Thursday, February 4, 2010

காடு -6

அம்மன் கோயில் கொடை நடந்துகொண்டிருந்தது அப்போது. பால் குடம் எடுத்துச்செல்பவர்கள் கூட்டமாக சென்றுக்கொண்டிருந்தனர். இவர்கள் ஒரு தெருவில் வருகிறார்கள் என்றால் அவர்கள் அடுத்து வரப்போகும் தெருவில் கரகாட்டாம் சென்றுக்கொண்டிருக்கும். தெருவில் ஏதாவது ஒரு முனையில் நின்று, கொளுத்தும் வெயிலில் வேர்க்க வியர்க்க அவர்கள் ஆடுவார்கள். மாலை குறிப்பிட்ட நேரம் வரை தெருத் தெருவாக நின்று ஆடிவிட்டு, அறைக்கு சென்றுவிடுவார்கள். பிறகு இரவு 9 மணிக்கு மேல் அம்மன் கோயில் வாசலில் நடக்கும் ஆட்டம்.

உ.மகாளி உள்ளிட்ட இளசுகள் இதுகாலத்தில், நெல்லையில் இருந்து வந்திருந்த விஜயலட்சுமி அக்கா அண்ட் பார்ட்டியின் நடனம் மற்றும் தெரியும் அங்கங்களுக்காக தவம் கிடப்பார்கள். சுத்துப்பட்டில், விஜயலட்சுமி அக்கா, கரகாட்டத்தில் பிரபலமாகியிருந்ததற்கு, அவரது அழகு முக்கியமானதாக இருந்தது.

ஊர் பெருசுகள், கொடைக்கு நாள் குறித்த நாளிலேயே, விஜயலட்சுமிக்கு அட்வான்ஸ் கொடுக்க செல்வதில் பரபரப்பாகி விடுவார்கள். இரண்டு மூன்று பேர் போதுமென்கிற அட்வான்ஸ் விஷயத்துக்கு ஏழெட்டு பேர். இந்த ஆர்வம், மேளக்காரர்களுக்கு, பந்தல் போடுவர்களுக்கு வில்லடிப்பவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் நேரங்களில் இருப்பதில்லை என்பதற்கான காரணம் அறிந்ததுதான்.

விஜயலட்சுமி அக்காவுக்கும் இது தெரியாமலில்லை. ஆனால், இனிமையான அவளது குரலால், பெருசுகளை கிறக்கத்தில் நடமாட விட்டிருந்தாள். அந்த பேச்சு மற்றும் சிரிப்பை தவிர அவளிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

பார்ட்டிகளோடு ஊர் வந்து இறங்கியதுமே, தனது சுய புராணத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆரம்பித்துவிடுவாள். இந்த ஆரம்பம், பெரும்பாலும் அதிகமான கூட்டம் இருக்கும்போதாக இருக்கும்.

'புலியூர்ல ஆட்டத்துக்கு போயிருந்தம்ணே... கேட்டேளா? ரெண்டு பயலுவோ, சும்மா கண்ணடிக்காம், இங்க வர்றியா, அங்க வர்றியான்னு அசிங்க அசிங்கமா செய்கை பண்ணிட்டிருந்தாம்... ஆட்டத்தை முடிச்சுட்டு, வெளியில வந்ததும் போட்டம் பாருங்க... அன்னைக்கு வேற அரிவாளை எடுத்துட்டு வ்ரலை. இருந்திச்சுன்னா அங்கயே பொலி போட்டிருப்பேன்'

அடுத்த நிமிடமே, பெருசுகள், 'அப்டியா தாயீ, நீ நல்லா சாத்திருக்கணும். எங்கூட்டாளி அங்க இருந்தம்னா, கண்ணை நோட்டி எடுத்திருப்பேன்' என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்.

இந்த முறை விஜயலட்சுமி அக்கா, அவளது உறவுக்கார பெண்ணை ஆட்டத்துக்கு அழைத்து வந்திருந்தாள். எல்லாரும் மூக்கு குத்திக்கொண்டிருந்தாலும் அவளது ஒற்றைக்கல் மூக்குத்திக்கு ஏதோ சிறப்பு இருப்பதாகவே பட்டது. பாவாடை, தாவணியில் தேவதையாக தெரிந்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.

பகல் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல், இரவு நேர ஆட்டத்துக்கு மட்டும் அவள் பயன்பாடு இருந்தது. விஜயலட்சுமி அண்ட் கோ தங்கியிருந்தது உ.மகாளியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில். அதாவது சூச்சமடையான் வீட்டு மச்சியில். அங்கிருந்து தலைமுடியை சிக்கெடுக்கும் வி.லட்சுமி அக்காவை பார்க்க, எதிரில் இருக்கும் பஜனைமடத்தில் ஊர்க்கதை பேசுவது போல் கூட்டம் காத்திருக்கும்.

'பசும்பால் இங்க கிடைக்கும்னு சொன்னாங்க' என்று கண்ணாடி வளையல் தேவதையின் குரல் வந்ததிலிருந்து இடத்தை விட்டு நகரவில்லை உ.மகாளி. மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறத்தில் அவள் இருந்தாள்.

'கொஞ்சம் பொறுக்கேளா? இன்னா கறந்து சுட சுடத் தாரேன்' என்றான் உ.மகாளி. கறக்கும் சாக்கில் கிடைத்த அவள் பற்றிய விவரம்:
பெயர், லட்சுமி. வி.அக்காவுக்கு தூரத்து உறவு. வயது ம்ஹூம்.

பாலைக்கொடுத்துவிட்டு, தாங்கமாட்டாத சிரிப்போடு உ.மகாளி சொன்னான்:
'நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க'

வெட்கப்பட்டுக்கொண்டே, பெரும் புன்னகையோடு சென்றாள் லட்சுமி, வீட்டு வாசலுக்குள் நுழையுமுன் அவள் திரும்பி பார்த்தபோது, உ.மகாளி, தன்னை கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.

'இப்டிலாம் நடக்குமால'

இதையடுத்து மச்சியின், வெளியில் அவள் நிற்பதும் சிரிப்பதும், உ.மகாளியை காதல் பைத்தியக்காரனாக்கிக் கொண்டிருந்தது.

மாலையில் சில வீடுகளில் பால் கறந்துகொடுத்துவிட்டு, சீக்கிரமாக வீடு வந்துவிடுவான் உ.மகாளி. விஜயலட்சுமி அண்ட் கோ இங்கிருக்கப்போவது வெறும் இரண்டு நாட்கள். இரண்டாவது நாள் இரவே கிளம்ப ரெடியாகிவிடுவார்கள்.

இதில் லட்சுமியை எப்படி காதலிப்பது என்கிற யோசனையில் ஒரு பகல் கழிந்திருந்தது. விஷயம் வி.அக்காவுக்கு தெரிந்தால் சில விபரீதங்களும் நடக்கலாம் என்பதால், காதலை எப்படி சொல்லித்தொலைப்பது என்பதில் குழப்பமடைந்திருந்தான்.

'எப்பவும் வீட்டுல ஒரு நிமிஷம் நிக்க மாட்டே. இன்னைக்கு என்னடா பேரா, வீட்டையே சுத்தி சுத்தி வாரே'

செவிட்டுப்பாட்டி, இப்படிச் சத்தமாக கேட்கவும் விஜயலட்சுமி அக்காவும் லட்சுமியும் கீழே எட்டிப்பார்த்தார்கள்.

தொடரும்...

4 comments:

Unknown said...

):::::asathalll...

ஆடுமாடு said...

nandri akka.

துபாய் ராஜா said...

நம்ம ஊருவள்ள இன்னமும் கொடைக்கு கொடை கும்பாட்டகாரியோ பின்னாடி ஒரு குரூப்பு அலைஞ்சிகிட்டுதானே இருக்கு. :))

ஆடுமாடு said...

//கொடைக்கு கொடை கும்பாட்டகாரியோ பின்னாடி ஒரு குரூப்பு அலைஞ்சிகிட்டுதானே இருக்கு. :))//


ஆமா ராஜா, நன்றி.