Wednesday, May 25, 2016

ஆதலால் தோழர்களே...4

1987. செப்டம்பர் 30.

பொதுக்கூட்டத்தில் தனி ஆளாக, பரமசிவம் கர்ஜித்துக் கொண்டிருந்தார். அது, ஈழத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனுக்கான இரங்கல் கூட்டம் என்பது பிறகுதான் எல்லாருக்கும் தெரிந்தது. திலீபன் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தன. பெரும் மவுனம் அங்கு நிலவியிருந்தது. இப்படியொரு மவுனத்தை எந்தக் கூட்டத்திலும் கண்டதில்லை என்பது போல, ஊர், பரமசிவத்தின் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தன.

ஈழப்போராட்டத்தின் வரலாறை, ஆயுதத் தாக்குதலின் நியாயத்தை அவர் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார். திலீபனின் மரணத்தை அவர் விவரித்துச் சொல்லும்போது தன்னை அறியாமலேயே பரமசிவத்தின் கண்களில் கண்ணீர் கசிந்திருந்தது. கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கும் கண்ணீர் வந்தி ருந்தது.

பிறகு திடீரென குரலை உயர்த்தி, நெப்போலியனின் வீரத்தை ஒப்பிட்டு விடுதலைப் புலிகளின் வீரம் பற்றி பேசத் தொடங்கினார். பத்திரிகைகளில் வாசித்திராத இத்தகவல்கள் பரமசிவத்தின் மீது ஊருக்குள் இன்னும் மரியாதையை அதிகரித்திருந்தது. வழக்கமாக வரும் கூட்டத்தை விட இன்று அதிகமானவர்கள் திரண்டிருந்தனர்.

பாலஸ்தீனப் பிரச்னையில் யாசர் அராபத்தை ஆதரிக்கும் ராஜீவ் காந்தியே, ஈழப் பிரச்னையில் நீங்கள் ஏன் பிரபாகரனை ஆதரிக்க மறுக்கிறீர்கள்? இரண்டுமே ஒரே பிரச்னைதான். இருவருமே தங்கள் மண்ணுக்காகப் போராடுபவர்கள்தான். உங்களுக்கு எல்லாம் தெரிந்தும் ஏன் தமிழனைக் கொல்வதில் குறியாக இருக்கிறீர்கள்?...' பேச்சுத் தொடர்ந்துகொண்டிருந்தது.
சுமார் ஒன்றரை மணி நேரப் பேச்சுக்குப் பிறகு, 'ஈழம் வெல்லும், தமிழன் வெல்லுவான், தமிழனின் வீரம் வெல்லும்' என்று முழங்கிவிட்டு கீழிறங்கினார் பரமசிவம்.

தூரத்தில் இருந்த நான்கைந்து பேர் ஓடி வந்து பரமசிவத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். ஒருவன் சோடா வாங்கி கொடுந்தான். சில கேள்விகளையும் அதற்கான விளக்கங்களும் அங்குத் தொடர்ந்து கொண்டிருந்தன. கூட்டம் முடிந்ததும் எப்போதும் காலியாகிவிடும் பிள்ளையார் கோயில் பகுதி, இப்போது பரமசிவத்தைச் சுற்றி நின்று கொண்டது.

வேகமாக நான்கைந்து சைக்கிளில் வந்த காங்கிரஸ்காரர்கள் இருட்டுக்குள் நின்று கொண்டு பரமசிவத்தை நோக்கி கல்லால் எறிந்தார்கள். அங்கு கூடியி ருந்தவர்கள் மேல் கல் தொடர்ந்து விழவும், 'ஏல யாரை எறியுத?' என்று பதிலுக்கு இவர்கள் திருப்பிக் கல் எறிந்தார்கள். பரமசிவத்தின் முதுகில் வந்து விழுந்த கல்லை அப்படியே பிடித்து, அதைக்கொண்டு திருப்பி எறிந்தார்.

இப்போது மேலத் தெருவில் கடை வைத்திருக்கும் மூக்கன், இன்னொரு சைக்கிளில், கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் வந்து நின்று, 'ஏல பரம்சம்? ராஜீவ் காந்தியவால தப்பா பேசுத? மேக்க நீ நடக்க முடியாது. காலை ஒடிக்கனா இல்லையான்னு பாரு' என்றதும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்துகொண்டனர்.

'யோவ் நீ என்ன மயிரைப் புடிங்கிருவேருன்னு பாப்போம். யாரு காலை யாரு ஒடிக்காவோன்னு பாக்குமாவே? என்றொரு குரல் பரமசிவம் பக்கம் இருந்து சென்றது.

இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்த கூட்டம் பிள்ளையார் கோயில் முன் மீண்டும் கூடிவிட்டது.

'ஏ பரம்சம் என்னடே பிரச்னை? எவன்கிட்ட வந்து எவன் மோதுதான். எவன் சொட்டைய மொறிக்கணும்னு சொல்லு'

கூட்டம் கூடியதும் காங்கிரஸ்காரர்கள் சென்றுவிட்டார்கள்.

கணேசனும் டெய்லர் பழனியும் பரமசிவத்துக்கு கை கொடுத்துவிட்டு, 'பிச்சுட்டேரு பிச்சி. காலேல பாப்போம்' என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருக்கிற வீடுகளுக்கு நடந்தார்கள்.

'வீட்டுல யாராது பாத்து, மோதிரத்தை எங்கன்னு கேட்டா, என்னல சொல்லுவே?' என்று பழனியிடம் கேட்டான் கணேசன்.

'எங்கய்யா திண்ணையில படுப்பாரு. நான் மச்சியில படுக்கப் போறேன். எப்டி பாப்பாரு?'

'இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காது தெரியதானல போவுது'

'தெரிஞ்சன்னைக்கு பாத்துக்கிட வேண்டியதாம்'

விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளனான பழனிதான், தன் மோதிரத்தை விற்று இந்த இரங்கல் கூட்டத்தை நடத்தினான் என்பது ஊருக்குள் யாருக்கும் தெரியாது.


உள்ளூரில், பரமசிவத்தின் பேச்சுக்கு ஒரு கூட்டம் தயாராக இருந்தது. அவரது பேச்சை வர்ணிக்க, புகழ என்று ஒரு வட்டம் ஏற்பாடாகி இருந்தது. அந்த வட் டம் அவர் தலையில் பெருஙகிரீடம் ஒன்றைச் சூட்டுவதைப் பெருமையோடு ஏற்றுக் கொண்டிருந்தார் பரமசிவம்.

'கட்சியில எல்லாரும்தான் பேசுதானுவோ. உம்பேச்சுமாதிரி வருமாடே?'

'வார்த்த வந்து விழணும்லாடா. சரஸ்வதி குடியிருந்தாலா, அதெல்லாம் வரும்'

'எந்த சரஸ்வதியை சொல்லுத, நொடிஞ்சான் பொண்டாட்டியவால?'

-என்றதும் கூட்டம் சிரிக்கும். மவுனமாக ரசிப்பார் பரமசிவம். இந்தப் போதையில் இருக்கும்போதுதான், ஒரு நாள் திடீரென பெருமழை பெய்யத் தொடங்கியது. பிள்ளையார் கோயிலில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், முருகேசன் டெய்லர் கடையில் ஒதுங்க வேண்டியதாகிவிட்டது பரமசிவத்துக்கு. முருகேசன், தையலும் பாடலும் என்றிருப்பவர். மற்றபடி மேடை பேச்சுக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை. இருந்தாலும் பரமசிவம் ஈழம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசியதைக் கேட்டு அவருக்கு ரசிகனாகி விட்டார்.

'கடையில இருந்துதான் கேட்டேன் பாத்துக்க. என்னால இருக்க முடியல. வா வான்னுலா இழுத்துச்சு, ஒம் பேச்சு. கடைய மூடிட்டு மேடை கிட்ட வந்துட்டம்னா பாரேன்.  நீலாம் இங்க இருக்க வேண்டிய ஆளா சொல்லு?' என்று முருகேசன் சொன்னதில் இருந்து, அவன் கடையிலும் சில நேரம் பொழுதுபோக்குவார் பரமசிவம்.

மழை வேகமாகப் பெய்யத்தொடங்கிவிட்டது. இன்னும் பத்தெட்டு வைத்தால் வீடு வந்துவிடும். நனைதல் ஒன்றும் அவருக்குப் புதிதில்லை என்றாலும் முரு கேசன் கடையில் ஒதுங்கினார். உள்ளே, அவனில்லை. அவனின் இரண்டாவது மனைவி ஜெயதேவி, முகமெல்லாம் பவுடர் அப்பி, ஜாக்கெட்டுக்கு ஊக்கு வைத்துக் கொண்டிருந்தாள்.

முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாததால், அவளை அறுத்து விட்டுவிட்டு, இவளைக் கட்டி வைத்தார்கள் முருகேசனுக்கு. ஆனால், இவளுக்கும் குழந் தைப் பிறக்கவில்லை என்ற பிறகுதான் நொடிந்து போனான் முருகேசன்.

ஜெயதேவி, பரமசிவத்தைப் பார்த்ததும் கூந்தலைப் பின்னோக்கித் தள்ளி விட்டு, 'வாங்க' என்றாள் கதவை நன்றாகத் திறந்து.

'பரவால்ல' என்று வாசலிலேயே நின்றுகொண்டார்.

'நனையாதீங்க, சும்மா உள்ள வாங்க' என்றாள் அவள். இரண்டு அடி கடையின் உள்ளே சென்று நின்றுகொண்ட பரமசிவன் அவளைப் பார்த்துச் சிரித்தார்.

'முருகேசன காணும்?'

'தெப்பக்குளத்துக்கு போன ஆள, இன்னும் காணல. ஒரு மணி நேரமாச்சு, என்ன செய்தாவளோ?' என்றவள், 'இந்தா நாற்காலில உக்காருங்களேன்' என்று சொல்லிவிட்டு, அதில் ஊக்கு வைப்பதற்காகப் போடப் பட்டிருந்த, தைக்கப்பட்ட ஜாக்கெட்டுகளை கீழே எடுத்து வைத்தாள்.

'இல்ல. இன்னா, நின்னுரும். வீட்டுக்கு போவ வேண்டியதாம்'

'அக்காவுக்கு கழுத்து வலின்னு சொன்னாவுளே. இப்பம் பரால்லையா?'

'பரவால்ல. சின்ன வலிதான்'

'ம்ம்...' என்ற ஜெயதேவி, சிறிது அமைதிக்குப் பிறகு, 'அன்னைக்கு கூட்டத்துல ஒங்க பேச்சுதான் டாப்பு' என்று சொல்லிவிட்டு, தனது சேலை முந்தானையை, சரி செய்தவாறே சிரித்தாள்.

'நல்லாருந்துச்சா?'

'ம்ம்'

மழை இன்னும் பெய்துகொண்டிருந்தது. கடைக்கு வெளியே மழைக்கு ஒதுங்கிய வெள்ளாட்டங்குட்டி, உடலைச் சிலுப்ப, தண்ணீர் சிதறி, பரமசிவத்தின் மேலே தெறித்தது. சிலிர்த்தது உடல்.

அது கடையோடு சேர்ந்த வீடு. முன்பக்கம் கடை, பின்பக்கம் வீடு.

'காபி குடிக்கேளா? போட்டாரட்டா?'

'வேண்டாம், வேண்டாம். இப்ப போயிர்வேன்'

'ஏன், செத்த இருந்தா ஆவாதா? மழைக்கு எதமா இருக்கும், கொண் டாரன்' என்ற ஜெயதேவி, கையில் இருந்த ஜாக்கெட்டை மெஷின் மீது வைத்துவிட்டு, வீட்டுக்குள் போனாள்.

அவள் சென்றதும் அவள் முகத்தில் அப்பியிருந்த பவுடரின் வாசனை திடீரென்று வந்து பரமசிவத்தின் மூக்கில் மோதியது. வீட்டுக்குள் சென்றுகொண்டிருக்கும் அவளைப் பார்த்தார் பரமசிவம். இடுப்பை ஆட்டி ஆட்டிச்செல்லும் அவளின் பின்பக்கம், அவரை இழுத்தது. அவள் மேலான போதை இப்போது இழுக்கத் தொடங்கியது. கட்டுக் குலையாத குள்ளமான அவள் தேகம் அவருக்குள் ஏதோ செய்தன. மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டார். இருந்தாலும் சொல் பேச்சு, கேட்பதல்ல அது.

ஜெயதேவி, திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு வரைப் படித்துவிட்டு வீட்டில் பீடி சுற்றிக்கொண்டிருந்தாள். அப்போதே, அவளுக்கு காதல் கடிதங்கள் அதிகமாகக் கிடைத்தன. அவள் எங்கு சென்றாலும் எங்கெங்கும் பயல்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. அவளே வேண்டாம் என்று இருந்தாலும் பயல்களின் கழுகுப்பார்வையில் அவள் என்றேனும் விழுந்து விடுபவளாகவே இருந்தாள். வயது அப்படியொரு இம்சையை கொடுத்திருந்தது. இதைப் புளி வியாபாரியான அவளது அப்பா அறியாதவரல்ல.

ஜோஸ்யக்காரன், 'சொல்லுதம்னு தப்பா நெனைக்காதீரும். ஒம்ம மவா ராசிக்கு ரெண்டாம் தாரமாத்தான் போவா. அதுதான் நடக்கும். ஒமக்கு சந் தேகமா இருந்தா, வேற ஜோஸ்யர்ட்ட வேணாலும் கேட்டுக்கிடும்' என்று சொன்னதில் இருந்து உடைந்து போய்விட்டார் அப்பா. ஜோஸ்யக்காரன் சொன்ன, நான்காவது மாதமே சொந்தக்காரர்களின் துப்பில், அமைந்தது இந்தக் கல்யாணம். இதுதான் திருநெல்வேலி டவுண், பாட்டபத்து பகுதியைச் சேர்ந்த ஜெயதேவி, இந்தக் கிராமத்துக்கு வந்த கதை.

ஊருக்கு வந்த புதிதில், தான், நகரத்துக்காரி என்கிற கவுரவம், அவளது  பேச் சில் தெறிந்துகொண்டிருக்கும். யாரிடமும் அதிகமாக ஒட்ட மாட்டாள். வெளியூர் சென்றால் மட்டுமே செருப்பு அணிபவர்களாகப் பெண்கள் இருந்த ஊரில், எப்போதும் செருப்பு அணிந்துகொண்டு வெளியில் நடப்பவளாக இருந்தவள் ஜெயதேவி மட்டுமே. அவள்தான் தெருக்காரப் பெண்களுக்கு சினிமா படங்களின் ரசனையையும் தான் வாசித்த சினிமா கிசுகிசுக்களையும் பரப்புவளாகவும் இருந்தாள். வார இதழ்களையும் மாத நாவல்களையும் விரும் பிப் படிப்பவளாகவும் அவள் இருந்தாள். இப்படிப் படித்துவிட்டு மாலை வேளைகளில் வாய்க்காலில் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, அந்தக் கதைகளை, அதில் வரும் காதல் காட்சிகளை, பாலியல் குற்றங்களை மற்றவர்களுக்கு ரசித்துச் சொல்பவளாகவும் இருந்தாள்.

 மழை இன்னும் விடவில்லை. காபியை ஆற்றிக்கொண்டே வந்தாள் ஜெயதேவி. 'ரொம்ப ஆத்தாண்டாம்' என்று வாங்கினார் பரசிவம். வேண் டுமென்றே அவளது கைகளைத் தொட்டார். அது தெரிந்து நடக்கிற தொடுதல் என்பது அவளுக்கும் தெரிந்ததுதான். அவள் மெதுவாகப் புன்னகைத்தாள். பரமசிவத்துக்குள் வேறு சிந்தனை, பொங்கத் தொடங்கியது.

(தொடர்கிறேன்)

No comments: