Wednesday, August 10, 2011

ஊர் என்பது, ஞாபகமாகவும் இருக்கலாம்

ஊர் என்பது அடையாளம் மட்டுமல்ல. அது ஏராளமான சுகங்களையும் துக்கங்களையும் அடைத்து வைத்திருக்கிற ஆழ் புதையல். ஒரு தெரு, ஒரு கோயில், ஒரு வாய்க்கால், ஆறு, வயல்வெளி சொல்லி தருகிற அல்லது சொல்லிப்போகிற அனுபவங்கள் நிறைய. வாழ்க்கையில படிக்கவும் வாழ்க்கையை படிக்கவும் ஊரில் இருக்கிறது ஏராள விஷயங்கள். அந்நிய தேசம் அல்லது நகரம் பிழைப்புக்கு படியளந்து கொண்டிருந்தாலும் பிறந்த ஊர்தான் உயிருக்குள் கடைசிவரை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் உயிர். அந்த ஊரின் மடியில் நாம் சப்பரமாகவும் இருந்திருக்கலாம், சம்மணம் போட்டும் அமர்ந்திருக்கலாம்.

ஊர் என்பது தவிப்பு. தினமும் நடந்து போகிற ஒற்றையடி பாதையின் சிறு மணல்கள், நம் பாதத்தின் வாசனை அறிந்திருக்கும். செடியோடு பேசவும் மரங்களோடு பாடவும் வீட்டுக்குள்ளேயே இருக்குமொரு, அணில்கள் ஏறி இறங்கும் தோட்டம். சிதறி கிடக்கிற இளநீர்களில் செவ்விளநீர் வெட்டித்தரும் அம்மாவின் வியர்வை இளிநீரோடு இனித்தே இருக்கும். தலை முடி கலைக்கும் எதிர் காற்று தந்துபோகும், தாத்தாவின் வெற்றிலை வாசம். தெப்பம் ஓடாத குளமும், தெருவுக்குள் வராத ஆலமரத்திண்டும் நித்தம் சொல்லும் ஏராள கதைகள். பறிக்க அழைக்கிற புளியம்பிஞ்சுகளின் காம்பும், பறிகொடுக்க தவிக்கிற கொடுக்காபுலிகளும் திருடச்சொல்லும் மாங்காய்களும் கிராமத்து ருசியை நாக்கில் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஊர் என்பது பாசம். தவிக்கவிட்டுப்போன தலைமுறைகளை தினமும் ஞாபகத்தில் வந்துகொல்லும். சாமி அழைப்போ, ஆழ்வார்க்குறிச்சி தேரோ, அம்மன் கோயில் கொடையோ... ஒரு திருவிழாவில் உற்சாகம் வீசிவிட்டு போகிறது ஊர். அந்த திருவிழாக்களுக்குள் ஒழிந்துகிடக்கிறது தாவணிகள் தாங்காத காதலும், பார்வைகள் எறிந்த ஏக்கங்களும். காலையில் பார்த்தும் மாலையில் நலம் விசாரிக்கும் பாம்படப் பாட்டிகளும், ஊன்றுகோல் வயதுதாண்டியும் மண்வெட்டி பிடிக்கும் இளைஞர்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது ஊர். ஆடுமாடுகளின் பிரசவம் பார்க்கும் கொம்பையா தாத்தாவும் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கும் கிட்னம்மாவும் எந்த வகுப்புக்கும் போகாமல் டாக்டரான ஆச்சரியம் இன்னும் இருக்கிறது. பச்ச உடம்புக்காரிக்கு பச்சிலை/கசாயம் தரும் மாடத்தி பாட்டியும் ஈசான மூலை பார்த்து வானிலை சொல்லும் மூக்கம்மா ஆச்சியும் அதிசயிக்க வைக்கிறார்கள் இன்னும்.

ஊர் என்பது காதல். தெரிந்தோ தெரியாமலோ எல்லா ஊர்களும் முதல்காதலை மூச்சுக்குள் முளைக்க விட்டுவிடுகிறது. மூச்சடங்கி விழும் வரையும் அது மூச்சுக்குள் வாழும் வித்தை விந்தையாகவே இருக்கிறது. பனிகாலத்திலும் அதிகாலை நேர ஆற்றுக்குளியலோ, காலைநேரத்து பேருந்து நிறுத்தமோ, மாலைநேரத்து வாய்க்காலோ, கருவைமுட்கள் வளர்ந்திருக்கிற தெருவோ... காதல் வளர்க்கும் இடங்களாக இருக்கலாம்.

ஊர் என்பது ஏக்கம். வயிற்றுப்பிழைப்புக்காக வாழ்க்கை, நகரத்துக்கு விரட்டிய பின்பும் நகராமல் இருக்கிறது ஏக்கமான ஊர். புழுதிக்காடும், பூ மணக்கும் வீடும், உருண்டு புரண்ட மண்ணும், விழுந்த எழுந்த குளமும் ஒரு நொடியில் ஊசிகுத்திப்போகிறது உயிர் பலூனில். இருந்தாலும் அன்றுபோலில்லை ஊர். புழுதிக்காடு சிமெண்ட் சாலையாகியிருக்கிறது. பூக்களற்று இருக்கிறது பூமணக்கும் வீடு. எப்போதும் குழுமியிருக்கும் தெப்பக்குளத்திண்டு ஆளின்றி தவிக்கிறது. மணல்கள் இல்லாத ஆற்றில் புதர் முளைத்திருக்கிறது. கூட்டங்களால் நிரம்பி வழிகிறது பேருந்து நிறுத்தம்... ஜனத்தொகையை மிஞ்சியிருக்கிறது உள்ளூர் கடைகள். சின்ன பசங்களை பெரியவர்களாக்கியிருக்கிறது டாஸ்மாக் போதை...
ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்!

18 comments:

Chitra said...

ஊரு நினைப்பை கிளறி விட்டுட்டீங்க..... பொக்கிஷ பதிவு.

ஆமினா said...

ஊர் ஞாபகம் வர வச்ச பதிவு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சமீபமா ஊருக்குப்போய்ட்டு வந்தீங்களா.. இல்லைன்னா.. ஊருக்குப்போக லீவெ குடுக்கமாட்டேங்கறாங்களா? :)

நல்லா இருக்கு பதிவு.

ஆடுமாடு said...

நன்றி சித்ரா மேடம்.

ஆடுமாடு said...

ஆமினா நன்றி

Balakumar Vijayaraman said...

ஊர் என்பது அடையாளம், ஆழ் புதையல், தவிப்பு, பாசம், காதல், ஏக்கம், ஞாபகம்.

அருமை.

இன்றுவரை ஊரிலேயே இருந்திருந்தால் நகரத்தின் மீது கூட ஒரு பிரமிப்பு இருந்து கொண்டே இருந்திருக்கும். சரி தானே !

தக்குடு said...

இந்த மாசம் நான் ஊருக்கு போறேனே!!! :))

ஆடுமாடு said...

//சமீபமா ஊருக்குப்போய்ட்டு வந்தீங்களா.. இல்லைன்னா.. ஊருக்குப்போக லீவெ குடுக்கமாட்டேங்கறாங்களா? :) //

அடுத்த வாரம!. நன்றி முத்து

ஆடுமாடு said...

//இன்றுவரை ஊரிலேயே இருந்திருந்தால் நகரத்தின் மீது கூட ஒரு பிரமிப்பு இருந்து கொண்டே இருந்திருக்கும். சரி தானே !//

கண்டிப்பாக. பாலகுமார் நன்றி.

அன்புடன் அருணா said...

அழகிய பதிவு! பூங்கொத்து!

ஆடுமாடு said...

//இந்த மாசம் நான் ஊருக்கு போறேனே!!! :))//

கொடுத்து வச்சவரு... நன்றி.

ஆடுமாடு said...

அருணா மேடம் நன்றி.

காமராஜ் said...

க்ளாஸ்..அருமை.
இப்படி புழுதிக்கவிதையாய் ஊர் மண் ஒட்டிக்கொள்வது அழகு.ஒளிந்து ஒளிந்து கழுதைச்சீட்டு விளையாண்டதெல்லாம் டாஸ்மாக் வாசலில் நின்று போன வாரம் அடித்த போதை பற்றிப்பேசும் பதினான்கு வயது சிறுவனுக்கு எப்படிச்சாகசமாகும்.வேதனை.

ஆடுமாடு said...

//ஒளிந்து ஒளிந்து கழுதைச்சீட்டு விளையாண்டதெல்லாம் டாஸ்மாக் வாசலில் நின்று போன வாரம் அடித்த போதை பற்றிப்பேசும் பதினான்கு வயது சிறுவனுக்கு எப்படிச்சாகசமாகும்.வேதனை//

இதை பத்தி தனிப்பதிவு போடலாம்னு இருக்கேன். நன்றி தோழர்.

இரசிகை said...

inthap pathivu....yennai oorukku koottuttu poyi,marupadiyum veettukku vanthu vitturuchu......

nallaayirukkunga!

ஆடுமாடு said...

ரசிகை நன்றி

Nandhini said...

Kaanal-aha iruntha en manasukku neera irukkirathu intha varegal.. Thanks

ஆடுமாடு said...

nanthini ist really?

Thanks.