Saturday, October 27, 2018

செவலைகள் தொலைந்த நிலம்

மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக் கொண்டார். தூரத்தில் யார் வீட்டு மாடோ போனால்கூட, செவலையாக இருக்குமோ என்று ஏங்கித் தவிக்கிறார்.

எதிரில், யார் கண்ணில் பட்டாலும், ‘ஐயா, ஒத்த செத்தயில பசுமாடு போனதை எங்கயாது பாத்தேளாய்யா, ஒரு செவலை?’ என்று கேட்டுவிடுகிறார். அவரைப் பரிதாபமாகப் பார்த்தபடி, ‘இல்லையே’ என்று சொல்கிறார்கள் அவர்களும்.

ஊருக்கு வரும் வழியில், ரெண்டாத்து முக்கின் ஓரத்தில், புன்னை மரத்தின் அடியில் சைக்கிளை ஸ்டாண்டு போட்டார். கடனாநதியும் ராமநதியும் சேரும் இடமான இங்கு, ஓர் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் மட்டும், கால் நனைய ஓடுகிறது. மற்றோர் ஆறான ராமநதி வறண்டு கிடக்கிறது. நடந்து போய், முகத்தைக் கழுவினார். தண்ணீர் பளிங்கு மாதிரி தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. கைகளால் அள்ளிக்குடித்தார். இன்னும் குடிக்க வேண்டும் போல் இருந்தது. நான்கைந்து முறை அள்ளியள்ளிக் குடித்தார். தாகம் தீர்ந்து வயிறு முட்டியது.

 சைக்கிளை நிறுத்திய புன்னைமரத்தின் அடியில் உட்கார்ந்தார். மரங்களின் நிழல், இருள்போலப் படர்ந்து கிடந்தது. இதன் அருகில் ஆலமரம் ஒன்று பெரிதாகக் கிளைபரப்பி நின்றிருந்தது. கடந்த பேய்மழைப் புயலில் அடியோடு சாய்ந்துவிட்டது. அந்த மரமும் நின்றிருந்தால் நிழல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.  இந்த மத்தியான நேரத்திலும் காற்று இதமாக வீசிக்கொண்டிருக்கிறது. வெயில் இன்று அதிகம்தான். அப்படியே படுக்கலாம்போல் தோன்றியது அவருக்கு. கண்கள் இழுத்தது. படுத்தால் எப்போது எழுந்துகொள்வார் என்று அவருக்கே தெரியாது. உடலில் அவ்வளவு அசதி. இடுப்பில் இருந்த வெற்றிலைப் பொட்டலத்தை எடுத்தார். பச்சைப் பாக்கை ஏற்கெனவே சிறுதுண்டுகளாக வெட்டி வைத்திருந்தார். இரண்டு இளம் வெற்றிலைகளில் லேசாகச் சுண்ணாம்பைத் தடவி வாய்க்குள்  திணித்தார். அவருக்கு, அப்பாடா என்றிருந்தது.

 ஆற்றின் கரைக்குக் கீழ்ப்பக்கத் தோப்பிலும் மேல்பக்க வயக்காட்டிலும் வேலி அமைத்திருக்கிறார்கள். வேலிக்குள் ஆட்கள் வேலை செய்யும் சத்தம் கேட்கிறது. அவர்களிடம் `இப்படியொரு மாட்டைப் பாத்தேளா?’ என்று போகும்போது விசாரிக்க வேண்டும்.

செவலையை அவர் நான்கு வருடத்துக்கு முன் கன்றுக்குட்டியாகத்தான் வாங்கிவந்தார், கீழக் கடையத்திலிருந்து. மூக்கும் முழியுமாக அழகாக இருந்தது செவலை. அப்போது அதற்குப் பெரிய கொம்பு இல்லை. உடலெல்லாம் செந்நிறத்தில் இருக்க, முகத்தில் மட்டும் சுண்ணாம்பை இழுவிய மாதிரி பழுப்பு வெள்ளை. அதைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது, புனமாலைக்கு.

வளர்ந்த வீட்டிலிருந்து வர மறுத்துவிட்டது, முதலில். அதைப் பிடித்து இழுத்துக்கொண்டே, முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல் புதூர், ஆழ்வார்குறிச்சி வழியாக நடத்திக் கொண்டு வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிட்டது. முதலியார்பட்டி வரை, பசுவுக்குச் சொந்தக்காரி கூடவே வந்தாள். அங்கு நின்று, `என் செல்லத்தைப் பத்திரமா கூட்டிட்டுப் போங்கய்யா?’ என்று சொல்லிவிட்டு அவள் திரும்பியதும், கயிற்றை இழுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே கிறுக்குப் பிடித்த மாதிரி ஓடியது செவலை. கயிற்றை இழுத்த இழுப்பில், கீழே விழந்துவிட்டார் புனமாலை. இந்தச் சின்னக் கன்னுக்குட்டிக்கு இவ்வளவு பலமா? என்கிற வியப்பு அவருக்கு. ஆனால், அது பாச ஓட்டம். ஓடிப்போய் அவளின் முன்னும் பின்னும் துள்ளித் துள்ளி நின்று, தலையை அங்கும் இங்கும் ஆட்டியதை இன்னும் மறக்க முடியாது புனமாலையால். பிறகு அவள் கண்கலங்கிவிட்டு, ‘உன்னைய வித்துட்டேன். இனும எங்கூட வரக்கூடாது, போம்மா, ஐயாவோட’ என்று கன்றிடம் பேசினாள். அதற்கு என்ன புரிந்ததோ? பிறகு புனமாலை இழுத்ததும் அலட்டாமல் வந்துவிட்டது. 



தொழுவில் அவருடைய மற்ற மாடுகளைவிட அதிக செல்லம், இதற்குத்தான். செவலை வந்த பிறகுதான் அவர் பெரியவாய்க்கால் பாசானத்தில் வயல் ஒன்றை வாங்கினார். அந்தப் பகுதியில் வயல் வாங்க வேண்டும் என்பது பல வருட ஆசை. அதை நிறைவேற்றியது செவலை என்று நம்பினார் முழுமையாக. அது வீட்டுக்கு வந்த ராசி என்றும் நினைத்துக்கொண்டார்.

 அதன் காரணமாக லட்சுமண நம்பியார் கடையில் அதிகம் கனிந்த வாழைப் பழங்களை வாங்கிவிட்டு வந்து ஒவ்வொன்றாக ஊட்டுவார் அதற்கு. சின்னப் பிள்ளைபோல நன்றாக முழுங்கும். தின்று முடித்துவிட்டு இன்னும் இல்லையா என்பதுபோல அவர் கையை நக்கிக்கொண்டு, மூஞ்சைப் பார்க்கும். `எவ்வளவு பழம் தின்னாலும் உனக்கு இன்னும் கேக்கும். கள்ளாலிப் பய பசு?’ என்பார், அதன் முகத்தைச் செல்லமாகக் கிள்ளியபடி.

 அவர் மனைவி இருளாச்சியும் இதற்கு மட்டும் சிறப்புக் கவனிப்பைக் கொடுத்தாள். மாடுகளுக்கு எப்போதும் வைக்கோல்களை மட்டுமே பிடுங்கி வைக்கிற அவள், செவலைக்காகப் புல்லறுக்கச் சென்றாள் வயக்காட்டுக்கு. மற்ற மாடுகளுக்குப் பெயருக்கு வைத்துவிட்டு இதற்கு மட்டும் அதிகமாக வைப்பாள்.

செவலை ஈன்ற பிறகு, பால் துட்டுப் புழக்கம் பஞ்சமில்லாமல் இருந்தது. ஏற்கெனவே இரண்டு எருமைகளின் மூலம் பால் வருமானம் கிடைத்தாலும் செவலையின் பாலுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. இதன் காரணமாகச் செவலைக்குச் செல்லம் இன்னும் அதிகமானது.

 புனமாலையின் பிராயத்தில், அவர் வீட்டுத்தொழுவு நிறைந்திருந்தது ஆடுகளும் மாடுகளும். வீட்டுக்குப் பின்பக்கம் மாடுகளுக்கும் எதிரில் ஆடுகளுக்கும் தொழுவு. சாணம் மற்றும் மூத்திர வாசனையில் வாழப் பழகிக்கொண்ட அவர் அம்மாவுக்கும் மனைவிக்கும் பிட்டி நவுண்டு போகும் வேலை பார்த்து. தொழுவைத் தூத்து, சாணம் அள்ளி, புண்ணாக்கு வைத்து, தண்ணீர் காட்டி, பால் கறந்து... போதும் போதும் என்றிருக்கும். ஆனாலும் அதைக் கடமையாகவே செய்துவந்தார்கள். அப்பா, அண்ணன் தம்பிகளோடு மேய்ச்சலுக்குச் செல்வதுதான் புனமாலைக்கு வேலை.

 காலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ஊரில் யாரிடமும் அதிக மாடுகள் இல்லை. ஊர் மாடுகள் திரண்டு மேலத் தெருவின் வழியே பெருங்கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் காட்சி, புனமாலையின் கண்க ளுக்குள் இன்னும் அப்படியே இருக்கிறது. புழுதிப் பறக்கத் தெருவில் நடக்கும் மாடுகள் நடந்து செல்லும் காட்சியை இப்போது பார்க்க முடியவில்லை.  பிள்ளைகள் வளர வளர மாடுகளை விற்றுவிட்டார்கள், தெருக் காரர்கள். படித்துவிட்டுப் பிழைப்புக்குப் பெருநகரம் செல்வது வாடிக் கையாகிவிட்டது.  அப்படியே மாடுகள் வைத்திருந்தாலும் இப்போதெல்லாம் எங்கு போய் மேய்க்க? மேய்ச்சல் நிலங்கள் மனைகளாகி, நாள்களாகிவிட்டன.


விரிந்து கிடந்த புறம்போக்கு இடங்களில் மாடுகள் மேய்ந்த இடங்கள் வேலிகளுக்குள் இருக்கின்றன, இப்போது. யாரோ வெளியூர்க்காரர் அங்கு தோட்டம் அமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் புறம்போக்கு இடங்கள் எப்படி விற்கப்பட்டன என்கிற ஆச்சர்யம் புனமாலைக்கு இப்போதும் இருக்கிறது. சாலையில் வந்து மோதும் தண்ணீரைக் கொண்ட குளத்துக்கரைகள் எல்லாம் சுருங்கிவிட்டன.


புனமாலைக்கு இரண்டு மகன்கள். ஒருவன் ஓசுரில் ஏதோ வேலை பார்க்கிறான். இரண்டாவது மகன், திருநெல்வேலியில் படித்துவிட்டு சென்னைக்கு வேலைக்குச் செல்லக் காத்திருக்கிறான். அவர்களுக்கு மாடுகள் மேய்ப்பது கேவலமாக இருக்கிறது. கூடப் படித்தவர்கள் வீட்டுக்கு வரும்போது மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்பது அவமானமாக இருக்கிறது.

 ‘இந்த மாடுகளை கெட்டிட்டு அழுததை என்னைக்குத்தாம் விடப் போறேளோ?’ என்றான்  பெரிய மகன்.

 ‘ஏம்டே. அதுவோ உன்னைய என்ன பண்ணுச்சு?’

`எனக்கு கேவலமா இருக்கு? இதுக்காவவே நான் வெளியூரு போறேன், பாத்துக்கிடுங்க?’ என்றான் ஒரு நாள். புனமாலைக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. இந்த மாடுகள்தான் சோறு போட்டிருக்கிறது, பால் மாடுகளின் காசுகளில்தான் அவன் படித்தான் என்பதையெல்லாம் இப்போது அறிய மாட்டான் என்று நினைத்துக்கொண்டார். சின்ன மகனும் ஒரு நாள் அதையே சொன்னான். சிரித்துக்கொண்டார் அவர். `உங்களுக்கெல்லாம் என்னடா தெரியும், அதுவொள பத்தி. மாடு வளக்கது கேவலமா இருக்காம்? என்னத்த உருப்படப்போறானுவோ?’ என்று நினைத்துக் கொள்வார்.

 ‘என்ன அண்ணாச்சோ, உட்கார்ந்தாச்சு?’ என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தார் புனமாலை. உள்ளூர்ப் பள்ளிக்கூட சார்வாள். தோப்புக்குச் சென்றுவிட்டு வருகிறார்  போலிருக்கிறது. அவரைப் பார்த்துச் சிரித்தார்.

 ‘மாட்டைக் காங்கலைன்னு கேள்விப்பட்டேன். கிடைச்சுட்டா?’ என்று கேட்டார் .

‘இல்ல. எங்க போச்சுன்னு தெரியல?’ என்ற புனமாலை, கவலையில் மூழ்கினார். அவரிடம் இருந்து இரண்டு வெற்றிலையை வாங்கிக்கொண்ட சார்வாள், ‘கேள்விப்பட்டதுல இருந்து நானும் இங்ஙன எல்லாப் பக்கமும் கண்ணுல ஏதும் படுதான்னு பாத்துட்டுதாம் இருக்கேன்…’ என்றார்.

‘ஆங்… மிஞ்சிப் போனா, சுப்பையா தோப்புக்குள்ளதாம் நிய்க்கும். என்னைக்காது சாயந்தரத்துல வரலைன்னு வையுங்களேன், தேடிப் போனா, அவரு தோப்புக்குள்ள இருந்துதாம் வரும்… அங்க எல்லாப் பக்கமும் பாத்தாச்சு. காங்கலை…’

‘மாட்டைப் புடிச்சு, எவ்வளவு வருஷமாச்சு?’

 ‘ஒரு நாலு வருஷம் இருக்கும்?’

 ‘புடிச்சுட்டு வந்த வீட்டுல, விசாரிச்சுப் பாத்தேளா?’

 `ச்சே… இவ்வளவு வருஷத்துக்குப் பெறவா, அந்த வீட்டைத் தேடிப் போவப் போது?’

‘அப்படியில்லலா. நம்ம பிச்சாண்டி பய, கப்பை கொம்பு எருமை, அஞ்சு வருஷத்துக்குப் பெறவு, கன்னுக்குட்டியா கெடந்த வீட்டைத் தேடிப் போயிருக்குன்னா பாருமே?’

‘இது என்ன புதுக்கதையா இருக்கு?’

 `பெறவு, நான் என்ன சொல்லுதேன்? ஆய்க்குடியில இருந்து வாங்கிட்டு வந்தாம் அதை. இங்கயிருந்து இருவது இருவத்தஞ்சு மைலு இருக்குமா? ஒத்தையில தேடிப் போயிருக்குன்னா, பாருமே. அதனால பழைய வீட்டைத் தேடிப் போவுமா, போவாதாங்கது நமக்கெப்படித் தெரியும்? ஒரு எட்டு, எட்டிப் பாத்துட்டு வந்துரும்யா. இதுல என்ன கொறச்சலு ஒமக்கு?’ என்றார் சார்வாள்.

‘சரிதாம். போயிட்டு வந்துர வேண்டியதாம்’

’பால் மாடா?’

‘ஆமா. காலைல மட்டும் ரெண்டரை, மூணு லிட்டரு கறக்கும். புல்லு அதிகமா போட்டா, நிறைய கறக்கும். அக்ரஹாரத்துல எல்லா வீட்டுக்கும் நம்ம பாலுதான். மூணு நாளா பசும்பாலை, வேற ஆளுட்ட வாங்கிக் கொடுத்து சமாளிக்கேன். அதுக்குள்ள, ஏன் புனமாலை, பாலு தண்ணியா இருக்குன்னு ஆவலாதி வந்தாச்சு…’

`அது வந்திரும்லா. நீரு வேண்டிய ஆளுன்னு தண்ணிய கொஞ்சமா சேப்பேரு. மத்தவோ அப்படி இருப்பாகளா?’

 ‘ரொம்ப வேசடையா இருக்கு, பாத்துக்கிடுங்க. என்ன பண்ணன்னு தெரியல. பாசமா வேற வளத்துட்டனா? அதாம் ஒண்ணும் ஓட மாட்டேங்கு. எனக்கு மட்டும் ஏம் இப்படி நடக்குன்னு தெரியல’ என்ற புனமலை, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

 ‘ஒண்ணும் கவலைப்படாதேரும், கிடைச்சுரும்’ என்ற சார்வாள், `இதுக்கு முன்னால இப்படி ஏதும் காணாமப்போயிருக்கா?’ என்று கேட்டார், வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு.

 ‘ரெண்டு வருஷத்துக்கு முன்னால, வழக்கமா மேய்க்கப் போற இடத்தை விட்டுட்டு, ரயிலு பாலத்துக்குக் கீழே மேய்ச்சிட்டு நின்னேன். சாயங்காலம் போல, கெளம்புவோம்னு மாடுவொள பத்தினேன். கீழ்ப்பக்கத் தென்னந்தோப்புல ரெண்டு, மூணு தேங்காய் நெத்து, தன்னால விழுந்த சத்தம் கேட்டது. தோப்புக்குள்ள ஆளு வேற இல்லையா? சும்மா விட்டுட்டுப் போவ மனசு வரலை. வேலிக்குள்ள ஏறி, உள்ள போயிட்டேன். நாலஞ்சு காயிவோ கெடந்தது. கொஞ்சம் காய்ஞ்ச தென்னமட்டை, சில்லாட்டையும் கிடந்தது. தேங்காயை உள்ளவச்சு தென்னமட்டைகளை விறகு மாதிரி கெட்டிட்டு வெளிய வந்து பாக்கேன், ஒரு மாடுவளையும் காங்கலை. `அதுக்குள்ள எங்க போயி தொலைஞ்சுதுவோன்னு தேடுனா, கிழக்க வீட்டைப் பாத்து வரவேண்டிய மாடுக எல்லாம், லெக்கு தெரியாம, மேற்கப் பாத்து போயிட்டிருக்குவோ. பெறவு அதுகளைப் புடிச்சு, கிழக்க திருப்பிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்த பிறகு பாத்தா, செவலை மட்டும் இல்லை. தேடு தேடுனு தேடுனோம். மறுநாளு காலையில, ரயிலு பாலத்துக்கிட்ட தேடிட்டு விசாரிச்சேன். `மேக்க பறம்பு இருக்குல்லா, அங்க ஒரு தூர்ந்துபோன கெணத்துல, மாடு ஒண்ணு விழுந்து கெடக்கு. ஊரே கூடி நின்னு அதைத் தூக்கிட்டு இருக்காவோ. அது உங்க மாடான்னு வேணா பாரும்’ன்னு ஒருத்தன் சொன்னான். நான் வேர்த்து, விறுவிறுத்துப் போய் நிய்க்கேன், கூட்டத்துக்குள்ள. `ரெண்டு இளந்தாரி பயலுவோ தைரியமா கெணத்துக்குள்ள இறங்கி, மாட்டோட வயித்துக்கு முன்னால ஒரு கயிற்றையும் பின்கால்கள் கிட்ட ஒரு கயிற்றையும் போட்டுக் கெட்டிட்டானுவோ. பெறவு ஆளுவோ பூரா சேர்ந்து கயிற்றை இழுத்து மேல கொண்டு வாந்தாச்சு, மாட்டை. இழுக்கும்போது கெணத்துல இருந்த கல்லுல அங்க இங்கன்னு முட்டி, உடம்புல ரத்தக் காயம். அந்த ஊரு பெரிய மனுஷன் டேனியலு நமக்குத் தெரிஞ்சவரு தான். அது எம்மாடுதாம்யான்னு சொன்னேன். சொல்லிட்டு, பேசிட்டுதாம் இருக்கேன், பாத்துக்கிடும். இந்தச் செவலை எப்படித்தாம் என்னைய பார்த்ததுன்னு தெரியல, அங்கயிருந்து வேகமா வந்தது. பின்னால இருந்து ஒரு கணைப்பு கணைச்சுட்டு வந்து முகத்தை என் இடுப்புல தேய்ச்சுது. பெறவு, என் மூஞ்சை ஏக்கமா பார்த்தது பாரும், பொல பொலன்னு கண்ணீரு வந்துட்டு எனக்கு. இப்பம்கூட பாருமே, சொல்லும்போதே புல்லரிக்கு. அப்பம்தான் ஒரு தடவை காணாமப்போயி மீட்டுட்டு வந்தேன். இப்பமும் அப்படி எங்கயாது போயி விழுந்திருக்குமோன்னு நினைச்சுதான் தேடிட்டு இருக்கேன். நம்ம பட்றையன் சாமிதான் கருணை காட்ட ணும்’ என்று சொல்லிவிட்டுக் கண்ணைத் துடைத்தார் புனமாலை.


 ‘ச்சே என்ன நீரு, சின்னப்புள்ள மாதிரி கண்ணைக் கசக்கிக்கிட்டு… இங்க எங்கயோதாம் நிய்க்கும். எங்க போயிரப் போவுது? கிடைச்சுரும், கவலைப்படாதீரும்’ என்று நம்பிக்கையளித்தார் வாத்தியார்.

 `கெழக்க மன்னார்கோயிலு, காக்கநல்லூருன்னு போயி தேடியாச்சு. அங்குள்ள ஆளுவோட்ட எல்லாம் சொல்லிட்டு வந்திருக்கேன். நேத்து மேக்க, கருத்தப்பிள்ளையூர், சிவசைலம்னு அலைஞ்சாச்சு. இன்னைக்குப் பாப்பான்குளத்துக்குப் போயிட்டு வந்தாச்சு. சாய்ந்தரம் நீங்க சொன்ன மாதிரி மாட்டைப் புடிச்சுட்டு வந்த வீட்டுல போயி கேக்கணும்.’

 ‘ஏம் அலையுதேரு, போனைப் போட்டுக் கேளும்.’

 ‘இந்த மாதிரி வெவாரத்தை போன்ல சொன்னா நல்லாருக்குமா? நேர்ல போயி விளக்குனாதான் சரியாயிருக்கும். அதுக்குத்தான் அலையுதேன்.’

‘சரி வீட்டுக்குத்தான போறேரு, வாரும் பேசிட்டே நடப்போம்’ என்றார், சார்வாள்.

புனமாலையின் முகத்தைப் பார்த்தே மாடு பற்றித் துப்புக் கிடைக்கவில்லை என்பதைக் கணித்துவிட்டாள், அவர் மனைவி இருளாச்சி. துண்டால் தட்டி, திண்ணையைத் துடைத்துவிட்டு சோர்ந்து உட்கார்ந்திருந்தார் அவர். இவரைக் கண்டதும் வீட்டிலிருந்து வெளியே போனான் மகன். மாடு தொலைந்தது பற்றியோ, அதைத் தேடுவது பற்றியோ அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை. நண்பனின் அழைப்புக்காகக் காத்திருப்பவன் அவன். என்றைக்கு அழைப்பு வருகிறதோ, அன்று சென்னைக்கு பஸ் ஏறிவிடுவான். அதனால் மாடுமாச்சு, அவர்களுமாச்சு என்று அலைந்து கொண்டிருக்கிறான். மூன்று நாள்களாக மேய்ச்சலுக்கும் செல்லவில்லை. மேலத்தெரு மணியின் மாடுகளோடு இவர் மாடுகளையும் சேர்த்து அனுப்பிவிட்டிருக்கிறார். தொழுவு அமைதியாக இருந்தது.

இருளாச்சி, ஒரு சட்டியில் கஞ்சித் தண்ணியை வைத்து, இன்னொரு சிறு தட்டில், காணத்துவையலையும் நான்கைந்து ஈராய்ங்கத்தை உரித்தும் கொண்டு வந்து அவர் முன் வைத்தாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பசிக்கவில்லை அவருக்கு. இருந்தாலும் அனிச்சையாகச் சட்டியைத் தூக்கிக் குடித்தார். கொஞ்சம் மிச்சமிருந்தது. துவையலைக் கையோடு அள்ளி நாக்கில் வைத்துவிட்டுக் கையைக் கழுவினார்.

மாடுகளுக்கான தண்ணீர்த் தொட்டியில் கழனித் தண்ணீர் நிரம்பி, புளிச்ச வாடை வீசிக்கொண்டிருந்தது. மிச்சமிருந்த கஞ்சித்தண்ணியை அதில் ஊற்றிய புனமாலை, ‘ஊருல எத்தனை பய மாடுவொள தேடிக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருப்பேன். எம்மாட்டைக் கண்டுபிடிச்சுக் கொடுக்க ஒரு நாதியில்லையே’ என்று சொல்லிக்கொண்டு, திண்ணைக்கு வந்தார். இருளாச்சியால் அவர் முகத்தை இப்படிப் பார்க்க முடியவில்லை. வீட்டுக்குள் போனாள். ‘பயமாடு தொலைஞ்சு நம்மளையும் இந்தா பாடுபடுத்துதே’ என்று நினைத்துக்கொண்டாள்.

 ‘சின்னவன் எங்க போறாம்?’

‘தெரியல?’ என்றாள் அவள்.

‘தாட்டாம்பட்டி, கோட்டாளப்பட்டின்னு இந்த மாட்டைத் தேடச் சொல்லலாம்லா?’

‘நீங்க சொல்லியே கேக்க மாட்டான். நான் சொன்னா கேட்டுருவானா?’

வெயில் கொதித்துக்கொண்டிருந்தது. ‘மாடு எங்க போயிருக்கும்?’ என்ற சிந்தனை அவரை மொத்தமாக அலைக்கழித்துக்கொண்டிருந்தது. செவலையின் கன்னுக்குட்டி தொழுவில் இருந்து மெதுவாகக் கத்தியது. அதன் அம்மாவைப் போலவே தோற்றம் கொண்ட கன்றுக்குட்டி. அதைப்போலவே இதற்கும் முகத்தில் செந்நிறத்தில் சுண்ணாம்பை இழுவிய மாதிரி, பழுப்பு வெள்ளை. இதுவும் செவலையைப் போலவே ராசியான கன்னுக்குட்டி என்று நம்பினார், புனமாலை. இந்தக் கன்று பிறந்ததும்தான் பெரியவனுக்கு ஓசூரில் வேலை கிடைத்தது என்பது அவர் எண்ணம்.

‘இந்தா அதுக்குத் தண்ணி காட்டு’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டுச் சாய்ந்து உட்கார்ந்தார்.

 `எவன் பயித்துலயும் விழுந்து, புடிச்சு கெட்டிப் போட்டுருப்பானுவளான்னு தெரியலயே?’ என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்படியிருக்க வாய்ப்பும் இல்லை. ஊரில் தோப்பும் வயக்காடும் வைத்திருப்பவர்கள் தெரிந்தவர்கள்தான். அப்படியே வயலில் மாடு, வாயை வைத்தாலும் வந்து ஏசிவிட்டுதான் போவார்கள்.

ஒரே ஒரு முறை அப்படியொரு சம்பவமும் நடந்திருக்கிறது. முகத்துக்கு, முன்னோக்கி நீட்டியபடி இருக்கும் கொம்புகளைக் கொண்ட, நீட்டிக் கொம்பு எருமை செய்த காரியம் அது. பெரிய வாய்க்கால் விதைப்பாட்டில் குத்தா லிங்கத்தின் உளுந்து வயலில் பயிரைத் தின்று நாசம் பண்ணிவிட்டது. நிலையாக நின்றான் குத்தாலிங்கம். வீட்டு வாசலில் நின்று மானங்கெட்ட கேள்வி கேட்டான்.

‘ரெண்டு பயித்துல, மாடு வாயை வச்சுட்டுன்னாடே இப்படி ஏசுத?’


`ரெண்டு பயிரா? நீ மொதல்ல வயலை வந்து பாரு, பாதி வயலை நாசம் பண்ணியிருக்கு, உம்மாடு?’

 `மாடுவோ வாயை வச்சா, விளைச்சலு நல்லாதான்டே இருக்கும். அதுக்குப் போயி இப்படி ஏசுத?’

 ‘இந்தக் கதையெல்லாம் இங்க சொல்லாத. போன பூவு, ஒரு விளைச்சலு இல்ல. தண்ணியில்லாம எல்லாம் மண்ணாப்போச்சு. மாசானத்துக்கிட்ட வட்டிக்கு வாங்கியாங்கும் இப்பம் உளுந்து போட்டிருக்கேன். இதும் போச்சுன்னா, நானும் என் பொண்டாட்டி புள்ளேலும் ரோட்டுலதாம் நிய்க்கணும்’

- அக்கம் பக்கத்து வயல்காரர்களும் ஊர்க்காரர்களும் வந்து சொன்ன பிறகு மறுக்கமுடியவில்லை, புனமாலையால். ஒரு தொகையைத் தெண்டமாக கொடுக்கச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு வந்தார்.  மாடு வயலில் விழுந்ததற்காக, அவர் தெண்டம் கட்டியது அதுதான் முதன் முறை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வயற்காட்டுப் பக்கம் அதிகமாக மாடுகளை மேய்ப்பதில்லை. வாய்க்கால் மற்றும் ஆற்றங்கரைகளில் மேய்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டார்.

 வீட்டில் இருக்க முடியவில்லை அவருக்கு. தாட்டம்பட்டி வாக்கில் போய்த் தேடிவிட்டு தெரிந்தவர்களிடம் சொல்லிவிட்டு வரலாம் என எழுந்து சைக்கிளை எடுத்தார். சின்ன மகனின் பைக், அவர் முன் வந்து நின்றது. அவரைக் கவனிக்காத மாதிரி இறங்கி வீட்டுக்குள் போனான், தலையில் கொண்டை வைத்திருக்கிற அவன். ‘எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குவோ?’ என்று நினைத்துக்கொண்டு சைக்கிளை அழுத்தினார் புனமாலை.


பஞ்சாயத்து போர்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாட்டுக்கு லாடம் அடிக்கும் சுப்பையா, பார்த்துவிட்டார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.

‘மாடு கிடைச்சுட்டா..?’

 ‘தேடிட்டிருக்கேன்’

 ‘எத்தனை நாளாச்சு?’

‘மூணு.’

‘மேயப்போன இடத்துல இருந்தா காணாமப்போச்சு?’

 ‘ஆத்து மண்டபத்துக்கு மேல, முதல் விதைப்பாடு இருக்குல்லா…’

  ‘வரப்புல பலா மரம் நிய்க்குமே?’

 ‘ஆமா’

‘அது பல்லு நீண்டவன் வயல்லா… சரி’

 `அங்க வரப்புல நின்னு மேச்சுட்டு இருந்தேன். அங்கயிருந்து அவயம் போட்டுட்டே வந்தான், பல்லு நீண்டவன். `யோவ் மாடு உள்ள இறங்குச்சுன்னா, காலை வெட்டிருவம்னு சொன்னான். எனக்கு கோவம் வந்துட்டு. ’வயல்ல விழுந்தா வெட்டிருவியோல?’ன்னு கேட்டேன். `ஆமா’ன்னு சொன்னான், திமிரா. `வெட்டுல பாப்போம்’னு சொன்னேன். பெறவு, வார்த்தைத தடிச்சுப் போச்சு ரெண்டு பேருக்கும். கொஞ்ச நேரத்துல, அவன் போயிட்டாம். நான் மாடுவள பத்திட்டு வந்துட்டேன், வீட்டுக்கு. வழக்கமா, சாயந்தரம் பால் கறக்கணும்லா, கன்னுக்குட்டி தேடுமேன்னு, அந்த நேரத்துக்குச் சரியா அதுவாவே வீட்டுக்குப் போயிரும் செவலை. நானும் அப்படித்தாம் வீட்டுக்குப் போயிருக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன். வந்து பாத்தா, மாடு வரலைங்கா, வீட்டுக்காரி. அப்ப போனதுதாம்… எங்க போச்சுன்னு தெரியாம, தேடிட்டிருக்கேன்.’

 ‘சரியாப்போச்சு, போ. நீ அந்த சண்டாளன்ட போயா, வாயைக் கொடுப்பே? இப்பம்லா ஞாவத்துக்கு வருது. இது அவன் வேலையாதாம் இருக்கும். பேதில போவாம், திருட்டு மாட்டை அடிமாட்டுக்கு விய்க்குத பயல்லா…’

 `என்னடே சொல்லுத?’

 ‘பெறவு. ஒனக்கு அவனைத் தெரியாம எப்படி இருக்கும்?’

 ‘நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?’

‘அவன் ஆக்கங்கெட்டவம்லா. பேரு நரைச்சாம். எந்தூர்ல இருந்தோ ஆழ்வாரிச்சுக்கு வந்திருக்காம்னு சொல்லுதாவோ. கடையம் சந்தையில வித்தா தெரிஞ்சிரும்னு நயினாரம் சந்தையில போயில்லா, கள்ள மாடுவள விய்க்காம், கேரளாக்காரனுவளுக்கு. எல்லாம் அடி மாட்டுக்குப் போவுது. நீ ஒண்ணு செய்யி. நேரா அவன் வீட்டுக்குப் போயி, தொழுவுல நோட்டம் போடு. வீடு எங்கன்னு சொல்லுதேன். அங்ஙனதாம் நிய்க்கும் மாடு. அதைத் தெரிஞ்சுகிட்டு, வீட்டுக்குள்ள போ. அவன்ட்ட நயஞ்சு பேசு. இல்லனா கால்ல, கையில விழுந்தாது மாட்டைப் புடிச்சுட்டு வந்துரு. கண்டிப்பா இது, அவன் வேலைதாம் பாத்துக்க. நல்லவேளை எங்கிட்ட சொன்ன, இல்லைன்னா ஊர் ஊரா தேடிட்டுதாம் இருக்கணும். உடனே கெளம்பு. நாளைக்கு, நயினாரம் சந்தை. அவன் இன்னைக்கு ராத்திரி மாடுவள பத்திட்டுப் போனாலும் போவாம்...’

புனமாலைக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியெல்லாம் பண்ணுவார்களா என்று.

‘மாட்டைக் களவாண்டிருக்கது அந்தப் பய. ஏன் அவன்ட்ட நயஞ்சு பேசணும். நாலு மிதி மிதிச்சாதான மனசு நிம்மதியா இருக்கும். பெறவு போலீஸுக்குப் போய்க்கிடுவோம்’

 `இங்கரு, நீ நினைக்கது சரிதாம். ஆனா, அவன் ஆளு, வேற மாதிரி. தப்பே பண்ணியிருந்தாலும் அவனுக்கு ஏண்டுகிட்டுப் பேசத்தான் ஆளுவோ இருக்கு, அவன் ஊர்ல. அதுக்கு ஏத்தாப்ல பேசுவான். விவாரத்தை உம்மேலயே திருப்புனாலும் திருப்பிருவாம். கூட கரிவேலையும் (மந்திர, தந்திரம்)பாப்பானாம். அதனால அவனை எதுரா யாரும் பேசமாட்டாவோ.. காரியம் ஆவணும்னா டொப்புன்னு கால்லயும் விழுந்துரு வாம். இன்னொரு விஷயம் கேளு, அடிமாட்டுக்கு விய்க்கப் போறவன் தொழுவுல எந்த மாடு காலு வைக்கோ, அந்த மாடு விளங்காதுன்னும் சொல்வாவோ. ஊரு அப்படித்தாம் நம்புது. அங்கருந்து பத்திட்டு வந்தா, ஒண்ணு நோயில சாவும். இல்லன்னா, வீட்டு ஆளுவொள கொணக்கிரும். இதை நான் சொல்லலை. அக்கம் பக்கத்து ஊருல சொல்லிக் கேள்விப்பட்டது, கேட்டியா? நம்ம சிவசைலத்துலயும் கருத்தப்பிள்ளையூர்ல அப்படி சம்பவம் நடந்திருக்கு. மாட்டுக்கு லாடம் அடிக்க வாரவங்க பேசிக்கிட்டது, இது. நீ உடனே போயி மாட்டைப் பாரு. அவன் தொழுவுலதாம் கண்டிப்பா நிய்க்கும். வெளிய கொண்டாந்து, வித்திரு’ என்றார் சுப்பையா.

 புனமாலை, முதலில் மாடு தேவை என்று நினைத்துக்கொண்டார். பிறகு, ‘நீயும் வாயன்டே’ என்றார்,  சுப்பையாவிடம்.

‘நானுமா? அப்பம் என் வண்டியில போயிரும்.’ டிவிஎஸ் 50-ல் இருவரும் கிளம்பிச் சென்றார்கள், ஆழ்வார்குறிச்சிக்கு. போகும் வழியெங்கும் செவலை பற்றிய நினைவுதான் அவருக்கு.

சுப்பையா சொன்னதுபோலவே அவன் தொழுவில்தான் நின்றது செவலை.

நரைச்சான் சொன்னான், ‘இது ஒம்ம மாடுன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. என் வீட்டுக்குப் பின்னால வந்து நின்னுகிட்டு, அரை நாளா மாடு அவயம் போட்டுது. யாரு மாடுன்னு தெரியலை. பசிக்கு அவயம் போடுதுன்னு நினைச்சு, தொழுவுக்கு இழுத்துட்டு வந்து வைக்கோலைப் புடுங்கிப் போட்டேன். தின்னுட்டு இங்கயே நின்னுகிட்டு. விரட்டுனாலும் போவலைன்னா பாருமே. எங்கூரு ஆளுவோ, பூரா பேர்ட்டயும் சொன்னேன் பார்த்துக்குங்க. `இப்படியொரு செவலை, என் வீட்டுல வந்து நிய்க்கு. யாரும் விசாரிச்சு வந்தா சொல்லுங்க’ன்னு. ஒரு துப்பும் கெடைக்கலை. வாயில்லா ஜீவனை அப்படி ரோட்டுல விட்டுர முடியுமா? எவனும் சந்தைக்குக் கொண்டு போயி வித்தாலும் வித்துப் போடுவாம். அதாம் யாரும் விசாரிச்சு வந்தா கொடுப்போம்னு தொழுவுல கெட்டிப் போட் டேன். இப்பம்தான் என் வீட்டுக்காரி, மாடுவளுக்குத் தண்ணிகாட்டிட்டு நிய்க்கா. இன்னா, நீங்க வந்திருக்கியோ? தெரிஞ்ச ஆளுவோ வேற. நான் கட்டிப் போட்டது நல்லதாப்போச்சுல்லா. அன்னைக்கு வேற நாம சண்டை போட்டிருக்கோம். அதுக்காவ மாட்டைப் புடிச்சுட்டு வந்து கெட்டிப் போட்டிருக்கேன்னு நினைச்சுராதீரும். அது கோவத்துல பேசிக்கிட்டது. அதை மனசுல வச்சிக்கிடாதீங்க’ என்ற நரைச்சான், தான் அகப்பட்டுக்கொண்டோம் என்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து தப்பிக்க நிறைய பேசினான்.

 புனமாலைக்கு மாடு கிடைத்ததில் சந்தோஷம். கண்டதுமே முகத்தை அவர் மேல் இழுவிக் கொண்டு, கைகளை நக்கியது செவலை. அதன் கண்களிலிருந்து கீழ்நோக்கி நீர்க் கோடுகள் தெரிந்தன. மூன்று நாள்களாகப் பட்டினி போட்டிருப்பான் போலிருக்கிறது. பசிச்சோர்வு முகத்தில் தெரிந்தது. உடல் வற்றிப்போயிருந்தது. முதுகெலும்புகள் லேசாகத் தெரியத் தொடங்கின. அதன் தோற்றம் பரிதாபமாக இருந்தது. புனமாலைக்குக் கோபம். அவரை அடக்கினார் சுப்பையா.

செவலையின் முகத்தைத் தடவிக் கொடுத்தார். அது செல்லமாகக் கத்தியது. அந்தக் கத்தலில் தெரிந்த பாசத்தை, ஏக்கத்தை, வலியை அவர் உணர்ந்தார். அவர் அதன் முகத்தை மீண்டும் தடவினார். இருவரும் ஏதோ பேசிக்கொள்வது போல, இருவருக்குமான மௌன உரையாடல் போல, அது இருந்தது. திடீரென அழுதுவிடுபவர் போல ஆனார். சுப்பையா, அமைதி என்கிற விதமாக அவர் தொடையைத் தட்டினார். சுதாரித்துக்கொண்டார் புனமாலை. அவனது தொழுவில் இன்னும் சில மாடுகள்  எலும்பும் தோலுமாக இருந்தன. யார் மாடுகளோ?

 சுப்பையா வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு போக, மாட்டைப் பத்திக்கொண்டு வந்தார் புனமாலை. ஆழ்வார்குறிச்சிக் குளத்தில் தண்ணீர் குட்டை போலத்தான் இருந்தது. செவலை, அதைக் கண்டதும் வேகமாகப் போய்க் குடித்தது. நீண்ட நேரமாக நின்று குடித்துக்கொண்டே இருந்தது.

 ‘பேதில போவாம். மூணு நாளா தண்ணிகூட வைக்காம இருந்திருக்கானே, இவம்லாம் உருப்புடுவானா? வாயில்லா ஜீவனை இப்படி போட்டு வச்சிருக்கானே, நல்லாருப்பானாடே?’ என்று சொல்லிவிட்டு, `அந்தப் பயலை இறுக்கிட்டு வந்திரட்டா?’ என்று திரும்பினார் கோபமாக.

‘கோவத்தைக் குறையும். அதாம்  சொன்ன மாதிரி மாடு கிடைச்சுட்டுல்லா’ என்ற சுப்பையா, ‘உடனடியா மாட்டை யார்ட்டயாது தள்ளி விட்டிரும், கேட்டேரா? இல்லனா சிக்கலுதாம். ஏம்னா, அந்த ஆக்கங்கெட்டவன் தொழுவு லெட்சணம் அப்படி! என்னதாம் ஒமக்கு ராசியான மாடா இருந்தாலும் ஆளுவோ உடம்புக்கு ஒண்ணுன்னா, யாரு பார்க்கது?’ என்று சொல்லிவிட்டுப் புனமாலையைப் பார்த்தார் சுப்பையா.

 அவருக்கு பயம் தொற்றிக்கொண்டது. வெற்றிலையை எடுத்து சுப்பையாவிடம் இரண்டைக் கொடுத்துவிட்டு, தானும் போட்டுக் கொண்டார். செவலை இன்னும் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. ’நீ சொல்லுததும் சரிதாம் சுப்பையா. திடுதிப்புன்னு கெடையில கெடந்துட்டோம்னு வையேன், பெத்த பிள்ளையோகூடப் பாக்காது’ என்றார் புனமாலை.

செவலை, தண்ணீரைக் குடித்துவிட்டு வந்து, அவர் வலது கையின் அருகில் நின்றது. அதன் முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தபடி வீட்டுக்குப் பத்திக்கொண்டு வந்தார். வந்ததுமே தரகரிடம் சொல்லிவிட்டார்.

 தரகரும் அதையே சொன்னார். `அடிமாட்டுக்கு விய்க்கவன் தொழுவுக்கு மாடு போய்ச்சுன்னா, அது சுணங்கும். இல்லன்னா, ஆளுவொள கொணக்கிரும். அதனால அதை விய்க்கதுதாம் சரி’ என்றார். இரண்டே நாள்களில், கிடைத்த தொகைக்கு விற்றுவிட்டார், செவலையை.

செவலை இல்லாத தொழுவு அவருக்கு வெறுமையாக இருந்தது. திடீரென்று தூக்கத்தில் எழுந்து, `செவலை கத்துன மாதிரி இருந்துச்சுல்லா?’ என்று கேட்கிறார் மனைவியிடம். திடீரென ஏதோ ஞாபகம் வந்தவராக, ‘செவலைக்குப் புல்லைப் போட்டியா?’ என்கிறார். அவருக்குள் பெருங்கவலை வந்து குடிகொண்டது. ‘ச்சே பாசமா வளர்த்த மாட்டை, இப்படி வித்துத் தொலைச்சுட்டேனே?’ என்று எதையோ இழந்த மாதிரி அலைந்துகொண்டிருந்தார். எப்போதும் செவலை பற்றிய சிந்தனை. முன்பெல்லாம் எடுத்தெறிந்து பேசாதவர், இப்போது எதற்கெடுத்தாலும் எரிந்து விழத் தொடங்கினார்.

 மாட்டை விற்ற நான்கு நாள்களுக்குப் பின், ஒரு காலையில் அவர் சின்ன மகன், பெரிய மகனுக்கு போன் பண்ணிச் சொன்னான். ‘ஏல, நீ சீக்கிரம் கெளம்பி வா. அப்பாவுக்கு ஒரு கையும் காலும் இழுத்துக்கிட்டு’ என்று.

நன்றி: ஆனந்த விகடன்.

No comments: