Tuesday, April 19, 2022

’அவயம்’ நாவலில் புரட்சியும் அதிர்ச்சியும்

 என் ’அவயம்’நாவல் வெளிவந்து விட்டது. சில வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய நாவல். இப்போதுதான் வாய்த்திருக்கிறது. அரசியல் கட்சியின் பேச்சாளன் ஒருவன், தன் பலவீனங்களால் வாழ்வில் சந்திக்கிற அவமானங்களும் இழப்புகளும் போராட்டங்களும்தான் இந்நாவல். 


அவன் நடக்கிற பாதையில், கிடக்கிறக் குளங்களில் நிலவுகள் அவனோடு நீந்திக் கொண்டே இருக்கின்றன. அவன் ரசிக்கிறான். உரையாடுகிறான். மயங்குகிறான். இரு கை கொண்டு அதை ரகசியமாகத் தூக்கி ஓட நினைக்கும்போது சறுக்குகிறான். மீள்கிற அவன் என்ன செய்கிறான் என்பதை, நான் நினைக்கிறபடி இந்த நாவல் பேசலாம். அல்லது நீங்கள் நினைக்கும்படியும் பேசலாம். வேறொன்றாகவும் இருக்கலாம். 



என் முந்தைய நாவல்களைப் போலவே சிறு கிராம பின்னணியில் எழுதப்பட்டதுதான் இதுவும். சில அரசியல் நிகழ்வுகளும் இருக்கின்றன. எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் கொளைகளைப் பேசுகிற பேச்சாளனை கொண்டாடியதில்லை என்பதை இதில் சொல்லி இருக்கிறேன். அதைத் தாண்டி திடீர் புரட்சியும் அதிர்ச்சியும் இருக்கலாம். 


அவயம், நாவல்

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

கே.கே.நகர் மேற்கு, சென்னை 78.

288 பக்கங்கள். விலை: ரூ.320. 

தொலைபேசி: 9940446650

No comments: