புகைப்படமெடுப்பவன் வருவது முன்பே தெரிந்திருந்ததால், மூக்காண்டியை அழைத்து முகச்சவரம் செய்திருந்தார் ஆண்டியய்யா. அழகுணர்ச்சி கூடிவிட்டதாக நினைத்துக்கொண்டவர் இரண்டு கைகளாலும் முகத்தைத் தடவிப்பார்த்தார். ஒழுங்காகச் சவரம் செய்யப் படாததால் தாடையின் கீழ் பக்கம் சரசரவென்று இருந்தது. மூக்காண்டியை அழைத்தால் இப்படித்தான் வேலைப் பார்ப்பான். இடப்பக்க மீசையை வேறு கொஞ்சம் குறத்துவிட்டான். பெரிய திருகிய மீசைதான் அவருக்கு அழகே. வழக்கமான கம்பீரம் குறைந்தது போலிருந்தது. மீண்டுமொருமுறை மீசையைத் திருக்கிக்கொண்டார். மீசை ஆணின் முக வெளிப்பாட்டைத் தீர்மானிப்பது. கம்பீரத்தைத் தருவது. திருகிய பெரிய மீசை இருந்தால் பேச்சிலும் ஒரு தொனி வந்துவிடுகிறது. கரகர குரலில் கொஞ்சம் அதிகாரம் கலந்த பேச்சு இருந்தால்தான் மீசைக்கு மரியாதை. ஆண்டியய்யா பேச்சிலும் அப்படியொரு தொனி. எதிராளியை பயங்கொள்ளவைக்கும் தொனி.
ஆனால் ஆண்டியய்யாவின் இளமை வீரம் செறிந்ததாகாவும் இருந்திருக்கிறது. கருப்பசாமிக்கோயில் முன்பு வந்த தகராறில் போலிஸ்கார் ஒருவரை ஒரு கையால் தூக்கி தூர எறிந்ததை ஊர் முழுவதும் பேசுவார்கள். ஆண்டியைய்யாவின் தங்கையும் எதிர்வீட்டு முத்தம்மா பாட்டியும் சந்தித்துக்கொண்டால் அவரது இளமைகால வீரம்தான் பேச்சின் பெரும் பகுதியாக இருக்கும்.
"அணையில தண்ணிய அடச்சி வச்சிட்டானுவோ , இருக்கது ஆழ்வார்க்குறிச்சி குளத்து தண்ணிதான். இந்தத் தண்ணிக்குப் பாப்பாங்குளத்துக் காரனும் பரும்புக்காரனுவோளும் சண்டைப் போட்டுட்டு இருக்க, நம்மூருக்கு எங்கிருந்து தண்ணி வர? எல்லோரும் வந்து ஆண்டியைய்யாட்ட சொன்னாங்க. சத்தம் போடாம மறுநா ராத்திரி ஆளுகளை கூட்டிட்டுப் போனாரு. கிழ்பக்க மடைய புடுங்கித் தண்ணிய திருப்பிட்டு, ராத்திரி பூரா அங்கேயே இருந்தாரு. கேள்விப்ப்ட்டு பாப்பாங்குளத்துக்காரனுவோ வந்துட்டானுவோ.'எவனாவது மடை கிட்ட வந்தா ஒருத்தனுக்கும் உசுரு இருக்காதுன்னு கையில அருவாளை வச்சிட்டு சத்தம் போட்டாரு. ஒரு பய முன்ன வரலையே.'
பிச்சம்மா இதைச் சொல்வாள். இதுக்குச் சற்றும் குறைவில்லாத மற்றொரு வீரச்செயலைச் சொல்வாள் ஆண்டியய்யாவின் தங்கை.
தாத்தாக்கள் வரலாறாகவும், பேரன்கள் அந்த வரலாறைச் சுமப்பவர்களாகவும் இருப்பது யார் விட்ட சாபமோ?
''தாத்தா, போட்டாக்காரரு வந்துட்டாரு "என்றான் பேரன். இந்த ஐந்து வயது பேரனுக்குத் தாத்தாதான் சேக்காளி. தாத்தாவின்றி அவனும் அவனின்றி தாத்தாவும் வெகு நேரம் இருந்ததில்லை. மகன் வயிற்றுப் பேரன்.
வீட்டுத்தோட்டத்து வாதமடக்கி மர நிழலில் அமர்ந்து பாக்கு உடைத்துக்கொண்டிருந்தவர் எழுந்தார். தரையில் கிடந்த துண்டையெடுத்து உதறினார். தனியாக உடைத்து வைக்கப்பட்டிருந்த பாக்குகளை ஒரு கையால் எடுத்துக்கொண்டு மறு கையில் பேரனைத்தூக்கி முத்தமிட்டார்.
"மீசை குத்துது."
"வலிக்கவாடா செய்யுது"
"கீச்சமா இருக்கு"
"நீயும் வளர்ந்தா இதுமாதிரி மீச வளரும்"
'நான் பெரிசா வளப்பேன்"
'எம்புட்டுப் பெருசா?"
"இவ்வளவு பெரிசா'என்று இரண்டு கைகளையும் விரித்துக் காடினான்.
"அப்படியால கள்ளப்பயல".என்று சிரித்துவிட்டு மீண்டுமொருமுறை முத்தம் கொடுத்தார்.
வாசலில் கருப்பு பேண்டும் வெள்ளை சட்டையும் அணிந்த ஓர் இளைஞன் வெறுப்பாக உட்கார்ந்திருந்தான். ஆழ்வார்க்குறிச்சியிலிருந்து சைக்கிளில் வந்த களைப்பு முகத்தில். அருகில் பூதத்தானும் மந்திரமும் இருந்தார்கள்.
"நீ தான் போட்டாக்காரனாடே?"
"ஆங்.."
"அழ்வார்க்குறிச்சியில நீ யாருடே"
"சொள்ளமுத்து தெரியுமா?"
"எந்த சொள்ளமுத்து?"
"பட்டாளத்து..."
"ஆமா,அவனுக்கு நீ என்ன உண்டும்?"
"எங்கப்பாதான் அவரு"
"சர்யா போச்சு போ. அவரு மவனாடா..இப்ப எப்படி இருக்கான் உங்கப்பன்?"
"நல்லா இருக்காரு"
"ஒரு காலத்துல ரெண்டு பேரும் இங்கேயிருந்து விருதுநகர் சந்தைக்கு வண்டியில சாமான் கொண்டு போயிருக்கோம். அவன்ட்ட நான் கேட்டம்னு சொல்லு. சும்மா இருந்தாம்னா ஒரு எட்டு இங்க வந்து பார்க்க சொல்லு."
"ஆங்.."
"செரி நீ எங்கவச்சு எடுக்க போற?"
"மொகம் மட்டும்தான...இந்தா கிழ்பக்கம் சொவத்து முன்னால நின்னுங்க?"
"செத்த நில்லு வாரேன்" என்றவர் வீட்டுக்குள் போனார்.
கண்ணாடியில் முகம் பார்த்தார். தலைமுடியையும் மீசையையும் சீவினார். பிறகு மீசையை திருகினார். மந்திரமும் பூதத்தானும் வெளியில் நின்று அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"கெழத்துக்கு வயசு கொறையுதுன்னு நினைப்பு?"என்றான் பூதத்தான்.
பொந்தன் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
"ஏம்ல சிரிக்கியோ?"
"இவ்ளவு வயசுலயும் தெடமாதான் இருக்கே"
"எழுபத்திரண்டு வயசுலாம் ஒரு வயசால. ஒங்க தாத்தன் தொண்ணூத்தியெட்டு வயசுவரைக்கும் கல்லு மாதிரிலா இருந்தாரு.அப்பமும் ஒரு மூட்டை சாக்கை முதுவுல தூக்கிட்டு வந்துருவாரே...நீ அரை மூட்டை கடலையே தூக்கதுக்கே வாப்பாருத"
"பொங்குன சோத்தை பானையோட திங்குத ஆளுலா அவரு"
புகைப்படக்காரர் கேமராவில் கோணம் பார்த்தார். முகத்தில் கொஞ்சம் தோரணைக்காட்டி கைகளை விறைப்பாக வைத்துக்கொண்டு நின்றார் ஆண்டியய்யா.
"ஏம் இப்படி நிக்கியோ? வழக்கமா இருக்கத மாதிரி இருங்க"
"ஆங்.."
திரும்பவும் அதே விறைப்பு. சிறிது நேரம் ஒழுங்குபடுத்திவிட்டு படம் எடுத்தார்.
"தம்பி நல்லா வரும்லா"
"இருக்குத மொகம் அப்டியே வந்துரும்."
"என்னைக்குத் தருவே"
"இன்னா ரெண்டு நாள்ல"
"ரெண்டு நாளோ, மூணு நாளோ, சரியா என்ன கெழமைனு சொல்லு."
"இன்னைக்குப் பொதனா, வெள்ளிக்கிழமை மத்தியானம்."
"செரி' என்றவர், பூதத்தானிடம் திரும்பி, "ஏல அப்பம் படம் வரைதவனை சனிகெழம வரச்சொல்லிரு. கோயில்ல மத்த வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கா? பந்தக்காரன் போன வருஷம் போட்ட மாதிரி தொங்கலா போட்டுறாம?"
"அதெல்லாம் சரியா இருக்கும். இப்பவும் தொங்கலா போட்டம்னா துட்டுக் கெடைக்காதுன்னு சொல்லியாச்சுலா"
"பூக்காரனுக்கு எவ்வளவு பணம்னு பேசியாச்சா?"
"போன தடவை கொடுத்ததோட அதிகமா வேணுமாம், வெல வெலதாச்செல்லாம் ஏறிப்போச்சுங்காம்"
"சரி கூட பத்தம்பத கொடுக்க சொல்லுங்க, வேறென்ன செய்ய?"
"ஆங்.."
"சரி சாப்டேலால"
"நாலு மணிவரைக்குமா மனுஷன் சாப்புடாம இருப்பான்"
"அப்பண்ணா நீத்தண்ணி மோராவது குடிச்சுட்டுப் போங்கல"
"அதெல்லாம் வேண்டாம்" - கிளம்பினர்.
இரண்டு மூன்று நாட்களாகத் திடீர் மழை பெய்திருந்தது.தொடர் மழை இல்லையென்றாலும் தூறல் நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் இளம் பச்சை நிறத்தில் புற்கள், இப்போதுதான் பிறந்த குழந்தை மாதிரி தலை காட்டிக் கொண்டிருந்தன.
வீட்டு வாசலின் இடப்பக்கம் முருங்கை மரத்தினடியிலிருந்த சிறு திரட்டில் கொத்துமல்லி செடிகள் முளைத்திருந்தன. தானாக முளைத்த செடிகள்.
ஆண்டியய்யா கொத்துமல்லிச்செடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கினார். பேரன் அவரது தோளில் சாய்ந்துகொண்டிருந்தான்.
"இந்தாப்பா.. இத கடிச்சுத் தின்னு. உடம்புக்கு நல்லது."
"நீயும் தின்னு தாத்தா"
"ஏ போக்கிரியாண்டி, ஒனக்கு கொடுத்தா நீ,எனக்குத் தாரியாங்கும், தின்னுடா' என்றவர் அருகில் புளியங்கொட்டையிலிருந்து வெடித்து வளர்ந்திருந்த சிறு செடியைப் பிடுங்கினார்.
குழந்தைகளோடு பேசுவது நடப்பது இனிமையானது. தாமே குழந்தையாகி பின்னோக்கி வாழ்வது. ஆண்டியய்யா குழந்தையாகியிருந்தார்.
இம்மாதிரி இருவரும் பாசத்தில் நனைகிற நாட்களில் கொஞ்ச தூரம் நடப்பது வழக்கம்.மிஞ்சிப்போனல் வேல் டீக்கடை வரை. இன்னும் நடக்கலாம் என்றால் கோவன்குளம் ரயிலடிவரை. இந்த நடையின் போது பேரனுக்குச் செம்புலிஙகம் கதையிலிருந்து மலைக்கள்ளன் கதைவரை சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவன் விருப்பமாகக் கேட்பது மந்திரமூர்த்திக்கதை.குடும்பக் கோயில் கதை. இதில் சங்கிலிபூதம் அவனுக்கும் விருப்பமாகி இருந்தது. ஆனால் இலேசில் முடிகிற கதையல்ல. கொஞ்சம் கொஞ்சமாக பேரனது மூளைக்குள் ஏற்றிவிட்டார்.
கோயிலில் பூடங்கள் வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. சிறியதும் பெரியதுமாக இருப்பத்தேழு பூடங்கள். அந்த திறந்தவெளி கோயில் வளாகத்தில் அனைத்துப் பூடங்களும் பளிச்சென்று இருந்தன. நான்கு வண்டி ஆற்றுமணல், கோயில் வளாகம் முழுவதும் தரையில் பரப்பபட்டிருந்தன. வில் கதை கேட்க வருபவர்கள் நிம்மதியாக உட்கார இந்த ஏற்பாடு.
பந்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் தென்னந்தட்டிகளும் கம்புகளுமாக கோயில் அடைசலாக இருந்தது.
பூதத்தார் பூடத்துக்கு முன்பாக நின்றிருந்தான் அந்த ஓவியன். அவனது வலப்பக்கம் படப்புச்சோறுக்கு அடுப்பு மூட்டுவதற்கான மூன்று பெரிய கற்கள் தரையில் கிடந்தன. சதுர அளவில் இருந்த ஒரு கல்லை எடுத்து பூடத்துக்கு முன்பு போட்டு ஏறினான். வரைவதற்கு வாகாக இருந்தது. பென்சிலால் வரையலானான். அவனது கையில் மாடலாக ஆண்டியய்யாவின் புகைப்படம்.
கோயில் வாசல் படியைத்தொட்டு வணங்கிவிட்டு உள்ளே வந்த ஆண்டியய்யாவிடம், ஏழுட்டு வழவு சப்பாணி, "என்ன மாமோவ், ஒம்மதான் வரைய போறாம் போலுக்கு" என்றான்.
"ஆங்.. என்னத்தை வரையுதாம்னு பாப்பம்"என்றவர், அவனுக்குப் பின் பக்கம் நின்றுகொண்டு கவனித்தார்.
அந்த ஓவியன் அவரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தான்.
முகம், மீசை, கண்கள், இவற்றுக்குத்தான் அவரது புகைபடங்கள் தேவையாயிருந்தது. தலையில் கிரீடம், கையில் பெரிய அரிவாள் போன்றவற்றை ஏற்கெனவே வரையப்பட்டிருக்கிற அடையாளங்களின் அடிப்படையில் அவனே வரைய வேண்டும்.
பென்சிலால் வரைந்துவிட்டு கல்லிலிருந்து இறங்கி , தான் வரைந்ததைப் பார்த்தான். பிறகு கழுத்தை சாய்த்து கோணலாகப் பார்த்தான். வலது கை கீழிறங்கியிருந்த்து. சரி செய்தான்.
ஆண்டியய்யா அதைப் பர்த்துவிட்டு அந்த ஓவியனிடம் கேட்டார்.
'எம் மூஞ்சு மாதிரி வரும்லா"
'வரைஞ்சு முடிஞ்சதும் பாருங்க"
"அப்பதான் எல்லாம் தெரிஞ்சுருமே" என்றவரிடம் சப்பாணி, 'ஏம்யா பறக்கேரு. அதான் ஒம்ம போட்டாவை கையில வச்சிருக்காருலா?" என்றான்.
இதற்கு முன்பெல்லாம் இப்படியல்ல. பூடங்களில் சாமியை வரைவது இல்லாதிருந்தது.கடந்த இரண்டு கொடைகளுக்கு முன்பு,மேலத்தெரு கருப்பசாமி கோயிலில் பூடத்தில் படம் வரைந்திருந்தார்கள் எப்போதும் இல்லாத அதிசயமாக.
அதிலிருந்து இங்கும் வரைய வேண்டும் என்ற பேச்சு வந்து இப்போது நிறைவேறி விட்டது. சங்கத்துக்கு வருடம் ஒரு முறை தலைவர் மாறி கொண்டே இருப்பார். ஆண்டியய்யா பல முறை தலைவராக யிருந்திருக்கிறார்.அப்போதெல்லாம் இப்படியொரு பிரச்னை வந்திருந்தால் வேண்டாமென்று சொல்லியிருப்பார். இப்போது கூட சொல்லிப்பார்த்தார். பெரும்பாலானோர் தங்கள் பிடியில் உடும்பாக இருக்க, இவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. பிறகு பூதத்தாரை எப்படி வரையலாம் என்று பேசிப் பேசி இவரே மாடலாகவும் போனார்.
அச்சு அசலாக ஆண்டியய்யாவின் உருவம் பூடத்தில் இருந்தது. அவருக்குப் பூரிப்பு தாளவில்லை. கையில் பெரிய அரிவாளுடனும் நெருப்புத்தெறிக்கும் கண்களுடன் ஆக்ரோஷமாக வந்திருந்தது படம். அதையே பார்த்துக் கொண்டிருந்தவருக்குத் தமது இளமை காலம் கண்முன் வந்து கனவு தந்து போனது. தமது தோற்றம் பற்றி அவருக்கே ஒரு கெத்து. பேரன் பூடத்தின் முன்பு நின்று 'தாத்தா தாத்தா என்று அழைத்தான்.
"ஏல சாமிடா அது... கும்புடு"
"இல்ல தாத்தா நீதான்"
'பூதத்தாருப்பா.... கும்புடலைனா சாமி அடிக்கும்"
'போ தாத்தா நீதான் அது"
"ஏய்..அப்படி சொல்லபடது. சாமிடா"
"நீதான் . உன்னய போயி கும்புடசொல்லுதியே தாத்தா....சேக்காளிய யாராவது கும்புடுவாங்களா?"
Monday, February 18, 2008
Sunday, February 10, 2008
உடுக்கை
'உங்க குடும்பத்துல கன்னி பொண்ணு யாரோ செத்து போயிருக்காளேம்மா.. அவளுக்குப் பூசை செஞ்சு கும்புட்டாத்தான் உன் குடும்பம் வெலங்கும் '
இசக்கிஅம்மன் கோயில் பூசாரி உடுக்கையடித்துச்சொன்னதிலிருந்து லட்சுமி தலையைப் பிய்த்துக்கொண்டு அலைந்தாள். சாமி சொன்ன வாக்கு. லேசில் விட்டுவிடவும் முடியாது.
நம்ம குடும்பத்துல யாரு கன்னியா செத்துப்போயிருக்கா ? வீட்டுக்காரரு கூடப் பிறந்தது நாலு பேரு. அதுல மூணு பேரு ஆம்பளை. ஒரு பொண்ணு. அவளும் கல்லு மாதிரி குத்துக் கல் வலசையில இருக்காளே. பெறவு யாரா இருக்கும் ? ஒரு வேளை சாமி, தெரியாம சொல்லியிருக்குமோ ? இசக்கியம்மன் பொய்யா சொல்லும் ? சொல்லாது. அதும் அருள் வந்து உடுக்கை அடிச்சுச் சொல்லியிருக்கு.கொடைக்கு மொத நாளே போயிருந்தா இன்னும் நெறைய சொல்லியிருக்கும்.
வீ.கே. புரத்திலிருந்து கீழாம்பூர் ஏழு கிலோமீட்டர்தான். ஏகப்பட்ட பஸ் வசதி இருக்கு. நேத்தே வந்திருக்கலாம்னா வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை. அவரப் போட்டுட்டு வர முடியுமா ? முடியாது. அவருக்கும் சாமிக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு அவருக்கு கொஞ்சம் பரவாயில்லை.
வருஷத்துக்கு ஒரு தடவை அம்மனுக்குக் கொடை கொடுக்காவோ. வரி முழுசா நூத்தம்பது ருவா கொடுத்துட்டு கோயிலுக்குப் போவாம இருக்கது நல்லாவா இருக்கு ? அதான் வந்தேன். வந்த இடத்துல சாமிகிட்ட திருநாறு பூசலாம்னா... அருள் வந்து குறி சொல்லிட்டு.
எசக்கி அம்மனுக்கு ஆடுத, ஆறுமாச்சி, நாலு மாசத்துக்கு முன்னால செத்து போயிட்டா. இப்ப ஆடுதவரு புதுசு. பாப்பாக்குடியிலருந்து வந்திருக்காராம். தெரிஞ்சு சொன்னாரோ தெரியாம சொன்னாரோ ? கண்ணுல ஆத்தா காட்டியிருக்கதை சொல்லியிருப்பாரு.
ஒரு வேளை எங் குடும்பத்துல யாரும்... ?
எங்கூட பிறந்தது மூணு பேருதான். மூணு பேருமே உயிரோடத்தான் இருக்கோம்.
ஆங்... சின்ன வயசுல எனக்கொரு தம்பி இருந்தான். தென்னரசுன்னு பேரு.தெப்பக்குளத்துல இந்த கரையில இருந்து அந்தக் கரைக்கு எருமை மாட்டு மேல உட்காந்து தெனமும் போவான். ஒரு நாள் ஆழத்துல விழுந்து செத்துப்போயிட்டான். சாமி அவனை சொல்லுதாரோ என்னமோ. இல்லையே. கன்னி பொண்ணுன்னுலா சொன்னாரு ?
கோயிலின் ஒரத்தில் அம்மனுக்கான சாமான்கள் இருக்கும் கருவேலப்பறையின் திண்டில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தவளை உலுப்பினாள் பேச்சி.
'ஏட்டி என்ன இங்க உக்கந்துட்ட ? '
'ஏ சித்தி எப்படி இருக்க ? '
'நல்லாதான் இருக்கேன் '
'வீட்டுல நல்லா இருக்காவோளா ? '
' இருக்காவோ,
'உன் வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லையாமே. இப்ப பரவாயில்லையா ?'
'ஆங்...இப்ப சும்மா இருக்காவோ '
' வீட்டுக்கு வந்துட்டுப் போயேன் '
'இல்லத்தா சீக்கிரம் போவணும். உன் பேரன், பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்துருவான் '
'உன் மைனி மவ சமைஞ்சிருக்காளாமே ? '
'அது ரெண்டு மாசமாச்சே '
'ஏன் சடங்கு நடத்தலை ? '
'அவ்வோ பொண்டாட்டி புருஷனுக்குள்ள சடவு. சரி உங்கிட்ட கேக்கணும்னு இருந்தேன் '
'என்னத்த ? '
'எசக்கியம்மனுக்கு ஆடுதவருட்ட திருநாரு பூசுனேன்... '
' யாருன்னு தெரியலையோ '
'ம் ? '
'உங்க அடையங்கருங்குளத்தா இருக்காலா...அவளுக்கு மாமன் மவன். '
'அப்படியா ? யாரு கண்டா ? நம்ம அவ்வோ குடும்பத்துகூட அவ்வளவு பழகல. நான் என்ன சொல்ல வந்தம்னா...திருநாரு பூச போனேன். பூசிட்டு இருக்கும் போதே அவருக்கு அருள் வந்துட்டு. சாமிய பாத்து உருமிக்கிட்டு, உடுக்கைய அடிச்சாரு.உங்க குடும்பத்துல ஒரு பொண்ணு கன்னி கழியாம செத்து போயிருக்கு .அதுக்குப் பூசை செஞ்சு கும்பிட்டாத்தான் குடும்பம் தழைக்கும்னு சொன்னாரு. எனக்கு வெவரம் தெரிஞ்சு எங்க குடும்பத்துல யாரும் கன்னிப்பொண்ணு செத்துப் போனதில்லை. என்ன இப்படி சொல்லிட்டாருன்னு ஒரே கவலையா இருக்கு. '
'அப்படியா ? எனக்குத் தெரிஞ்சு யாரும் செத்து போனதா தெரியலையே, நீ ஒம் மாமியாட்ட வேணா கேளு '
'அதான் ரோசனையா இருக்கு. ஏற்கனவே வீட்டுல யாருக்காவது ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டுதான் இருக்கு. மாமனாருக்கு நெஞ்சுவலி வந்து இருவது நாள் ஆவலை. அதுக்குள்ள இவ்வோ படுத்துட்டாவோ. அதுக்கு முன்னால உன் பேரன் காலை முறிச்சுட்டு வந்தான்.இவரு சொல்லுதத பாத்தா நம்ப முடியாமலும் இருக்க முடியல. '
'உங்க மாமனாருக்கு மொத தாரம் ஒருத்தி இருந்தா. வயல்ல களையெடுக்கும்போது இடிவிழுந்து செத்துபோயிட்டா. அவளுக்கு கண்டா புள்ளைலு இருந்திருக்குமா தெரியலை. நீ எதுக்கும் உன் மாமியாட்ட கேளு '
'அவளுக்குப் புள்ளை இல்லைன்னுலா சொன்னாவோ '
'நம்ம கயிறுமொடைஞ்சாம் மவா ஒரு புள்ளை, நாண்டுக்கிட்டு நின்னு செத்து போயிருக்கு. ஆனா அவன் உனக்கு நெருங்குன சொந்தம் இல்லையே '
'சொந்தமா இருந்தாலும், அவ மவளுக்கு அவம்லா செஞ்சு கும்புடணும் '
லட்சுமியின் மூளை இதையே சுற்றிக்கொண்டிருந்தது. கோயில் தாண்டி பஸ் நிறுத்தத்துக்கு வந்தாள். தென்காசி ரூட்டில் வரும் பேருந்துகள் வலது பக்கம் திரும்பினால் பாபநாசம் ,விக்ரமசிங்கபுரம் செல்லும். நேராக சென்றால் அம்பாசமுத்திரம். லெட்சுமி வல பக்கம் திரும்பி நின்றாள். பெரும்பாலும் இந்த இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. கை காட்டினால் கருணையுள்ள டிரைவர்கள் நிறுத்தலாம்.கோயிலில் கொடுத்த தேங்காய் முறி, திருநீறு, குங்குமம் போன்றவற்றை ஒரு உறைப்பையில் போட்டு அதை மடித்து கையில் வைத்திருந்தாள்.
மனது முழுவதும், முகம் தெரியாமல் செத்துப்போன கன்னியின் மீது அலைந்து கொண்டிருந்தது. பேருந்து, கோவன்குளம் ரயிலடி தாண்டி, தாட்டாம் பட்டி போகும் போதுதான் அவளுக்கு பயணச் சீட்டு வாங்காதது ஞாபகத்துக்கு வந்தது. நடத்துனர் மனதுக்குள் முனகிக்கொண்டே சீட்டைக்கொடுத்தார்.
அந்த வழி தடத்தில் ஆங்காங்கே இருந்த அனைத்து சாமிகளையும் பேரூந்தில் இருந்தவாறே கையெடுத்துக் கும்பிட்டாள். செத்தும்கெடுத்த அந்தக் கன்னி மீது கோபம்கோபமாக வந்தது. செத்துப் போன கன்னிகள் பெரும்பாலும் வெள்ளையுடையுடுத்தி மற்றவர்களைப் பழிவாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். மாடத்திக்கிழவி ஒரு முறை சொல்லியிருக்கிறாள். கன்னிகள் செத்துப்போனால் மனசு நிறைவில்லாமல் ஒவ்வொருவராக தேடி அலைவார்கள் என்றும் யாரைப் பிடித்திருக்கிறதோ அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறாள். கருக்கலில் மல்லிகை பூவைத்துக்கொண்டு தனியாகச் செல்லும் கன்னிகளையே இது முக்கியமாக கன்னிவைத்து பிடிக்குமாம். தமது ஆசைகளை, பிடித்திருக்கிற கன்னிகளின் மூலமாக தீர்த்துக் கொள்ளுமாம்.
லட்சுமிக்கு, ஊரில் பேய் பிடித்தவர்கள் எல்லாம் மனதில் வந்து போனார்கள். பெருமாளாச்சி மகள் கல்யாணிக்கு ஒரு முறை பேய் பிடித்து, பெரியசாமி மந்திரக்கோனாரை அழைத்திருந்தார்கள் குலையடிக்க. அவர் வேப்பங்குலையை பிடித்துகொண்டு பேய் வந்த கல்யாணி மீதுஅடிக்க அடிக்க, திமிராக பதில் சொல்லியது பேய். 'என்ன வெரட்டாத, நான் போவ மாட்டேன். போன மாசம் செத்துபோன ஆண்டாளுதான் நான். நான் என் மைனியதான் புடிச்சிருக்கேன். என்னைய வெரட்டாத. ' மிரட்டியது பேய். பிறகு, 'தெரு முனையில எனக்கு பூசை வை ' என்றது. இந்த பூசைக்குப் பிறகு அந்தப் பேய் வரவில்லை. இது மாதிரிதான் நம்ம குடும்பத்தில் செத்துப்போனதாகச் சொல்லப்படும் கன்னியும் கேட்பாளோ ?
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, அத்தையைத் தேடினாள்.தொழுவத்தில் மாடுகளுக்குப் புண்ணாக்கு வைத்துக்கொண்டிருந்த அத்தையானவள்,இதைக் கேட்டதும் ஆச்சர்யப்பட்டுப் போனாள்.
'நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எனக்குத் தங்கச்சி ஒருத்தி நாண்டுகிட்டு நின்னு செத்துப்போனா, அவ செத்து வருஷம் என்னாச்சு, அவளுக்கு எப்படி வச்சு கும்புட முடியும் ? '
'வேற யாராவது, ? '
'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லை '
' மாமாட்ட கேளேன் '
புருஷனிடம் சொன்னாள்.
' இந்த மாதிரி அவன் சொன்னான் இவன் சொன்னாம்னுலாம் எங்கிட்ட சொல்லாத, எனக்கு ஊருபட்ட வேலை கெடக்கு. அதுல இது வேறயா ? சாமியாரு சொன்னாராம்னு வந்து கேக்கா பாரு. ஊரு உலகத்துல தெனமும் ஆயிரம் பேரு கன்னியாவே செத்து தொலையுதுவோ, எல்லாத்துக்கும் பூசை புண்ணாக்குன்னா செஞ்சுக்கிட்டு இருக்கானுவோ. இனும இந்தப் பேச்சை எங்கிட்ட பேசாத, சாமி, சாத்தான்னுட்டு. '
கோவமாக வந்தது லட்சுமிக்கு. எசக்கி அம்மனை போயி இப்படி சொல்லுதாரே என்று. சாமிக்கும் அவருக்கும் ரொம்ப தூரம்தான் என்றாலும் இந்த விஷ்யத்தில் காது கொடுத்துக்கேட்பார் என்று நினைத்தாள்.போய் தொலையட்டும். மாமனாரிடம் கேட்கலாம் என்று போனாள்.வாசல் திண்ணையில் உட்கார்ந்து இளநீர் உறித்துக்கொண்டிருந்தார் அவர்.
'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லையே,எந்த சாமியாரு சொன்னாரு '
' எசக்கியம்மன் கோயில்ல '
'ஆறுமுத்துக்கு பெறவு இப்ப யாரு சாமியாடுதா '
'அடையகருங்குளத்தா மாமன் மவனாம் '
'அவனுக்கும் இந்தச் சாமிக்கும் சம்பந்தமே இல்லையே, அவனுக்கு எப்படி அருள் வருது ? '
'தெரியலை '
' அவன் ஆள் தெரியாம சொல்லிருப்பான், நீ ஒண்ணும் பெருசா நெனைக்காண்டாம் '
'ஆங்.. '
மனசு கேட்கவில்லை. சாமி சொன்னது எப்படி தப்பாக இருக்கும் ? அவர் சொல்லியும், பூசை எதுவும் பண்ணவில்லையென்றால் குடும்பத்தில் தொடர்ந்து நோய் நொடிகள் வந்து தொலைக்குமோ என்று பயந்தாள். இது பற்றி வேறு யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தாள்.
கடையத்தில் சின்ன மாமனார் இருக்கிறார். அவர் சொல்லமாடனுக்கு ஆடுதவர். சாமி கொண்டாடி. அவர் சொன்னால் சரியாக இருக்கும் . இது பற்றி அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன ?
நாளைக்கு முதல் பேருந்தில் சென்று விட வேண்டும் என முடிவெடுத்தாள். பேய் விரட்டும் உடுக்கை சத்தமும், வேப்பங்குலையும் சம்பந்தமில்லாமல் கண் முன் வந்து போனது.
-திண்ணையில் வெளியான கதை.
இசக்கிஅம்மன் கோயில் பூசாரி உடுக்கையடித்துச்சொன்னதிலிருந்து லட்சுமி தலையைப் பிய்த்துக்கொண்டு அலைந்தாள். சாமி சொன்ன வாக்கு. லேசில் விட்டுவிடவும் முடியாது.
நம்ம குடும்பத்துல யாரு கன்னியா செத்துப்போயிருக்கா ? வீட்டுக்காரரு கூடப் பிறந்தது நாலு பேரு. அதுல மூணு பேரு ஆம்பளை. ஒரு பொண்ணு. அவளும் கல்லு மாதிரி குத்துக் கல் வலசையில இருக்காளே. பெறவு யாரா இருக்கும் ? ஒரு வேளை சாமி, தெரியாம சொல்லியிருக்குமோ ? இசக்கியம்மன் பொய்யா சொல்லும் ? சொல்லாது. அதும் அருள் வந்து உடுக்கை அடிச்சுச் சொல்லியிருக்கு.கொடைக்கு மொத நாளே போயிருந்தா இன்னும் நெறைய சொல்லியிருக்கும்.
வீ.கே. புரத்திலிருந்து கீழாம்பூர் ஏழு கிலோமீட்டர்தான். ஏகப்பட்ட பஸ் வசதி இருக்கு. நேத்தே வந்திருக்கலாம்னா வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை. அவரப் போட்டுட்டு வர முடியுமா ? முடியாது. அவருக்கும் சாமிக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு அவருக்கு கொஞ்சம் பரவாயில்லை.
வருஷத்துக்கு ஒரு தடவை அம்மனுக்குக் கொடை கொடுக்காவோ. வரி முழுசா நூத்தம்பது ருவா கொடுத்துட்டு கோயிலுக்குப் போவாம இருக்கது நல்லாவா இருக்கு ? அதான் வந்தேன். வந்த இடத்துல சாமிகிட்ட திருநாறு பூசலாம்னா... அருள் வந்து குறி சொல்லிட்டு.
எசக்கி அம்மனுக்கு ஆடுத, ஆறுமாச்சி, நாலு மாசத்துக்கு முன்னால செத்து போயிட்டா. இப்ப ஆடுதவரு புதுசு. பாப்பாக்குடியிலருந்து வந்திருக்காராம். தெரிஞ்சு சொன்னாரோ தெரியாம சொன்னாரோ ? கண்ணுல ஆத்தா காட்டியிருக்கதை சொல்லியிருப்பாரு.
ஒரு வேளை எங் குடும்பத்துல யாரும்... ?
எங்கூட பிறந்தது மூணு பேருதான். மூணு பேருமே உயிரோடத்தான் இருக்கோம்.
ஆங்... சின்ன வயசுல எனக்கொரு தம்பி இருந்தான். தென்னரசுன்னு பேரு.தெப்பக்குளத்துல இந்த கரையில இருந்து அந்தக் கரைக்கு எருமை மாட்டு மேல உட்காந்து தெனமும் போவான். ஒரு நாள் ஆழத்துல விழுந்து செத்துப்போயிட்டான். சாமி அவனை சொல்லுதாரோ என்னமோ. இல்லையே. கன்னி பொண்ணுன்னுலா சொன்னாரு ?
கோயிலின் ஒரத்தில் அம்மனுக்கான சாமான்கள் இருக்கும் கருவேலப்பறையின் திண்டில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தவளை உலுப்பினாள் பேச்சி.
'ஏட்டி என்ன இங்க உக்கந்துட்ட ? '
'ஏ சித்தி எப்படி இருக்க ? '
'நல்லாதான் இருக்கேன் '
'வீட்டுல நல்லா இருக்காவோளா ? '
' இருக்காவோ,
'உன் வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லையாமே. இப்ப பரவாயில்லையா ?'
'ஆங்...இப்ப சும்மா இருக்காவோ '
' வீட்டுக்கு வந்துட்டுப் போயேன் '
'இல்லத்தா சீக்கிரம் போவணும். உன் பேரன், பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்துருவான் '
'உன் மைனி மவ சமைஞ்சிருக்காளாமே ? '
'அது ரெண்டு மாசமாச்சே '
'ஏன் சடங்கு நடத்தலை ? '
'அவ்வோ பொண்டாட்டி புருஷனுக்குள்ள சடவு. சரி உங்கிட்ட கேக்கணும்னு இருந்தேன் '
'என்னத்த ? '
'எசக்கியம்மனுக்கு ஆடுதவருட்ட திருநாரு பூசுனேன்... '
' யாருன்னு தெரியலையோ '
'ம் ? '
'உங்க அடையங்கருங்குளத்தா இருக்காலா...அவளுக்கு மாமன் மவன். '
'அப்படியா ? யாரு கண்டா ? நம்ம அவ்வோ குடும்பத்துகூட அவ்வளவு பழகல. நான் என்ன சொல்ல வந்தம்னா...திருநாரு பூச போனேன். பூசிட்டு இருக்கும் போதே அவருக்கு அருள் வந்துட்டு. சாமிய பாத்து உருமிக்கிட்டு, உடுக்கைய அடிச்சாரு.உங்க குடும்பத்துல ஒரு பொண்ணு கன்னி கழியாம செத்து போயிருக்கு .அதுக்குப் பூசை செஞ்சு கும்பிட்டாத்தான் குடும்பம் தழைக்கும்னு சொன்னாரு. எனக்கு வெவரம் தெரிஞ்சு எங்க குடும்பத்துல யாரும் கன்னிப்பொண்ணு செத்துப் போனதில்லை. என்ன இப்படி சொல்லிட்டாருன்னு ஒரே கவலையா இருக்கு. '
'அப்படியா ? எனக்குத் தெரிஞ்சு யாரும் செத்து போனதா தெரியலையே, நீ ஒம் மாமியாட்ட வேணா கேளு '
'அதான் ரோசனையா இருக்கு. ஏற்கனவே வீட்டுல யாருக்காவது ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டுதான் இருக்கு. மாமனாருக்கு நெஞ்சுவலி வந்து இருவது நாள் ஆவலை. அதுக்குள்ள இவ்வோ படுத்துட்டாவோ. அதுக்கு முன்னால உன் பேரன் காலை முறிச்சுட்டு வந்தான்.இவரு சொல்லுதத பாத்தா நம்ப முடியாமலும் இருக்க முடியல. '
'உங்க மாமனாருக்கு மொத தாரம் ஒருத்தி இருந்தா. வயல்ல களையெடுக்கும்போது இடிவிழுந்து செத்துபோயிட்டா. அவளுக்கு கண்டா புள்ளைலு இருந்திருக்குமா தெரியலை. நீ எதுக்கும் உன் மாமியாட்ட கேளு '
'அவளுக்குப் புள்ளை இல்லைன்னுலா சொன்னாவோ '
'நம்ம கயிறுமொடைஞ்சாம் மவா ஒரு புள்ளை, நாண்டுக்கிட்டு நின்னு செத்து போயிருக்கு. ஆனா அவன் உனக்கு நெருங்குன சொந்தம் இல்லையே '
'சொந்தமா இருந்தாலும், அவ மவளுக்கு அவம்லா செஞ்சு கும்புடணும் '
லட்சுமியின் மூளை இதையே சுற்றிக்கொண்டிருந்தது. கோயில் தாண்டி பஸ் நிறுத்தத்துக்கு வந்தாள். தென்காசி ரூட்டில் வரும் பேருந்துகள் வலது பக்கம் திரும்பினால் பாபநாசம் ,விக்ரமசிங்கபுரம் செல்லும். நேராக சென்றால் அம்பாசமுத்திரம். லெட்சுமி வல பக்கம் திரும்பி நின்றாள். பெரும்பாலும் இந்த இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. கை காட்டினால் கருணையுள்ள டிரைவர்கள் நிறுத்தலாம்.கோயிலில் கொடுத்த தேங்காய் முறி, திருநீறு, குங்குமம் போன்றவற்றை ஒரு உறைப்பையில் போட்டு அதை மடித்து கையில் வைத்திருந்தாள்.
மனது முழுவதும், முகம் தெரியாமல் செத்துப்போன கன்னியின் மீது அலைந்து கொண்டிருந்தது. பேருந்து, கோவன்குளம் ரயிலடி தாண்டி, தாட்டாம் பட்டி போகும் போதுதான் அவளுக்கு பயணச் சீட்டு வாங்காதது ஞாபகத்துக்கு வந்தது. நடத்துனர் மனதுக்குள் முனகிக்கொண்டே சீட்டைக்கொடுத்தார்.
அந்த வழி தடத்தில் ஆங்காங்கே இருந்த அனைத்து சாமிகளையும் பேரூந்தில் இருந்தவாறே கையெடுத்துக் கும்பிட்டாள். செத்தும்கெடுத்த அந்தக் கன்னி மீது கோபம்கோபமாக வந்தது. செத்துப் போன கன்னிகள் பெரும்பாலும் வெள்ளையுடையுடுத்தி மற்றவர்களைப் பழிவாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். மாடத்திக்கிழவி ஒரு முறை சொல்லியிருக்கிறாள். கன்னிகள் செத்துப்போனால் மனசு நிறைவில்லாமல் ஒவ்வொருவராக தேடி அலைவார்கள் என்றும் யாரைப் பிடித்திருக்கிறதோ அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறாள். கருக்கலில் மல்லிகை பூவைத்துக்கொண்டு தனியாகச் செல்லும் கன்னிகளையே இது முக்கியமாக கன்னிவைத்து பிடிக்குமாம். தமது ஆசைகளை, பிடித்திருக்கிற கன்னிகளின் மூலமாக தீர்த்துக் கொள்ளுமாம்.
லட்சுமிக்கு, ஊரில் பேய் பிடித்தவர்கள் எல்லாம் மனதில் வந்து போனார்கள். பெருமாளாச்சி மகள் கல்யாணிக்கு ஒரு முறை பேய் பிடித்து, பெரியசாமி மந்திரக்கோனாரை அழைத்திருந்தார்கள் குலையடிக்க. அவர் வேப்பங்குலையை பிடித்துகொண்டு பேய் வந்த கல்யாணி மீதுஅடிக்க அடிக்க, திமிராக பதில் சொல்லியது பேய். 'என்ன வெரட்டாத, நான் போவ மாட்டேன். போன மாசம் செத்துபோன ஆண்டாளுதான் நான். நான் என் மைனியதான் புடிச்சிருக்கேன். என்னைய வெரட்டாத. ' மிரட்டியது பேய். பிறகு, 'தெரு முனையில எனக்கு பூசை வை ' என்றது. இந்த பூசைக்குப் பிறகு அந்தப் பேய் வரவில்லை. இது மாதிரிதான் நம்ம குடும்பத்தில் செத்துப்போனதாகச் சொல்லப்படும் கன்னியும் கேட்பாளோ ?
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, அத்தையைத் தேடினாள்.தொழுவத்தில் மாடுகளுக்குப் புண்ணாக்கு வைத்துக்கொண்டிருந்த அத்தையானவள்,இதைக் கேட்டதும் ஆச்சர்யப்பட்டுப் போனாள்.
'நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எனக்குத் தங்கச்சி ஒருத்தி நாண்டுகிட்டு நின்னு செத்துப்போனா, அவ செத்து வருஷம் என்னாச்சு, அவளுக்கு எப்படி வச்சு கும்புட முடியும் ? '
'வேற யாராவது, ? '
'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லை '
' மாமாட்ட கேளேன் '
புருஷனிடம் சொன்னாள்.
' இந்த மாதிரி அவன் சொன்னான் இவன் சொன்னாம்னுலாம் எங்கிட்ட சொல்லாத, எனக்கு ஊருபட்ட வேலை கெடக்கு. அதுல இது வேறயா ? சாமியாரு சொன்னாராம்னு வந்து கேக்கா பாரு. ஊரு உலகத்துல தெனமும் ஆயிரம் பேரு கன்னியாவே செத்து தொலையுதுவோ, எல்லாத்துக்கும் பூசை புண்ணாக்குன்னா செஞ்சுக்கிட்டு இருக்கானுவோ. இனும இந்தப் பேச்சை எங்கிட்ட பேசாத, சாமி, சாத்தான்னுட்டு. '
கோவமாக வந்தது லட்சுமிக்கு. எசக்கி அம்மனை போயி இப்படி சொல்லுதாரே என்று. சாமிக்கும் அவருக்கும் ரொம்ப தூரம்தான் என்றாலும் இந்த விஷ்யத்தில் காது கொடுத்துக்கேட்பார் என்று நினைத்தாள்.போய் தொலையட்டும். மாமனாரிடம் கேட்கலாம் என்று போனாள்.வாசல் திண்ணையில் உட்கார்ந்து இளநீர் உறித்துக்கொண்டிருந்தார் அவர்.
'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லையே,எந்த சாமியாரு சொன்னாரு '
' எசக்கியம்மன் கோயில்ல '
'ஆறுமுத்துக்கு பெறவு இப்ப யாரு சாமியாடுதா '
'அடையகருங்குளத்தா மாமன் மவனாம் '
'அவனுக்கும் இந்தச் சாமிக்கும் சம்பந்தமே இல்லையே, அவனுக்கு எப்படி அருள் வருது ? '
'தெரியலை '
' அவன் ஆள் தெரியாம சொல்லிருப்பான், நீ ஒண்ணும் பெருசா நெனைக்காண்டாம் '
'ஆங்.. '
மனசு கேட்கவில்லை. சாமி சொன்னது எப்படி தப்பாக இருக்கும் ? அவர் சொல்லியும், பூசை எதுவும் பண்ணவில்லையென்றால் குடும்பத்தில் தொடர்ந்து நோய் நொடிகள் வந்து தொலைக்குமோ என்று பயந்தாள். இது பற்றி வேறு யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தாள்.
கடையத்தில் சின்ன மாமனார் இருக்கிறார். அவர் சொல்லமாடனுக்கு ஆடுதவர். சாமி கொண்டாடி. அவர் சொன்னால் சரியாக இருக்கும் . இது பற்றி அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன ?
நாளைக்கு முதல் பேருந்தில் சென்று விட வேண்டும் என முடிவெடுத்தாள். பேய் விரட்டும் உடுக்கை சத்தமும், வேப்பங்குலையும் சம்பந்தமில்லாமல் கண் முன் வந்து போனது.
-திண்ணையில் வெளியான கதை.
Subscribe to:
Posts (Atom)