Saturday, November 10, 2012

துணிகள் மணக்கும் கடை

முத்தையா மாமாவை பாடல்களோடு பார்த்துதான் பழக்கம். ஒன்று, அவர் பாடுவார். இல்லையென்றால் அவர் வைத்திருக்கிற டிரான்சிஸ்டர் பாடும். தலையை இங்கும் அங்கும் ஆட்டிக்கொண்டோ, உதட்டைக் கடித்துக்கொண்டோ அல்லது விரல்களால் சொடக்குப் போட்டுக் கொண்டோ, பாடல்களை அவர் ரசிக்கையில் உற்சாகம் வரும். சில நேரங்களில், தலையை அசைத்து ‘கொன்னுட்டாம்லெ' என்று அவர் சொல்வது ரசனையின் உச்சம்.


‘பாடல்களை ரசிக்கத் தெரிந்துவிட்டால் கவலைகள் கானல் நீர்' என்று தத்துவம் வேறு சொல்கிற முத்தையா மாமாவின் அடையாளம், சிதைந்து விழாத குருவி கூடு தலை முடியும் அச்சு வைத்து ஒட்டியது போன்ற நெற்றி திருநீறும். உடல் நலமில்லாமல் படுத்திருந்தால் கூட, குருவி கூடு தலைமுடி மட்டும் கலையாதிருப்பது எப்படி என்கிற ரகசியம் எனக்குப் புதிராகவே இருக்கும்.

முத்தையா மாமா, புனேவில் சில வருடங்கள், டெய்லர் கடை ஒன்றில் வேலை பார்த்துவிட்டு வந்து தனிக்கடை போட்டவர். பக்கத்து சிறு டவுன்களான அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சிகளில், ‘பாம்பே டெய்லர்'கள் பிரபலமாக இருந்ததால், உள்ளூரில் ‘புனே டெய்லர்’ கடையை துவக்கினார். இந்த பெயர், புனா, பூனா, போனா என்று உள்ளூர்க்காரர்களால் பாசமாக அழைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் செய்யப்பட்டு வந்தது. மாந்தோப்புக்குள் குடிசைப் போட்டிருக்கிற பெருமாள் தாத்தா, ‘ஏலெ, பேனா டெய்லரு இருக்கானா?’ என்று கேட்டதில் இருந்துதான் முத்தையா மாமா, நொந்து போனார்.

‘ஊரு பூரா ஒவ்வொரு பேரா சொல்லுதானுவோ, பெறவு நான் எதுக்குடெ இந்த கடைக்கு பேர் வச்சிருக்கேன்' என்று ஓவர் வெறுப்பில் அந்த போர்டை தூக்கி, கடைக்குள் போட்டுவிட்டார். பிறகு பெயர் இல்லாத கடையாகவே இருந்தது அது.

தையல் மெஷினை வைத்து டெய்லர் கடை என்று சொல்லப்பட்டாலும் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு இசை தொடர்பான கடையோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தும். கடையின் இடது பக்கத்தில், அதாவது முத்தையா மாமா அமர்ந்து தைக்கிற இடத்துக்கு அருகில் இருக்கிற கபோர்டில் டிரான்சிஸ்டர், டேப் ரிக்கார்டர், கேசட்டுகள் என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

தினமும் முதல் பாடலாக, ‘இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு' ஓடும். கடை திறக்கும்போதே ஸ்பீக்கரில் பாடல் கேட்க வந்துவிடுகிற ரசிகர்களும் உண்டு என்பதால், சிலருக்கு இது நேயர் விருப்பம். பாடல் முடிந்ததும் ‘இந்த பாட்டுல ஸ்ரீதேவி உதட்டை சுழிப்பா பாரு...' என்று விவரிப்பார் முத்தையா மாமா. ‘அவா கூட ஒருத்தம் வாராம்லா. அவன் யாருண்ணே?' என்பான் ஒருவன். ‘ரவிக்குமாரு' என்று பதில் வரும். பாட்டும் விளக்கமுமாக போகும் கடைக்கு அருகில் அருணாசலம், சுக்காப்பி கடை வைத்திருந்தார். கொஞ்சம் வயதானவர் என்பதாலும் இளம் வயதில் மகளொருத்தி இருப்பதாலும் அவருக்கு பாடல்கள் மீது வெறுப்பு.

‘ஏய் முத்தியா, சத்தத்தை கொறச்சு வைக்கலாம்லா. கடெக்குள்ள ஏதும் பேசமுடியுதா? தெனமுமாடெ இதை சொல்லுவாவோ. சின்ன புள்ளயாவே இன்னும் இருக்கியெ?' என்று அவர் கொஞ்சம் சத்தம் போட்டதும், ‘இவம் செத்து தொலெய மாட்டாம் போலுக்கெ’ என்று முணுமுணுத்துக் கொண்டே குறைப்பார்.
பொங்கல், சித்திரை விசு, தீபாவளி காலங்களில் பிசியாகிவிடுவார் மாமா. புதிதாக கல்யாணம் ஆகி ஊருக்கு வந்திருக்கிற மற்றும் கல்லூரி, பள்ளி இறுதி படிக்கும் பெண்களுக்கான டைட் ஜாக்கெட்டுக்கு முத்தையா மாமா கியாரண்டி என்பதால் பெண்களின் கண்கள் இந்தக் கடையை அவ்வப்போது மொய்த்துக் கொண்டிருக்கும். ஆண்களுக்கான பேன்ட், சட்டைகளில் விதவிதமான புனே ஸ்டைல்களையும் பெண்களுக்கு பஃப் கைகளையும் ஊருக்குள் அறிமுகம் செய்திருந்ததில் மாமாவுக்கு பெருமைதான். ஸ்கூல் படிக்கும் வரை மாமாவிடம் சட்டை, டவுசர் தைக்கக் கொடுக்கும் பயல்கள் காலேஜுக்கு சென்றதும் கொடுக்க மாட்டார்கள். ‘இன்னும் ஸ்டைலா தய்க்கணுன்டெ' என்று டவுன் கடைகளுக்குப் போவார்கள்.

ஆனால், ‘எங்க ஊர்ல உள்ள கடையை விட்டுட்டாங்கும் ஒங்க கடெயில தய்க்க கொடுக்கேன். நல்லா தச்சுத் தரணும்’ என்று பக்கத்தூர்களில் இருந்து, பீடி கடைக்கு வருகிற பெண்கள் சொல்லும்போது மாமாவுக்கு வருகிற புன்னகையில் கர்வம் இருக்கும். அந்த பெண்களில் ஒருத்தியை, மாமா காதலிப்பதாகவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ரயில்வே கேட்டுக்கு அருகே சந்திப்பதாகவும் ஊரில் பரவியிருந்த கிசு கிசு, அவருக்கும் தெரிந்திருக்கலாம்.

பொங்கல், சித்திரையை விட தீபாவளிக்குதான் அவரால் தாக்குப் பிடிக்க முடியாது. எதிர்பார்க்காத அளவுக்கு துணிகள் வந்து குவியும். டேபிளில் அவற்றை விரித்து போட்டு அளந்து, சாக் பீஸால் கோடு கிழிப்பார். இல்லையென்றால் வலது கை பெருவிரலில் நீட்டமாக வளர்த்திருக்கிற நகத்தால் துணியை மடித்து, சரட் சரட் என்று இரண்டு இழு. துணி மடங்கிவிடும். நான்கைந்து துணிகளை, டெய்லர் கடைகளுக்கென்றே பெரிதாக இருக்கிற கத்திரியால் வெட்டிய பிறகு, தைக்கத் தொடங்குவார். வேகவேகமாக வேலை நடக்கும். புது துணிகளின் வாசனை நிறைந்திருக்கிற கடையில், பட்டன் வைக்கும் கொடுக்கு ராசு, தூங்கி விழுந்துகொண்டே இருப்பான். தீபாவளி நெருங்க நெருங்க வேலைகளோடு டென்ஷனும் அதிகரிக்கும்.

‘தய்க்க கொடுத்து எவ்வளவு நாளாச்சு? இன்னுமாய்யா தய்க்கலெ' என்று யாராவது கேட்டால்தான் அவர்களின் துணிகள் ஞாபகத்துக்கே வரும். பிறகு, ‘நாளைக்கு வாங்கெ மைனி' என்று அன்பாகச் சொல்லிவிட்டு அவசரம் அவசரமாகத் தைத்துக் கொடுப்பார்.

‘இன்னும் ஒரு நா தானடெ இருக்கு தீவாளிக்கு. எப்பம் தச்சு தருவெ?' என்கிற கேள்விகளுக்கு, ‘தச்சுட்டு நானே கொண்டாரென்' என்று ஒரு பொய். இதையெல்லாம் தாண்டி புது சட்டை, டவுசர் கனவுகளில் இருக்கிற சின்ன பையன்கள் விடியும் வரை கடையிலேயே இருந்து தூங்கி, தைத்த துணிகளை வாங்கிவிட்டு போய் உடுத்துவதில் இருக்கிற மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.

தீபாவளிக்கு முதல்நாள் கடைக்கு வெளியே இரண்டு டியூப் லைட் கட்டப்பட்டு பளிச்சென்று இருக்கும். பாலன் சவுன்ட் சிஸ்டத்தில் இருந்து, இரண்டு பெரிய ஸ்பீக்கர்களை இறங்கிவிட்டு போயிருப்பார்கள். கடையின் வல, இட பக்கங்களில் அவை வைக்கப்பட்டு விடிய விடிய ஒலிக்கும் பாடல்கள். அக்கம் பக்கத்து வீடுகளில், ‘பண்டம்' செய்ய இரவு முழுவதும் முழிக்க வேண்டி இருப்பதால் இந்த பாட்டு சத்தத்தை கண்டுகொள்ள மாட்டார்கள். சட்டைகளுக்கு பட்டன், ஜாக்கெட்களுக்கு ஊக்கு வைக்கத் தெரியாதவர்களும் தற்காலிக பணியாளர்களாகி இருப்பார்கள். முத்தையா மாமாவின் வீட்டிலிருந்து சில மணி நேர இடைவெளியில், தூக்குச் சட்டியில் காபி வரும். அதை கொண்டு வருகிற அவரது அம்மா, ‘எனக்காவது பரவால்லலெ. தங்கச்சிக்கு மொதல்ல தச்சு தா' என்று ஏக்கமாக கேட்கும். ‘ தாரென்’ என்று எரிச்சலாகச் சொல்லிவிட்டு வேலையில் கவனம் செலுத்த தொடங்குவார்.

உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துவிட்டு வாய்க்காலுக்கு குளிக்கச் செல்பவர்கள், விடிந்துவிட்டதை ஞாபகப்படுத்தி போவார்கள். இன்னும் நான்கைந்து ஜாக்கெட்டுகளும் சில டவுசர், சட்டைகளும் தைக்கப்படாமல் இருக்கும்.

‘இதுலாம் யாருக்குள்ள துணில' என்பார் கொடுக்கு ராசுவிடம்.

‘ரெண்டு ஜாக்கெட் துணி ஒங்க தங்கச்சிக்குள்ளது. ஒண்ணு ஒங்கம்மாவுக்கு. டவுசர், சட்டை, பூசாரி மவனுக்கு'.

‘டவுசர், சட்டையை எடு' என்று அவசரம் அவசரமாகத் தைத்துவிட்டு குளிக்க கிளம்புவார் மாமா. தெருவில் புது துணிமணிகளை உடுத்திக்கொண்டு பொட்டு வெடிகளையும் அவுட்டு மற்றும் ஓலை வெடிகளை வெடிக்கத் தொடங்கி இருப்பார்கள். அக்ரஹார தெருவில் இருந்து லட்சுமி வெடிகளும் ராக்கெட்டுகளும் வானத்துக்கும் பூமிக்கும் வெடிக்கும். இந்த சத்தத்தில் குளிக்கப் போகும் முத்தையா மாமாவுக்கு தூக்கமாக வரும். எரியும் கண்களை மூடி திறப்பதற்குள் ஜிவ்வென்று இருக்கும்.

பிறகு வீட்டுக்குப் போவார். சாப்பிட்டுவிட்டு டிரங்கு பெட்டியில் இருந்து பாச்சா உருண்டை மணக்கும் சட்டைகளில் ஒன்றை அணிந்துகொள்வார். கடையின் முன், சம்பிரதாயத்துக்காக நான்கைந்து வெடிகளை போட்டுத் தாக்குவார். ‘ஊருக்கெல்லாம் துணி தய்ச்சு கொடுக்க. ஒனக்கு?' என்று யாராவது கேட்டால், ‘நமக்கெலாம் தெனமும் தீபாளிதான் மாப்ளெ' என்று சொல்லிவிட்டு சிரிப்பை உதிர்ப்பார். அடுத்து, தங்கச்சி ஜாக்கெட்டை தைத்து முடித்ததும் கொடுக்கு ராசுவுக்கும் தற்காலிகப் பணியாளர்களுக்கும் தீபாவளி காசு வழங்கப்படும். அதற்குள் வெடிவெடித்துவிட்டு நேயர் விருப்பக்காரர்கள், கடைக்கு வந்திருப்பார்கள். அதில் சிலர், நான்கைந்து அதிரசங்களையும் மெதுவடைகளையும் ‘அம்மா கொடுத்தாண்ணே' என்று கொடுப்பார்கள். எல்லாவற்றையும் தின்றுவிட்டு ‘தூங்கபோறென்டெ. பாட்டை மெதுவா போட்டுக் கேளுங்க' என்று கடைக்குள் துணியை விரித்து படுப்பார். கண்ணை இழுத்து வரும் தூக்கம். எழுந்திருக்கும் போது சாயங்காலம் ஆகியிருக்கும். அம்பை, அல்லது வி.கே.புரத்தில் சினிமா பார்க்க சைக்கிளில் ஒரு கோஷ்டி ரெடியாகி இருக்கும். அவர்களோடு ஐக்கியமானதும் கொண்டாட்டமாக முடியும் தீபாவளி.

கடந்த தீபாவளிக்கு ரெடிமேட் பேன்ட், சட்டை அணிந்திருந்த முத்தையா மாமாவின் மகன், வீட்டின் முன் அணுகுண்டுக்கு தீ வைத்துக்கொண்டிருந்தான். ‘டெய்லர் மவனெ, கொஞ்சம் பொறுய்யா. நாங்க போய்க்கிடுதம்' என்று தெருவைக் கடக்கிறவர்களின் சத்தம் கேட்டு, இறுமிக்கொண்டே வாசலுக்கு வருகிற முத்தையா மாமாவின் சட்டையில் பாச்சா உருண்டை வாசம் இன்னும் வந்துகொண்டிருந்தது.

13 comments:

settaikkaran said...

உங்களைத் தவிர நாங்கள் யாரும் பார்த்திராத முத்தையா மாமாவையும் அவரது பூனாக் கடையையும் கொஞ்ச நேரம் கண்முன்பு கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்! உங்களது நடை....அற்புதம்...அற்புதம்...அற்புதம்! உங்கள் விசிறியாகி விட்டேன்! :-)

சேக்காளி said...

தீவாளிக்கு ஊருக்கே கூட்டிட்டு போய்ட்டு வந்திட்டியளே

manjoorraja said...

தம்பி நலமா? சின்ன வயது தீபாவளியெ அப்படியே ஞாபகத்துக்கு கொண்டு வந்துட்டீங்க. நானும் இரவு முழுவதும் காத்திருந்து என் துணியை வாங்கி போயிருக்கேன். அந்த டைலர் பெயரும் முத்து.

ஆடுமாடு said...

சேட்டைக்காரன் சார் நன்றி.
.................


தீவாளிக்கு ஊருக்கே கூட்டிட்டு போய்ட்டு வந்திட்டியளே
நெசமாவா, சேக்காளி அண்ணாச்சி? நன்றி.

மாதேவி said...

ஊருக்கு எல்லாம் புதுத்துணி தைத்துக் கொடுப்பவர்கள் அவர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்.






இப்னு ஹம்துன் said...

உங்கள் எழுத்துகள் எனக்குப் புதிதல்ல என்றாலும் இம்முறை சேட்டைக்காரன் ஐயா இழுத்துவந்தார் என்னை. என்ன ஒரு அற்புதம். எனக்கு இதே அனுபவம் இருக்கிறது.

முத்தையா மாமா இடத்தில் கண்ணன் மாமா. என் தகப்பனாரின் தோழர். இதே போன்று ஊரெங்கும் அறியப்பட்ட, பெயரில்லாத கடை. பெருநாளைக்கு சட்டை தைக்கக் கொடுத்தால் பெருநாளன்று தான் தைத்துக்கொடுப்பார். அதுவும் தூக்கக் கலக்கத்தோடு. இப்போது அவருமில்லை, கடையுமில்லை.

நல்ல நாஸ்ட்டால்ஜிகா அனுபவம் எனக்கு. நன்றி

ஆடுமாடு said...

மஞ்சூர் ராஜா சார் நலம், நன்றி.

ஆடுமாடு said...

நன்றி மாதவி.


இப்னு ஹம்துன் சார் எல்லாருக்கும்
இப்படியொரு அனுபவம்
ஏற்பட்டிருக்கும். நன்றி.

சேக்காளி said...

அண்ணாச்சி நீங்க பதிலா எழுதுன காயிதம் கெடச்சது.சந்தோசம்.அப்புறம் மொத கடிதத்துல ஒரு விசயத்த கேட்டு எழுத மறந்துட்டேன். இறுமிக்கொண்டே வாசலுக்கு வந்த முத்தையா மாமாவோட தலையில குருவி கூடு தலைமுடி மட்டும் கலையாதிருந்ததா?.

paul vannan said...

excellent , visualizing and registering the old deepawali memories in writing like flawless screenplay cinema. I wish daily should be festival to see more cinema like this.
Best Regards ,

P.PAUL VANNAN.

துபாய் ராஜா said...

சின்ன வயசுல நமக்கும் ஒரு பாம்பே டெய்லர்தான். அப்புறம் திருநெல்வேலி ஸ்டார் டெய்லர். இப்பல்லாம் எல்லாம் ரெடிமேடு ஆகிப்போச்சு...

ஆடுமாடு said...

'//குருவி கூடு தலைமுடி மட்டும் கலையாதிருந்ததா?//
அப்ப குருவி கூடு தலைமுடி இல்லை அண்ணாச்சி.
............................
பால் வண்ணன் சார் நன்றி.
..............
துபாய் ராஜா அண்ணாச்சி, சுத்தி சுத்தி பாம்பே டெய்லர் தானே அப்ப. நன்றி.

Dino LA said...

அருமை