Showing posts with label கொடை. Show all posts
Showing posts with label கொடை. Show all posts

Sunday, March 15, 2015

கொடை 23


கல்லூரிக்குச் சீக்கிரமே வந்திருந்தான் முப்பிடாதி. காலை ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு கல்லூரிக்கு வந்தவன் அவனாகத்தான் இருக் கும். வெறிச்சோடி இருந்தது வளாகம். இன்னும் யாரும் வந்தது போல் தெரியவில்லை. ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தோம் என்று அவனுக்கே புரியவில்லை. ஜெஸிலாவிடம் முதலிலேயே சொல்லியிருந்தால், அவ ளும் சீக்கிரமே வந்திருப்பாள். பேசிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது இன்னும் வெளிப்படையாகச் சொல்லாத காதலை, முதல் முதலாகச் சொல்லியிருக் கலாம் என நினைத்தான். கல்லூரியின் வாசலில் நின்று கொண்டே பார்த்தேன். உள்ளே போக மனமில்லை. வாகைமரத்தின் அருகில் மேத்ஸ் மணிகண்டன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். இன்று சீக்கிரம் வந்திருந்தான். இப்போது அவனைச் சந்திக்கும் மன நிலை இல்லை. வெளியே வந்தான்.

டீக்கடையில் பேரூந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேப்பர்களை விரித்து வைத்தபடி டீக்குடித்துக் கொண்டிருந்தனர். ஏழரை மணி மதுரை பஸ், டெப் போவில் இருந்து கிளம்பி, டீக்கடை அருகே நின்றது. வண்டியில் இருந்து கொண்டே டீ கேட்டார் ஓட்டுனர். கடைக்காரச் சிறுவன் கொடுத்து விட்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

கடையில் ஸ்பீக்கர், 'அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்கைக்கட்டிப் பறக்குது சரிதானா?' என்று பாடிக்கொண்டிருந்தது. முப்பிடாதிக்குப் பிடித்த பாடல்தான். வெளியே வைக்கப்பட்டிருக்கிற இரண்டு பெரிய ஸ்பீக்கரில் இருந்து ஜல் ஜல் சத்தம் மட்டும் தனியாகப் பிரிந்து ஒலித் தது இனிமையாக இருந்தது. டிப்டாப்பிடம் இந்த மாதிரி ஸ்பீக்கர் வாங்கி வைக்கச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

பஸ் டெப்போவுக்கு மேலே நடந்தான். சாலை முழுவதும் மரங்கள் நிழ லைப் பரப்பியிருந்தன. ஒன்றிரண்டு குரங்குகள், சாலையை வரிசை யாகக் கடந்தன. மேலே நடக்க நடக்க சுகமாக இருந்தது. காற்று இனி மையாக வீசிக்கொண்டிருந்தது.

இந்த இடம் காட்டின் நுனி. இங்கிருந்துதான் மேலே காடு ஆரம்பிக்கிறது. முண்டந்துறை புலிகள் சரணாலயம் என்கிற பச்சை நிற போர் டுக்கு எதிரே, திண்டு கட்டியிருந்தார்கள். இந்த இடத்தில்தான் பேரூந் துகள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் வளைந்து திரும்ப வேண்டும். கீழிருந்து மேலேறும் பேரூந்துகள் கியர் மாத்தி, மெதுவாக முக்கிக் கொண்டு ஏறும்.

அந்தத் திண்டில் உட்கார்ந்தான் முப்பிடாதி. அருகில் வளர்ந்து நிற்கிற புங்கை மரங்களும் வாகை மரங்களும் அந்த இடத்தை அமைதியாக்கிக் கொண் டிருந்தன. அகஸ்தியர் அருவியில் குளித்துவிட்டு வேட்டியைக் காயப் போட்டவாறே சிலர் இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சில் மலையாள வாடை தெரிந்தது. இவர்கள் நேர் சாலையின் வழியே வருகிறார்கள். பெரும்பாலும் அகஸ்தியர் அருவிக்கு நடந்து செல்பவர்கள் இந்த வழியாக வருவதில்லை. அவர்கள் பாபநாசம் கோயிலுக்குப் பின்பக்கமாகக் காட்டுக்குள் நடந்து மலையில் ஏறிச் செல்வார்கள். ஒத்தையடிப் பாதை இருக்கிறது. அந்த வழியிலேயே இறங்கவும் செய்வார்கள்.

முப்பிடாதியின் மனம் முழுவதும் ஜெஸிலா மேரி நிறைந்திருந்தாள். அன்று கொடுத்த முத்தம் அவனை ஏதோ செய்துகொண்டிருந்தது. அவள், அவனைத் தள்ளிவிட்டு ஓடியது அவனுக்கு ஏதோவாகி இருந்தது. தவறாக ஏதும் செய்துவிட்டோமோ என்று நினைத்தான். முத்தம் தவறில்லை. அதுவும் கன்னத்தில் கொடுக்கப்படுகிற முத்தங்கள், குற்ற வரையறைக்குள் வராது. முத்தங்கள் குற்றமெனில் மொத்தமும் குற்றம்தான். ஆஹா, முப்பிடாதி என்னாச்சு உனக்கு? என்று அவனையே கேட்டுக்கொண்டான். முத்தம் கூட கொடுக்கவில்லை என்றால் பிறகு அது என்ன காதல் எனத் தோன்றியது. அவள் முகத்தை அடிக்கடிப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் அருகிலேயே இருந்து கொண்டு அல்லது மடியில் படுத்துக்கொண்டு எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம். எதையாவது என்றால் எதை? பேச அதிக விஷயம் இருப்பதாகவும் எப்போது பேசப்போகிறோம் எனவும் ஆவல் அலை கழிக்கிறது. ஆனால், அவள் அருகில் வந்து நின்ற பிறகு மொத்தமும் மறந்துவிடுகிறது சுத்தமாக. எப்படி? மனம் காதல் ஆசைகளில் மிதந்தது. கட்டுப்பாடற்ற ஆசை, கனவுகளை விரிக்கிறது. விரிந்து விரிந்து எங்கோ அலைத்துச் செல்கிறது.

காணிக்குடியிருப்பில் இருந்து கல்லூரிக்கு வரும் வனராஜன் புதிதாக வாங்கியிருக்கிற கவாசகி பைக்கில் கைக்காட்டிக்கொண்டே போனான். பைக்கில் போகும் ஆசை அவனுக்கும் இருந்தது. கண்ணாடி மாட்டிக் கொண்டு ஸ்டைலாக அமர்ந்து ஜெஸிலா மேரியின் பார்வையில் படும் படி ஓட்டிக் கொண்டு செல்ல அவனுக்கும் இருந்தது ஆசை. அது ஆசையாக மட்டுமே இருந்துவிட்டது.

திண்டில் இருந்து இறங்கினான். இதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்க வில்லை. கல்லூரிக்குப் போக முடிவு செய்து நடந்தான். அப்போதுதான் ஒரு பஸ், டெப்போவின் அருகே வந்து நின்றது. மாணவிகள் சிலர் கலர் கலர் தாவணிகளில் இறங்கினர். அவர்களை எதேச்சையாகப் பார்த்தான் முப்பிடாதி. அந்தப் பெண்களில் ஒருத்தியாக ஜெஸிலா மேரியும் இருந்தாள்.

இவனுக்கு உடல் சிலிர்த்தது. நினைத்ததும் வந்துவிட்டாள் எப்படி? இது தான் காதலின் சக்தி. சில விஷயங்கள் நம்மை மீறியும் நடக்கின்றன. நான் சீக்கிரம் வந்தது அவளின் அழ்மனதுக்குக் கேட்டிருக்கும். அது காதல் மனம். காதலனின் உள்ளுணர்வை காதலியும் காதலியின் அக உணர்வை காதலனும் தூர தூர இருந்தே கண்டு கொள்ளும் புது உணர் வு இது என்று நினைத்தான்.

அவள் இவனைப் பார்க்கவில்லை. தன் இருப்பை அவளிடம் காண்பிக்க வேண்டும் என்று வேகவேகமாக நடந்தான். அவள் முன்னே சென்று கொண்டிருந்தாள். கேட் வாசலில் தாண்டியதும் அவள் கண்டிப்பாகத் திரும்பிப் பார்ப்பாள் என அவனது உள்ளுணர்வு சொல்லியது. அவன் அவளின் அருகே வந்துவிடுவதற்காக வேக வேகமாக நடந்துகொண் டிருந்தான். அவளைப் பார்த்துக்கொண்டே வந்தான். அவள் கேட்டின் அருகே சென்றாள். கேட்டைத் தாண்டினாள். இப்போது திரும்பிப் பார்ப் பாள் என நினைத்தான். ஆச்சரியமாக இருந்தது. அவள் தனது ஒரு ஜடையைப் பின்பக்கம் போட்டவாறே திரும்பிப் பார்த்தாள். முப்பிடாதி சிரித்தான். அவள் புருவங்களை உயர்த்தி ஆச்சரியப் பட்டுச் சிரித்தாள்.  அந்தச் சிரிப்புக்கு, 'ஏன் இவ்வளவு சீக்கிரம்' என் பதாக இருந் தது.

இப்போது அவள் உடன் வந்தவர்களை முன்னுக்கு அனுப்பிவிட்டு செருப்பை சரிபார்ப்பது போல நின்றாள். இவன் அவளருகே போனான். எப்போதும் அவ ளிடம் இருந்து வருகிற மனதை மயக்கும் வாசனை இப்போதும் வந்து கொண் டிருந்தது. ரெட்டை ஜடைக்கு மேலே வைத் திருக்கிற மல்லிகைப் பூவின் வாசமும் கிறக்கம் தந்தது. அவன் அவ ளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன இவ்ளவு சீக்கிரம்?'

சுற்றும் முற்றும் பார்த்தான் முப்பிடாதி. பின்னால் யாருமில்லை.

'மனசு கஷ்டமா இருந்தது. ஒங்கிட்ட சாரி கேக்கலாம்னு'

'எதுக்கு?'

'அன்னைக்கு சேர்வலாறுல...'

'அங்கெ என்ன?'

'கிஸ்...'

சிரித்தாள் அவள். பிறகு 'அதுக்குப் பேரு கிஸ்சா?' என்று கேட்டாள்.

'ம்ம்'

'லூசு, இது ஒரு வெஷயம்னு சாரி கேக்க வந்தீங்களாங்கும்?'

'இல்ல... அது' என்று முப்பிடாதி சொல்லவும், 'போதும் போதும் இதே ரொம்ப ஓவரா இருக்கு. போய் வேலைய பாருங்க. எனக்கு பிராக் டிக்கல் இருக்கு' என்று சொல்லிவிட்டுப் போனாள் ஜெஸிலா மேரி. அவன் அவளைப் பார்த்துக்கொண்டே பின் தொடர்ந்தான். அவளின் வகுப்புக்குத் திரும்பும்போது, இவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு இன்னும் தேவையாக இருந்தது.

வகுப்பில் யாருமில்லை. பெஞ்சில் நோட்டை வைத்துவிட்டு வெளியே வந்தான். லைப்ரரி கூட இன்னும் திறக்கவில்லை. வேப்பரமரத்தில் இருந்து வேப்பம் பழங்கள் விழுந்துகிடந்தன. உச்சி, நான்கைந்து  பழங்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ருசி பார்த்தான். சுவை யாக இருந்ததை அடுத்து மற்றவற்றை உதப்பி கொட்டையைத் துப்பி னான். பிறகு இப்படித் தின்பதை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்துக்கொண்டான். யாருமில்லை என்பதால் இன்னும் இரண்டு பழங்களை எடுத்துத் தின்றான். பிறகு ஜெஸிலாவின் வகுப்புக்கு கீழே போய் நின்றான். அவள் ஜன்னலோரம் அவளது தோழி களுடன் இருந்தவாறு ஏதோ நோட்டைக் காண்பித்துப் பேசிக் கொண் டிருந்தாள். இவன் அவள் பார்க்கிறாளா என்று கண்டும் காணாதது போல நின்றுகொண்டிருந்தான்.

ஜெஸிலாவின் வகுப்புத் தோழி ஒருத்தி, அவனைக் கை காட்டி ஏதோ சொன்னாள். எல்லாரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவனுக்கு ஏதோ போல் தோன்ற, கிளம்பி வகுப்புக்கு வந்தான்.

மூன்றாவது வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மனம் அதில் ஈடுபடவில் லை. அருகில், எதிரில், தூரத்தில், போர்டில் என எங்கெங்கும் ஜெஸிலா மேரி நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். கண்களைத் திறந்து பேராசி ரியர் சொல்வதைக் கேட்பது போல் கனவுலகில் சஞ்சரித்துக் கொண் டிருந்தான் அவன். நிலைகொள்ளாமல் ஏதோ தடுமாறிக் கொண் டிருப் பதை பேராசிரியர் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். சிறிது நேரத் துக்குப் பிறகு, 'என்ன முப்பிடாதி. ஒடம்புக்கு ஏதும் சொவமில்லை யோ?' என்று கேட்டார்.

'இல்ல சார்'

'பாத்தா ஒரு மாதிரி தெரியுதே'

'நல்லாதான் இருக்கென் சார்'

'செரி செரி, கவனத்தை இங்க வையு' என்று சொல்லிவிட்டு பாடத் துக்குள் போனார். அவன் கனவுக்குள் போனான்.

அங்கு ஜெஸிலா மேரி, தேவதைகளின் உடை அணிந்து அந்தரத்தில் அமர்ந்திருந்தாள். தேவதைகளை காதலிப்பவர்களுக்கான ஆடை என்ன என்பது தெரியவில்லை. தெரிந்திருந்தால் முப்பிடாதி அந்த ஆடையை அணிந்திருப்பான். அங்கு காதலர்களுக்கான கருத்தரங்கம். அந்தக் கூட்டத்துக்கு வெளியே, 'தேவதைகளுக்கு மட்டுமே அழகு அர்ப்பணிக் கப்படுகிறது. அவர்கள் மட்டும் காதலிக்கப்படுகிறார்கள். இது கடவுளின் சேட்டை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என்கிற போர்டுடன் நான்கைந்து பெண்கள் கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடவுளைக் கண்டிக்கிற அந்தப் பெண்களிடம் பேசுகிறான் முப்பிடாதி. எல்லாருமே அழகானவர்கள்தான். யாராவது ஒருத்தரின் பார்வையில் யாராவது ஒருத்தர் அழகாகவே பார்க்கப்படுகிறார்கள். அதைத்தாண்டி காதலுக்கும் அழக்குக்கும் சம்பந்தமில்லை, காதலுக்கும் கடவுளுக்கும் சமபந்தமில்லை என்கிற முப்பிடாதி, தான் எப்படி இப்படி பேச ஆரம்பித்தேன் என்று தன்னையே கேட்டுக் கொள்கிறான்.

பேராசிரியர் முப்பிடாதியின் முதுகை தட்டாதிருந்தால் அந்த்க் கனவு இன்னும் விரிந்திருக்கும். ஒரு காதல் உலகில் பிரமாதமான பேச் சாளராக மாறியிருப்பான் முப்பிடாதி.

'என்னய்யா பகல் தூக்கமா. போய் மூஞ்சை கழுவிட்டு வா. இல்லனா டீக் குடிச்சுட்டு வா' என்றார் பேராசிரியர். அவர் கறாரானவர். 'வெளியே போ' என்பதை நாகரீகமாகச் சொல்கிறார் எனப் புரிந்து கொண்டான் முப்பிடாதி. அவன் வெளியே வரவும் குத்தாலம், 'எனக்கும் டீ வேணும் சார்' என்று சொல்லிவிட்டு வந்தான்.

இரண்டு பேரும் ஹாஸ்டலுக்குப் போனார்கள். மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர், அறையில் இருப்பது தெரிந்தது. ஒருவனின் அறைக்குச் சென்று, இரண்டு துண்டுகளை வாங்கிக்கொண்டு வந்தான் குத்தாலம். பாபநாசம் கோயில் வாசல் முன் கூட்டம் அதிகமாக இருந்தது. வேன் களில் இருந்து வந்து குளித்துக்கொண்டிருந்தார்கள். கூட்டம் கடந்து கோயிலின் தென்பக்கம் நடந்தார்கள். துணிகளை மூட்டைக் கட்டி வந்து பெண்கள் துவைத்துக் கொண் டிருந்தார்கள். தெற்கே, உள்ளே போகப் போக கூட்டம் அதிகமில்லை. தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந் தது. பேண்ட் சட்டையை அவிழ்த்து விட்டு ஜட் டியுடன் தண்ணீருக்குள் விழுந்தார்கள் இரண்டு பேரும். கண்கள் சிவக்கக் குளித்தார்கள். கால்களைக் கடிக்கும் மீன்களைப் பிடித்து விளையாடினார்கள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு குளிக்க வந்த இரண்டு பேசிக் கொண் டதைப் பார்த்து திடுக்கிட்டார்கள்.

'ச்சே, ஏண்டா பாத்தம்னு இருக்கு'

'இன்னும் கண்ணுக்குள்ளே நிய்க்குடே'

'இன்னைக்குத் தூங்க முடியாது பாத்துக்கெ'

'அழகா இருந்துச்சு'

-குத்தாலம்தான் கேட்டான்.

'என்ன நடந்தது அண்ணாச்சி?"

'காலேஜ் கேட் வாசல்ல ஆக்சிடென்ட்'

'பஸ் மோதி ரெண்டு பிள்ளேலுக்கு சரியான அடி. ரோடு பூரா ரெத்தம்'

'ஆளுவோ அவுட்டா?'

'தெரியல. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காவோ'

அவசரம் அவசரமாக எழுந்து தலைத்துவட்டிவிட்டு வேகமாக வந் தார்கள் கல்லூரிக்கு. முப்பிடாதி நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதில் ஜெஸிலா மேரி இல்லை என்பது அவனுக்கு ஆசுவாசத்தைத் தந்தது.

Sunday, March 8, 2015

கொடை 22


முப்பிடாதி பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டான். புளித்தண்ணியும் காணத் துவையலும். அவனுக்குப் பிடித்தவை என்றாலும் இப்போது முழுதாகச் சாப் பிட முடியாது, கூடாது என நினைத்தான். ஒரு கையால் சிம்னி விளக்கில் த்ரி யை கொஞ்சம் ஏற்றி வைத்தான். பளீச் சென வெளிச்சம் வந்தது. சாப்பிட்டுக் கொண்டே ஆண்டாளிடம், ராத்திரி சங்காபீசில் படுத்துக்கொள்வதாகச் சொன் னான். 

'ஏம். சங்காபீஸ்ல, ராத்திரி என்னடெ?"

'ஒண்ணுமில்ல, டிப்டாப்பு, ராத்திரி பூரா வேலை இருக்குன்னாம்.  தொணைக்கு இருந்துட்டு சங்காபீஸ்ல படுத்துக்கிடுதம்'

'அவென் காரியத்துக்கு முழிக்காம். நீ எதுக்குல? தூங்குன புடுக்குக்கு தொண புடுக்கா?'

'நீ சும்மாரிழா'

பஸ்-ஸ்டான்ட் அருகே யாரோ குடித்துவிட்டு கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து கிழக்கே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள் ஆண்டாள். எதிர்வீட்டு ராணியும் ஆவுடையும் சத்தம் கேட்டு வந்தார்கள்.

'செவனு பாண்டி மவம் சத்தம் மாரில கேக்கு'

'அவெந்தாம்'

'அந்தப் பயலா?'

'ஆமா, மூதி'

'யாரை ஏசுதாம்?'

'முளைக்குதுக்கு முன்னாலயே குடிக்க பழவிருதுவோல்லா'

'யாரை தாயீ, இப்டி ஏசுதாம்?'

'குடிச்சிருக்கது ஊருக்குத் தெரியணும்லா, அதான் இந்தா வரத்து வருது'

'அவன் ஆத்தா உடமாட்டாளே? செவுட்டுலயே போட்டு இழுத்திட்டு போயி ருவாள?'

'தென்காசியில, துட்டி வீடுன்னு போயிருக்கா. அதுக்குள்ள சண்டியரு எங்கெ யோ போயி குடிச்சுட்டு வந்துட்டாரு'

'நல்லா பேசுதாம், எங்கயிருந்துதான் படிக்காணுவளோ இந்த வார்த் தையள' என்று சொல்லிவிட்டு ஆண்டாள் வீட்டுக்குள் வந்தாள்.

டிப்டாப், கடையின் வெளியில் வெளிச்சம் தந்துகொண்டிருந்த குண்டு பல்பை அணைத்துவிட்டு முப்பிடாதிக்காகக் காத்திருந்தான். ராமசாமி சைக்கிளில் வந்து இறங்கினான். சைக்கிளில் தொங்கிய பைக்குள், மட்டன் சுக்காவும் அவிழ்த்த மொச்சைக் கடலையும். பரோட்டா வாங்கி வருவதாகச் சொல்லி யிருந்த முப்பிடாதியும் வந்து சேர்ந்த போது நன்றாக இருட்டியிருந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் அரவம் கேட்கவில்லை. தூங்கி இருப்பார்கள். யாரோ ஒருவரின் வீட்டில் இருந்து ரேடியோவில் 'எங்கே நிம்மதி' என்ற பாடல் கேட்டுக் கொண் டிருந்தது. அது கட்டமுண்டு வீடாகவும் இருக்கலாம். கடைக்குள் பாயை விரித்தான் டிப்டாப். அம்பாசமுத்திரத்தில் இருந்து வாங்கி வந் திருந்த் பிராந்தி பாட்டிலை நடுவில் வைத்தான்.

கடையின் கதவை முழுவதும் மூடாமல் கொஞ்சம் திறந்திருப்பது போல வைத்துக்கொண்டான். முழுவதும் அடைத்தால் காற்று வராது. அதுமட்டு மல்லாமல் திடீரென்று டிப்டாப்பின் அம்மா ஏதாவது புலம்பிக் கொண்டு கடையை வந்துப் பார்ப்பாள். குடிப்பது தெரிந்தால் ஊருக்கே கேட்பது போல ஏசுவாள்.

மூன்று கிளாசில் பிராந்தியை ஊற்றித், தண்ணீர் சேர்த்தான் டிப்டாப். குடிப்பதற்கு முன் கேட்டான் முப்பிடாதி. 'செரி என்னமோ வெஷய ம்னியே, அத சொல்லு?' என்று. 'மொதல்ல குடிங்க. பெறவு சொல்லுதென்' என்ற டிப்டாப், வாயில் வைத்து ஒரே இழு இழுத்தான். பிறகு தலையை உதறிவிட்டு மொச்சையை அள்ளி வாயில் போட்டான். அப்படியே ராமசாமியும் இழுக்க, முப்பிடாதிக்கு ஒரே மூச்சில் குடிக்க முடியவில்லை. பாதியைக் குடித்துவிட்டு பாதியை வைத்தான். நாக்கு கசந்து கிடந்தது. பரோட்டாவை பிய்த்துப் போட்டு விட்டு சால்னாவை ஊற்றிக் குழைத்தான். பிறகு ஒழுகும் சால்னா வோடு வாயில் போட்டான். கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. 

வியர்த்து வடிந்தது டிப்டாப்புக்கு. கிளாசில் திரும்பவும் ஊற்றி மடக் கென குடித்தான். இப்போது மட்டன் சுக்காவை எடுத்து நாக்கில் வைத் தான். காரம் அதிகமாகவே இருந்தது. ராமசாமி, அடுத்த கிளாசுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும் என்றான். முப்பிடாதி முதல் கிளாசையே முடிக்கவில்லை.
சிறிது நேரத்துக்குப் பிறகு டிப்டாப்புக்கு கொஞ்சம் போதை ஏறியது. சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

'தேவடியாவுள்ள ஏமாத்திட்டு போயிட்டாலெ'

'கட்டமுண்டா?'

'ச்சீ, கோம்பை. கட்டமுண்டு எப்டில இதுக்குள்ள வந்தா? எனக்கு ஒரு எழவும் தெரியமாட்டேங்கு?'

'பின்ன, யாரு?'

'எனக்கு இதெ சொல்லு? யாரு, கட்டமுண்ட இதுல இழுத்துவிட்டா?'

'சொடலைதாம்னு நெனக்கென்?'

'செரிக்குள்ள அவங் கொதவளைய கடிக்கணும்'

'செரி விடு, எவான்னு சொல்லு? 

'மகேஸு'

'நெனச்சேன், நெனச்சேன். செவத்த தோலா இருக்குன்னு நாக்கைத் தொங்க போட்டுட்டு அவா குண்டிக்கு பின்னால போனல்லா, அப்பவே தெரியும்?'

'என்ன மயித்த தெரியும்?'

'ஒங்கிட்ட ஆட்டைய போட்டுருவான்னு'

'மயித்த கண்ட?' என்ற டிப்டாப், சால்னாவில் நனைந்த பரோட்டாவை அள்ளி தின்றான். பிறகு இன்னொரு கிளாஸ் சரக்கை ஊற்றி வேக மாகக் குடித்தான். அப்படியே சுவரில் தலையை சாய்த்து கண்களை மூடினான்.

முப்பிடாதி, பண விஷயத்தில் மகேஸ்வரியை எதிர்பார்க்கவில்லை. எப்போ தும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டு அவர்கள் இருப்பதும் கடையில் அவள் உட்கார்ந்திருக்க, ரேடியோவில் போடும் பாடலைக் கேட்டு விட்டு அதற்கு அவள் ஒரு விளக்கம் சொல்ல, இவன் ஒரு விளக்கம் சொல்வதுமாக இருந்த காட்சிகள் கண்முன் வந்து போயின. அவள் ஊருக்கு வந்த புதிதில் ஒரு கூட்டம் அவளைப் பார்க்க வென்றே அலையும். தெருவுக்குள் எப்போதும், அழகாகச் சுத்தம் செய்யப்பட்ட ரப்பர் செருப்பை அணிந்து வருபவள், அவள் மட்டும் தான். அந்தச் செருப்பு சத்தமே அவள் வருகையைத் தெரியபடுத்தும். விக்கிரமசிங்கபுரம் மில்லில் வேலைபார்க்கும் புல்லட் மணிதான் அவள் மேல் ஒரு தலையாகக் காதல் கொண்டு அலைந்தான். அவள் எங்கெங்கு சென் றாலும் அவன் பின் தொடர்ந்தான். ஒரு நாள் பெரிய வாய்க்கால் பாலத்தில் அவளை மறித்து அவன் ஏதோ சொல்ல, அவள் ஏதோ திட்டியதாகச் சொல் வார்கள். பிறகுதான் புல்லட் மணி அவளை பின்தொடர்வதில்லையாம்.

ஒரு லீவு நாளில் சுப்பையா தோப்பில் மாங்காய் பறித்துவிட்டு வந்த போது வயல் வரப்பில் எதிரில் வந்தார்கள் டிப்டாப்பும் மகேஸும். நடு மத்தியான குளியலுக்கு ஆற்றுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். மாங் காய் சாக்கை இறக்கி வைத்துவிட்டு முப்பிடாதி கேட்டான், 'பேய்வோ குளிக்குத நேரத்துல ரெண்டு பேரும் குளிக்கப் போறேளே, எவனாது பாத்தாம்னா என்ன நெனப் பாம்? புதுசா கல்யாணம் ஆன புருஷம் பொண்டாட்டி மாதிரி... என்னத்த சொல் லன்னு தெரியல?'.

'தம்பி போதும்பா. ரொம்ப கவலப்படாத?' என்றாள் மகேஸ். டிப்டாப், 'எங்கள பத்தி நீங்க ஏம்ல கவலப்படுதியோ' என்று சொல்லிவிட்டு மாங்காய் கேட்டான். ஒரு மாங்காயைக் கொடுத்தான் முப்பிடாதி. அவள் ஒரு கடியும் அவன் ஒரு கடியுமாக அவர்கள் கடித்துக்கொண்டு சென்றது நினைவுக்கு வந்தது. 

தனக்கு கூட அவள் மேல் சந்தேகம் வராதது ஆச்சரியம்தான் என்று நினைத் தான் முப்பிடாதி. லேசாக போதை ஏறுவது போல தெரிந்தது ராமசாமிக்கு. அப்படியே டிப்டாப்பின் மூஞ்சைப் பார்த்து உட்கார்ந்தான்.

'மொதல்ல பிரண்ட்ஷிப்புன்னுதாம்ல நெனச்சேன். கேரளாவுல இருந்து இந்த ஊருக்கு வந்திருக்கா. பம்பாய்லலாம் இப்டி ஆம்பளயும் பொம் பளயும் நட்பா இருப்பாவோ, பாத்துக்கோ. அதே மாதிரிதான் பழகுதா ன்னு நெனச்சேன். அவ்வோ குடும்பமே நல்ல பழவிட்டு இருந்துச்சு' என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் மொச்சையை எடுத்து வாயில் போட்டான்.

'ஒரு நாளு கூட, எம்மனசுல அவா மேல தப்பான என்னமே வரலைன் னா பாரேன். நா அப்டி இருந்தேன் மாப்ள. அவளும் அப்டிதான் இருந் திருப்பா. திடீர்னு ஒரு நாளு, 'தாய்மாமா ரொம்ப சீரியசா இருக்காரு. கேரளாவுல ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கு. அவங்க ரொம்ப கஷ்டம். நாங்கதான் பாக்கணும். அவசரம். ரெண்டு மாசத்துல திரும்பித் தந்திட றேன்னு நாப்ப தாயிரம் ரூவா கேட்டா. அவ்வளவு ரூவா எங்கிட்ட இல்லையேன்னு சொன் னேன். 'நா கேட்டா இந்த ஊர்ல தரமாட்டாங்க, நீ யார்ட்டயாது வாங்கிக் கொடு'ன்னா. அவா சொல்லுதது சரிதாம்னு நெனச்சு மொதல்ல முத்தையாட்ட நாப்பதாயிரம் வாங்கி கொடுத் தேன். பெறவு, வேறொரு ஆள்ட்ட இருவதா யிரம் இருவதாயிரமா ரெண்டு தரம் வாங்கிக் கொடுத்தேன். ரெண்டு மாசம் தாண்டுனதும் கடன்காரனுவோ நெருக்க ஆரம்பிச்சுடானுவோ. இவாட்ட கேட் டேன். 'ஐயையோ மறந்தே போயிட்டேன். பத்து நாள்ல தாரேன்னு சொன்னா. சரின்னு விட்டுட்டேன். பெறவு, நாலு ஜாக்கெட்டு தச்சுதான்னு சொன்னா. கொடுத்தேன். தையக்கூலி கொடுத்தா. வேண்டாம்னுட்டேன். சரி ன்னு பார்த்தா, அன்னைக்கு மறுநாள்ல இருந்தே ஆளைக் காணலை. வீடு பூட்டிக் கெடக்கு. அக்கம் பக்கத்துல யாருக்கும் தெரியல. ஒரு நா ரெண்டு நான்னா, வெளியூருக்கு போயிருக்காவோ, திரும்பி வந்துருவாவோன்னு நினைக் கலாம். போயி, பத்து நாளைக்கு மேல ஆச்சு' என்று சொல்லிவிட்டு சுவரில் சாய்ந்தான் டிப்டாப்.

'ச்சீ . எவள நம்பனும் எவள நம்பக்கூடாதுன்னு தெரியலயே?'

'நீ கொடுத்த தொகைக்கு, கீழபத்துல பிச்சையா பிள்ளை தோப்பையும் அந்த நாலு மரக்கா வெதப்பாடையும் வாங்கிருக்கலாம்'

'இதுக்கு, கரையாரு கீரையாறுன்னு அவள கூட்டுட்டு போனவன் அங்க வச்சு கதையவாவது முடிச்சியா? இல்ல பொத்துனாப்ல அனுப் பிட்டியா?'

'கதையன்னா?'

'சோலி பாத்திருக்கலாம். கொஞ்சம் மனசாது ஆறும்லா'

'எங்கூட்டாளியா இருந்தம்னா, மொதல்ல சோலிய முடிச்சுட்டுதாம் மத்தது' என்றான் ராமசாமி. அவனுக்கு இரண்டாவது கிளாசிலேயே போதை ஏறிவிட்டது.

'இப்டி பண்ணுவான்னு தெரியாம போயிட்டே' என்று திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருந்தான் டிப்டாப். 

'தேவடியா முண்ட இனும எங்ஙன என் கண்ணுல பட்டாலும் அங்ஙனயே சேலைய உருவுதனா, இல்லையான்னு பாரு'

'இந்த மாதிரி பொம்பளைலுவோலுக்குலாம் சேலய உருவுதது ஒரு வெஷய மா? நீ கூப்டிருந்தா கூட படுக்க வந்திருப்பா' என்று சொல்லி விட்டு ராமசாமி சிரித்தான்.

''ஒன்னய, நெனச்சா ஒரு பக்கம் சிரிப்பாணியா வருது. இன்னொரு பக்கம் கோவமா வருது' என்ற முப்பிடாதி, இப்போதுதான் இரண்டாம் கிளாசுக்கு வந் தான். மொச்சைக்கொட்டையும் பரோட்டாவும் பாதி காலியாகி இருந்தது. 
'என்ன சிரிப்பாணில?'

'பெறவு, அவா மேல கைக்கூட படாம யோக்கியமா இருந்திருக்கெ. அவா என்ன நெனச்சிருப்பான்னா, 'மூதி, அநியாயத்துக்கு நல்லவனா இருக்காம். சேதாரம் இல்லாம ஆட்டைய போட்டுரலாம்'னு. சேதாரம் ஆனாலும் அவளுக் கு எந்திரிச்சு கழுவிட்டு போற வெஷயம்தானெ. ஆனா, நீ அதை கூட பண் ணல?'

'லேய். மனசு நொந்து போய் கெடக்கென். ஏதாது ஆறுதல் சொல்லு வியோ ன்னு கூட்டிட்டு வந்து தண்ணியடிச்சா, என் பிராந்தியவே குடிச்சுட்டு என்னை யவே ஏசுவேலோல?'

'செரி, இப்பம் அவெள எங்க புடிக்கலாம்?'

'அதுக்குத்தாம்ல கூட்டிட்டு வந்திருக்கென், ஒங்கள. ஏதாது சொல் லுங்க?'
'நாங்க என்ன சொல்ல? 

;செரி, அவளுக்கு கேரளால ஊரு எங்கன்னாது விசாரிச்சு வச்சிருக்கியா?
'பொனலூர் பக்கம்னா?

'பொனலூர்ல நம்ம பூக்காரரு மவன் வேலை பாக்காம். அவெங்கிட்ட கேட் டாலும் அவென் எங்கன்னு போயி அவெள தேடுவாம்?'

'ச்சே. அவென்ட்டலாம் வெஷயம் போச்சுன்னா, ஊருக்கே தெரிஞ்சு போயிரும் பாத்துக்கெ. பெறவு என்னையதாம் காறிட்டுத் துப்புவானுவோ?'

'இதெ எத்தன நாளைக்குப் பொத்தி வைக்க முடியும்? இன்னைக்கு இல்லன் னாலும் கண்டிப்பா வெவாரம் வெளிய தெரியாம இருக்காது பாத்துக்கெ'

'எங்க ஆச்சிக்குள்ள சங்கிலி நாலஞ்சு, அரங்கூட்டுல இருக்கு. இதுக்கு மேல கெழவிக்கு அது எதுக்கு, சாவப்போற வயசுல? அதும் சும்மாதாம் கெடக்கு. எடுத்திரலாம்னு பார்க்கென். வேற வழியில்ல. அத வச்சுதான் கடன அடைக் கணும்' என்ற டிப்டாப் இன்னும் குடித்தான். அவன் வாய் உளறத் தொடங்கியது. வெளியில் நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. சுக்கு வீட்டு தொழுவத்தில் மாடுகள் சண்டையிடும் சத்தம் கேட்டது.

ஒரு திருட்டுக்கு உடந்தையாகப் போகிறோமே என்கிற வருத்தம் முப்பிடா திக்கு இருந்தாலும் அதற்கு மேல் அவனுக்கு என்ன சொல்லவென்று தெரிய வில்லை.

'தேவுடியாவுள்ள அவளெ...' என்று நாக்கைத் துறுத்தி எதிரில் இருந்த ஸ்டூலை மிதித்தான் டிப்டாப். அது பொத்தென்று விழுந்து சத்தம் எழுப்பியது. அவன் கத்தத் தொடங்கினான்.

'அவள... பாருலெ' என்று இன்னுமொரு முறை கத்தும் முன் அவன் வாயைப் பொத்தினான் ராமசாமி.

'சும்மாரு மயிரு. சுக்கு வீட்டுல யாரும் தூங்குன மாதிரி தெரியல. சிம்னி வெளக்கு எரியுது பாரு, ஜன்னல்ல. நீ வேற அவயம் போட்டா, ஆளுவோ இங்க வந்திரும். எங்ஙள கேவலப்படுத்திராத, ஆமா?' என்றான் முப்பிடாதி. சரி என்றான் டிப்டாப். 

அவனால் அதற்கு மேல் முடியவில்லை. இப்போது அழத் தொடங் கினான். ஏங்கி ஏங்கி அழத்தொடங்கினான்.

'கண்டாரவோளி இப்டி பண்ணிட்டாளே...மாப்ள' என்று கண்ணீர் பொங்க அழுதான். அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு மேல் அவன் அழுதால் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது என நினைத்த முப்பிடாதி, ஒரு கிளா சில் இன்னும் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி டிப்டாப் பைக் குடிக்கச் சொன் னான். மடக் மடக் என குடித்தான் அவன். போதை அளவுக்கு அதிகமாகிவிட் டது. இனி அவனால் சத்தம் போட முடியாது. கழுத்துத் தொங்கியது. தரையைப் பார்த்து ஏதோ உளறி னான். பிறகு அப்படியே படுத்தான்.

ராமசாமியும் முப்பிடாதியும் இருந்த கொஞ்ச சரக்கைக் குடித்து விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

'ஏல, இவனும் வேலண்ணன மாரி லூசா ஆயிட்டாம்னா சிக்கலுதாம். அவென் எதுக்கு லூசானாம்னு தெரியுமில்லா?'

'ரூவாய ஏமாத்துனதாலதாம். இருந்தாலும் அவனுக்கு வித்துக் கொடுக் க ஒண்ணுங்கெடயாது. பயத்துலயும் ஏக்கத்துலயும் அப்டியானாம். இவனுக்குத் தாம் வெதப்பாடு இருக்கு. எடங்க கெடக்கு. தோப்பு இருக்கு. அதுவள வித் தாலே உக்காந்து திங்கலாமே?' என்றான் முப்பிடாதி.

வேலண்ணன் லூசான கதை பரிதாபத்துக்குரியது. 

வடக்குத்தெரு முத்துமாரியம்மாள் பூச்சீட்டு நடந்திக்கொண்டிருந்தாள். ஒவ் வொரு பூவுக்கும் (அறுவடைக்கும்) ரெண்டு கோட்டை நெல். ஒரு வருடத்துக் கு ரெண்டு பூ. மொத்தம் 20 பேர். ஒவ்வொரு சீட்டுக்கும் 20 கோட்டை நெல். ஏலம் போக, மத்த கோட்டை நெற்கள் கேட்டவர்களுக்கு. ஒரு பிரச்னையும் இல்லாமல் தான் நடத்தி வந்தாள் முத்துமாரியம்மாள்.

பல வருடமாக இப்பூச்சீட்டை நடத்திவரும் முத்துமாரியம்மாள், காசு பண விவகாரத்தில் கறார்காரியாகச் சொல்லப்படுபவள். ஆள் பார்த்து தான் வரவு செலவு வைத்திருப்பாள். அவளிடம் வேலண்ணனும் பூச்சீட்டுப் போட்டிருந் தான். மகள் கல்யாணத்துக்கு நகை வாங்க வேண்டும் என்பதற்காக சீட்டை கடைசியாக எடுக்க நினைத்திருந்தான். இதுபற்றி முத்துமாரியம்மாளிடமும் சொல்லியிருந்தான். கடைசி சீட்டு என்பதால் கழிவு குறையும் என்பதும் அவன் எண்ணம். கடைசி சீட்டு ஏலம் முடிந்த பிறகு, 'ஏக்கா, நெல்லை வித்துட்டு ரூவாயா தந்தன்னா நல்லாருக்கும்' என்றான் வேலண்ணன். 'ஏம் அதை நீயே விய்க்க வேண்டியதானெ?' என்றாள் அவள். 'அவ்வளவு நெல் மூட்டையையும் கொண்டு போய் வைக்க வீட்டுல இடம் இல்ல. நீயே வித்து தந்திரென்' என்றான். சரி என்றாள் அவள். விற்று அவனிடம் கொடுக்க ரூபாயை வைத் திருந்த நாளில்தான் அந்த சம்பவம் நடந்தது. முந்தின நாள் நடந்த அவர்கள் வீட்டுக் குடும்ப சண்டையில் அவள் வீட்டுக்குத் தீ வைத்துவிட்டார்கள். மொத்த வீடும் வைக்கோற்படப்பும் கொழுந்துவிட்டு எரிந்ததை மொத்த ஊரும் வேடிக்கைப் பார்த்தது.

அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வண்டி சம்பலான வைக்கோற் படைப்பையும் வீட்டையும் நனைத்துவிட்டு போனது.  கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் முத்துமாரியம்மாள். பார்க்க பாவமாக இருந்தது. சேர்த்து வைத்திருந்த அவளது சொந்த ரூபாயும் சீட்டு ரூவாயும் மொத்தமாக எரிந்து சாம்பலானதில் சின்னா பின்ன மாகிவிட்டாள் முத்துமாரியம்மாள். 

சீட்டுப்பணம் கேட்கப்போனவனிடம் கைவிரித்து விட்டாள் அவள். அடுத்த மாசம் தாரேன், அடுத்த மாசம் தாரேன் என்று முத்துமாரி இழுத்ததில் உடல் இளைத்துவிட்டான் வேலண்ணன். மொத்தக் கனவும் சிதைந்து போனதில் நடைபிணமானான். 'மவா கல்யாணத் துக்கு சேர்த்த பணம் இப்டி போச்சே. ஒண்ணுமில்லாம இருக்கேனே' என்று வீட்டில் அவன் தினமும் அழுது புலம்ப, இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனின் மகள் அரளி விதையை அரைத்துத் தின்று உயிரை மாய்த்துவிட்டாள் ஒரு நாள். அரை உசிராக அலைந்து வந்த வேலண்ணன் ஒரே மகளின் இறப்புக்குப் பிறகு, கால் உசிரானான். 

திடீரென ஒரு நாள் எதையோ உளறிக்கொண்டு, கோவணத்தோடு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள், அவன் பொண்டாட்டியிடம் 'ஒம் புருஷனுக்கு என்னமோ ஆச்சுட்டீ' என்று சொல்ல, அவள் போய் இழுத்துவந்தாள் அவனை. பிறகு யாரிடமும் பேசுவதை நிறுத்திவிட்டான். விட்டை விட்டு வெளி யில் வருவதில்லை. பெரும் தாடி மீசையுடன் ஆளே மாறி விட்டி ருந்தான். பார்க்க நோயாளி போலக் காணப்பட்டான். எலும்பும் தோலு மாக மாறிய அவன் உடல்நிலையைப் பார்த்து சொந்தக்காரர்கள் முத்துமாரியிடம் பேசினார்கள். அவள், தன்னால் முடிந்தது என்று ஒரு சிறு தொகையைக் கொடுத்தாள். 

ஒரு திங்கள்கிழமை அதிகாலையில் வடக்குத் தெரு வழியாக பள்ளிக் கூடத்துக்கு வைத்தி சார்வாள் சென்றுகொண்டிருந்தார். அவர் முன் நங்கென்று வந்து விழுந்தது ஓர் கல். அவர் என்ன ஏதென்று திரும்பிப் பார்த்தார். யாருமில்லை. பிறகு இன்னொரு கல், அவர் முன் விழுந் தது. நின்றுவிட்டார். எங்கிருந்து கல் வருகிறது அவர் பார்வையைத் திருப்ப, வலப்பக்கம் வீட்டின் மச்சியில் இருந்து கல் எறிந்து கொண் டிருந்தது வேலண்ணன்.

'டேய் வேலு, நசமா போறவனே, ஏன்டா கல்லை எறியுத?' என்று வடக்குத் தெருவில் இருந்து வாத்தியார் கத்த, அதற்குப் பிறகுதான் தெருவில் எல்லா ருக்கும் விஷயம் தெரிந்தது. 

'ஏல வாத்தியாரே. ஒன்னைய கொல்லாம உடமாட்டேன். ஓடிப்போல' என்று இன்னொரு கல்லை விட்டான். ஆடிப்போய்விட்டார் சார்வாள். அடுத்து, வயலுக்கு மாடுகள் பத்திக்கொண்டிருந்த பொன்னையாவைப் பார்த்து எறிந் தான். குறி தவறியதால் தப்பித்தார். இல்லை என்றால் அங்கேயே காலி யாகியிருப்பார்.

'ஏல வேலு என்னாச்சுல, கோட்டியால புடிச்சிருக்கு?' என்ற கேட்ட போதுதான் தெருவில் அவனுக்குக் கோட்டிப் பிடித்துவிட்டது என்பதை உணர்ந்தார்கள்.

வேலுவின் பொண்டாட்டி வீட்டுக்குள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். மச்சிக்கு ஏறும் ஏணி கதவை அடைத்து விட்டிருந்தான் வேலு. அதனால் அவளால் அங்கு ஏற முடியவில்லை. அதிகாலையிலே கற்களை எடுத்துவந்து மச்சியில் குவித்து வைத்திருக்கிறான் வேலு. அந்தக் கற்கள் காலியாகும் வரை ஒவ்வொருவரையாகக் குறிபார்த்து எறிந்து கொண்டிருந்தான். யாருக் கும் காயமில்லை என்றாலும் காய மேற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் ஊர் பூராவும் விஷயம் பரவி விட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் இப்படி அதிகா லையிலேயே கற்களை எடுத்து மச்சியில் சேமித்து வைத்து எறிந்து கொண் டிருந்தான் வேலு. 

பிறகுதான் சங்கத்தில் இருந்து ஆட்கள் கூடினார். இதை இப்படியே விட்டால் எல்லாருக்கும் சிக்கல் என்றும் அவனைப் பிடித்து நாட்டு வைத்தியரிடம் காட்டுவது என்றும் முடிவு செய்தார்கள். விக்கிரம சிங்கபுரம் நாட்டு வைத் தியரை மறுநாள் ஊருக்கு வரச் சொல்லி விட்டார்கள். தினமும் எருமைப்பால் குடிக்கும் குண்டு பாலு, கணேச மாமா, சைக்கிள் கடை தாசு, சுக்கு எல்லாரும் ஒரு ஐடியா போட்டார் கள். அவன் வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கும் வாகை மரத்தில் ஏறி மச்சியின் மறுபக்கத்துக்கு இரண்டு பேர் வந்துவிடுவது, அந்தக் கதவை, வேலுவின் பொண்டாட்டி முந்தின நாள் சாயந்திரமே திறந்து வைத்து விடுவது என்றும் முன்பக்கமாக ஏணி மூலம் மச்சிக்கு இரண்டு பேர் ஏறுவது என்றும் ஒரே நேரத்தில் ஏறி அவனை அமுக்குவது என்று முடிவு செய்திரு ந்தார்கள். 

காலையில் வழக்கம் போல, குறிபார்த்து வடக்குத்தெருவுக்கு கல்விட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் வந்தார்கள். மெதுவாக ஏறினார்கள். முன்பக்க மாக ஏறிய குண்டு பாலுவும் கணேச மாமாவும், வேலண்ணனின் கைகளை இழுத்து பின்பக்கமாகப் பிடித்தார்கள். 'விடுங்கல, செரிக்குள்ளேலா, விடுங்கல' என்று திமிறிக் கொண்டிருந்தான் அவன். அந்த ஒல்லி உடலுக்குள் எப்படி இத் தனை பலம் என அவர்கள் ஆச்சரியப்படும்படி இருந்தது அவனது திமிறல். அதற்குள் அவர்களும் வந்துவிட, கீழே இழுத்துச்சென்றார்கள். மச்சியில் குவித் துவைக்கப்பட்டிருந்த கற்களை  பார்த்த குண்டு பாலு, 'இவ்ளவு கல்லை எப்படி எடுத்துட்டு வந்தாம்?' என்று யோசித்தான்.

கீழே நாட்டு வைத்தியர் வந்திருந்தார். கையைப் பிடித்துப்பார்த்தார். அவரை அடிக்கப் பாய்ந்தான். நான்கு நாட்கள் நன்றாகத் தூங்கட்டும் என்று அதற்காக மருந்தைக் கொடுத்தார் அவர்.

நான்கைந்து மாதம் அவனுக்கு அவர்தான் சிகிச்சை அளித்தார். அதற் குப் பிறகு தெளிவான வேலண்ணன், இப்போது பால் பண்ணையில் வேலை பார்க்கி றான். ஆனால் முத்துமாரி இன்னும் அவனுக்கு பணத்தைக் கொடுக்கவில் லை. வேலண்ணனும் கேட்கவில்லை.


Tuesday, February 24, 2015

கொடை 21


சேர்வலாறுக்குப் போயிருந்தார்கள் முப்பிடாதியும் குத்தாலமும். கல்லூரி யில் தலையை காட்டிவிட்டு பதினோரு மணிக்கு மேல் பஸ் பிடித்தார்கள். ஜெஸிலா மேரி உள்ளிட்ட பலர் அதாவது பிலோமினாவின் தோழிகள், வகுப் புத்தோழர்கள் சிலரும் ஏற்கனவே அங்கு லீவு எடுத்துவிட்டு வநதிருந்தார்கள். பிலோமினாவின் அண்ணன் மகனுக்கு முதல் பிறந்த நாள் விழா என்பதால் இந்த வருகை.

சேர்வலாறில் அவள் வீடு இருந்த இடம் அமைதியாக இருந்தது. அவள் வீட் டைப் போலவே பக்கத்தில் பத்து, பதினைந்து வீடுகள் ஒரே மாதிரியாக இருந் தன. அது என்ஜினீயர்களுக்கான குவார்ட்டர்ஸ் என்றார்கள். இது பிலோமி னாவின் அண்ணன் வீடு. அவளின் வீடு வேறொரு பக்கம் இருப்பதாகப் பின் னர் தெரிந்தது.

வீட்டைச் சுற்றி எங்கெங்கும் பச்சையாகக் காட்சியளித்தன. தூரத்தில் இரண்டு புள்ளிமான்கள் அங்கிருந்தே இவர்களைப் பார்த்தபடி சென்றன.

உடல் வருடும் தனிமை, பேசச் சொல்லும் அமைதி, இயற்கையின் ஒளி, பறவைகளின் இசை இனிமை, வண்டுகளின் ராகம், விலங்குகளின் குரல், பூக் களின் வாசம், புற்களின் ஈரம் என இப்படியொரு இடத்தில் வீடு கட்டி வாழ எல்லாருக்கும் ஆசை இருக்கும் என நினைத்தான் முப்பிடாதி. 

அவள் வீடு இருக்கும் பகுதியில் மட்டும் தார் ரோடு போட்டிருந்தார்கள். அதில் இனிமையான மணம் எழுப்புகிற வெண்பூக்களும் இலைகளும் விழுந்து கிடந்தன. அந்தப் பூவிற்கு என்ன பெயர் என தெரியவில்லை. ஏதாவதொரு பெயர் இருக்கும். எப்போதோ வைக்கப்பட்ட பெயர். பெயரின்றி இங்கு என்ன இருக்கிறது? அல்லது பெயரில்தான் என்ன இருக்கிறது? பெயரென்று ஒன்று இருப்பதாலும் இல்லாததாலும் தீங்கென்றும் நன்மை என்றும் இல்லை.

அப்போதுதான் விழுந்திருக்கிற, ஒரு பூவை மட்டும் கையில் எடுத்தான் முப் பிடாதி. அவன் எடுப்பதைப் பார்த்து குத்தாலமும் எடுத்தான். தன்னை நோக்கி சிரிக்கின்ற ஒரு குழந்தையின் முகம் அதில் தெரிந்தது. குழந்தையின் கன்னத் தில் முத்தமிடுவதைப் போல முப்பிடாதி அதன் இதழ்களை உதட்டருகில் வைத்தான். சந்தன வாடையை லேசாக ஒத்திருந்தது மிருதுவான அப்பூ. சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். சட்டை மணக்கும் என நம்பிக் கை.

அவள் வீட்டு வாசலில் சில கார்களும் நான்கைந்து ஸ்கூட்டர்களும் நின்றி ருந்தன. கார்களின் முன் அந்த அரசியல் கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது. வெள்ளை வேட்டி, சட்டையில் சிலர் அங்கு வெளியே நின்று பேசிக் கொண் டிருந்தார்கள். சிலர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் வரும் போது சிகரெட் புகை மூக்கில் வந்து அடித்தது. அவர்கள் கட்சிக்காரர்கள்.

காம்பவுன்ட் சுவரைப் பிடித்தபடி சந்தனக்கலரில் சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருக்கிறவரும் இன்னொரு பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். அவர் பிலோமினாவின் அண்ணனாக இருக்கும். பிலோமியின் முகச்சாடையும் இவ ரின் முகச்சாடையும் ஒன்றாக இருந்தது. வாசல்படி ஏறியதும் பல நாள் பழகி யது மாதிரி அவர்தான் வரவேற்றார். உள்ளே போகச் சொன்னார். பிலோமினா, முதல் மாடி யில் ஏதோ வேலையில் இருக்கிறாளாம். 

வீட்டுக்குள் இருந்த ஷோபாவில் பெரிய மீசை வைத்தபடி கழுத்தில் தொங்கும் தண்டியான தங்கச்சங்கிலி அசைய, சட்டையை அவிழ்த்து விட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவர், பிலோமினாவின் அப்பா. போஸ்டர்களில் பார்த்த முகம் அது. அவர் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். குழந்தை தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் தூங் கிக் கொண்டிருந்தது. வீடு அழகான அலங்கார வேலைபாடுகளுடன் இருந்தது. இவ்வளவு பெரிய வீட்டுக்குள் போகத் தயக்கமாக இருந்தது முப்பிடாதிக்கு. ஆடம்பரமான அந்த வீட்டுக்கு வந்திருப்பவர்களும் பெரிய மனிதர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தார்கள். அங்கு வித்தியாசமான வாசம் வந்து கொண் டிருந்தது. அது காட்டின் வாடையாகக் கூட இருக்கலாம்.

தான் அணிந்திருக்கிற உடையும், வியர்வை நாற்றம் வீசும் உடலும் அவர் களின் தகுதிக்கு ஒப்பானதாக இருக்குமா என நினைத்தான். அப்படியே வெளி யே போய்விடலாம் எனத் தோன்றியது. வெளியில் நின்று, வெளியில் பேசி வெளியோடு வெளியாகப் போய்விடலாம் என நினைத்தான். செருப்புகள் கிடக் கும் இடத்துக்கு அருகே அவனும் குத் தாலமும் நின்றிருந்தார்கள்.

யாரோ ஒரு சிறுமி, 'அந்தக்கா ஒங்களை கூப்பிடறாங்க' என்று சொல் லிச் சென்றது. அவள் சொன்ன அக்கா, ஜெஸிலா. வீட்டுக்கு வெளியே வலது பக்கத் தில் போடப்பட்டிருக்கிற பெஞ்சில் இருந்தாள். கிளி பச்சை நிற பட்டுச்சேலை அணிந்திருந்தாள். குளித்து முடித்துவிட்டு அப்போது தான் தலையை உலர்த்தி வந்தவள் போல இருந்தாள் அவள். தனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிவிடுகிறது? என நொந்து கொண்டு கர்சிப் எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். குத்தாலத்திடம் சீப்பு வாங்கி தலையைச் சீவிகொண்டான். இருந்தாலும் தான் நன்றாக இல்லை என்பது போலவே அவனுக்குத் தோன்றியது. அவளுடன் கல்லூரி நண்பர்கள் பலரும் இருந்தார்கள். மாடிப்படியில் இருந்து இறங்கிய பிலோமினா, இவர்களைப் பார்த்து விட்டு, 'வாங் கடே. ஏம் லேட்டு?' என்றாள்.

'ஒங்க ஊருக்கு என்ன, நிமிசத்துக்கு ஒரு பஸ்சா இருக்கு?'

'செரி செரி, வா டேவிட்டைப் பாப்போம்' என்று அழைத்தாள். டேவிட்தான் பர்த் டே பேபி. தூங்கிக்கொண்டிருந்தான். அழகாக இருந்தான். அந்த சின்னக் கழுத் தில் இரண்டு புது தங்க சங்கிலிகள் மின்னின. கைவிரல்களில் மோதிரங்கள். பிறந்தநாள் பரிசாக வந்தவையாக இருக்கலாம். குத்தாலம் வாங்கி வந்த கிலு கிலுப்பையை அவளிடம் கொடுத்தார்கள் இரண்டு பேரும்.

'சும்மாதானெ வரச்சொன்னேன்' என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு வாங்கிக்கொண்டாள்.

'நாங்க இங்கெ நிய்க்கோம். நீங்க வேலய பாருங்கெ' என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தார்கள். மத்தியான சாப்பாடு வீட்டுக்குப் பின்னால் ரெடியாகிக் கொண்டிருந்தது.

ஜெஸிலா, முப்பிடாதியை, 'அணைக்குப் போயிட்டு வருமா' என்று கூப்பிட் டாள். குத்தாலத்தையும் கூப்பிட்டான் முப்பிடாதி. அவன் வெளியே வந்து சொன்னான், 'நீங்க ரெண்டு பேரும் போலாம், நான் எதுக்கு நந்தி மாதிரி?' என்று. ஜெஸிலா, 'நாங்க என்ன ரகசியமா பேசப்போறோம், வாங்கெ' என்றாள் குத்தாலத்திடம்.

போனார்கள். சேர்வலாறு அணையின் முன், சிறு பூங்கா அமைத்திருந்தார்கள். அதில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் இருந் தன. மான், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் சிமென்ட் சிற்பங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள். மரங்களின் நிழல் சுகமாக இருந்தது. காற்றடிக்கும் போது லே சாக குளிர் வந்து போனது.

தூரத்தில் தெரிந்த அணையைப் பார்த்தான் முப்பிடாதி. தண்ணீர் முட்டி அலைந்துகொண்டிருந்தது. ஷட்டரின் வழியே தண்னீர் வெளியேறி ஆறு மாதி ரி சென்று கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழே தள்ளி ஒரு செம்மரமும் புங்கை மரங்களும் இருக்கிறதா எனப் பார்த்தான். நிறைய கிளைகளைக் கொண்ட நான்கைந்து பேர் சேர்ந்து கட்டிப் பிடித்தால் கூட முடியாத சுற்ற ளவைக் கொண்ட அந்த புங்கை மரங்கள்தானா அவை என்று பார்த்தான். அவைதான். இக்கரையில் இருந்து அக்கரைக்கு விழுந்து கிடக்கும் அதன் பெரு ம் கிளையின் மேல் தண்ணீர் பாய்ந்தோடுவது தெரிந்தது. முப்பிடாதி அவர்க ளிடம் சொன்னான்.'சேர்வலாறு அணை கட்டும்போது நா வேலைக்கு வந்திருக்கேன்' என்று. 

'வேலைக்கா, நெசமாவா? இதை கட்டும்போது நீ சின்னப்பிள்ளயால்லா இருந் திருப்பே? கதை விடாதலெ' என்றான் குத்தாலம்.

ஜெஸிலா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். 

'நெசமாத்தாம். அப்பம் நா சின்ன பையன்' என்று சொல்லிவிட்டு கீழே அந்த புங்கை மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது பள்ளி விடுமுறை. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஊரில் அம்மன் கோவில் தெருவில் இருந்த ராஜன் மாமாவை எல்லாரும் மேஸ்திரி என்றார்கள். அவர், தினமும் ஊரில் இருந்து நான்கு லாரி ஆட்களை சேர்வலாறு அணை கட்ட அழைத்துச் சென்றார். ஒவ்வொரு லாரியிலும் மணல் இருக்கும். காலையில் ஏழு மணிவாக்கில் எங்கிருந்தோ மணல் அள் ளிக்கொண்டு வரும் லாரி, பிள்ளையார் கோயில் முன்பு நின்று ஹாரன் அடிக் கும். அந்த சத்தம் கேட்டு அங்கு கூடிவிடுவார்கள் எல்லாரும். 

வேலு டீக்கடையில் லாரி ஓட்டுனரும் அவருடன் இருப்பவர்களும் டீக் குடிப் பார்கள். அவர்கள் குடித்து முடிப்பதற்குள் கையில் சோத்துச் சட்டியுடன் லாரி யில் ஏறி அமர்ந்துகொள்ள வேண்டும். நான் நீ என்று போட்டிப் போட் டுக் கொண்டு வேலைக்குச் சென்றார்கள். சின்னப்பிள்ளைகள்தான் அதிகம் வேண் டும் என்றார்கள். லீவு என்பதால் அவர்களும் அதிகமாகவே ஏறிக் கொண் டார்கள். ஆண்டாள், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அடம்பிடித்துச் சென்றான் முப்பிடாதி. மற்றவர்களுக்குச் சம்பளத்துக்காக செல்கிறார்கள் என்றாலும் அவனும் மேல வீட்டு முத்துசாமியும் காடு பார்க்கும் ஆவலில் போனார்கள். விலங்குகளையும் பார்க்கலாம் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. கூடவே ராசம்மா சித்தி, அவள் மகள் பிரே மா, செல்லம்மக்கா, வசதி தாத்தா, அவர் பொண்டாட்டி, கல்றகுறிச்சா பாட்டி, ரங்கம்மாத்தை, தென்னரசு, செல் லையா மாமா என இருந்ததால் பயமில் லாமல அனுப்பினாள் ஆண்டாள். 

லாரி ஊரில் இருந்து கிளம்பி, டாணா, பாபநாசம் தாண்டி மலைக்கு மேலே ஏறும்போதுதான் பயமாக இருக்கும். வளைவுகளில் திரும்பும் போது விழுந்து விடுவது போல கெதக்கென தோன்றும். பிறகு பக்கத்தில் யாரையாவது பிடித் துக்கொண்டால் பயம் தெரியாது. லாரி மெதுவாகத்தான் செல்லும். 

காட்டுக்குள் போகும்போது மான்களை அதிகமாகப் பார்க்க முடியும். எப் போதாவது யானைகள் தென்படும். சாலையைக் கடக்கும் குரங்குகளும் மிளாக்களும் அதிகம்.

அங்கு ஏகப்பட்ட பேர் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.விக்ரமசிங்க புரம், அம்பாசமுத்திரம், பொதிகையடி, டாணா, சிவந்திபுரம், மணிமுத்தாறு என அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். இவர்கள் போகும்போது அணையை பாதி கட்டியிருந்தார்கள். அணைக்கு கீழே நான் கைந்து பிரிவாக வேலை நடந்து கொண்டிருந்தது. 

ஒரு பகுதியில் சிமெண்ட் கலவை வேலை. சின்ன சின்ன சட்டிகளில் அதை சுமந்து கொண்டு ஒரு இடத்தில் கொட்ட வேண்டும். ஒவ்வொரு சட்டியையும் தூக்கிக்கொண்டு போகும்போதும், வைத்திருக்கும் சிகரெட் அட்டையை அங்கு பேனா வைத்திருக்கும் ஒருவனிடம் காட்டவேண்டும். ஒவ்வொரு சட்டிக்கும் ஒரு கோடு இழுப்பான். யார் அதிக கோடுகள் வாங்க வேண்டும் என்பதிலும் போட்டி நடக்கும். ஒரு கோடுக்கு 20 பைசா. முதல் இரண்டு மூன்று நாட்கள் வேலை பரபரப்பாக இருந்தது. நான்காவது நாள் அங்கு வெள்ளையாக இருந்த இரண்டு அதிகாரிகள், 'என்னடா படிக்கிறீங்க?' என்று கேட்டார். பிறகு முப் பிடாதி, முத்துசாமி, பிரேமா, கல்றகுறிச்சா பாட்டி உள்ளிட்ட சிலரை 'ஒன்னும் அவசரமில்லடா, மெதுவா சட்டிய தூக்கிட்டு வாங்கெ' என்று சொல்லி விட் டார். இதனால் திடீரென்று சட்டியைத் தூக்குவார்கள். வெயில் கொளுத்த ஆரம் பித்தால் புங்கை மரத்துக்கு வந்துவிடுவார்கள். முத்துசாமி நன்றாக மரமேறு வான். முப்பிடாதியால் ஒரு அளவுக்கு மேல் ஏறமுடியாது. பயம் வந்துவிடும். பிறகு இறங்குவார்கள்.

கீழே பெரிய பெரிய கற்களால் அந்தக் கரைக்கும் இந்த கரைக்கும் தரைப்பாலம் போல போட்டிருந்தார்கள். அதில் ஆறு மெதுவாக  சத்தம் கொடுத்தபடி ஓடிக் கொண்டிருக்கும். உள்ளே பளிங்கு கற்கள் தெரியும். அந்தத் தண்ணீரைப் பார்த் தாலே குளிக்கத் தோன்றும். அதன் மீதும் கரையிலும் புங்கை மரப் பூக்கள் விழு ந்து சிதறிகிடக்கும். புங்கை பூக்கள் அழகானவை. விரியாத இதழ்களுடன் அந்தப் பூவைப் பார்த்தால் சிவலிங்கத்தின் ஒரு வடிவம் போலத் தோன்றும். கீழே காப்பிகலர் காம்பும் அதன் மேல பாதி தீப்பெட்டிக் கலரிலும் பாதி வெண் மையாகவும் அந்தப் பூ இருக்கும்.

நினைத்த நேரத்தில் சாப்பிட அவர்களுக்கு அனுமதி உண்டு. ஒரு மாதம் மட்டு மே அவர்கள் வந்தார்கள். பிறகு நின்றுவிட்டார்கள். 

முப்பிடாதிக்கு பழைய நினைவுகள் வந்து போயின. அதற்குள் கல்லூரி நண்பர் கள் இவர்களைத் தேடி பூங்காவுக்கு வந்தார்கள். 

'வாங்க சாப்பாடு ரெடியாயிட்டாம்'

'கொஞ்ச நேரம் சுத்திப்பாத்துட்டு போவும்'

'ச்சே. இப்ப சாப்புட்டா, இன்னும் அரை மணி நேரத்துல பஸ்சு இருக்கு. போயிரலாம்' என்றார்கள்.

சரி என்று பிலோமினா வீட்டுக்கு கிளம்பினார்கள். சாப்பிட்டு முடிந்ததும் முப் பிடாதியை தனியாக வெளியே வருமாறு அழைத்தாள் ஜெஸிலா. கொஞ்சம் பதட்டத்துடன் போனான். ஒரு மரத்தின் மறைவில் நின்றுகொண்டு சிறிய டப்பாவை பிரித்தாள் அவள். ஒரு சங்கிலியை எடுத்து அவன் கையில் கட்டி விட்டாள். வெள்ளி பிரேஸ்லெட். அதில் ஐ லவ் யூ என்ற வாசகம் பொறிக் கப்பட்டிருந்தது. அவன் வியந்து நிற்பதற்குள் இன்னொரு சிறிய கவரில் டப்பா ஒன்றை கொடுத்தாள். அதனுள் ரேபான் கூலிங்கிளாஸ் இருந்தது. 'இது எதுக்கு நமக்கு?' வேண்டாம் என்று சொன்னால் ஏதும் நினைத்துவிடுவாளோ என்று குழம்பினான்.

'மாமா, மஸ்கட்ல இருந்து கொண்டு வந்தது. ஒங்களுக்கு நல்லாருக்குமேன் னு எடுத்துட்டு வந்தேன்' என்றாள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. அருகில் யாருமில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவள் அதை எதிர்பார்த்தவள் போல அவ னை செல்லமாகத் தள்ளிவிட்டுவிட்டு பிலோமினாவின் வீட்டுக்குள் ஓடி னாள்.

(தொடரும்)

Saturday, February 21, 2015

கொடை 20


டிப்டாப்புக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் பண விவகாரத்துக்குள் எப்படி, கட்டமுண்டு வந்தாள் என யோசித்துக் கொண்டிருந்தான். அவ ளுக்கு பணம் கொடுக்க ஆயிரம் பேர் இருக்கும் போது நான் ஏன் வாங்கிக்கொடுக்க வேண் டும் என நினைத்தான் டிப்டாப். எதையாவது சொல்லி எதிலாவது இழுத்து விட்டு குளிர் காய்வது சிலருக்கு வாடிக்கை ஆகிவிட்டது. எரிச்சலாக வந்த து அவனுக்கு.
.
'இத எந்த நாயி சொல்லுச்சு?'

'எவனோ சொன்னாம். நீ கொஞ்ச நாளா அவ பின்னால போறதயும் கீழ பொத்தையில ரெண்டுபேரும் ஒதுங்குனதையும் யாரோ பாத்திருக்காவோ...'

'ஏல ச்சீ. என்ன பேச்சு பேசுதெ. எவனும் மொழங்காலுக்கும் மொட்டத் தலக்கும் முடிச்சு போட்டாம்னா, அத ஏன்ட்ட கேப்பியோல"

'பின்னெ, நீ அந்தளவுக்கு யோக்கியனா?'

'எந்த மடப்பய சொன்னாம் அப்டி, சொல்லு. கொதவாலய அறுக்கென். நான் எங்கல அவா கூட ஒதுங்குனேன்?'

'கண்ணால பாத்த மாரிலா சொன்னானுவோ?'

'ஊர்ல ஒரு நாதிக்கு நல்ல வெஷயமா பேச தெரியாது பாத்துக்கெ. ஒருத்தன கேவலப்படுத்தணும்னா, எப்டிலாம் கதெய சொல்லுதானு வோ பாரென்'

'அப்டியா சொல்லுதெ'

'பெறவு? நீயும்லா நம்பிக்கிட்டு வந்து கேக்கெ?'

'வேற என்ன செய்ய சொல்லுதெ. சீக்கிரம் கல்யாணத்தை பண்ணித் தொலன்னா அதையும் செய்ய மாட்டேங்க. பின்ன எல்லா நாயும் பேசிட்டுதாம் இருப்பானுவோ'

'அந்த நாயிவோளுக்காவ நா கல்யாணம் முடிக்கணுமோடெ?'

தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோமோ என தோன்றியது இரு வருக்கும். சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பக்கத்தில் படைப்புச் சோறுக்கு காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்கள். மாங்காய் துண்டை நறுக்கி மெதுவாகக் கடித்தான் கருப்ப நம்பி. சாமிக்கு படைக்கும்வரை எச்சில் படக் கூடாது என பயபக்தியாய் படைப்பு வைத்த காலமெல்லாம் போய் விட்டது. இப்போது ஆக்கும்போதே ருசி பார்த்துவிடுகிறார்கள். எச்சில் பண்ணி விடுகி றார்கள். சாமியும் போனால் போவுது என்று விட்டுவிடுகிறார்.

கீழ்பக்கம் ஆட்டை உரித்துக்கொண்டிருந்தான் பரமசிவம். சிலுப்பியை (குடல்) தனியாக எடுத்து அதன் கழிவை உட்கார்ந்து கழுவிக் கொண்டிருந்தான் ராம சாமி. சருவச்சட்டி ஒன்றில் இருந்த தண்ணீருக்குள் முக்கி எடுத்து கையால் நசுக்கி இழுத்தான் குடலை. ஆட்டின் கழிவுகள் கரும் பச்சை நிறத்தில் வெளி யே வந்தன. குடலை சுத்தமாக கழுவது தான் கஷ்டம். மீண்டும் மீண்டும் அப்ப டியே இழுத்துக்கொண்டிருந்தான் ராமசாமி.

சாமிகொண்டாடிகள் பூடத்தின் முன் இருந்த பலகையில் இருந்து எழுந்து வீட்டில் இருந்து வந்திருந்த பானகாரத்தைக் குடித்தார்கள். அவர்கள் அணிந் திருந்த வேட்டிகளில், சந்தனமும் சாமிக்கு பூசிய மஞ் சனமும் சேர்ந்து இளஞ் சிவப்பு நிற கறைகள் தெரிந்து கொண்டிருந்தன. தளவாய் மாடசாமிக்கு ஆடிய குட்டை, எழுந்து கோயிலுக்கு வெளியே ஒண்ணுக்கு இருக்கப் போனார். வழியில் முப்பிடாதியையும் டிப்டாப்பையும் பார்த்து, 'என்னடெ இங்க நின்னுட் டியோ' என்று கேட்டுவிட்டு உடலை நெளித்துக்கொடுத்தார். அவருக்குத் தொண்டை கட்டியிருந்தது. கொடையில் கத்தி கத்தி சாமியாடியதின் விளை வு. ஒவ்வொரு கொடையின்போதும் சாமிகொண்டாடிகளுக்குத் தொண்டை கட்டிவிடும்.

'சும்மா பேசிட்டிருக்கோம்' என்ற டிப்டாப்பிடம், 'கடன் பிரச்ன முடிஞ்சுதாடா?' என்றார் அவர்.

'முடிஞ்சா இவருக்கென்ன, முடியலன்னா இவருக்கென்ன' என்று மனதில் நினைத்துக்கொண்ட டிப்டாப், 'ஆமா அது நேத்தே முடிஞ்சுட்டுலா' என்றான்.

'தெரியாமதான் கேக்கென். ஒனக்கு என்ன பொண்டாட்டியா, பிள்ளை யால. கடன் வாங்குத அளவுக்கு பெரிய மனுசனாயிட்டியோ' என்று குரலை உயர்த் தினார். இது இவருக்குத் தேவையில்லாதது. கடன் வாங்க பெரிய மனுஷன் என்ன, சின்ன மனுஷன் என்ன என நினைத்த முப்பிடாதி, 'மாமா அதெ பெறவு பேசிக்கிடுவம். மத்த வேலயள பார்ப்போம்' என்றான்.

'என்னமோ போங்கெ' என்று சொல்லிவிட்டு அக்கம் பக்கம் யாரும் பொம்பளைகள் வருகிறார்களா என்று நோட்டமிட்டுவிட்டு வேட்டியைத் தூக்கிக்கொண்டு சுவர் ஓரமாக உட்கார்ந்தார் ஒண்ணுக்கடிக்க.

பின்னாலே இன்னும் சில சாமிகொண்டாடிகள் டிப்டாப்பைப் பார்த்து வந்துகொண்டிருந்தார்கள். அருகே வந்தால் எல்லாரும் கடனைப் பற்றி யே கேட்பார்கள். என்ன பதில் சொன்னாலும் அவர்களிடம் முடியாது. ஏசுவார்கள். புத்திமதி சொல்கிறேன் என்று பொரிந்து தள்ளுவார்கள் என நினைத்தான் அவன். 

'முப்பிடாதி. எல்லாரும் வாரவோ. என்னய உண்டு இல்லன்னு பண்ணிரு வாவோ. மத்தியானத்துக்கு மேல கடைக்கு வா. பேசிக்கிடுவம், னா. நான் போறேன்டே' என்று கிளம்பினான். அவன் போவதைப் பார்த்த கசமுத்து, 'ஏல நின்னு' என்று கத்தினார். அவன் கேட்காத மாதிரி ட்யூப் லைட் வெளிச்சம் தாண்டி இருட்டுக்குள் போய்க்கொண்டிருந்தான்.

'என்ன சொல்லுதாம், மூதி' என்றார் கசமுத்து.

'நான் கேட்டுக்கிடல. நமக்கெதுக்கு அவென் வெவாரம்?' என்றான் முப் பிடாதி. பிறகு குட்டை இருந்த இடத்துக்கு அருகில் இவரும் ஒண்ணுக்கிருக்கப் போ னார்.

0

கொடை முடிந்து, எட்டாம் பூசை நடந்துகொண்டிருந்தது.எல்லாரும் கூடியிருந் தார்கள் கோயிலில். கொடையை சிறப்பாக நடத்தியதற்காக இளைஞர் அணி யை எல்லாரும் பாராட்டினார்கள். போன கொடையை விட அனாவசிய செல வுகளைக் குறைத்ததில், வருங்காலத்தில் கொடையை இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என்று பேசிக் கொண்டார்கள்.

சாமிக்கு பூஜை பண்ணி கும்பிட்டு முடித்த பிறகு பல்லி முருகன் பற்றி பேச ஆரம்பித்தார்கள். கொடை அன்று அவனுக்கு அருள் வந்து கோ யில் நோக்கி வந்ததையும் பிறகு திரும்பிச் சென்றதையும் சொன்னார்கள் முப்பிடாதியும் ராமசாமியும். தாங்களும் பார்த்ததாக ராசுவும் பரமசிவமும் சொன்னார்கள்.

'இப்ப என்ன செய்யலாம்' என்று ஆரம்பித்தார்கள்.

'அவென் வேண்டாங்காம். கடைசியா என்ன சொல்லுதாம்னு கேப்போம்'

'என்ன சொல்லுவாம். அன்னைக்கு சொன்னததான் சொல்லுவாம்'

'அப்டின்னா விட்டுருவோம். வேண்டாங்குதவன்ட்ட போயி ஏன் தொங்கிட்டுக் கெடக்கணும்?'

'அவெ அறிவுக்கெட்டத்தனமா சொன்னா, நம்மளும் அப்டியேவா இருக் கணும்?'
'இவெங் யார்ல. அவனுவட்ட பேச முடியுதால. சொன்னதையேதாம் சொல்லு தானுவோ கூறுகெட்ட நாயிவோ. தாம்பாளத்துல வச்சி தாங்க சொல்லுதே ளோ'

கோயிலுக்கு வெளியில் இருக்கும் வீட்டுத் திண்ணையில், பாக்கைத் தட்டிக் கொண்டிருந்த உமையாள் பாட்டி, 'ஏல வேண்டாம்னா போட் டும்ல. அவனுவெ இருக்கதும் ஒண்ணுதாம். இல்லங்கதும் ஒண்ணுதாம். மழை தண்ணி வராம போயிருமா? இல்ல காத்தடிக்கது நின்னு போயிருமா, சண்டாளனுவோ போ னா போயிட்டுப் போறாம்னு விடுவேளா, அதையே பேசிக்கிட்டு?' என்றாள் காதில் பாம்படம் ஆட. 

உமையாள் பாட்டிக்கு வயது எண்பத்தெட்டு. மூன்று பெண், ஐந்து ஆண் என எட்டுப் பிள்ளைகளைப் பெற்றவள். இன்னும் திடகாத்திரமாக வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறவள்.

ராசுவும் கசமுத்துவும் அவளைப் பார்த்தார்கள். பிறகு கசமுத்து, 'நீ சும்மா கெடத்தா. நாங்க பேசுதம்லா' என்றார்.

'ஆமா. சொல்லுதாம் சோத்துக்கு உப்பில்லன்னு. ஏம்ல வழ வழன்னு பேசிட்டி ருக்கியோ. இதா, அதான்னு ஒரேயடியா முடிவெடுப்பேலா, அத விட்டுட்டு கொம்பன் ஆட்டை அறுத்த கதையாலா பேசிட்டிருக்கியோ?' என்றாள்.

கொம்பன் ஆட்டை அறுத்த கதை என்று ஊரில் ஒரு கதை சொல்லப் பட்டு வந்தது. சம்சாரிகளுக்கு அந்தக் கதை அத்துப்படி.

'கொம்பம் கொம்பம்னு ஒருத்தம் இருந்தாம். கொஞ்சம் புத்தி பேதலிச்ச பய. எல்லா வேலயும் செய்வாம். ஆளு நடிகரு மாதிரி செவப்பா இருப் பாம் பாத்துக் கெ. அவ்வோ அம்மக்காரி கேரளா. அப்பக்காரனுக்கு கெழக்க முக்கூடலு. அவ் வோ ஊருல என்னமோ பிரச்னைன்னு இங்க வச்சு காலஞ் கழிச்சிட் டிருந்தாம். அவ்வோளுக்கு இவன் ஒரே பய. எப்பம் பாரு சிரிச்சுட் டேதாம் இருப்பாம். நம்ம தெப்பக்குள அரசமரம் இருக்குல்லா, பாதி நேரம் அங்கதான் கெடப்பாம். யாராது ஆடு பத்திட்டுப் போனா, கூட கூட்டிட்டுப் போவாவோ. வேலை இல்ல னா போவாம். அவங்கூட இருந்தா நேரம் போவ தே தெரியாது பாத்துக்கெ. 

'ஏல, சக்கர எதுக்கு இருக்கு?'

'ஒண்ணுக்கிருக்க'

'அதுக்கு மட்டுமால?'

'பெறவு எதுக்கு?'

'பிள்ள பெக்கதுக்குலா?'

'அது வயித்துலலாவே பெறக்கும்'

'யாரு சொன்னா கூறுகெட்டவனெ. ஒங்க, மேல வீட்டுல கமலம் இருக் கால்லா...'

'ஆமா'

'அவாட்ட போயி, இத காமிச்சு, இத வச்சு எப்டி பிள்ள பெறக்கும்னு கேளுல'

'ச்சீ அவாட்ட கேக்க மாட்டென். சும்மாவே அவா, எங்கிட்ட அதெ புடுச்சு புடுச்சு விளாடுவா. அவாட்ட போயி கேக்க சொல்லுத?'

'புடுச்சு புடுச்சு விளாடுதாலா'

'பெறவு? எங்க வீட்டு முடுக்கு இருக்குலா. கருக்கல்ல அங்க நின் னுட்டிருந்தா, 'என்னடெ செய்யுத'ன்னு கிட்டத்துல வந்து நின்னுக் கிடுவா. நேரா வாராவ சாரத்து மேலோடி அதெ புடிச்சு புடிச்சு இழுப்பா. நாம்லா அவா கைய தட்டி விட் டுட்டு ஓடுவென்'

-எல்லாரும் சிரிப்பாவோ. அவங்கிட்ட விளாடுதாவோன்னு பயலுக்குத் தெரியாது, அவனும் நெசம்னு நெனைச்சு பேசுவான்.

'ஏலெ பெயலுக்கு வெவரம் தெரியாதுங்காவோ. கமலமே கூட்டிட்டு போயி காரியத்த முடிச்சுருவா போலருக்கெ?' ம்பாவோ.

பெறவு, 'நீ நல்ல பயல்லா. அதனால நீ அவாட்டா கேளுடெ, கரீட்டா சொல்லு வா,ன்னா?' ன்னு சொன்னதும் உண்மன்னு நம்பிருவான்.

மறுநாளு இல்லனா என்னைக்கோ கண்ணுல தட்டுபட்டா,  கல்லைக் கொண்டு சும்மா எறிஞ்சுட்டு கோவமா இருக்கது மாதிரி காட்டிக்கிடு வாம்.
'கமலம் ஏசிட்டா, தெரியும்லா'

'ஏம்ல'

'நா, நீங்கெ கேக்க சொன்னேன்னு கேட்டேன். அவனுவ கூடலாம் ஏன் சேருத, இனும சேராதன்னுட்டு அதை புடிச்சுக்கிட்டா'

'பெறவு என்ன செஞ்சா'

'போ, ஒங்கிட்டலாம் சொல்லக் கூடாதுன்னிருக்கா'ன்னுட்டு ஓடிருவாம்.  இப்படி பட்ட பய அவெ. ஒரு நாளு ஊருக்கு சினிமா போட வந்த பீடிக் கம்பெனி, காரு பின்னால திரும்பிருக்கு. நம்ம சம்முவம் மூப்பனாரு வெள் ளாடு உள்ள மாட்டி செத்துப் போச்சு. பெறவு டிரைவருட்ட சண்டைலாம் நடந்துது. அதெ விடு. அந்தானிக்கி, அந்த ஆட்டைத் தூக்கிட்டு மூப்பனாரு வீட்டுக்கு வந்துட்டாரு. வழக்கமா ஆட்டை அறுக்குத கோவாலு பயல காணலெ. இவெ எனக்கு ஆடு அறுக்கத் தெரியும். கோவாலு கூட நானும் போயி ஆட்டை அறுத்திருக்கென்னு சொல் லிருக்காம். 'செரி, அறு'ன்னுட்டு அவரு வீட்டுக்கு பின்னால நிலைக் கதவை எடுத்து மல்லாக்கப் போட்டுட் டாரு. இந்தப் பக்கம் சுவத்துக்கும் அந்தப் பக்கம் சுவத்துக்கும் ஒரு கயிறை கட்டி நடுவுல ஒரு கொக்கி யை மாட்டிட்டாரு. கதவை கழுவி கொடுத்துட்டு, 'ஏல அறுத்து வையி. கறிக்கு சாமாம்லாம் வாங்கிட்டு வாரம்'னு போயிட்டாரு மூப்பனாரு.

கறிச்சோறு சும்மா இறங்காதுன்னு பொட்டலுபுதூர்ல போயி சாமாம் லாம் வாங்கிட்டு, எங்கயோ போயி ஒரு பாட்டிலு சாராயத்தையும் வாங்கிட்டு ரெண் டு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா, ஆடு அப்டியே கெடக்கு. இவெங் அது பக்கத்துல கத்திய வச்சுட்டு ஒக்காந்திருக்காம். மூப்பனாருக்கு கோவம் னா கோவம், அப்படியொரு கோவம்.

'ஏல, ஏம் அறுக்கல?'

'எனக்கு பாவமா இருக்கு. நம்ம கூட சுத்துன குட்டியெ போயி எப்டி அறுக்கன்னு மனசே வரலை. அதாம் அதை பாத்துட்டிருக்கென்'னு சொல்லிருக்காம். அவ ருக்கு பொத்துட்டு வருது கோவம். அடக்கிகிட்டாரு.

'இப்பம் என்ன செய்யலாங்கெ?'

'அப்டியே பொதைச்சுருவோம், ஒம்ம பிள்ள மாதிரிலா'ன்ட்ருக்காம்.

'அப்டியாப்பா. செரி, நீ சொன்ன மாரியே நா பொதைச்சிருதேன். நீ வீட்டுக்குப் போ'ன்னு அனுப்பி வச்சிருக்காரு. பெறவு கோவால புடிச்சுட்டு வந்து அறுத் திருக்காவோ. இதாம் கொம்பம் ஆட்டை அறுத்த கதை. அவென அவ்வோ ஆத்தாக்காரி அவ்வோ ஊருக்கு, அதாம் கேரா ளாவுக்கே கூட்டிட்டுப் போயிட்டா. அங்க போயி வைத்தியம் கித்தியம் பாத்து சரி பண்ணன்னு போனா. அந்தப் பெய இப்பம் எங்க இருக்கானோ? என்று சுப்பையா தாத்தா சொல்லியிருக்கிறார்.

பிறகு ராசு,  சுக்கு, இளைஞர் அணியின் ராமசாமி, வன்னிய நம்பி ஆகி யோர் சென்று பல்லிமுருகன் வகையறாவிடம் பேசுவது என்று முடிவு செய்யப் பட்டது. இதில் சுக்கு, 'நா அவனுவ மூஞ்சியில முழிக்க மாட் டேன்' என்று சொல்லிவிட்டார். அவருக்கு பதிலாக இன்னொருவரை சேர்க்க முயன்றார் கள். 

'மூணா பேரா போயி பேசுறது நல்லாவா இருக்கு? இன்னொருத்தர் வேணும்?'

'ஆமா. கல்யாணத்துக்கு நாள் குறிக்கவாவே போறியோ, மூணு பேரு நாலு பேருன்னுட்டு. சும்மா போங்கெ' என்று கசமுத்து சொன்னதும் சரி என்று அவர்கள் கிளம்பினார்கள். இவர்கள் வருவது அவர்களுக்கு முதலிலேயே தெரிந்திருந்தது.

ராசுவை 'வாரும்' என்றான் பல்லி முருகன். 'கொடைய முடிச்சாச்சா?' என்ற வன், பிறகு 'சொல்லுங்க' என்றான்.

'என்னத்த சொல்ல, ஒங்க முடிவு என்ன?'

'யப்பா, நா சொன்னது சொன்னதுதாம். எனக்கு அவ்வோளோட ஒட்டிக் கிட்டு சாமி கும்பிட முடியாது. பூதத்தாரை நாங்க தனியா பூடம் போட்டுக்கிட போறோம். இதனால ஊரை விட்டு ஒதுக்கி வச்சாலும் பரவாயில்லை. இது தாம் முடிவு'

'செரி. ஒங்க இஷ்டம். வாரோம்' என்று வேறு எதுவும் பேசாமல் திரும் பினார் கள். போனவர்கள் இவ்வளவு வேகமாக, திரும்புவார்கள் என யாரும் நினைக்க வில்லை. டீ சொல்லப்பட்டது. 

பல்லிமுருகன், சொம்பு தங்கம் வகையறாக்களின் முடிவை பேசினா ர்கள். ஊரை விட்டு ஒதுக்க முடிவு செய்தார்கள்.

'அதெல்லாம் வேண்டாம். அவனுவ சும்மாவே எல்லார்ட்டயும் க்ளுக்குன்னு பேசிருவானுவோ. நம்ம கோயிலுக்கும் அவனுவளுக்கும் சம்மந்தமில்லைன் னு வச்சுக்கிடுவம். ஆனா, இதுபத்தி எழுதி வாங்கிக்கிரணும். பின் காலத்துல கோயில் சொத்துல பங்கு கொடுன்னு கேட்டா, வில்லங்கமாயி போவும்' என்றார் கசமுத்து. அது சரியெனப்பட்டது. ஆனால் பல்லிமுருகன் வகைய றாக்கள் எழுதி கொடுக்க மறுத்தார்கள். பிறகு ஊர் பஞ்சாயத்து தலை வர் முன்னிலையில் விவகாரம் பேசப் பட்டது.

'கோயில் வேண்டாம்னு சொல்லுதவன் அதை எழுதி கொடுக்கதுல என் னடெ தப்பு? வேற ஏதும் நோக்கம் இருக்கா ஒங்களுக்கு?' என்று தலை வர் கேட்டார்.
'எங்களுக்கு ஒரு நோக்கமும் இல்ல. பத்திரத்தக் கொடுங்க. கையெ ழுத்து போட்டுருதம்'என்று தலைவர் முன்னிலையில் சொன்னதையடுத்து பத்திரங் கள் விற்கும் விநாயகத்திடம் கொடுத்து எழுதி வாங்கப்பட்டது. அதில் கசமுத்து வும் பல்லி முருகனும் கையெழுத்துப் போட்டார்கள். ராசுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

(தொடரும்)

Sunday, February 15, 2015

கொடை 19

சாமக்கொடையில் வழக்கத்துக்கு மாறாக நிறைய கூட்டம். விருந்தா ளிகளைத் தாண்டி வேறு தெருக்காரர்களும் கூடியிருந்தார்கள். அவர்களின் பேச்சும் சத்தமும் கோயிலில் அடிக்கப்படும் கொட்டுச் சத்தத்துக்குள் முங்கிப் போயிருந்தன. இளம் பெண்கள் பூக்களாலும் பவுடர் பூச்சுகளாலும் தங்களை இன்னும் அழகாக்கி வந்திருந்தனர். அவர்களின் பக்கமிருந்து ஈர்க்கும் வா சனை வந்துகொண்டிருந்தது. சுக்குவின் பொண்டாட்டி, கேரளாவில் வேலை பார்க்கும் அவர் மகனுக்கு, கூட்டத்தில் சிவப்புத் தோளாகத் தெரிந்த ஒருத்தி யை பேசிவிடலாமென நினைத்து விசாரித்துக் கொண்டிருந்தாள்.

'சாமியாம் சாமி' என்று கேலி பேசி அலையும் டிப்டாப், கோயிலின் உள்ளே பெண்கள் நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு ஓரத்தில் நின்றிருந்தான். அவன் காரணமில்லாமல் இங்கு வரமாட்டான் என்று நினைத்தான் முப்பிடாதி. அவனுடன் பக்கத்து வீட்டுக்காரச் சிறுவனும் நின்றிருந்தான். அவர்கள் அந்தப் பெண்களில் யாரையோ நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.

பூதத்தார், ஒரு போர் வீரனைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஜிகினா தாள்கள் ஒட்டப்பட்ட பந்தல் அலங்காரத்தில் சீரியல் பல்புகள் மின்ன, உள்ளே வீரத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார் அவர். எதிரில் நின்று பார்த்தால் பூதத்தார், சப்பரத்துக்குள் இருப்பது மாதிரி தெரிந்தார். அவரது மீசையும் வீச்ச ரிவாளும் பயங்கரமாக இருந்தது. யாரையோ பலிவாங்கிவிடத் துடிக்கும் ஆவேசத்துடன் அந்தப் பார்வை இருந்தது. அவரைப் போலவே மற்ற சாமிக ளும் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.

பேருந்து நிறுத்தத்துக்கு கீழ்ப்பக்கம் இருக்கும் சுடலைமாடன் கோயிலில், சாமக்கொடை என்றால் இப்படி இருக்காது. அது பயங்கரத்தின் உச்சமாக இருக்கும். பசுங்கிளி அண்ணனின் அப்பா கோபால் தேவர்தான் சுடலைக்கு ஆடுவார். சுடலைக்காக அவர் அணியும், சிறு சிறு கண்ணாடிகள் பதிக்கப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய டவுசரும் தொப்பியுமே அச்சம் தரு வதாக இருக்கும். அரிவாளைக் கையில் வைத்துக்கொண்டு நாக்கைத் துறுத் தியபடி அவர் ஆவேசமாக ஆடும்போது யாரும் அருகே போக மாட்டார்கள். மொத்தக் கூட்டமும் சத்தமின்றி நிற்கும். கோயிலில் அவர் போடும் சத்தமும் ஆட்டமும் மேலத் தெரு வரை கேட்கும். 

சாமக்கொடை அன்று ஒற்றைக்கொட்டு முழங்க, சுடுகாட்டுக்கு வேட் டைக்குச் செல்வார். ஆற்றின் ஓரமாக இருக்கிறது சுடுகாடு. ஒத்தக் கொட்டுக் காரன் சாலையில் இருந்து சுடுகாட்டுக்கு இறங்கும் மண் சாலையில் நின்று கொள்வான். அங்கிருந்து சுடுகாட்டுக்குச் செல்லும் அவர், பிணமே எரியா விட்டாலும் எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு வருவார். அவர் சாலைக்கு வந்ததும் ஒத்தக் கொட்டு மீண்டும் முழங்கும். கொட்டுச் சத்தம் ஆற்றின் கரையில் கேட்காமல் இருந்து திரும்பவும் கேட்கும்போதே கோயிலில் பரபரப் பாகி விடுவார்கள். 'சாமி கெளம்பியாச்சி' என்று தகவல்கள் பறக்கும். அவர் வரும் வழியில் யாரும் குறுக்கே போய் விடக் கூடாது என்று ஓடி ஓடிப் போய் பார்த்து வருவார்கள். யாராவது வந்தால் அவர்களை விலக்க, கோயிலுக்கு வெளியே இரண்டு பேர் ஓரமாக நின்றுகொள்வார்கள்.

கோயிலுக்கு வந்ததும் கொட்டுக்காரர்கள் நான்கைந்து பேர் மேளத்தை ஆரம் பிப்பார்கள். சாமி, சுடலை சிலையைப் பார்த்து திரும்பவும் ஆடுவார். சிலையைப் பார்த்து சிரிப்பார். பேசுவார்.

முடிந்ததும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும் பரணைப் பார்ப்பார். அதில் வெள்ளாடு ஒன்றை மல்லாக்கக் கட்டி வைத்திருப்பார்கள். கோபால் தேவர், சாமி சிலையைப் பார்த்துப் பேசிவிட்டு பரணில் ஏறுவார். அவர் கையில், கொடைக்காகத் தீட்டப்பட்டிருக்கிற கத்தி இருக்கும். ஏறி நின்று சிலையைப் பார்ப்பார். பிறகு ஆட்டின் வயிறைக் கத்தியால் ஒரே இழு. வயிற்றில் பொங் கும் ரத்தத்துக்குள் கதலிப்பழங்களைப் போடுவார். அப்படியே பிசைந்து ரத்தத் தோடு தின்பார் அவர். இவர் வாயில் இருந்தும் கையில் இருந்தும் வடியும் ரத்தத்தோடு அவரைப் பார்க்கும்போது ஈரக்குலை நடுங்கும். கோயிலில் ஒரு ஈ, காக்கா சத்தம் இருக்காது.

அப்போது, சின்னப்பிள்ளைகளை அவரைப் பார்க்கவிடாமல் பெரியவர்கள் செய்வார்கள். சிறுவர்களின் கண்களைப் பொத்திவிடுவார்கள். வேட்டை முடிந் ததும் கைகளைக் கழுவுவார். பின் பக்தர்களுக்குத் திருநீறு பூசிவிடுவார். அப்போது சிலருக்கு அவர் குறியும் சொல்லுவார். அந்த குறி சொல் பலிக்கும் என்பதால் நிறைய பேர் அவர் முன் நிற்பார்கள்.

பூதத்தார் கோயிலில் அப்படி பரண் ஏதுமில்லை. கெடா வெட்டு மட்டும், பூதத் தாருக்கு இல்லை என்றாலும் மற்ற சாமிகளுக்காக நடக்கிறது.

ஆறுமுகமத்தையின் குலக்கோயில் சாலை ஓரத்தில் இருக்கிறது. அது இசக்கி அம்மன் என்று அத்தை சொல்லியிருக்கிறாள்.ஊரில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் இருக்கிறது காக்கநல்லூர் விலக்கு. அதற்கு முன் இடதுபக்கம் கருவை முள்ளின் கீழே ஒரு கல். எண்ணெய்ப் பூசப்பட்ட அந்தக் கல்லில் சிவப்பு பட்டுத் துணி கட்டப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து தோப்பு வேலி. சாலையில் பேரூந்து சென்று வந்துகொண்டிருக்கும்.

ஆறுமுகம் அத்தையும் சொந்தக்காரர்களும் அங்கு கொடை கொடுப்பார்கள். சின்னதாகப் பந்தல். ஒரு வண்டி ஆற்று மணல் அடிப்பார்கள். ஆட்கள் உட்காருவதற்கு நிழல் மூடியிருக்கும். போதும். அங்கு சாமக் கொடை என்று ஏதுமில்லை. கொடை நாளான செவ்வாய்க்கிழமை இரவு அத்தைக்கு சாமி வரும். அந்த பெரிய உடலை வைத்துக்கொண்டு அவளால் ஆட முடியாது. அவள் சாமி பூடத்துக்கு முன் உட்கார்ந்து கொண்டு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஆட்டுவாள். அப்போது கண்ணைப் பொத் திக் கொள்வாள். அதோடு முடிந்துவிடும் ஆட்டம். காலையிலேயே பொங்கல் வைத்து சாப்பிட்டிருப்போம். இங்கு கெடாவோ, ஆடோ வெட்டப்படுவதில் லை. ஆனால் அழகத்தையின் ஊரில் இசக்கி அம்மனுக்கு அவர்கள் குடும்பத் தில் கெடா வெட்டுவார்கள். அந்தக் கோயில் களக்காடு போகும் வழியில் இருக் கிறது. ஒரே இசக்கி, எப்படி சைவமாகவும் அசைவமாகவும் இருக்கிறாள் என்பது தெரியவில்லை.

ஊரில் இருக்கிற முத்தாரம்மன் கோவிலிலும் வடக்குவா செல்வி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு கெடா வெட்டு உண்டு. இந்தக் கெடா வெட்டுகள் சத்தமின்று பொட்டென்று முடிந்துவிடும். அதிகப்பட்சம் நான்கைந் து ஆடுகள்தான். 

பூதத்தார் கோயிலில் அப்படி இல்லை. அதிகப்பட்சம் பன்னிரெண்டு, பதிநான்கு என்று போகும். ஒற்றைப்படை எண்ணில் வெட்டக்கூடாது என்று இரண்டைப் படையில் வெட்டுவார்கள். ராத்திரி வெட்டிக் கறி அறுத்து அதைப் பங்கு வைத்து நண்பர்கள், மற்ற பட்றை ஆட்களின் வீடுகளுக்கு கறி அன்பளிப்புப் பார்சலில் போகும். அவர்களின் கோயில் கொடைக்கு இவர்களுக்கு கொடுத் திருப்பதால் பதில் கணக்கு இது. அதாவது முறை கறி.  

செவ்வாய்க்கிழமை சாமைக்கொடை முடிந்த புதன்கிழமை தெருப் பூராவும் கறி வாசனைத்  தூக்கும். கறி வாசனைக்கு தெருவெங்கும் சண்டையிட்டபடி நாக்கைத் தொங்கப் போட்டு அலையும் நாய்கள் வழக்கத்துக்கு அதிகமாக இருக்கும்.  மத்தியானச் சாப்பாட்டின்போது, தெருவில் யாராவது கண்ணில் பட் டால், 'ஏண்ண இங்க வா, ரெண்டு வாய் தின்னுட்டு போ' என்று ஆளாளுக்கு இழுப்பார்கள். அந்த நேரத்தில் எங்கிருந்துதான் உறவு முறை பாசம் பொங்குமோ தெரியாது. அப்படியொரு பாசத்தை அள்ளித் தெளிப்பார்கள். மற்ற சாதிக்காரர்களிடமும் உறவு முறை சொல்லி கழுத்தைக் கட்டிக் கொள்வார் கள். கிட்டத்தட்ட எல்லா வீடுகளில் கொடைச் சோறுதான். இதையடுத்து இருக் கிறது படைப்புச் சோறு. 

விக்கிரமசிங்கப்புரத்தில் இருந்து கறிச்சோறுக்கு இதமாக, மத்தியானமே பிராந்தி வாங்கி வந்திருப்பார்கள் பாட்டில் பாட்டிலாக. ஏதாவது ஒரு வைக்கப் படைப்பு அல்லது தொழுவு ஓரத்தில் கூடி அமர்ந்து கொள்வார்கள் குடிக்க. பக்கத்துத் தெரு, மேலத் தெரு, கீழத்தெரு நண்பர்கள், மச்சினன்மார்கள், உடன் வேலைப் பார்ப்பவர்கள் என எல்லாரும் குடியில் மகிழ்வார்கள். குடிக்குத் தொட்டுக்கொள்ள ஆட்டுப் புடுக்கும், அதிக ஈராய்ங்கம் போட்டு வதக்கிய ஆட்டுக் குடலும் வந்திருக்கும். ஒரு கிளாஸ் குடி குடித்துவிட்டு அதிக காரம் கொண்ட குடல்கறியை அள்ளி வாயில் திணித்தால் எரிப்பும் போதையும் ஜிவ்வென்று மூளைக்குள் ஏறி வியர்க்கும். அப்படியே முந்தைய கொடையில் நடந்ததையோ அல்லது வேறு ஊரில் சொந்தக்காரர்கள் நடத்திய கொடையில் நடந்த விஷயங்களையோ பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த குடி விவகாரம் சத்தமில்லாமல் பத்து இருபது நிமிடத்தில் முடிந்து விடும். மெதுவாகக் குடிப்பதெல்லாம் இல்லை. ஒவ்வொரு கிளாசையும் ஜிவ்வென்று இழுத்தால் போதை குப்பென உடனே ஏறும். அப்படியே போய் இலையில் உட்கார்ந்தால் கொதிக்க கொதிக்க சோறும் குழம்பும் கறியும் அள்ள அள்ள இறங்கும். எவ்வள வு சாப்பிட்டோம், என்ன சாப்பிடோம் என்பது போதையில் தெரியாது. பிறகு தெருவில் போய், பழைய பகைக்கு எவனிடமாவது வம்பு இழுப்பது அல்லது ஆலமரத்திண்டில் போய் அப்படியே மல்லாந்து கிடப்பது என நடக்கும்.

சாமக்கொடை முடிந்ததும் கொட்டுக்காரர்கள், தாங்கள் தங்கி இருக்கும் இடத் துக்குத் திரும்பினார்கள். நேர்ந்து விட்டப்பட்டிருக்கிற ஆடுகள் வெட்டுவதற்கு கோயில் ஓரத்தில் கட்டப்பட்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் உயிர் விடப் போகிற, பூமாலை சுற்றப்பட்ட கழுத்துகளுடன் அழகு காட்டும் ஆடுகள் குலை களைத் தின்று கொண்டிருந்தன. முப்பிடாதி வீட்டு ஆடும் அதில் ஒன்று.

கெடா வெட்ட மூன்று பேர் ரெடியாக இருந்தார்கள். வெட்டப்படும் இடத்துக்கு கொஞ்சம் தள்ளி பெண்கள் நின்றுகொண்டார்கள். எந்த சாமிக்கு வேண்டுத லோ அந்த சாமி பூடத்தின் முன் கெடா வெட்டப் பட்டது. முப்பிடாதியின் வெட்டப்பட்ட ஆட்டை அவனது கணேச மாமா வாங்கிக் கொண்டார்.

கெடா வெட்டு முடிந்ததும் படைப்புச் சோறுக்கான வேலையை ஆரம்பிக்க வேண்டும். பெண்கள் நிற்கும் பகுதிதான் படைப்புச் சோறு ஆக்குவதற்கான இடம். கெடா வெட்டு நடக்கும்போதே சாமிக் கொண்டாடியிடம் திருநீறு பூசிவிட்டு கொஞ்சம் கொஞ்சபேராக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். பெண்கள் நின்ற இடத்தில் ஓரமாகக் கிடந்த அடுப்புக்கற்களை எடுத்து வைத் தார்கள்.

டிப்டாப் முகம் உம்மென்று இருந்தது. எப்போதும் ஜாலியாக இருக்கும் அவன் சில நாட்களாக வேறு மாதிரி இருக்கிறான். ஏதோ கவலைக்குள் விழுந்து விட்டவன் போல மாறியிருந்தான். எப்போதும் அவனிடம் இருக்கும் கிண்டல் இப்போது இல்லை. முத்தையா அடித்ததில் இருந்துதான் இப்படி ஆகிவிட்டான் என சிலர் பேசிக் கொண்டார்கள். அதற்காக அவரை இவன் ஏதும் செய்துவிடு வான் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.

கோயிலின் ஓரத்தில் எதையா பறிகொடுத்தவனைப் போல நின்ற டிட்பாப்பின் முன் முப்பிடாதி போய் நின்றான். இவனைப் பார்த்ததும் சிரித்தான் டிப்டாப்.

'ஏம் உம்முனு இருக்கெ?'

'சும்மாதான்'

'ஒருநாளும் இல்லாத திருநாளா கோயிலுக்குள்ள வந்திருக்கெ?'

'வரக்கூடாதாடெ'

'யார் வேண்டாம்னா? நீ என்னக்கு வந்திருக்கெ. அதாம் கேட்டென்'

'மனசே சரியில்ல பாத்துக்க'

'அதாம் மூஞ்ச பாத்தாலே தெரியுத'

'ரூவா வெவாரம் இவ்ளவு சிக்கல்ல கொண்டு வரும்னு நினைக்கல'

'முத்தையா அடிச்சத சொல்லுதியோ?'

'அது ஒரு விஷயம் இல்லடெ. அவரை திருப்பி மிதிச்சா யாருக்கு எழப்பு?'

'பெறவு?'

'தேவையில்லாம ஒருத்தருக்கு அவரசத்துக்கு வாங்கி கொடுத்த ரூவா. திருப்தித் தரல. நா சிக்கிக்கிட்டென்'

'எவ்வளவு?'

'அறுவதாயிரம்'

'ஏ..யம்மா, இவ்வளவு ரூவாய யாருக்கு வாங்கிக்கொடுத்தெ?'

முப்பிடாதி இப்படி கேட்டதும் சுதாரித்துக்கொண்டான் டிப்டாப். அவசரப்பட்டு வாயை விட்டுவிடக்கூடாது என நினைத்தான். 

'அதெ விடு'

'என்ன மயித்த விடணும். நீ எவளுக்கு வாங்கிக்கொடுத்தன்னு தெரியும். காலெல அவா வீட்டுக்கு போயிருமா?

'ச்சீ. ஒங்கிட்டதான் உண்மைய சொல்லுதென். நீ காட்டிக் கொடுத்திராதடே எல்லார்ட்டயும்'

'இல்லனாலும் தெரியாதுலா, யாருக்கும்?'

'என்ன தெரியுங்கெ?'

'முத்தையா ஒன்ன அடிச்ச அன்னைக்கே கோயில்ல, நீ எவளுக்கோதான் வாங்கிக்கொடுத்திருப்பென்னு பேசிக்கிட்டாவோ. அப்பவே விஷயம் தெரிஞ்சு போச்சு'

'யாருன்னு சொல்லுதாவோ?'

'கட்டமுண்டு மைனிக்குத்தானெ'
'....'
(தொடரும்)

Monday, February 9, 2015

கொடை 18


மேலத்தெரு கல்யாணியின் ஆடுகளோடு மேய்ச்சலுக்குத் தங்கள் ஆடுக ளையும் சேர்த்து விட சென்றுகொண்டிருந்தான் முப்பிடாதி. தெருவில் வரிசை யாக வளர்ந்திருக்கிற வாதமடக்கி மரங்களின் நிழலில் அணில்கள் விளை யாடிக்கொண்டிருந்தன. ஆடுகளின் முனகல் சத்தம் கேட்டு அவை வேகமாக மரத்தில் ஏறி நின்று கீழேப் பார்த்தன. 

ராசுவின் வீட்டில் நின்றுகொண்டிருந்த வெள்ளாட்டுக்குட்டியை, அவரது அம்ம ணங்குண்டி பேரன் கழுத்தோடு சேர்த்து கட்டிக்கொண் டிருந்தான். அது முகத் தை அங்கும் இங்கும் திருப்பியது. அவன், அதன் முகத்தைத் தடவிய வாறு முப்பிடாதியைப் பார்த்தான். 

விளையாட்டாக நாக்கைத் துறுத்தினான் முப்பிடாதி. பதிலுக்கு அந்தச் சிறுவ னும் நாக்கைத் துறுத்திவிட்டு பக்கத்தில் கிடந்த பண்ணரி வாளை எடுத்துக் காண்பித்துச் சிரித்தான்.

முப்பிடாதி, 'இன்னா வாரென்' என்று பயங்காட்டினான். அவன் அசரவில்லை. பண்ணரிவாளை நீட்டி நீட்டி, 'அறுத்து' என்று சைகை செய்தான்.

'ஏல, யார்ட்ட அரிவாளத் தூக்கிக் காட்டுத' என்று வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள் அந்தச் சிறுவனின் அம்மா. அவள் மீனாட்சி. முப்பிடாதிக்கு ஒரு வகையில் முறைப்பெண். 

தெருவில் அவளுடன் சேர்ந்த தோழிகள் எல்லாருமே முப்பிடாதி யையும் அவனையும் இணைத்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அந்தப் பகுதியைக் கடந்தால், 'ஒங்கத்தாம் போறாம்டி' என்று இவன் காதுபட சத்தமாகச் சொல்வார்கள். இவனுக் கும் அவள் மேல் கொஞ்சம் காதல் இருந் தது. அது ஊர்க்காரர்களால், சொந்தக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட காதல். அவன் மனதுள் ஆரம்பித் து மனதுக்குள் முடிந்த காதல் அது.

அவள்,  'ஏல சித்தப்பால்லா அது. அரிவாளயா காட்டுவாவோ' என்று மகனிடம் சொல்லிவிட்டு இவனைப் பார்த்தாள். அவள் கண்களில் இருந்த ஏக்கம், காதல் அவனுக்குப் புரிந்தது.

'எப்ப வந்த?' என்று தடுமாறிக் கேட்டான் முப்பிடாதி. 

'நேத்துதான்' என்றாள் அவள்.

'நல்லாருக்கியா? ஒம்மவன் சூட்டிப்பா இருக்காம்' என்று சொல்லிவிட்டு, வர் றேன் என்பது மாதிரி தலையை ஆட்டி நடந்தான். அவள் வாசல் வரை வந்து இவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் ஆடுகளைப் பத்திக் கொண்டு போனான். எதிரில் வில்லுப்பாட்டுக்காரர்களும் மேளக்காரர்களும் ஆற்றில் குளித்துவிட்டு ஒன்றாக வந்து கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த் ததும் ஒரு சிரிப்பு. பிறகு சென்று விட்டார்கள்.

கல்யாணி, வீட்டில் இருந்தான். இவன் ஆடுகளை எதிர்பார்த்துக் காத்தி ருந் தான். தொட்டியில் இருந்த கழனித் தண்ணீரை பசுமாடு குடித்துக் கொண்டிருக் கும்போதே நேற்றைய புளிச்சச் சோற்றை கொண்டுவந்து தொட்டிக்குள் கொட்டினாள் அவனின் அம்மா. பிறகு பனமட்டை கொண்டு அதைக் கலக்கி னாள். குடித்துக் கொண்டிருந்த பசு, தலையை வெளியே எடுத்துப் பார்த்தது. நான்கைந்து சோற்றுப்ப ருக்கைகள் அதன் வாய்க்கு வெளியே இருந்தன. அதன் பார்வைக்குப் பயந்து ஆடுகள் கொஞ்சம் தள்ளிச் சென்றன. 

அவனின் பக்கத்துவீட்டில் இருக்கும் சொக்கலிங்கம், 'என்ன கொடை காரரு ஒரு கவனிப்பும் இல்ல' என்றான்.

'நாளைக்கு வந்திரும்யா வீட்டுக்கு' என்றான் முப்பிடாதி.

'கோயிலுக்கு கூப்பிடுவீருன்னு பாத்தா, வீட்டுக்கு கூப்பிடுதீரவே'

'கொடை, இன்னைக்கு ராத்திரி முடிஞ்சு போவும். காலைலதான் படப்பு'

'சரிதாம். என்னய சாப்பாட்டு ராமன்னு சொல்லுதேரு'

'கோயிலு சோறுன்னு சொன்னா, இப்டிங்கேரு'

'சும்மாதான்டே சொன்னேன். பூத்தார் சாப்பாடு கெடைக்கணுமெ?'

'ஒம்மகிட்ட பேச்ச கொடுத்துட்டு நவுர முடியாது, வரட்டுமா வேல கெட க்கு?' என்றான் முப்பிடாதி.

சாணத் தண்ணீர் தெளித்து தூத்து துப்புரவாக இருந்த விசாலமான அந்த இடத்தில் ம்மே என்று முனங்கிக்கொண்டு நின்றன ஆடுகள். மேல பத்து வயலைப் பார்த்துவிட்டு, புறங்கையை பின்னால் கட்டிய படி வரும் சுக்கு, முப்பிடாதியைப் பார்த்தார்.

'ஆடுவோள விட்டுட்டியா?'

'ஆமா'

'ராத்திரி, சத்தத்தைக் கேட்டியா?'

'கண்ணால பாத்தனெ?'

'லேசுபட்டவனுவோ கெடயாது, ஒங்க சொக்காரனுவோ. சாமியும் ஊரு மே வேண்டாம்னு சொல்லுதாம்னா, அவனுக்கு எவ்ளவு அவம்பாவம் இருக்கும்? சாமி உட்ருவாரா அப்டி?, அதான் அவயம் போட வச்சாரு' என்ற சுக்கு, வாயில் உதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையைத் துப்பி னார். பிறகு, 'கொடை முடியட்டும். பூதத்தாரே பாத்துக்கிடுவாரு அவனு வள' என்று சொல்லிவிட்டு முப்பிடாதியைப் பார்த்தார். 

'சாமி காரியத்தை என்னமோ வீம்புக்கு பண்ணுத மாரி பண்ணலாமா? ஒங்க குடும்பத்துக்குள்ள மூஞ்சையும் மோறயையும் தூக்குதியோன் னா அதோட விட்டுரணும். அதுக்கு சாமி என்ன செய்வாரு? அவரை வேண்டாம்னு சொல்லலாமா?'

'தனியா பூடம் கொடுக்க போறாவோளாம்லா?'

'குடுப்பாம் குடுப்பாம். என்னமோ தோப்புக்குள்ள வேனலுக்கு குச்சுலு போடுத மாரிலா சொல்லுதானுவோ, பூடம் கொடுக்கத? லேசுபட்ட காரியமா அது? ஒரு நா போல ஒரு நா இருக்குமா? நமக்கு கோவம் வந்தாலே அரிவாள தூக்கச் சொல்லுது. சாமியளுக்கு வந்தா என்னத் துக்காவும்? இப்டிதான் மந்தை தெருவுல மாசானம்னு ஒருத்தன் இருந் தாம். அவங்கதய கேட்ருப்பல்லா?'
'சொல்லிருக்காவோ, வெவரமா தெரியாது'

'ஆங். இப்டிதான். அவ்வோளுக்கு கருப்பசாமிதான் தெய்வம். அவன் ஊரு இலஞ்சி பக்கத்துல. கரீட்டா எந்த ஊருன்னு தெரியல. பொண் டாட்டிக் காரிக்குத்தாம் நம்ம ஊரு. மந்தைக்குப் பின்னால கொளம் இருக்குல்லா அதுக்கு முன்னாலதாம் வீடு. இப்பம் அதெ இடிச்சுட்டா வோ. நம்ம ஊரோடய அவெ வந்துட்டாம். அவ்வோ வயலு என் வயலு இருக்குல்லா, அதுக்கு நாலஞ்சு வயலு தள்ளி இருந்து. ஏழு மரக்கா வெதப்பாடு. வயல்ல, வாய்க்கா கரை ஓரமா இருக்குத இடத்துல கருப்பசாமிக்கு பூடம் கொடுத்தி ரணும்னு முடிவு பண்ணிட்டாம். 'ஒவ்வொரு கொடைக்கும் ஊர்க்கு போவ வேண்டி யிருக்கு. இங்கயே ஒரு பூடத்தை போட்டு நாமளே கும்புட்டுக்கிடுவம்'னான் எல்லார்ட்டயும். நல்ல கொணம். எப்பம் பாத்தாலும் பய சலம்பிட்டே இருப்பான். அதான் எரிச்சலா இருக்கும். மத்தபடி தங்க மானவன். இந்த வெஷயத்துல எடுத்தேன் கவுத்தம்னு இறங்கிட்டாம். அதும் அந்த வாய்க்காக் கரை உருப்புடுத இடமா? முன்னால ஒரு சாராய தகராறுல நாலு பேரை அங்ஙன போட்டுத்தான் வெட்டிக் கொன்னுருக்காவோ. பலி வாங்குன இடமாங்கும் அது. அங்க போயி சாமிக்குப் பூடம் கொடுக் கணும்னு நிய்க்காம். எங்கிட்ட சொன்னதும், 'யோசிச்சு பண்ணு, இந்த எடம் வேண்டாம், இப்டி சம்பவம் நடந்த எடம்'னு சொன்னேன். எறப்பாளி பய கேக்கலை. 'எல்லாத் தையும் சாமி பாத்துக்கிடுவாரு' ன்னு ஏற்பாடு பண்ணிட்டாம். காலைல சாமிக்கு உரு ஏத்தணும். அதுக்கு ஆளெல்லாம் சொல்லிட்டாம். ராத்திரி போயி படுத்தவம்தான். ஒரேடியா தூங்கிட்டாம். மூதி, எப்டி செத்தாம்னு இன்னைக்கு வரைக் கும் தெரியலயே. இதுக்கு என்ன சொல்லுத? இது கருப்பசாமி வேலயா, இல்லங்கியா? சாமி காரியம் பொல்லாதது பார்த்துக்கெ. கொஞ்சம் அசந்தா நம்மள போட்டுத்தாக்கிரும்'

'பூடத்த வைக்க எடத்தலாம் பாத்துட்டாவளாமே?'

'எங்க பாத்திருப்பாவோ? முருவன் வீட்டுக்குப் பின்னால கொஞ்சம் எடம் இருக்குல்லா. அங்ஙன பாத்திருப்பாம். பொம்பளைலும் சின்ன பிள்ளைலும் நடமாடுத இடத்துல, சாமியை கொண்டு வப்பாவுளா? என்னதாம் சொந்த சாமின்னாலும் சுத்த பத்தமா இருக்க வேண்டிய இடத்தை இப்டி வீட்டு பக்கத்துலயா வப்பாம்? அனுபவிப்பாம் பெறவு பொசக்கெட்ட பய'

முப்பிடாதி ஏதும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தான். யார் வீட்டில் இருந்தோ கருவாட்டுக் குழம்பு வாசம் வந்தது. இரண்டு மூன்று முறை வாசனையை இழுத்துப் பார்த்துவிட்டு, 'எவன் செவ்வாக்கிழமயும் அதுவுமா கருவாட்டை திங்காம்' என்று மெதுவாகக் கேட்டார் சுக்கு. பிறகு எந்த வீட்டில் இருந்து வாசம் வருகிற்து என்று வாசனைப் பிடித்துப் பார்த்தார். 'ஊர்ல பாதி பேரு முட்டாபயலாதான் இருக்காம்' என்று சொல்லிக்கொண்டே நடந்தார். கோயிலுக்குத் திரும்பும் தெரு வந்ததும், முப்பிடாதி கோயிலுக்குப் போறேன் என்றான்.

'செரி, நான் கொஞ்சம் நீத்தண்ணிய வாயில ஊத்திட்டு வாரென்' என் றார் சுக்கு.
கோயிலுக்கு வாங்கப்பட்ட சாமான்கள் வந்திருந்தது. இரண்டு பழத் தார்களை, சாமான்களுக்கான அறையில் வைத்துவிட்டு கீழே இறங் கினான் முப்பிடாதி. வாழைத்தாரில் இருந்து வண்டோ, எறும்போ வேட்டிக்குள் ஏறியிருக்க வேண்டும். கடித்தது. வேட்டியை அவிழ்த்து சுவரைப் பார்த்து நின்றுகொண்டு உதறினான். நான்கைந்து உதறலில் விழுந்தது சிறு வண்டு ஒன்று. அதை காலால் நசுக்கிவிட்டு திரும்பி வேட்டியை கட்டியபோது, 'கட்டமுண்டு' மைனி, அவள் வீட்டை அடுத் தப் பெண்கள் இருவருடனும் கோயிலுக்கு வந்தாள். இவனைப் பார்த்த தும் நின்றாள்.

எப்போதும் சிரிக்கும் அதே சிரிப்பை சிரித்துவிட்டு, 'கொழுந்த பிள்ள வேட்டிய உதறும்போது பாத்துட்டென்' என்று மெதுவாகச் சொன் னாள். அவளுடன் வந்தவர்கள் சிரித்தார்கள்.

'மைனிமாரு எத்தன தடவ வேணாலும் பாக்கலாம். அடுத்தாப்ல பாக்கணும் னா எங்கிட்டயே கேளுங்கெ'

'நல்லா பேச ஆரம்பிச்சுட்டடே. ஒங்க அம்மாட்ட சொல்லணும்'

'எதுக்கு?'

'சீக்கிரம் பொண்ணு பாக்கத்தாம்'

'அவ யாரையோ பாத்து வச்சிருக்காளாம'

'அப்ப சீக்கிரம் தாலிய கட்டிருடே'

'எனக்காவ நீங்க ரொம்ப கவல படுதேள மைனி'

'நீ எப்டி இன்னும் சும்மா கெடக்கேன்னு தெரியல. இல்லன்னா எவளயும் ஒதுக்குப்புறமா வச்சிருக்கியா?' என்று அவள் சொன்னபோது கோயிலுக்குள் கொட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். முப்பிடாதி அவளி டம், 'மொதல்ல சாமிய கும்புட்டுட்டு வாங்கெ. மத்தத பெறவு பேசிக்கி டுவம்' என்றான். அவன் பார்வை தடுமாறி அங்கங்கு சென்றதை மைனி கவனிக்காமலுமில்லை.

இவளைப் பார்க்கும்போது மட்டும் முப்பிடாதிக்கு உடலுக்குள் ஏதோ போல் ஆகிவிடுகிறது. அது ஏன் என்பது மட்டும் அவனுக்குப் புரியவே இல்லை. 

(தொடரும்)

Tuesday, February 3, 2015

கொடை 17


'கோயிலுக்குள்ள வந்தா என்னல பண்ண?' என்றான் ராமசாமி. 

'போனா போட்டும், தடுக்காண்டாம், வரி கொடுக்கலன்னா என்ன, அவனுக்கும் கோயிலு சொந்தந்தானல' என்ற முப்பிடாதி, அவர் களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடைக்கப்பட்டிருக்கிற குட்டியின் பலசரக்கு கடை வாச லில், பல்லிமுருகனைப் பிடித்துக்கொண்டார்கள் அவன் மனைவியும் சொம்பு தங்கமும். அவனை ஒருவரும் அவனது அரிவாளை ஒருவருமாகப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அவன் முன் நின்று மறித்தார்கள். 

'ஏய் ஏய், என்னை விடு, என்னைய எங்க தள்ளுத' என்று அவயம் போட்டுக் கொண்டே எகிறினான் பல்லி முருகன். கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் அங்குமிங்குமாகத் திமிறிய அவனது சத்தம் கேட்டு, கடைக்குப் பின்பக்க வீட்டு மரகத ஆச்சி எட்டிப்பார்த்தாள். பிறகு ஏதோ நினைத்தவளாக, வீட்டுக் குள் ஓடிவிட்டாள். அவள் வீட் டை அடுத்து இருக்கிற ராசுவின் மனைவியும் மகள்களும் வெளியே வந்து பார்த்தார்கள். சுவர் ஓரமாக நின்று கொண்ட அவர்கள் சத்தம் போடாமல் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மகள்களில் ஒரு த்தி அப்பாவை அழைத்துவரப் போனாள். ஊரில் இருந்து வந்திருந்த சொந்தக் காரர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், துண்டை போட்டுக் கொண்டு வெளி யே வந்தார். அவருக்குப் பல்லிமுருகனின் சத்தம் கேட்டது. கோயிலில் சாமி யாடும்போதும் இப்படித்தான் சத்தம் கொடுப்பான். பொண்டாட்டிப் பிள்ளை களைத் தாண்டி தெருவுக்கு வந்துப் பார்த்தார். அவர் நின்ற இடத்தில் எப்போ தும் எரியும் தெரு விளக்கு இன்று எரியவில்லை என்பதால் இவர்கள் நிற்பது, பல்லி முருகன் வகையறாக்களுக்குத் தெரியவில்லை. 

பற்களைக் கடித்தபடி கோயிலை நோக்கி ஓடும் விதமாக இருந்த பல்லி முரு கனை குடும்பத்தினர் பிடித்து தடுத்தார்கள். 

'சாமி வீட்டுக்குள்ள இருக்க விடலைன்னா வர வேண்டிய தான கோயிலுக்கு. மூதிக்கு இடும்ப பாரென்' என்று ராசு அவன் பொண்டா ட்டியிடம் சொன்னான்.
'அவன் அண்ணன் தம்பியில இருந்து பொண்டாட்டி பிள்ளேலுவரைக்குலா இருக்கு இடும்பு. பரம்பரையில இருந்து வந்ததோ என்னமோ' என்று பொண் டாட்டிக்காரி சொன்னதும், கோபம் வந்தது ராசுவுக்கு. பரம்பரை என்பதில் அவ னும் அடக்கம் என்பதால், 'சரி நீ வாயப் பொத்திட்டு வா. இத என்னத்த வேடிக் கைப் பார்க்க' என்றவன் வீட்டுக்குத் திரும்பினான்.

பல்லிமுருகன், சிறிது நேரத்தில் ஆங்காரம் குறைந்தவனாகக் கோயிலையே பார்த்துக் கொண்டு நின்றான்.  படுத்துக் கிடந்த நாய் ஒன்று அவர்களை நோக்கி குரைத்து ஓடியது. கிட்டே சென்றதும் தெரிந்த முகம் என்றதால் குரைத்தலை நிறுத்திவிட்டு வாலை ஆட்டிக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு சகஜ நிலைக்கு வந்து  தலையை உதறினான். அவனை அப்படியே வீட்டுக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள், குடும்பத்தினர்.

'வருவாம்னு பாத்தேன். போயிட்டானுவோ?' என்ற வன்னிய நம்பி யிடம், 'வந்திருந்தா ஒரு பிரச்னைய முடிச்சிருக்கலாம். வராம போயிட்டாம்லா, இனு ம வில்லங்கம்தான்' என்ற முப்பிடாதி, 'இனும என்ன நெல நிய்க்க போறானு வளோ' என்றான்.

 'பிரச்னய முடிச்சிருக்கலாம்னா எப்டி?' என்றான் ராமசாமி.

'கோயிலுக்குள்ள வந்தாம்னா கொடை முடிஞ்சாவது வரிய வாங்கிர லாம். 'சாமிய நீ வேண்டாம்னாலும் அது ஒம்ம விடலையவே'ன்னு சொல்லி ஊருக் குள்ள இழுத்திருக்கலாம். சாமி வேண்டாம், ஊரு வேண்டாம்னு சொல்லிருக் கமாட்டாம். இப்பம் போயிட்டாம்லா. நாளைக்கு நடக்குத சாமக் கொடைக்கும் இப்டித் துள்ளிட்டு வர வாய்ப்பிருக்கு. அப்டி கோயிலுக்குள்ள வந்தா, நல்லது. இல்லனா, மூஞ்சி யையும் மோறயையும் தூக்கிட்டு எல்லா ரும் மொறச்சிட்டு அலைய வேண்டியதாம்' என்றான் முப் பிடாதி.

'அப்பம் சாமக்கொடைக்கு பாப்போம், என்ன நடக்குன்னு' என்றபடி ட்யூப் லைட் வெளிச்சத்தில் நடந்தார்கள் கோயிலை நோக்கி. 

வில்லுப்பாட்டுக்காரகள் உட்கார்ந்து வில்லடிப்பதற்காகப் பள்ளிக் கூடத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட ஏழெட்டு பென்ச்கள் ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. அதைப் பூதத்தார் பூடத்துக்கு முன் தயார் செய்தார்கள். புலவர் உடலெல்லாம் சந்தனம் தடவி, சாமியைக் கும்பிட்டு விட்டு திருநீறு பூசி மேடையில் அமர்ந் தார். பக்கப் பாட்டுக்காரர்கள் மற்றும் பின்பக்கமிருந்து சால்ரா போடுபவர்கள் என அனைவரும் சவு கரியமாக அமர்ந்துகொண்டார்கள்.

புலவருக்கு அடிக்கடி நாக்கு வறண்டு விடும் என்பதால் அவருக்காக ஏழெட்டு  கருப்பெட்டிச் சில்லுகள் சிறியதாக உடைக்கப்பட்டு ஒரு பையில் வைத்து கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு சிறு குடத்தில் குடிதண்ணீரும் வில்லடிப்பவர் களின் பின்பக்கம் வைக்கப்பட்டிருந்தது. பூதத்தார் கதையைத் தனது கணீர் குர லில் பாட ஆரம்பித்தார் புலவர்.

0 கொடைக்கு கல்லூரி நண்பர்களைப் பேச்சுக்கு அழைத்திருந்தான் முப்பிடாதி. அவர்கள் இப்படி திடு திப்பென்று வந்து நிற்பார்கள் என நினைக்கவில்லை. ராத்திரி முழுவதும் கோயிலில் முழித்துக் கொண் டிருந்த அசதி, கண்களில் தெரிந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டே வீட்டின் வாசலுக்கு வந்தான். அங்கு குத்தாலத்துடன் ஜெஸிலா மேரி, ஆண்டனி, பிலோமி ஆகியோரும் நின்றிருந்தார்கள். டீச்சரின் தம்பி ராஜாதான் வீட்டுக்கு அழைத்து வந்திரு ந்தான்.

'வாங்க வாங்க' என்று வீட்டுக்குள் அழைத்தான் எல்லாரையும். உள்ளே பெஞ்சில் உட்காரவைத்தான். முப்பிடாதியின் அம்மா, எல் லோரையும், 'வாங்க' என்று சொல்லிவிட்டு புதிய ஆட்களைப் பார்த்தாள். பிறகு, 'இருங்க வாரென்' என்று சொல்லிவிட்டுப் போனாள். ஜெஸிலா வாசலுக்குள் நுழையும்போது வாசல் நிலை அவளின் முன் மண்டையில் டப்பென்று இடித் தது.

'ஐயையோ, குனிஞ்சு வரணும்னு சொல்ல நெனச்சேன்' என்றவாறே அவளது நெற்றியைப் பிடித்து கையால் அரக்கினான் முப்பிடாதி. இது அவனையறியா மலேயே நடந்தது. இதைப் பார்த்த பிலோமினா, குத்தாலத்திடம் ஜாடை செய் தாள். அவன் சிரித்துவிட்டு, 'எய்யா அவ மண்டைய ரொம்ப தடவாதெ. ஒண் ணும் ஆயிராது' என்றான்.அப்போது தான் உணர்ந் தவனாக, 'ஸாரி' என்று சொல்லிவிட்டு கையை எடுத்தான் முப்பிடாதி. ஜெஸிலா சிரித்துவிட்டு இவர்களுடன் கட்டிலில் உட்கார்ந்தாள்.

கோயிலில் அடிக்கப்படும் மேளச்சத்தம் மைக் செட் குழாய் மூலமாகக் கேட் டுக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளுக்கு, ஊரில் இருந்து வந்திருக்கிற சொந்தக்கார இளம்பெண்களின் கொலுசு சத்தம் வீட்டுக்குள் ஒலித்துக் கொண் டிருந்தன.

ஆண்டாள், கருப்பட்டி வாங்கி வந்திருந்தாள். 'காபி போடுதம் குடிங்க' என்ற வள் அடுப்பை ஊதத் தொடங்கினாள். புகை வீட்டுக்குள் பரவிக் கண்ணைக் கசக்க வேண்டியதாகிவிட்டது. புகைப்படத்தில் இருக்கும் அப்பாவை அவர் களுக்கு அறிமுகப்படுத்தினான் முப்பிடாதி. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆண்டாள் இடைபுகுந்து, 'ஏம்மா. ஒங்களுக்கு எந்த ஊரு?' என்று கேட்டாள்.

'வீ.கே.புரம்தான். ஒங்க மவன் கூடதாம் படிக்காவோ' என்றான் டீச்சர் தம்பி ராஜா. 'அதான் தெரியுமே. கொடைக்கு கூப்ட்ருக்காம்னா வேற யாரை கூப்ட போறாம்?' என்ற ஆண்டாளிடம் 'பெறவு கேட்க?' என்ற ராஜா, 'அவங்கள்லாம் பெரிய இடத்து ஆளுவோ' என்றான் மெதுவாக. இதை கேட்டுக்கொண்டிருந்த பிலோமினா, 'ஏம் இப்டிலாம் சொல்லுத. நாங்க என்ன பெரிய இடம்? எல்லாருக்கும் ஒரே இடம்தான்' என்றாள் செல்லமாகக் கோபம் கொண்டு.

அதைக் கவனிக்காத ஆண்டாள், 'ஏம்மா. இவென் ஒரே ஒரு நோட்டை மட்டும் தூக்கிட்டு காலேஜுக்கு போறேங்காம். ஒழுங்கா படிக்கானம்மா?' என்றாள் அவர்களிடம். இதை முப்பிடாதி எதிர்பார்க்கவில்லை. 

'நீட்டா டிரெஸு பண்ணணும்னு நெனய்க்கான். புது சட்டை பேண்டு வாங்க லாம்னா, கடைக்காரனுவோ நெறய துட்டு கேக்கானுவோ. நாங்க எங்க போவ, அவ்ளவு துட்டுக்கு? நீங்களாது புத்தி சொல்லுங்க' என்ற ஆண்டாளை, பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்தான் முப்பிடாதி. அவனுக்கு எரிச்சலாக வந்தது. இவர்கள் முன் தன் நிலையைச் சொல்லி அவமானப்படுத்துகிறாளே என்று நினைத்தான். 

அதைப் புரிந்துகொண்டவளாக பிலோமினா, 'அதெல்லாம் ஒங்க மவன் சூப்பரா படிக்காம். வாத்தியாரெல்லாம் நல்லா பாராட்டுவாங்க ஒங்க மவன' என்றாள்.

ஜெஸிலா கிண்டலாக, 'நீங்க ஏன் பேண்டு, சட்டைலாம் எடுத்துக் கொடுக்கீங்க. வேட்டி, சட்டையே போதும்' என்றாள் குத்தாலத்தைப் பார்த்து. அவனும், 'ஆமா. நாங்கூட தெனமும் வேட்டிக் கட்டிட்டுதான் காலேஜூக்குப் போறேன்' என்றான் பக்கப்பாட்டுக்கு.

'ஏம்மா. நீ மொதல்ல எல்லாத்துக்கும் காபிய குடு. வாய வச்சுகிட்டு சும்மா கெடக்க மாட்டியா?' என்ற முப்பிடாதியை, 'அம்மாவ அப்டிலாம் பேசாத' என் றான் ஆண்டனி.

திடீர் திடீர் என்று எல்லாரும் ஆலோசனை சொல்பவர்களாகவும் நல்ல வர்களாகவும் ஆகிவிடுவதை நினைத்து கடுப்பானான் முப்பிடாதி. காபியை கொடுத்தாள் ஆண்டாள். 'காபிக்குள்ள முறுக்க போட்டு திங்கேளா?'  என்ற வளை, 'ஏம்மா, நீ கொஞ்ச நேரம் வாயப் பொத்திட்டு இருழா, காபிக்குள்ள முறுக்கை போடுதியா, முருங்கைக் காய போடுதியான்னுட்டு' என்றான்.

'ஏம், அவ்வோ ஊர்ல அப்டி திங்க மாட்டாவுளோ?'

'திம்போம். மிச்சரு, முறுக்கு, இல்லனா பொறி அரிசியலாம் கூட போட்டு திம்போம்' என்றாள் ஜெஸிலா. 

'அப்பம் தரவா தாயி' என்ற ஆண்டாள், பொரி கடலையை எடுத்து வந்து நீட்டினாள்.

'இல்ல இப்பம் வேண்டாம்' என்றார்கள். ராஜா சிரித்தான்.

இவர்களைக் கோயிலுக்குக் கூட்டிச் செல்லலாமா? இவர்களைப் பார்த்தால் சாமிகொண்டாடிகள் ஏதும் தவறாக நினைப்பார்களோ? என்று மனதுள் நினைத்துக் கொண்டிருந்தான் முப்பிடாதி. இப்படி இளம் பெண்களுடன் ஓர் ஆண் சுற்றுவதை ஏற்க கூடியவர்கள் அல்ல இவர் கள். சும்மாவே, டிப்டாபை கொன்று எடுக்கிறவர்கள் நம்மையும் அப்படிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தபோது, ஆண்டனி தான் சொன்னான்.

'முப்பு, இன்னைக்கு உங்க கொடையை சாக்கா வச்சு, நாங்க கெளம்பி வந்து ட்டோம். ஆனா, கொடைக்கு வரல. இப்பம் எல்லாரும் குத்தாலம் போறோம், வழியில கடையம் ஹேமந்து, ஜீப்புல வெயிட் பண்ணுதாம். வாரியா?' என்ற தும் முப்பிடாதிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. போனால் ஜெஸிலாவு டன் கொஞ்சம் சுற்றலாம் என்ற ஆசை இருந்தாலும் கொடை வேலைகள் அதற்கு இடம் கொடுக்க வில்லை.

'நா வர முடியாதெ. கொடை வேலை' என்றதும் சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் ராஜா, 'ஆண்டாளக்கா இது தான் ஜெஸிலா. நல்லா பாத்துக்கெ. ஒன் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இவா மண்டையில நிலை இடிச்சு...' என்று சொல்லிவிட்டு முப்பிடாதியைப் பார்த்துக் கண்ணடித்தான். ஜெஸிலா ஒரு மாதிரி தவித்தாள். 'ஐயைய எப்பம் இது' என்ற ஆண்டாள், 'எம்மா கொண்டா தலைய அரக்கி விடுதன்' என்று த லையைப் பார்த்தாள்.அந்த இடத்தில் கொஞ்சம் வீங்கி இருந்தது. 'வேண்டாம். பரவா யில்லை' என்றாள் ஜெஸிலா. 

'கொஞ்சம் எண்ணெயாவது தடவிட்டு போ' என்ற ஆண்டாள், தேங் காய் எண்ணெய் எடுத்துவந்து காயம்பட்ட இடத்தில் தடவினாள்.

பிலோமினா, முப்பிடாதியைப் பார்த்து, 'மாமியாரை கவுக்குதா பாரு' என்று கிசுகிசுத்தாள். அவன், சத்தம் போடாதீங்க என்பது மாதிரி கையை வாயில் வைத்தான்.

'பாத்து வரப்புடாதா' என்ற ஆண்டாளிடம் இருந்து அவர்கள் விடை பெற் றார்கள். முப்பிடாதிக்கு இருக்க முடியவில்லை. அவர்களுடன் சென்று விடத் துடித்தான். சூழல் இடம் கொடுக்கவில்லை. பேரூந்து நிறுத்தம் வரை அவர் களுடன் சென்றான். டீக்கடையைத் தவிர ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. உட்கார்வதற்காக கட்டப்பட்டிருந்த இடத்தில் ஒரு எருமைமாடு படுத்துக்கிடந்தது. அதை விரட்டிவிட்டு அவர்களை உட்காரச் சொன்னான் முப் பிடாதி. எதிரில் இருக்கிற வயதான புளியமரத்தில் இருந்து முறிந்து தொங்கிக் கொண்டிருந்த கிளை ஆடிகொண்டிருந்தது.

 ராஜா அவனது டிவி.எஸ். அம்பதில் குத்தாலத்துடன் செல்வதாகத் திட்டம். மற்றவர்கள் பேரூந்தில் கடையம் வரை சென்று அங்கிருந்து ஜீப்பில் செல்ல முடிவெடுத்திருந்தார்கள்.

அவர்களுக்கான பேரூந்து வர நேரம் ஆனது. அதுவரை பேசிக் கொண் டிருந்தான் முப்பிடாதி. இப்போது ஆண்டனி, பிலோமினாவின் அருகில் உட்கார்ந்திருந்தான், மிகநெருக்கமாக. அவள்தான் கொஞ்சம் கூச்சப்பட்டு நகன்றாள். அவர்களை கண்டுகொள்ளாத முப்பிடாதி, ஜெஸிலாவின் அழகை ரசிக்கத் தொடங்கினாள். ஒருகட்டத்தில் அதை அறிந்துகொண்ட ஜெஸிலா, வெட்கத்தில் சிரித்தாள்.

பேரூந்து வந்துவிட்டது. ஏறினார்கள். பிலோமினாவும் ஆண்டனியும் கை காட் டினார்கள். ஜெஸிலாவின் பார்வை மட்டும் அவனை ஏதோ செய்து கொண் டிருந்தது.

(தொடரும்)