Tuesday, October 20, 2009

காடு -3

குள்ராட்டி - மேற்கு மலைத் தொடர்ச்சியின் குளு குளு பிரதேசம். குளிர் ஆட்டி என்பதே குள்ராட்டி என மறுவியதாகச் சொல்வார் பேச்சித்தாத்தா. எட்டு மாதக் கோடையில், ஊர் அனலாக மாறி வயக்காடுகளில் பாளங்கள் வெடித்திருக்கும் நேரங்களில் மனிதனுக்கும் மாட்டுக்கும் பசி பிடித்துக்கொள்ளும். ஊரில் உள்ள மாடுகள் அனைத்தையும் 5 பேர் கொண்ட குழு, இந்த குள்ராட்டிக்கு கொண்டு செல்வார்கள். கீழிருந்து மலைக்கு மேல் 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது குள்ராட்டி. கரடு முரடான வனாந்தரத்துக்குள் வெட்டவெளி மைதானம் இது.

மேலத்தெரு, கருவேலப்பிறை முன், அதிகாலை நான்கு மணியளவில் மாடுகள் கூடிவிட்டன. குள்ராட்டிக்கு செல்ல இருப்பதால் ஊரின் மொத்தக்கூட்டமும் இங்கு இருந்தது. மாடுகள் எண்ணப்பட்டன. மொத்த எண்ணிக்கை கணக்களவில் இருந்தாலும் திரும்பி வரும்போது ஒன்றிரண்டு மாடுகள் காணாமல் போயிருக்கும். அதாவது மிருகங்களின் பசிக்கு இரையாகியிருக்கும். அதையும் தாண்டி சில திருட்டு கணக்குகளும் இதற்குள் இருக்கிறது.

‘எய்யா, மாடுவோளை நல்லா பாத்துக்கோங்க’ என்கிற பாச வார்த்தைகள் காற்றில் கலந்துகொண்டிருந்தது. பிரிவின் வலி என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்கும்.

ஊர் பெரியவர் எனச் சொல்லப்படும் சொல்லமுத்து நம்பியார், ‘டே, வரும்போது மாடு மேய்க்க நாலஞ்சு கம்பு வெட்டிட்டு வந்திரணும். தேன் எடுக்க எவனும் வந்தானுவோனா, கொஞ்சம் வாங்கிட்டு வந்திருங்கடே, சின்னவனுக்கு கொஞ்சம் செலம்பு கம்பு வேணும்’ என தனது பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தார்.

உச்சிமகாளிக்கு இது முதல் அனுபவம். குள்ராட்டி பற்றி ஒவ்வொரு வருடமும் ஊரில் பேச்சு வரும்போதெல்லாம் வாய்ப் பிளந்து கேட்டிருக்கிறான். ஆனால், அப்போதெல்லாம் அங்கு போகவேண்டும் என்கிற ஆவலோ, ஆசையோ வந்ததில்லை. இப்போது அதிக எதிர்பார்ப்போடும், ஏதோ ஒன்று கிடைத்துவிட்ட சந்தோஷத்திலும் அவன் பயணப்பட்டான்.

இவர்களுக்கு தலைவனாக ‘நொடிஞ்சான்’ குட்டி இருந்தான். இருந்தான் என்பது பெயருக்குத்தான். இங்கு யார் சொல்லி, யார் கேட்பது? அவரவர்களுக்கான ஆசை, தீர்வு அவரவர்களுக்கானது.

நொடிஞ்சான் தோற்றத்தில் கொஞ்சம் வித்தியாசமானவன். கூடு போல முன் வந்திருக்கும் நெஞ்சோடு கொஞ்சம் உயரமான தோற்றத்தில் இருப்பான். நடந்தால் ரெண்டு கால் முட்டிகளும் தட்டும். அதனால் அவனால் மெதுவாகவே நடக்க முடியும். மாடுகள் விஷயத்தில் விஷயம் உள்ளவன் என்பதாலும் குள்ராட்டிக்கு சிறு வயது முதலே சென்று வருபவன் என்பதாலும் அவனுக்கான மரியாதை அதிகமாகியிருந்தது.

இவர்களோடு, கந்தையா, தவிட்டான், கேசரி ஆகியோரும் இணைந்திருந்தார்கள். இதில் தவிட்டானுக்கு தினமும் அசைவம் வேண்டும். அது இல்லாமல் அவனால் உணவுகொள்ள முடியாது. தினமும் ஒரு முயலை பலியிடுவது என்றும், அங்கு வேறு சில வகை இறைச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லப்பட்டதாலும் அவன் வந்திருந்தான். கந்தையாவும் கேசரியும் எதையும் பொருட்படுத்தாத தமது வேலைகளை மட்டுமே செய்கிற வகையறாக்கள்.

மந்திர மூர்த்தி சாமிக்கு பூஜை போட்டு, குள்ராட்டி செல்பவர்களுக்கு சாமி கொண்டாடி திருநீறு பூசிய பின் தொடங்கியது பயணம். ‘க்கியே... போங்க’& குரல் கேட்டு நடந்தன மாடுகள். மந்தை தாண்டி செல்லும்போதுதான், உச்சி மகாளிக்கு ஞாபகம் வந்தது, தனக்காக இன்னொரு காதலி காத்திருக்கிறாள் என்பது.

தொடரும்.

2 comments:

அ.மு.செய்யது said...

நீண்ட இடைவெளி வேண்டாம் தலைவரே !!! அப்பப்ப எழுதுங்க !!

உச்சிமாகாளிக்கு ஃபிகரு செட் ஆகாம நாங்க ஓயமாட்டோம்.அடுத்த பாகத்துலயாவது செட் ஆவுதான்னு
பாப்பம்.

ஆடுமாடு said...

//நீண்ட இடைவெளி வேண்டாம் தலைவரே !!! அப்பப்ப எழுதுங்க //


நன்றி செய்யதுண்ணே. கண்டிப்பா எழுதறேன்.