதான் ஆளாளுக்குப் பேசுதானுவோ?’’ என்றார் தொரட்டு.
பிறகு காலையில் 7, 7:30 மணிவாக்கில் வனத்துறையினர் அதைப் பத்திரமாகக் கூண்டோடு லாரியில் கொண்டுபோனார்கள். களக்காடுக் காட்டுக்குள் விட்ட தாகச் சொன்னார்கள். களக்காடுக்கும் இதற்கும் பல மைல் தூரம். அங்கிருந்து அந்தச் சிறுத்தை இனி, இங்கு இறங்க வாய்ப்பில்லை என நம்பிக்கையோடு இருந்தார்கள் ஊர்க்காரர்கள். இருந்தாலும் ஓரத்தில் பயம் நடமாடி க்கொண்டுதான் இருந்தது.
அப்போது சுப்பையா ஊரில் இல்லை. மச்சினன் ஊரான வள்ளியூர் சிறுமளஞ்சியில் சுடலைமாடன் கொடை பார்க்கச் சென்றிருந்தார். ஊர்க்காரர்கள், தாங்கள் கண்ட சிறுத்தையின் அருமை பெருமைகளை அப்படி இப்படி என்று வர்ணிக்கும்போது புகைப்படங்களிலும் திரைப்ப டங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிற அதை, தன்னால் நேரில் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது. 
``ஏம்யா கவலைப்படுதீரு. போருமே காட்டுக்குள்ள. மேக்கப் பார்த்து நடந்தீர்னா, சிறுத்தை என்ன, சிங்கம், புலி, யானைன்னு எல்லாத்தையும் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வரலாம். ஏம்... குடித்தனம்கூட பண்ணும்’’ என்று அவர் மனைவிதான் எக்காளம் பண்ணிக்கொண்டிருந்தாள்.
``ஏ கோட்டிக்காரி, ஒனக்கென்ன தெரியும் அதெல்லாம்? வாயைப் பொத்துடி’’ என்று அடக்கினார் மனைவியை.
இந்தச் சம்பவம் நடந்த மூன்றாவது மாதம், செல்லையா தோட்டத்தில்  அவர் வீட்டு வேட்டைநாயைக் குதறிப்போட்டுச் சென்றிருந்தது சிறுத்தை. 
ராத்திரி திடீரென வேகமாக நாய் குரைத்ததைக் கண்டு விழித்தார் செல்லையா. `ஏம் அவயம் போடுது?’ என்று கதவுக்குப் பின்னால் தொங்கப் போட்டிருக்கும் குடைக்கம்புபோல் இருக்கும் வாளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். அதற்குள் நாயின் `லொள்’ என்கிற சத்தத்தின் அளவு குறைந்து நின்றது, அவருக்குக் கேட்டது. அது, நாயின் கடைசி அவயம் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் வெளியில் வந்து பார்த்தபோது அமைதியாக இருந்தது. லைட்டைப் போட்டார். ``நாய்ச் சத்தத்தைக் காணலையே…’’ என்று வீட்டின் பின்பக்கம் பார்த்தார். வெளிச்சத்தில், புதிதாக வெள்ளையடி க்கப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரில், அந்தக் காலடித்தடங்கள் இருந்ததைக் கண்டார். 
பிறகும் இதேபோல ஊர் கூடி, வன அலுவலகத்தில் போய் நின்றது. ஓர் ஆட்டுக்குட்டியைப் போட்டு கூண்டு வைத்தார்கள். கத்திக்கொண்டிருந்தது குட்டி. நான்காவது நாள் வந்து சிக்கிக்கொண்டது சிறுத்தை. மூன்று மாதத்துக்கு முன் வந்த அதே சிறுத்தைதான் அது என்று அடித்துச்சொன்னான் டீக்கடை தொரட்டு.
``ச்சே… அந்தக் கண்ணைப் பார்த்ததுமே தெரிஞ்சுபோச்சே. அதாம்னு.’’ என்றான்.
``எல்லா சிறுத்தைக்கும் கண்ணு அப்படிதாம்ல இருக்கும்.’’ 
``இங்கரு, நாம்லாம் ஒரு தடவை பார்த்தம்னா, அப்டியே பதிஞ்சிரும் பார்த்துக்கெ. எனக்குத் தெரியாதோல… இது அந்தச் சிறுத்தைதாம்’’ என்றான் தொரட்டு.
``காட்டுல வேற சிறுத்தையே இல்லைன்னு நெனக்கியோ?’’
``அது தெரியுண்டே. ஆனா, சிக்கினது பழசுதான்.’’
``எப்படிச் சொல்லுத?’’
``இதை எப்படிச் சொல்லுவாவோ? பழைய ருசி… அதாம் தேடி வந்திருக்கு.’’
``ச்சீ, மொதல்ல வந்த சிறுத்தைக்குக் கண்ணுக்கு மேல கீறலா கெடந்துச்சு. இதுக்கு அப்படிலாம் இல்லையே’’ என்றான் பால்கார இசக்கி.
``அப்பம் அதும் இதும் வேறயா?’’
``பெறவு? அதுக்கு கடுவா பல்லும் சரியான நீட்டமாங்கும்’’ என்று  சொன்னான் இசக்கி.
``போங்கல பொசக்கெட்டவனுவளா, நான் சொல்லுதத கேளுங்க. இது பழைய மேப்படியாம்தான்’’ என்று கோபமாகச் சொன்னார். 
இதற்குமேல் பேசினால் அவர் கடையில் இருக்க முடியாது என்பதால், அமைதியானான் இசக்கி.
சம்முவம் விடவில்லை.
``தொரட்டு... சொன்னதையே சொல்லிட்டு இருக்காதீரும். ஒரு மட்டம் கூண்டுல சிக்குன்னா, இன்னொரு மட்டம் வருமாவே?’’ என்றார்.
``ஏம் வராது?’’
``இன்னொரு மட்டம் இந்த எடவாடுக்கே வராது அது’’ என்று அழுத்தமாகச் சொன்னார் பீடியை இழுத்துவிட்டு.
``ஆமா, இவரு கண்டாருல்லா? நான் சொல்லுதேன், அதை இல்ல, இல்லன்னு சொல்லிட்டிருக்கேளே?’’ என்ற தொரட்டுக்கு, கோபம் ஏறியது.
பிறகு,  ``அண்ணாச்சி சொன்னா சரியாதாம்ல இருக்கும்’’ என்றார்கள். தொடர்ந்து சிலபல வாக்குவாதங்களுக்குப் பிறகு, வந்தது பழைய சிறுத்தைதான் என்பதை ஏற்றுக்கொண்டார்கள், சம்முவத்தைத் தவிர. 
முன்புபோல சிறுத்தையைப் பார்க்க இப்போதும் ஏகப்பட்ட கூட்டம். பெருங்கூட்டத்தோடு வழியனுப்பிவைத்தார்கள் அந்த ஆவேச சிறுத்தையை. 
அப்போதும் ஊரில் இல்லை சுப்பையா. மகனுக்கு ஆய்க்குடியில் குழந்தை பிறந்த செய்தி கேட்டுப் பேரனைப் பார்க்கப் போய்விட்டார். நான்கைந்து நாள் டேரா போட்டுவிட்டு ஊருக்கு வரும் நாளில் தற்செயலாக பேப்பரைப் பார்த்தார். ஊரில், மேப்படியான் பிடிபட்ட செய்தி புகைப்படத்துடன் வந்திருந்தது. அந்தப் புகைப்படத்தில், கூண்டுக்குள் வாயைக் காட்டி உறுமியபடி நின்றிருந்தது சிறுத்தை. சுப்பையா, ஊருக்கு வந்ததும் கேட்டார்.
``அதென்னல எனக்கு மட்டும் வாய்க்காமபோவுது?’’
``இங்கரு எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சுக்கிடும். நம்ம நீலு வாத்தியாரு இருக்கா ருல்லா. அவரு வீட்டையும் தோட்டத்தையும் சுத்திச் சுத்தி ஏகப்பட்ட பாம்புவோ நடமாடுது. நான், எப்பம்லாம் அந்தப் பக்கம் போறனோ, அப்பம்லாம் ஒண்ணு ரெண்டு பாம்புவோல பார்த்திருந்தேன். ஆனா, அவருட்ட கேளும், `இத்தனை வருஷத்துல ஒரு பாம்பைக் கண்டதில்ல’ம்பாரு’’ என்றார் சம்முவம்.
``அப்டியா?’’
``செல பேருக்கு அப்படியொரு ராசியாங்கும்.’’
``இதென்ன அதிசயமா இருக்கு. காட்டுக்குள்ள இருந்துக்கிட்டு பாம்பு, பல்லிய கண்ணுல காணாம இருக்க முடியுமா?’’
``நான் என்ன சும்மாவா சொல்லுதம், நீரு வேணா வாத்தியார்கிட்ட கேளும்?’’
``இப்படியெல்லாமா இருக்கும்?’’
``அதெல்லாம் கொடுப்பினை பார்த்துக்கிடும். அதுபோலதாம் ஒமக்கும். சிறுத்தைக்கும் ஒமக்கும் அப்படியொரு ராசி.’’
``இருக்குமோ அப்படி?’’
``இல்லாம எப்படி?’’
நம்பினார் சுப்பையா. 
மேற்கண்ட இரண்டு சம்பவங்களை அடுத்து, இது மூன்றாவது.
ஊரில் இதற்கு முன்னால் எந்தெந்த விலங்குகள் வந்து மிரட்டிவிட்டுச் சென்றன என்ற கதைகளை ஆளாளுக்குச் சொன்னார்கள். ஒரு கோடையில் யானைகள் மொத்தமாக இறங்கி, தோப்புகளில் இருந்த தென்னை மரங்களைச் சின்னா பின்னமாக்கி விட்டுப் போன கதையை விளக்கி க்கொண்டிரு ந்தான் இசக்கி. சுப்பையா, தான் சிறுவயதில் கண்ட கதையைச் சொன்னார். அவர் வீட்டுக்கு மேல்பக்கத்தில் வசித்துவந்த, குழந்தைகளுக்குத் தொக்கம் எடுக்கும் ரஹீம் பாயை, சிறுத்தை ஒன்று கொன்றுவிட்டு போன கதையைச் சொல்லத் தொடங்கினார்.
``அப்பம் நான் சின்னப் பையன். ஜில்லா பூராவும் இதைத்தாம் பேசிட்டிருந்தாவோ. பாயி, ஆளும் சும்மா திண்ணுன்னு இருப்பாரு. அப்பம்லாம் அணை கட்டலை. மொட்டை மலை இருக்கு பாரு, அதுக்குக் கீழ, ஓடை ஓரத்துல ரத்த வெள்ளத்துல கெடந்தாரு பாயி. ஒடம்புல பாதிய காணலை. ஊரே போயி வேடிக்கை பார்த்தது. என்னைய மாதிரி சின்னப் பயலுவோளலாம் அந்தப் பக்கம் விடலை. துணியைப் போட்டு மூடி, தூக்கிட்டு வந்தாவோ. எப்பவும் தனியா ஒத்த செத்தயில காட்டுப்பக்கம் போவாத பாயி, அன்னிக்கு தொணைக்கு ஆள் இல்லாம போயிருக்காரு, கோங்கு கம்பு வெட்ட. அப்பம்தான் பதுங்கியிருந்த சிறுத்தை அவரைச் சிதைச்சுட்டு போயிட்டு. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பாயோட, அண்ணன் தம்பியோ எல்லாரும், இந்த ஊர்ல இனும இருக்க மாட்டம்னு, கல்யாணிபுரத்துக்குப் போயிட்டாவோ. அங்க மருந்துக்கடை வெச்சிருக்காருல்லா, அது யாருங்கெ? செத்துபோன பாயிக்கு அண்ணன் மவனாங்கும். அதுக்குப் பிறகு ஊருக்குள்ள எனக்கு வெவரம் தெரிஞ்சு, சிறுத்தை இறங்குனதாக் கேள்விப்படலை. இப்பம்தான் படுதேன்`` என்றார் சுப்பையா.
பிறகு, ``மருமவனே, சீனியக் கொறச்சு இன்னொரு டீய போடும்’’ என்று தொரட்டுவிடம் சொல்லிவிட்டு, பால்கார இசக்கியிடம் கேட்டார். ``இந்தச் சிறுத்தையையும் களக்காடுக் காட்டுலதான் கொண்டுபோயி விட்ருக்காவோ?’’
``பதுவா அங்கதான விடுதாவோ!’’
``அப்பம்... இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல வந்துரும்னு சொல்லு.’’
``ஏம், பத்து பதினைஞ்சு நாளு? நாளைக்கேகூட வரலாம். ரெண்டு மாசம் கழிச்சு வரலாம், வராமக்கூட போலாம்’’ என்றான்.
``வராமப்போயிருமோ?’’
``அதுக்கு வாய்ப்பில்லதாம். ருசி கண்டது சும்மாயிருக்குமா?’’ என்றான் பால்கார இசக்கி.
``அப்பம்னா சரிதாம்’’ என்ற சுப்பையா, சீனி குறைவாகப் போடப்பட்ட டீயை வாங்கினார். ``இனும சிறுத்தைய கண்ணுல காணாம ஊரைவிட்டுப் போவ மாட்டேன்’’ என்று முடிவுசெய்துகொண்டு வீட்டுக்கு நடந்தார். 
சிறுத்தை பற்றிய பயமும் பேச்சும் மறந்து ஊர் பழையபடி இயங்கத் தொடங்கியிருந்தது. கடந்த சில மாதங்களாக எந்த விலங்கும் ஊருக்குள் இறங்கவில்லை. விவசாய வேலைகள் ஆரம்பித்திருந்தன. சாரலும் காற்றும் என ஊர் ரம்மியமாக இருந்தது. அதிகமானவர்கள், வாழை போட்டிருந்தார்கள். காலையில் வழக்கம்போல வயலுக்குப் போனவர்களில் பால்கார இசக்கிதான், பதற்றத்தோடு ஓடிவந்து தொரட்டுக் கடையில் விஷயத்தைச் சொன்னான்.
கடையில் இருந்த ஏழெட்டு பேர், கேரளாக்காரன் தோட்டத்துக்கு ஓடினார்கள். அதற்குள் ஊர் பூராவும் செய்தி பரவிவிட்டது. அந்தத் தோட்டத்துக் காவலாளியைக் கொன்று சிதைத்திருந்தது சிறுத்தை. காவலாளி, சுப்பையாவின் தாய்மாமா.
பொண்டாட்டி இறந்ததிலிருந்து வீட்டில் மகன்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று காவலாளியாக பெயருக்கு வேலை பார்த்தவர். வயது அதிகம் என்றாலும் திடகாத்திரமான உடல் கட்டு அவருக்கு. தோட்டத்தின் வாயிலுக்குக் கீழ்ப்பக்கம் கட்டப்பட்டிருந்த, சிறு அறை ஒன்றில்தான் படுத்திருப்பார். சமீபகாலமாக கல்யாணிபுரம் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
``ராத்திரி அடிக்க குளிருக்கு அது இல்லாம முடியல பாத்துக்கெ’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் தொரட்டுக் கடையில். அவரைத்தான் சிறுத்தை கொன்றுவிட்டுச் சென்றிருக்கிறது. 
போலீஸ் வந்தது. விசாரணை நடத்தியது. கொன்றது மேப்படியான்தான் என்று உறுதியானதை அடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு நடத்திவிட்டு வந்தார்கள்.
அவரது இறப்பை யாராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ``ச்சே... எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாரே!’’ என்று தொடங்கி அவரது பெருமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 
தொரட்டுக் கடைக்கு சும்மா ரவுண்ட்ஸ் வரும் வன அலுவலர்கள், ``ஒத்த செத்தயில காடு கரையில அலையாதீங்க’’ என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்கள். ஆத்திர அவசரத்துக் கெல்லாம் ஆள்களைக் கூட்டிக்கொண்டு நடக்க முடியுமா?
இதற்குப் பிறகு ஊருக்குள் திடீர் பயம் தொற்றிக்கொண்டது. சும்மா கொப்பு குலை அசைந்தால்கூட பயம். ``ஆடு, மாடுவளை அடிச்சுது பரவாயில்லன்னு இருந்தாச்சு. மனுஷனுவளையும் ருசி பார்க்க ஆரம்பிச்சுட்டே’’ என்று தொரட்டுக் கடை முன்பு கவலையோடு பேசிக்கொண்டார்கள். 
ஊர், சாயங்காலமே முடங்கிவிடத் தொடங்கியது. ராத்திரி நேரத்தில் வழக்கமாகக் கல்யாணிபுரம் டாஸ்மாக்கில் கூடிக் குடித்துவிட்டு வருபவர்கள், இப்போது அந்த முக்கிய வேலையை மாலையே முடித்துக் கொள்கிறார்கள்.  தவிர்க்கவே முடியாத வேலை என்றால் மட்டுமே இரவுகளில் ஆள்கள் நடமாட்டம். ஊரில் அப்படியோர் அமைதி. இப்படியொரு திடீர் மாற்றத்தை ஊர்க்காரர்கள் ஏற்கத் தொடங்கியிருந்தார்கள். 
இப்போதும் கூண்டு வைத்தார்கள். பத்து பதினைந்து நாள்களாக சிறுத்தை வரவில்லை. தினமும் ராத்திரி ஓர் ஆட்டுக்குட்டியைக் கூண்டுக்குள் வைப்பதும் காலையில் அதை அவிழ்த்துக்கொண்டு வருவதையும் வழக்கமாகச் செய்தவந்தார் சம்முவம்.
`இனும வராதுபோலுக்கு’ என்று நினைத்துக்கொண்டார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மேப்படியான் பற்றிய நினைவை மறந்த ஒரு காலை நேரத்தில் கூண்டில் சிக்கியது சிறுத்தை.
அது, சுப்பையாவின் தாய்மாமாவைக் கொன்ற சிறுத்தைதான் என்று அடித்துச் சொன்னான் தொரட்டு. அவனுடன் வாக்குவாதம் செய்ய யாரும் முன்வரவில்லை. பிறகு, வன அலுவலகத்துக்கு போன் போட்டார்கள். லாரியோடு வந்தார்கள் அவர்கள். கூண்டை ஏற்றினார்கள். வன அலுவலர்கள், அதிகாரிகளின் ஜீப், கார், போலீஸ் வாகனம் என ஊர் பரபரப்பாக இருந்தது. 
ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல, இந்த முறை இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் இருந்தெல்லாம் ஆள்கள் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தார்கள். குழந்தைகளைத் தூக்கிவைத்துக்கொண்ட சில அப்பாக்கள், ``லியோபர்டு பாரு, புக்குல போட்டிருந்தாம்லா... இதுதாம் அது’’ என்று எதையோ சாதித்ததைப்போல காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.
சப்பரத்தில் இருக்கும் சாமி மாதிரி, ஊர்வலக் கொண்டாட்டத்தோடு ஊரே கூடி களக்காடு மலைக்கு அனுப்பிவைத்தது, அந்தக் கொலைகாரச் சிறுத்தையை.
``துடியா துடிச்சேளே, நீங்க போயி பார்க்கலையா?’’ என்றாள் சுப்பையாவின் மனைவி. 
ஒன்றும் சொல்லவில்லை அவர்.

நன்றி: ஆனந்த விகடன். ஓவியம்: ஸ்யாம்

No comments: