Monday, January 12, 2009

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-2

தடுமாறிப் போனான் பலவேசன். திரும்பி கருப்பையாவை பார்த்ததும் மண்டையை கீறி வந்தது கோபம். இருந்தாலும் திருப்பி அடிக்கவோ, எதிர்த்து பேசவோ தோணவில்லை. மாமனாராகப் போகிறவரை தாக்கும் நிலையை அவன் பெற்றிருக்கவில்லை. காதல் இப்படியான பக்குவத்தை அவனுக்கு கொடுத்திருந்தது.

'சின்னப்புள்ளைலுவோட்ட துட்டை கொடுத்தா பாக்கி சில்லறை தரமாட்டியோல..."

அப்பாடா என்றிருந்தது பிச்சம்மாவுக்கு. தான் வர சொன்னதை தெரிந்துகொண்டு்தான் அப்பா அங்கு வந்திருப்பார் என முதலில் நினைத்திருந்தாள். மந்திர தேவனின் தொழுவுக்கு கிழ் புறமாக சுவற்றில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தாள் அவள். இருட்டு அவளை மறைத்திருந்தது.

'யோவ் பெரிசு, என்னத்தான் வெவரம்னாலும் இப்படியாய்யா கைய நீட்டுதது. நீராச்சும்னுதான் விட்டேன்"

'இல்லைனா...?"

'இங்கரும் வேண்டாம். வம்பு வளக்காண்டாம். நீரு சொல்லுத சின்னப்புள்ளட்ட, பாக்கி துட்டை கொடுத்துட்டேன். அது எங்கயாவது கீழ போட்டுட்டு வந்திருக்கும்.. போயி அதுட்ட கேளும்' என்றான் பலவேசம்.

'அது இல்லங்குன்னுதான வந்து கேக்கன்'

'யோவ்...அந்த அஞ்சு பைசாவ வச்சு வீடாய்யா கெட்ட முடியும்? சொல்லுதேன் திருப்பி திருப்பி அதையே சொல்லுதீரு"

'சரி இவ்ளோ சொல்லுதன்னு போறேன்'

கொஞ்ச தூரம் கருப்பையா போவதை பார்த்துவிட்டு, அவள் பக்கமாகத் திரும்பி, 'என்ன' என்றான். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. தூரத்தில், வெந்நீரில் குளித்த சுப்பையா கோனார், வேட்டியை விசிறி விசிறி காற்றில் காய வைத்துக்கொண்டிருந்தார். அவர் வேட்டியை ஆட்டும் சத்தம் டப் டப் என வந்துகொண்டிருந்தது. இந்த சத்தங்கள் இவர்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. மாசானம் வீட்டு நாய் மட்டும் இவர்களையே முறைத்து பார்த்து சென்றுகொண்டிருந்தது.

பிச்சம்மா புதிதாக மூக்கு குத்தியிருந்தாள். ஒற்றைக்கல் மூக்குத்தி. பலவேசம்,'' இதை காட்டத்தான் கூப்பிட்டியாக்கும்" என்றான்.

'ஆமா, இதை காட்டுததுக்கு வாரேன்"

'பெறவு?'

'வீட்டுல கல்யாணம் பண்ண சொல்லுதாவோ. ரெண்டாந்தாரமா..' என்று சொல்லிவிட்டு அவனைப்பார்த்தாள். கண்ணிலிருந்து அவளை கேட்காமலேயே தண்ணீர் வழிய தொடங்கியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் ஏங்கி ஏங்கி அழக்கூடும். அவனுக்குள் இதில் தமக்கும் பொறுப்பிருப்பதாக உணர்ந்தான்.

'ச்சீ அழாத... கொஞ்ச நா பொறு. இன்னும் எங்காத்தாட்ட நா சொல்லலை. அவ என்ன சொல்லுதான்னு பாப்போம்"

அதுக்கு மேல் பிச்சம்மாவால் அங்கு நிற்க முடியவில்லை. நடந்தாள்.


பலவேசம் வாசலில் சைக்கிளை சாத்திவிட்டு, வீட்டுக்குள் போனான். வீடு என்பது தென்ன ஒலைகளால் வேயப்பட்ட குடிசை. சாணம் மெழுகிய மண் தரை முற்றம் சூழ்ந்த வீடு அது. எதிரில் வேப்ப மரமும் பின்பக்கம் வாதமடக்கி மரமும் கொண்ட குளிர்ந்த காற்றுப்பிரதேசம். குறுணையை புடைத்துக்கொண்டிருந்த அவன் அம்மா, 'சோறு வைக்கவா. சுண்டக்கறி இருக்கு" என்றாள். சுண்டக்கறி என்பது முந்தாநாள் வைத்த குழம்பை சுண்ட சுண்ட காய்த்து, வறுவலாக்கி வைக்கப்பட்ட கறி. அது தனி ருசியை கொண்டது. அவனுக்கு இப்போதைய தேவை அதுவல்ல. அம்மாவிடம் தன் காதலை சொன்னான். அவனை ஏறிட்டு பார்த்தாள்.

'இதென்னல கதை. களவாணி பய வீட்டுல போயா சம்மந்தம் வைக்க சொல்லுத?" என்றாள்.

'களவாணி பய வீடா?'

'பெறவு... நீயெல்லாம் சின்ன புள்ளையா இருக்கையில நம்ம வீட்டுல 4 செம்மறிய களவாண்ட பயதான் அவன். இன்னைக்கு வரைக்கும் அவ்வோ வீட்டுக்கு களவாணி பய குடும்பம்னுதான் பேரு இருக்கு. உங்கய்யா இருந்து இதை கேட்டார்னா, பொடதியில அருவாளை வச்சிருப்பாரு..."

'இங்கரு, எப்பவோ என்னமோ நடந்ததுன்னு இன்னும் அதையே பேசிட்டிருக்காத'

'அந்த செரிக்கி உம்மனசுல இருந்து இப்டிலாம் பேச சொல்லுதா"

'நீயென்னழா... புரியாம பேசிட்டு. அவ அப்பன் பண்ணுனதுக்கு இவா என்ன செய்வா?'

'சரிதான். உங்கப்பன் வாங்குன கடனுக்கு நீ ஏம் இப்ப வட்டிகெட்டிட்டு இருக்கே?'

'அதுவும் இதுவும் ஒண்ணா?'

'இங்கருல, எனக்கு ஒரு மண்ணுமில்ல, நீ அவளத்தான் கெட்டுவேன்னு சொன்னா நான் என்ன செய்யமுடியும்?'

வீட்டுக்குள் கிடந்த கட்டிலை எடுத்து வாசலில் போட்டான். வானம் அமைதியாக இருந்தது. கூட்டுக்கு லேட்டாக போகும் பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தூங்கலாம் என நினைத்தான். வரவில்லை.

தொடர்கிறேன்.

2 comments:

M.Rishan Shareef said...

அருமையான தொடர்..கிராமிய மொழிநடையும் தொடர்ந்து வாசிக்கச் செய்கிறது. தொடருங்கள் நண்பரே !

ஆடுமாடு said...

நன்றி ரிஷான்.