Tuesday, October 28, 2014

கிழிபடும் சீட்டுகள்


கிழிபடும் சீட்டுகள்


சமீபத்தில் வாசித்த நாவல்களில் இப்படியொரு மனஅலைகழிப்பை எந்தவொரு நாவலும் தந்ததில்லை. படித்து முடித்து இரண்டு நாட்களாகி விட்டாலும் இன்னும் ஏதோ செய்துகொண்டிருக்கிறது அந்நாவல்.

புலம்பெயர் வாழ்வின் வலிகளை, வேதனைகளை, ரணங்களை பல நாவல்கள், கதைகள் சொல்லி இருந்தாலும், விகடனில், அ. முத்துலிங்கம் எழுதும் 'கடவுள் தொடங்கிய இடம்' எனக்கு அதிக ஈர்ப்பைக் கொடு(த்திரு)க்கிறது.

இலங்கையில் இருந்து அகதிகளாகச் செல்ல முடிவெடுப்பவர்கள் ஏஜென்ட்களின் மூலம் எப்படி, எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்? அப்பெரும்பயணத்தில் அவர்கள் படுகிற அவஸ்தைகளில் இருந்து எல்லாமே நுட்பமான விவரிப்பாக இருக்கிறது முத்துலிங்கத்தின் தொடர் கதையில். ஆனால் அப்படியொரு விவரிப்பு இல்லையென்றாலும் ஜீவகுமாரனின் 'கடவுச்சீட்டு' அந்த வலிகளை எளிதாகக் கடத்திவிடுகிறது நமக்குள்.


தமிழ், சுபாவுடன் பத்து பதினைந்துபேர் ஏர்லங்கா மூலம் பிராங்க்போர்ட் செல்கிறார்கள். பாஸ்போர்ட்டை விமானத்தின் கழிவறைக்குள்ளேயே கிழித்து பிளஷ் செய்துவிட்டு இமிக்ரேஷனில் பிடிபடுகிறார்கள். ஜெர்மன் அகதி முகாம். அங்கு இவர்களைப் போல அதிகமானோர் இருக்கிறார்கள். அதில் நம்மூரைச் சேர்ந்தவர், அல்லது தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா எனத் தேடுவதும் இல்லையென்றதும் அவர்கள் முகம் வாடித் திரும்புவதும் ரணத் தின் உச்சம். அவர்களில் ஒருவனாக  என்னை நினைத்துப் பார்த்தேன். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு அங்கிருந்து இன்னொரு ஏஜென்ட். ரோட்டில் காட்டில் ஓடி, எல்லைக்கம்பிகளை வெட்டிக்  கடந்து பள்ளத்தில் இறங்கி, மேலேறி இன்னொரு வேலி தாண்டி, பெட்ரோல் லாரிக் குள்ளும் பன்றி லாரிக்குள்ளும் பயணித்து டென்மார்க்கை அடைவதும் அங்கு படித்து நல்ல வாழ்க்கை வாழ்வதும் அங்கும் நம் பண்பாடு வளர்ப்பதும் பிறகு அந்நாட்டின் கலாசாரத்தில் தமது பிள்ளைகளைப் பறித்து கொடுத்து விட்டு தமிழும் சுபாவும் படும் துன்பங்களும் பின்னர் எடுக்கும் முடிவும் என நிறைவேறுகிறது நாவல்.

வாழ்க்கை நம் கைக்குள் அகப்படுவதில்லை. அதைத் தீர்மானிப்பவர்க ளாகவும் நாம் இல்லை. நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்யாதவர்களாக வே இருக்கிறோம். அப்படி முடிவு செய்யும் நிலை இருந்தால், ஈழம் ஈழமாக வும் நீங்கள் நீங்களாகவும் நான் நானாகவும் அவர்கள் அவர்களாகவும் அப்படி அப்படியே இருந்திருப்போம். ஆனால் சாத்தியமானாதா அது?

பிழைப்புக்காக டென்மார்க் போயும் அங்கும் சாதி பார்த்துக்கொண்டிருக்கும் நம் மக்களும் அங்குள்ள பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு கர்ப்பமானதும் விட்டு விட்டு வேறுநாடுச்செல்லும் நம் இளைஞனும் நெஞ்சைக் குத்திச் செல் கிறார்கள்.  இதையெல்லாம் விட நாவலில் எனக்கு அதிர்ச்சி தந்த இடம், கல் லூரி பிரின்ஸிபால் போன்ற அதிகாரி கேட்பதுதான்:
'டூர் போகும்போது பிள்ளைக்கு நீங்க, கருத்தடை மாத்திரை கொடுத்தனுப்ப வில்லையா?'

புலம்பெயர் வாழ்வின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சொல்லும் இந்நாவல், அங்கு நம் கலாசாரத்தை இழந்து நிற்பதை  பெரும் வலியோடு பதிவு செய்தி ருக்கிறது.

..........................

தண்டனைகளின் வலி


அப்பாவின் தண்டனைகளை நான் அனுபவித்ததில்லை. அம்மாவின் தண்டனைதான் எனக்கு. அதில் அதிக தாக்கம் இருக்காது. அதிகப்பட்சம் போனால் கையில் சூடு வைக்கலாம். அதுவும் முந்தானையில் திருடியது போன்ற பெரிய தவறுகளுக்கு. அதைத்தாண்டி அம்மாவின் தண்டனையில் பேரன்பே நிறைந்திருக்கும். ஆனால் தவசியின் 'அப்பாவின் தண்டனைகள்' அப்படிப்பட்டதல்ல. அது கொடூரத் தண்டனைகளைக் கொண்டிருக்கிறது.

அப்பாவும் மகனுக்குமானத் துரத்தலும் அதனூடாக காலங்காலமாக கொடுக்கப்படும் தண்டனைகளும் வலிகள் மிகுந்து வளர்ந்து நிற்கின்றன. பெரும்பனையென, ஆகாயத்தைப் பிடிக்க நினைக்கும் ஏக்கமென,  நெருப்பைக் கொண்டிருக்கிற கோபமென, அத்தண்டனைகள் என்னை நோக்கி பார்க்கிறது. அல்லது என்னை குறிவைத்து வருகிறது.


தவசி, நாவலில் சொல்லும் நிலகாட்சிகளில் என்னால் இயல்பாக ஒன்றிப்போக முடிகிறது. அதன் வழிகள் எங்கும் என்னால் நீச்சலடிக்க முடிகிறது. உச்சி மரத்தில் இருந்துகொண்டு படமெடுக்கும் ஐந்துதலைநாகத்தை பார்க்க நானும் செல்கிறேன்.  பாலை ஒழுகவிட்டுச் சிரிக்கும் காவக்காட்டு பொக்கைச் சிரிப்பில் நானும் ஓவென சிரித்து விழுகிறேன். அவர் காட்டும் காடு கரைகளும் மாடுகளும் திண்ணையும் சண்டையும் சச்சரவும் என்னையும் அதற்குள் இறக்கிவிட்டு விளையாட்டு காட்டுபவையாகவே இருக்கிறது. தவசியின் எழுத்தில், அனல் என்றால் என் மேனியில் வெக்கையை உணர்கிறேன். வேகமாக நம்மை இழுத்துச்செல்லும் எழுத்து தவசியுடையது.

தவசி எனக்குத் தெரிந்தவர்தான். நான் பணியாற்றும் நிறுவனத்தின் வேறொரு கிளையில் வேலை பார்த்தவர். சில நண்பர்களோடு அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவரை நோய் அரித்துக் கொண்டிருப்பது தெரிந்தும் வெளியில் சொல்லிக் கொள்ளாதவர். அவரின் 'சேவற்கட்டு' நாவல் எனக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கம் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியே வைத்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஓர் நாளில் இறந்துபோனார் தவசி. புற்றுநோய் அவரை காவுக்கொண்டிருந்தது.
இறந்துவிடுவோம் என்று தெரிந்து, உடல் வலியைத் தாங்கிக்கொண்டு, 'அப்பாவின் தண்டனைகள்' நாவலை அவர் வேகமாக எழுதினார் என்றார்கள்.

தவசியின் இடத்தில் அவர் நாவல் இருக்கிறது. தவசியை விட அவர் நாவல் அதிகமாகப் பேசும் என்றே தெரிகிறது.

.........................


No comments: