Saturday, January 9, 2010

ட்வின் டவர் பாண்டேவும் கென்டிங் பாண்டியும்





ஒண்ணு மண்ணா இருந்த பயலுக்கு கிடைக்காத சொத்து, கிடைச்சு போனதால வந்த சந்தோஷத்துல சொன்னான்:
'ஏல மலேசியா போலாம்'. தலையாட்டுவதை தவிர வேறென்ன இருக்கிறது.
ஒவ்வொரு டிராவல் ஏஜெண்டாக ஏறி, இறங்கி, சீப்பாக கிடைத்தது ஒரு டூர் பேக்கஜ்.
'ஏல இவன் நெசமா கூட்டிட்டு போவானா? இல்லை அங்கயே விட்டுருவானா" என்ற நண்பனின் சந்தேகம் டிராவல்ஸ்காரன் காதில் விழ, '15 வருஷமா இதை பண்ணிக்கிட்டிருக்கோம். அப்படிலாம் பண்ணினா, இங்க நாங்க வாழ முடியுமா?' என்றதில் வேர்விட்டது நம்பிக்கை.

அதிகாலை 2.30 ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் பிளைட்டுக்கு நாங்கள் ஏர்போர்ட் போனது இரவு 10 மணிக்கு. 11 மணிவரை சொந்த பந்தங்களுக்கு டாட்டா காட்டி, 'ஏல, அதை வாங்கிட்டு வா, இதை மறந்திராத"களுக்கு தலையாட்டிவிட்டு உள்ளே சென்றோம். இமிக்கிரேஷனில் நண்பனை துளைத்தெடுத்துக்கொண்டிருந்தார் அதிகாரி. என்னவென்று விசாரித்ததில், பாஸ்போட்டில் பழைய வீட்டு முகவரி இருக்க, புது வீட்டு அட்ரசையே பார்மில் எழுதினானாம். பிறகு சொந்தக்கார லோக்கல் அதிகாரி சொன்னதன் பேரில் தப்பித்தான். அப்பாடா என்றிருந்தது.

2.30 வரை என்னசெய்வதென்று தெரியாமல், போடப்பட்டிருந்த சேரில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்தால், ஒலிபெருக்கியில் வரும் அனொன்ஸ்மெண்ட்கள் அதை கெடுத்தன. ஸ்மோக்கிங் ஸோன் உள்ளே இருந்துகொண்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை காலிபண்ணியும் 2.30 ஆகவில்லை. ஒவ்வொரு பிளைட்டுக்கும் செல்லும் பயணிகளின் முகத்தை மேய்ந்துவிட்டு, திரும்பவும் உட்கார்ந்தால் 1.30 என்றது மணி.
ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ்லாம் கீழ வந்திருங்க என்று அறிவிப்பில் பதறிகொண்டு கிழே போனால் மொத்தமே 40 பேர் தான். பிளைட்டை கேன்சல் பண்ணிடுவாங்களோ என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அடிக்கடி பிரயாணிக்கும் ஒருவர் சொன்னார்.
'அப்படிலாம் பண்ணமாட்டாங்க... சிங்கப்பூர் போற ஏர் இந்தியா பிளைட்டுல அனுப்பிடுவாங்க"
எப்படியோ, போய் சேர்ந்தால் சரி என்று நினைத்துக்கொண்டோம். சரியான நேரத்துக்கு உள்ளே அனுப்பி விட்டார்கள். ஏறிய சிறிது நேரத்திலேயே விண்டோ சீட் சண்டை.
ஏர்ஹோஸ்டஸ், 'முதல்ல அங்கங்க உட்காருங்க.. அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார். பார்த்தால்...அட ங்கொய்யால, எவ்வளவு சீட்டு ப்ரி.
டேக் ஆப் ஆனதும், 'யாரு விண்டோ சீட் வேணும்னு கேட்டது?'
விண்டோ சீட் கிடைக்காத எல்லாருமே எழுந்து நிற்க, எனக்கு கிடைத்தது றெக்கை அருகில்!. பிறகுதான் தெரிந்தது. பயணிக்கிறது ராத்திரி. கீழ ஒரு மண்ணும் தெரியலை. எதுக்கு இப்ப விண்டோ சீட்.

கூட வந்த புண்ணியவான், அருகிலேயே நன்றாக தூங்கியிருந்தான். நானும் தூங்குவதற்கு பல முறை முயன்றும் முடியாமல் போயிருந்தது. அடிக்கடி பிளைட், நம்மூர் டவுண் பஸ் மாதிரி, தட தடவென ஆடும் சத்தம் வேறு பீதியை கிளப்பியதால் முழு தூக்கமும் அம்பேல்.
காலை அவங்க டைம் 9 மணிக்கு கோலாலம்பூர் ஏர்போர்ட். இறங்கி செல்பவர்களின் பின்னால் சென்று, இமிக்கிரேஷன் முடித்து சென்றால், ஏர்போர்ட்டை ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கொள்ளை அழகு.

ஏர்போர்ட் டூ வாசலுக்கு டிரைன். வெளியே வந்தால் மிஸ்டர் கப்பன் என்று போர்டு வைத்துக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதென்னடா கப்பன். கொஞ்சம் தயக்கமாகவே நண்பன், 'ஐயெம் குப்பன்' என்றார். 'யெஸ்... வெல்கம் சார்" என்று கைகுலுக்கி விட்டு வேனில் ஏறினோம்.
'மாப்ள நீ எப்படிடா கப்பன் ஆனே" என்று சிரித்துக்கொண்டிருக்கையில், 'நீங்க தமிழா... நான் தெலுங்கோன்னு நினைச்சேன்' என்றார் டிரைவர்.

உங்களுக்கு எந்த ஊரு? எங்க தாத்தா திண்டுக்கல்லு... என்று தொடங்கி, மலேசியாவின் அருமை பெருமைகளை விளக்கி கொண்டு வந்த்வரிடம் , கொஞ்சம் வண்டிய நிறுத்த முடியுமா? என்றான் நண்பன்.

நாளைக்கு தொடர்றேன்.

11 comments:

Anonymous said...

என்னென்ன இன்பச்சுற்றுலா மேட்டரா..?சுவாரசியமா தொடர்ந்து எழுதுங்க.

ஆடுமாடு said...

நன்றி தம்பி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட மலேசியா சுற்றுலா .. ம் :)

குசும்பன் said...

உங்க நண்பர் ரொம்ப நல்லவரு போல:)

Thekkikattan|தெகா said...

எந்த வெளிநாடுன்னு, கேக்கணுமின்னு நினைச்சேன். மலேசியாவா. நல்லாருக்கும் ஒரு லாங் ட்ரிப் பேருந்தில செய்யுங்க, மேற்கு கடற்கரையோரம். நல்லாருக்கும்.

//பயணிக்கிறது ராத்திரி. கீழ ஒரு மண்ணும் தெரியலை. எதுக்கு இப்ப விண்டோ சீட். //

:)) முதல் பயணமா? எஞ்சாய்!

பா.ராஜாராம் said...

சுவராசியம்.தொடருங்கள்.

ஆடுமாடு said...

முத்துலட்சுமி ஆமா, போய் நொந்த கதை...
நன்றி..


//உங்க நண்பர் ரொம்ப நல்லவரு போல:)//

ஆமா, குசும்பு. அநியாயத்துக்கு! நன்றி.

ஆடுமாடு said...

//நல்லாருக்கும் ஒரு லாங் ட்ரிப் பேருந்தில செய்யுங்க, மேற்கு கடற்கரையோரம். நல்லாருக்கும்//


அய்யோ தெகா சார், அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லாம போச்சு.

ஆடுமாடு said...

ராஜாராம் வருகைக்கு நன்றி.

☼ வெயிலான் said...

ரொம்ப நாளா எதிர்பாத்துட்டிருந்த பதிவு அண்ணாச்சி!

இது முதல் பயணமா? இல்ல இப்ப போனதா?

ஆடுமாடு said...

வெயிலான் இது இரண்டாவது பயணம். இப்ப போனது.

நன்றி