Wednesday, April 9, 2014

கனவுகளில் நிற்காத மனம்

செல்லம்மாவுக்கு இப்படியொரு ஆசை இருப்பது பெரிய மாமாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. எல்லாவற்றையும் வெடுக்கன கேட்டு அல்லது பறித்துப் பிடுங்கிக்கொள்கிற தனது செல்ல மருமகளான செல்லம்மாள் இதை ஏன் பல நாளாக மனதுக்குள் போட்டுக்கொண்டிருந்தாள் என்று அவருக்கு யோசனை.

வீட்டு திண்ணையில் குடும்பமே உட்கார்ந்து ஊர்க்கதைப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் தனது ஆசையை சொன்னாள் செல்லம்மாள். அதுவும் பெரிய அத்தையானவள், சில்லாட்டை என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படுகிற கல்லிடைக்குறிச்சி மாமாவின் மகளான சுப்புலட்சுமி பற்றி பேசிய போதுதான் அதைச் சொன்னாள். சில்லாட்டை பற்றி அத்தை பேசும்போது செல்லம்மாளின் முகத்தில் தெரிந்த கொதிகலனை பெரிய மாமா கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

செல்லாம்மாவின் அம்மாவான பார்வதி, வீட்டுக்கு வெளியில் அரிசி அவிப்பதற்காக வைத்திருக்கும் அடுப்பில், வென்னீர் வைக்க முயன்றுகொண்டிருந்தாள். இன்னும் காயாத கருவை விறகுகள் எரியாமல் அவளது ரத்தக் கொதிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தன. கொஞ்சம் மண்ணென்ணை ஊற்றி பற்ற வைத்ததும் குப்பென்று பிடித்தது தீ. அதிலிருந்து கிளம்பிய புகை, அப்படியே திண்ணைக்கு வந்து புறம் பேசிக்கொண்டிருக்கும் இந்த குடும்ப கூட்டத்துக்குள் புகுந்து எரிச்சலை கிளப்பிச் சென்றது.

செல்லாம்மாவின் தாத்தா வாசலில், சாணம் மெழுகிய மண்தரைப் பரப்பில் ஈசி சேரில் சாய்ந்திருக்க, அவரது காலுக்கு கீழே காதில் பாம்படம் தொங்க உட்கார்ந்திருந்தாள் பாட்டி. தாத்தாவுக்கு காது கேட்காது என்பதால் பாட்டி தனது குடும்ப பெருமைகளையும் தனது இளமைகால கதைகளையும் சிரித்து சிரித்துச் சொல்லிக்கொண்டிருப்பாள். இதற்காகவும், பாட்டியிடம் ஓவர் அன்பு வைத்தால் இடுப்பு மடிப்பு சில்லறைகளை பெற்றுக்கொள்ளலாம் என்கிற ஆசையிலும் குடும்பக் கூட்டம் சாயங்காலங்களில் நடந்து வந்தது.

இன்றைய கூட்டத்தில் தாத்தா, பாட்டியுடன் பெரிய மாமா மந்திரமுர்த்தி, அவர் மனைவி சங்கரம்மாள், சின்ன அத்தை செண்பகவல்லி, நான்காவது சித்தி முத்தம்மாள், பெரிய மாமா மகள் பாக்கியலட்சுமி, மகன் சுப்பிரமணி ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள். மற்ற குடும்ப உறுப்பினர்கள் தத்தம் வேலைகளில் பிசியாக இருப்பதால் இன்னும் சிறிது நேரத்தில் வந்து, தங்களை இந்த ஜமாவில் இணைத்துக்கொள்வார்கள் என்பதாக நினைத்துக் கொள்ளலாம்.
இருட்டு மென்மையாகப் பரவத் தொடங்கியதும் தூரத்தில் இருக்கிற வாத மடக்கி மரத்தில் இருந்து நான்கைந்து கொக்குகளின் சத்தம் வந்துகொண்டிருந்தது. கருக்கல் ஆகிவிட்டால் இவை இங்கு வந்து உட்கார்ந்துவிடும். வேப்ப மரங்களில் காக்காவுக்கு இரண்டு வீடு இருக்கிறது.

மைனாவுக்கு பூவரசம் மரத்தில் வீடு இருக்கிறது. இந்த வீடுகளுக்கு விருந்தாளிகளாகச் சென்று வர செல்லம்மாவுக்கு ஆசைதான். வெறுங்கையோடு செல்லாமல் நான்கைந்து ஆரஞ்சுப் பழங்களையும் ஆப்பிள்களையும் கொண்டு செல்லலாம்தான். ஆனால் அழைக்க வேண்டுமே? அழையாதார் வாசலை எப்படி மிதிக்க?

வீட்டுக்கு வெளியே மணல் அள்ளிக்கொண்டு போகும் சுப்பையாவின் வண்டியில் இருந்து மாடுகளின் கழுத்து மணி சத்தம், சங்கீதம் போல ஒலித்து வந்தது. ஊடாக மாடுகளுக்கு புதிதாக அடிக்கப்பட்டிருக்கிற லாடத்தின் சத்தமும் டக் டக்கென்று வந்துகொண்டிருந்தது.

 விநாயகர் சதுர்த்திக்கு செய்திருந்த அதிரசத்தை கடித்துக்கொண்டிருந்த சங்கரம்மாள் அத்தை, அதைச் சவைத்துக் கொண்டே, ‘சில்லாட்டை பிள்ளைக்கு அதுக்குள்ள மாப்பிள்ள பாக்காவோளாம்டி’ என்று சொன்னாள். அவளது பெயரை & பட்டப்பெயரை கேட்டதுமே உஷ்ணமானாள் செல்லம்மாள். அவளது ஒற்றைக்கல் மூக்குத்திக் கூட கோபத்தில் இன்னும் சிவந்தது.

போனமுறை அம்மன் கோயில் கொடைக்காகச் சில்லாட்டையின் ஊரான கல்லிடைக்குறிச்சிக்கு குடும்பம் பயணப்பட்டிருந்தபோது, நடந்த சம்பவம் அவளுக்குள் வந்து போனது. வீடு இருக்கும் கோட்டைத்தெருவின் பின்பக்கம் வயக்காட்டை ஒட்டி இருந்த வீட்டின் வாசலில், புதிதாக ஆக்கிரமித்திருந்தது வெண்நிற ஸ்கூட்டி. கல்லிடைக்குறிச்சி அத்தை வீரவநல்லூர் கிளாக்குளத்தில் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிபவள். அவளது ஆங்கில உச்சரிப்பை கேட்பவர்கள், ஆசிரியை என்பதை நம்புவது கடினமாக இருந்தாலும் நம்பித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், அத்தை சொல்வது போல, லீவ் இட்தான். அந்த அத்தைக்காக வாங்கப்பட்ட ஸ்கூட்டி என்பதை செல்லம்மாள் புரிந்துகொண்டாள்.

இன்னும் புதிதின் நிறம், குணம், மணம் போகாத அந்த வண்டியைப் பார்த்ததுமே நான்கைந்து ரவுண்ட் வர வேண்டும் என்று மனதுக்குள் மின்னல் வெட்டிப் போனது செல்லம்மாளுக்கு. முதல் நாள் சாமி தரிசனத்திலும் சொந்தக்காரர்கள் சந்திப்பிலும் நேரம் கடத்தியவளுக்கு மறுநாள் நிலை கொள்ள முடியவில்லை. ஸ்கூட்டியை கேட்கலாம் என்று வெளியில் வந்தால், சில்லாட்டை அதில் ஏறி உட்கார்ந்துகொண்டு இவளைப் பார்த்தாள். ஏற்கனவே இருவருக்கும் குழந்தையாக இருக்கும்போது, ஆரஞ்சு மிட்டாயை பிடுங்கி தின்றதில் ஆரம்பித்து, மாங்காய் பறித்தது, பனம் பழம் தின்றது, புது பாவாடையை கிழித்தது உட்பட பல விஷயங்களில் தகராறு உண்டு என்பது முன் வரலாறு.

இதை குடும்பம் தெரிந்திருந்ததால் இருவரையும் சமாதானப்படுத்துவதற்கு பதில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கும்படி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  வீட்டின் முன் பக்கம் இவள் இருந்தால், சில்லாட்டையை பின் பக்கமாக இருக்க வைத்து பேசிக்கொண்டிருப்பது, அவள் ஆற்றுக்கு குளிக்கச் சென்றால், இவளை கிணற்றுக்குக் கூட்டிச் செல்வது என்பது போன்ற நற்காரியங்களை குடும்ப உறுப்பினர்கள் செவ்வனே செய்து வந்தனர்.

இப்படி எதிரும் புதிருமானவர்கள் அன்று நேருக்கு நேர் சந்தித்தார்கள். அசைந்துக்கொண்டிருக்கிற மரங்கள் அப்படியே நிற்பது, பறந்துகொண்டிருக்கிற பறவைகள் அந்தரத்தில் பறக்காமல் நிற்பது, கடலலைகள் எழுந்து நிற்பது உள்ளிட்ட விஷயங்களை நீங்கள் இப்போது கற்பனை செய்துகொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் உஷ்ணம் ஏற, முகத்தை வலித்து திருப்பிக்கொண்ட சில்லாட்டை, ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். இன்னும் அங்கு இருந்தால் அவளுடன் போர் புரிய வேண்டி வரும் என்றாலும் அப்படியே யுத்தம் வந்தாலும், ‘இது நம்ம ஊர். அவளால் எதுவும் செய்ய முடியாது’ என்கிற தைரியத்தாலும் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த சில்லாட்டை, ஆக்ஸிலேட்டரை வேண்டுமென்றே கிர் கிர் என்று திருக்கிக்கொண்டு முறைத்தாள். அதன் சத்தம் செல்லம்மாவின் செல்ல மனதில் கோபத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. இப்போது இருவரையும் தடுக்க அல்லது பிரிக்க அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் தாங்கள் நின்ற இடத்தில் இருந்தே, கோப முறைப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். எதிர்பார்த்தது போலவே சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தாள் பக்கத்து வீட்டு சித்தி. இருவரும் முறுக்கிக்கொண்டு நிற்பதை பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்து, ‘ஏட்டி சில்லாட்டை, போயி, பரம்சம் கடையில தக்காளி வாங்கிட்டு வா’ என்று சொல்லவும் அடுத்த நொடி விர்ரென பறந்தது ஸ்கூட்டி.

ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டு விட்டாலும் செல்லம்மாளின் மனதுக்குள் ஸ்கூட்டியில் ரவுண்ட் அடிக்கும் ஆசை கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தது. ஸ்கூட்டி திரும்ப வந்து அது நிற்கும் இடத்தில் வைக்கப்பட்டதும் சிறிது நேரத்துக்குப் பிறகு எட்டிப்பார்த்தாள் செல்லம்மாள். யாருமில்லை. அருகில் போய் ஸ்டாண்டை எடுக்காமல் அதன் மேல் ஏறி உட்கார்ந்தாள். வானத்தில் பறப்பது போல் இருந்தது. இறங்கி அத்தையிடம் சாவி கேட்டதும், ‘ஏட்டி ஒனக்கு ஓட்டத் தெரியுமா? கீழ விழுந்தன்னா, டேமேஜ் ஆயிரும்’ என்றாள்.

‘சில்லாட்டைக்கே ஓட்ட தெரிது. எனக்கு தெரியாதா?’

‘அவா ஓட்டி படிச்சிருக்கா? நீ எங்க படிச்செ?’

‘எனக்கு தெரியும்னா தெரியும். சாவி கொடுக்கேளா இல்லியா?’

‘இங்கரு, ஒங்க மாமாவே நான் ஒக்காருன்னா ஒக்காருவாரு, நின்னுன்னா நிப்பாரு. நீ என்னயவே அதிகாரம் பண்ணுதியாட்டி?’

‘செரி அத்த, செரி. எனக்கு ஓட்டத் தெரியும். சாவி கொடுங்க’ என்றதும் வேண்டா வெறுப்பாகக் கொடுத்தாள். ‘பெரிய பிளேனு. இதை ஓட்டத்துக்கு படிக்கணுமாங்கும்’ என்று முனங்கிக்கொண்டு பெரும் சந்தோஷத்தோடு வந்த செல்லம்மாள், ஸ்கூட்டியை வெளியே தள்ளிக்கொண்டு போய் ஏறி உட்கார்ந்தாள். தெரு வெறிச்சோடி கிடந்தது. எதிரில், கட்டையான வாலை கொண்ட நாய் ஒன்று இவளைப் பார்த்துவிட்டு பம்மியபடி ஓரமாக நின்றுகொண்டது. மூன்றாவது வீட்டின் சுவரில் பூனை ஒன்று எத்திசை குதிப்பது என்ற தடுமாற்றத்தில் இவளைப் பார்த்தது.

ஓவர் மகிழ்ச்சியில் வண்டியில் ஏறிய செல்லம்மாள், வலது கையால் ஆக்ஸிலேட்டரை ஒரே இழு. வண்டி ஜிவ்வென்று பாய்ந்து, தடுமாறி அங்குமிங்குமாக அலைந்து பக்கத்து வீட்டு சுவரில் பெரும் சத்தத்துடன் மோதி விழுந்தது. எல்லாம் சில நொடிகளில் முடிந்துவிட்டது. மல்லாக்கப்படுத்த மிளகாவத்தல் பூச்சி மாதிரி, இரண்டு செடிகளுக்கு இடையே தலைகுப்புற கிடந்தது ஸ்கூட்டி. செல்லம்மாளுக்கு கை, கால்களில் சிராய்ப்பு. தட்டுத் தடுமாறி எழுந்து இடுப்பை பிடித்தவாறு, ‘யாரும் பார்க்கலயே’ என்று கண்ணைச் சுற்றித் திருப்பினாள். கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்துக்குள் ஒருத்தியாகச் சில்லாட்டையும் நின்றிருந்தாள்.

‘ஏ பிள்ள, வண்டி ஓட்டத் தெரியலன்னா, யாம் எடுக்க?’

‘கை, கால்ல அடிபடலயே?’

‘கால நல்லா ஒதறுட்டீ’

‘ஒனக்கெல்லாம் கொஞ்ச கொழுப்பா இருக்கு?’

‘யாரு மேலயும் உட்டுருந்தன்னா, யாருட்டி பதிலு சொல்லுவா?’

-ஏகப்பட்ட கேள்விகள். பிறகு வண்டியை எடுத்தார்கள். சுவற்றில் மோதியதால் முன்பக்க கண்ணாடி துண்டாகிக் கிடந்தது. வெண்நிற ஸ்கூட்டியின் வண்ணம் சிராய்ப்புகளால் சிதைந்திருந்தது. ஸ்கூட்டியை எடுத்து சாலையில் நிறுத்தியதும் சில்லாட்டைக்குத்தான் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘எங்கூட்டு வண்டியை ஏம்பிள்ள ஒடைச்ச? லூஸு’ என்று ஆத்திரத்தில் அவள் ஆரம்பிக்க, மொத்த சொந்தமும், ‘யாரு பேச்சையாவது கேக்கணும். பொட்ட புள்ள மாதிரியா வளருத, கூறுகெட்டவள?’ என்று திட்டித் தீர்த்தது. செல்லம்மாவுக்கு இந்த திட்டுகள் புதிதில்லை என்றாலும் ஓரமாக நின்று திட்டிய சில்லாட்டைதான் செல்லம்மாளின் கோபத்தை அதிகரித்துக்கொண்டிருந்தாள்.

‘இனும எவளாது வண்டியை டச் பண்ணுனா, அவ்வளவுதான். ஸ்டுபிட்’ என்று ஸ்கூட்டியை உருட்டுக்கொண்டு போனாள் ஆங்கில ஆசிரியையான அத்தை.
பெரும் கோபத்துக்கு இடையிலும் சில்லாட்டைக்குச் சிரிப்பு வந்தது.
‘ஸ்கூட்டியவே ஓட்டத்தெரில. நீலாம் என்னத்த கிழிக்கப் போற?’ என்று வலித்துக்கொண்டு சிரித்தாள்.

‘சிரிச்சன்னா பாத்துக்க. கூறுகெட்ட நாயி’ என்றாள் செல்லம்மாள்.

‘இங்கரு நாயி கீயினுலாம் சொல்லாத. இது எங்க ஊரு பாத்துக்க’

‘ஒங்க ஊருன்னா, என்னய பாத்து இழிப்பியோட்டி’

‘ஆமா. சிரிப்பேன், அழுவேன். ஒனக்கென்னட்டி, சப்பை மூக்கி?’

‘ஓடிரு. மூஞ்சில மிதிச்சிருவேன்’ என்று உச்சக்கட்ட கோபத்துக்கு செல்லம்மாள் சென்றதும், அங்கு வந்த சித்திக்காரி, சில்லாட்டையை இழுத்துக்கொண்டு போனாள். இதே நாளில்தான், இதே இடத்தில்தான், இந்த நிமிடத்தில்தான் செல்லம்மாள் தொடை தட்டி அந்த சபதத்தை எடுத்தாள்.
‘இங்கருட்டி சில்லாட்டை. இதே போல ஸ்கூட்டி வாங்கி, தாறுமாறுமா ஓட்டி, இதே மாதிரி எங்கிட்ட வந்து, ஒரு ரவுண்ட் தாயேன்னு உன்னையும் உங்க அம்மாவையும் கெஞ்ச வைக்கல. எம்பேரு செல்லம்மா இல்ல. இல்ல. செல்லம்மா இல்ல.’ என்று சபதம் போட்டாள்.

இந்த சபதம் போட்டு ஒரு வருடத்தை நெருங்கியும் வீட்டில் யாரிடமும் ஸ்கூட்டி வேண்டுமென்று கேட்டதில்லை. ரோட்டில் யாராவது அதை ஓட்டிக்கொண்டு சென்றால் மட்டும் மனதுள் அந்தச் சம்பவம் வந்து போகும். மேலத்தெருவில் தோழியின் மைனி ஒருத்தி, டிவிஎஸ் 50 வைத்திருப்பது அறிந்து அவளிடம் கற்க நினைத்தாள். இதை கற்றால் அதை ஈசியாக ஓட்டிவிடலாம் என தோழி சொன்னதன் பொருட்டு கற்கப் போனாள் செல்லம்மாள். தோழியின் மைனி, புஷ்டியான உடலை கொண்டவள். அவள் வண்டியில் ஏறி அமர்ந்தால், ‘என்னய விட்ருங்க’ என்று வண்டி டயர்கள் கதறதுவது போல தோன்றும் செல்லம்மாவுக்கு. தரையோடு தரையாக டயர்கள் அமுங்கி, ரிம்கள் நெளிந்துவிடுமோ என்ற அச்சத்தை செல்லமாளுக்குள் ஏற்படுத்தும்.

‘இங்கரு பிள்ள. இதான் ஆக்சிலேட்டரு. இதை விருட்டுன்னு இழுத்தன்னா, வேகமா போயி கீழ சாச்சுரும், கேட்டியா? கால தரையில ஊனிக்கிட்டு மெதுவா, மெல்ல மெல்ல இதை திருக்குனா, வண்டி போவும்...’
ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு, ‘அப்படி இல்ல, இப்படி இல்ல’ என்று சொல்லி இரண்டு ரவுண்ட் அடிக்க மட்டுமே அனுமதி கொடுத்தாள், தோழியின் மைனி. இப்போது செல்லம்மாவுக்குத் தெம்பு வந்தது. தான் ஒரு தேர்ந்த ஸ்கூட்டி ஓட்டுனர் என்ற நினைப்பு மனதில் தைரியம் தந்த பிறகுதான் வீட்டில் அதைச் சொன்னாள். சொன்னதற்கும் காரணம் இருக்கிறது.

இன்னும் மூன்று வாரத்தில், வர இருக்கிறது குடும்ப சாமியான சங்கிலி பூதத்தார் கோயில் கொடை. அதற்கு ஆங்கில அத்தையும் சில்லாட்டையும் கண்டிப்பாக வருவார்கள் என்ற முன் வந்த தகவலை அடுத்து ஸ்கூட்டி வாங்கச் சொன்னாள் செல்லம்மாள்.

செல்லாம்மாளுக்கும் சில்லாட்டைக்குமான பிரச்னை தெரிந்ததுதான் என்றாலும் அதை ஸ்கூட்டியோடு யாரும் தொடர்புப்படுத்திப் பார்க்கவில்லை. இன்னும் பதினைந்து நாட்களுக்குள் ஸ்கூட்டி வந்துவிடும் என்றார் பாசக்கார பெரிய மாமா. ஒவ்வொரு நாளாக எண்ணி, எண்ணி கழிந்து பதினைந்தாவது நாளில் வந்து நின்றது, சிவப்பு நிற ஸ்கூட்டி. நமக்கே நமக்கென தலையைத் தொங்க போட்டு நிற்கும் குதிரை போல் இருந்தது அது. பார்க்கவே அழகாக இருந்தது. மொத்த குடும்பமும் வந்து வண்டியை தரிசித்து, ‘நல்லாருக்குட்டி’ என்று சொன்ன பிறகு சங்கிலி பூதத்தார் கோயிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலை அணிவித்து பூஜையும் செய்யப்பட்டது.

எல்லோரும் சாமிகும்பிட்டுக் கொண்டிருக்கும்போது, செல்லம்மாள், மனதுள் சில்லாட்டையை திட்டிக்கொண்டிருந்தாள். ‘ஏட்டி சில்லாட்டை, ஒன் சிலுப்பட்டையை பிச்சிருதென்’ என்று வெறியாகி நின்றிருந்த செல்லம்மாள், பிறகு வண்டியை ஓட்டிக்கொண்டே வீடு வரை வந்தாள். தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, ஊரின் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், பஞ்சயாத்து போர்டு, வடக்கு அக்ரஹாரம், பஜனை மடத்தெரு, சிவன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களுக்கு ட்ரிப் அடித்துவிட்டு, ‘பாத்துக்கிடுங்க. நானும் நல்லா ஸ்கூட்டி ஓட்டுவேன்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து சாவியை, சாமி போட்டோவுக்கு கீழே ஆணியில் தொங்க விட்டிருந்தாள்.

கோயில் கொடைக்கு முந்தின நாள் காலையில் சில்லாட்டை குடும்பம் வந்து சேர்ந்திருந்தது. சாமியாட்டம், கெடா வெட்டு, கறிச்சோறு விருந்து, உறவினர்களுக்குப் பொண்ணு விசாரித்தல் உள்ளிட்ட விஷயங்களின் பொருட்டு ஸ்கூட்டிக்கு வேலை இல்லாததால் அது ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. சில்லாட்டை குடும்பம் நாளை ஊருக்கு கிளம்ப போகிறது என்று தெரிந்ததும் ஸ்கூட்டியின் அருகே போனாள் செல்லம்மாள். அதை வீட்டு வாசலுக்கு எதிரே நிறுத்தி ஏறி உட்கார்ந்தாள். ஆக்சிலேட்டரை கிர் கிர் என்று திருக்கிக்கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்த சில்லாட்டை, ‘கலரு நல்லாருக்கு?’ என்று வண்டியின் கண்ணாடியில் முகம் பார்த்தாள். செல்லம்மாளுக்கு உஷ்ணம். ‘எங்க வண்டியில ஏண்டி மொகம் பார்க்க. போ’ என்று அவளை தள்ளிப்போகச் சொல்லவும் ஆங்கில அத்தை என்டர் ஆனாள். விஷயம் தெரியாமல், ‘இந்த வண்டிதான் வாங்கிருக்கேளோ?’ என்று வந்தாள் அத்தை. அவளின் முகம் பார்த்து பேசாத செல்லம்மாள், காது கேட்காதது போல பராக்குப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

‘ஏட்டி ஒன்னையதான கேக்கென்’ என்றாள். சபதம் நினைவேற போகிறது என்ற நினைப்பு செல்லம்மாளுக்கு. மனதுள், ‘ஹா ஹா’ வென சிரிப்பு.
திடீரென அங்கு வந்த பெரிய மாமா, ‘அவா எடக்குக்கு சொல்லுதா. இந்த வண்டி எப்படியிருக்கு. ஒங்க வண்டி எவ்வளவு மைலேஜ் கொடுக்கு?’ என்று அத்தையை சமாதானம் செய்பவர் போல கேள்வி கேட்டார்.

தன் கோபத்தில் இருந்து இறங்கி வருபவளாக செல்லம்மாள் இல்லை. அவள், அவர்களை கண்டுக்கொள்ளவே இல்லை. பிறகு அவள் அருகில் வந்த பெரிய மாமா, ‘ஏல வண்டியை கொடு’ என்று வாங்கிக்கொண்டு அத்தையின் பக்கம் தள்ளிக்கொண்டு போனார். செல்லம்மாவுக்கு ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது.

வண்டியை அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த ஆங்கில அத்தை, அதில் ஏறி ஆக்சிலேட்டரைத் திருக்கினாள்.

‘சும்மா ஒரு ரவுண்ட்டு போயிட்டு வாம்மா’ என்றார் பெரிய மாமா. அவளுடன் ஏறிக்கொண்டார் சில்லாட்டை. எப்போதும் வெடித்துவிடலாம் என்ற நிலையில் கோபம் பொத்துக்கொண்டிருந்தது செல்லம்மாவுக்கு. அத்தை ஆக்சிலேட்டரை திருக்கி வீட்டின் கேட்டைத் தாண்டவும் எதிரில் வந்து திடீர் என்று புகுந்தது நீட்டிக்கொம்பு எருமை. இதைக் கவனிக்காத அத்தை, வண்டியை அதன் மீது விட, மாடு துள்ளிக்கொண்டு ஓட அத்தையும் சில்லாட்டையும் மல்லாக்க விழுந்துகிடந்தார்கள் அய்யோ, அம்மா என்று. ஓடிப்போய் தூக்கப்போனார்கள் எல்லாரும்.

‘இப்படியா வண்டி ஓட்டுவியோ’ என்று கேட்கலாம் போலிருந்தது செல்லமாவுக்கு. அதை விட்டுவிட்டு சிரிப்பு கொப்பளித்துக்கொண்டு வந்தது. ஆனால் சிரிக்கவில்லை. சில்லட்டையின் கையைப் பிடித்துத் தூக்கினாள். அவள் காலிலும் கைகளிலும் சிராய்த்திருந்த மணலைத் தட்டிவிட்டாள். ‘வீட்டுல தேங்காய் எண்ணெய் இருக்கு. எடுத்துத் தடவு’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் சொல்லம்மாள்.

எப்போதும் அவள் மேல் எரிச்சலில் இருக்கும் சில்லாட்டை இப்போது அவளைப் புதிதாகப் பார்த்தாள்.

No comments: