Wednesday, September 8, 2010

முன்னாள் கவிதைகள் 3

கரைகரையாய் மரமேறி
காய்க்காய் முட்டைக்குடித்த
கருப்பசாமி
பெயர்மாற்றத்தோடு
சினிமா இயக்குனரானான்

தெப்பகுளத்தில் மீன் பிடித்து
பிள்ளையார் கோயிலில்
சுட்டுத்தின்ற பிச்சிமணி
சயின்ஸ் வாத்தியாரானான்

கொண்டை ஐயர் மண்டையில்
கல்லெறிந்து குற்றத்துக்கு
ஏழுமுறை பெருமாள் கோயிலை சுற்றிய
டவுசர் மணி
ஜெயில் சூப்ரண்டண்ட்

கோயில் விழாவில்
நாங்களெல்லாம் சந்தித்தோம்
'ஹாய் அங்கிள்' என
அவர்கள் குழந்தைகள் கைநீட்ட
'எப்பா' என ஒடுங்கிக்கொண்டான்
என் மகன்.

.............

ஊரெல்லாம் வில்லடிச்ச
வெறுவாகெட்ட பயலுக்கு
மொதப்பொண்டாட்டி இறந்ததும்
பெரிய்வர் பண்ணிவச்சார்
இரண்டாம் கல்யாணம்


பக்க பாட்டுக்கு வந்த பொம்பளை
மூணாவது மனைவியானதில்
ஊரெல்லாம் த்தூ
மாடன் கதை கேட்டு
மயங்கி வந்தவள்
நாலாவது மனைவி

இதோடு களையெடுக்க வரும்
கருத்தப்பிள்ளையூர் காரியுடனும்
தொசுக்கு உண்டு

நாலாவது மனைவிக்கு
ஆம்பிளை பிள்ளை பிறந்தப்போ
முதல் மகனுக்கு
பொம்பளை பிள்ளை

அப்பன் போனான்
பேத்தியை பார்க்க
மகன் போனான்
தம்பியை பார்க்க.
................................

சாணம் மெழுகிய
மண்த்ரை முற்றத்தில்
மல்லாந்து படுத்த படி
நட்சத்திரம் வியப்பேன்
கோட்டைத் தெரு பொன்னம்மா
குடத்தோடு போகையில்
வெறித்த பார்வை
நெஞ்சோடு நிற்கும்

மந்தை தெரு மாரியப்பன்
காதல் செய்யப்போய்
கல்தூணில் கட்டி வைத்த
பஞ்சாயத்தும் பயமுறுத்தும் இதனூடே

கண்மூடி சொல்லமாடனை வேண்டுகையில்
கவுரவம் பேசும் அப்பா தெரிவார்
மீசையை தடவிக்கொண்டே


படுக்கையில் கிடந்தாலும்
பயத்தில் முங்கி போகும்
ஆசையும் எண்ணமும்

அடகு வைத்த
அம்மாவின் நகை போல!

9 comments:

Chitra said...

படுக்கையில் கிடந்தாலும்

பயத்தில் முங்கி போகும்

ஆசையும் எண்ணமும்

அடகு வைத்த

அம்மாவின் நகை போல! ..

.....என்ன ஒரு உவமை! அசத்திட்டீங்க!

vasu balaji said...

:). 2,1,3.

ஆடுமாடு said...

காமராஜ்: எனது உனது எனப்பிரிக்கமுடியாமல் இந்த கிராமங்களுக்கென ஒரு பொது வாசனை உண்டு. உண்டா இல்லையா தோழா ?.சத்தியமாக உண்டு.

மேலக்குடியில் நாடகம் போட்டால் பெரிய மடத்து திண்ணை.கீழக்குடியில் போட்டால் தெரு.நாடகம் நாடகம் தானே.

அது போலத்தான் படுத்துக்கொட்னு சுழலவிடுகையில் தொண்டைக்குள் இனிக்குது இருபது வருஷத்து முன்னாடித்தின்ன நெல்லிகாயின் உவர்ப்பு.

வரி வரிவரியாய் பேரு மாறி வந்து நிற்கிறார்கள் தோழா உங்கள் சித்திரிப்பில். படிக்கக்கொடுத்து வைக்கணும்.

ஆடுமாடு said...

நன்றி சித்ராக்கா

ஆடுமாடு said...

வானம்பாடிகள்
ஐயா புரியலை
............

தோழர் காமராஜ் டெக்னிகல் பிரச்னை
உங்க பின்னூட்டம் வேறெங்கயோ போயிடுச்சு.
அதான் கட் அண்ட் பேஸ்ட்.


//மேலக்குடியில் நாடகம் போட்டால் பெரிய மடத்து திண்ணை.
கீழக்குடியில் போட்டால் தெரு.நாடகம் நாடகம் தானே.

அது போலத்தான் படுத்துக்கொட்னு சுழலவிடுகையில்
தொண்டைக்குள் இனிக்குது இருபது வருஷத்து முன்னாடித்தின்ன நெல்லிகாயின் உவர்ப்பு.

வரி வரிவரியாய் பேரு மாறி வந்து நிற்கிறார்கள் தோழா உங்கள் சித்திரிப்பில்.//

ஊருதான் வேறயே தவிர,
எல்லாருமே மனுஷங்கதானே தோழர்.

நன்றி

மண்குதிரை said...

சார் எளிமையா நல்லா இருக்கு

க.பாலாசி said...

அப்டியே மண்ண அள்ளி தலையில தெளிச்சமாதிரி இருக்குங்க.... எளிமையான மொழி...

//அப்பன் போனான்
பேத்தியை பார்க்க
மகன் போனான்
தம்பியை பார்க்க.//

இதுல அப்பனுக்கும், மகனுக்கும் உறவ சொல்றதுல பிரச்சனையில்ல... அவங்களோட வாரிசுக்குத்தான் பிரச்சனை... எங்கூட்டுக்கு பக்கத்தாலையே இப்டி ஒரு அப்பனும் மகனும் இருக்காங்க...

//வானம்பாடிகள்
ஐயா புரியலை//

தரவரிசை

1) 2
2) 1
3) 3

ஆடுமாடு said...

மண்குதிரை நன்றி

Mahi_Granny said...

எல்லோரும் ஆனது சரி. ஏக்நாத் எப்படி கவிஞர் ஆனார் என்று சொல்லவே இல்லையே . மீள் பதிவுகள் கூட வரவேற்கப் படுகிறது .