Showing posts with label ஆதலால் தோழர்களே. Show all posts
Showing posts with label ஆதலால் தோழர்களே. Show all posts

Saturday, August 12, 2017

ஆதலால் தோழர்களே 19

திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டார்கள். சீக்கிரமே கடையம் யூனியனில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த பரமசிவத்தின் கனவு உடைந்துவிட்டது. அவனைவிட அதிகமாக உடைந்தது, அவன் மனைவி கிருஷ்ணவேணிதான்.

வாழ்க்கைத் திசை மாறும் என்ற கற்பனையில் இருந்தவள், இப்படி யொரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. அவளைப் பரமசிவம் தேற்றினாலும் கவலை இருந்தது. மகள்கள் வளர்ந்திருந்தனர். அம்பாசமுத்திரம் அத்தான் சொன்னது சரிதான் என்று இப்போது தெரிந்தது.

'என்னைக்காது ஒரு நாளு நான் சொன்னதை நெனக்கியா இல்லை யான்னு மட்டும் பாருல' என்று அவர் திட்டிப் போனது கண்முன் வந்து நின்றது. மானசீகமாக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண் டான் பரமசிவம்.

வேறு என்ன செய்யலாம் என யோசனையில் இருந்தபோதுதான் தேர்தல் வந்தது. கண்டிப்பாக திமுக ஜெயிக்காது என தெரிந்திருந்தும் பிரசாரத்துக்குப் போனான். கட்சிக்காக நிறைய பேசினான். அக்கம் பக்கத்து ஊர்களில் பரமசிவம் பேசுகிறான் என்றால் முன்பெல்லாம் பெருமளவு கூட்டம் கூடும். இப்போது அப்படியில்லை. அதுவே பரமசிவத்துக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும் ஏதோ கையில் காசு கிடைக்கிறது என்று போனான். ஒரு நாள், பேசிப்பேசித் தொண்டைக் கட்டிப்போனதால் பிரச்சாரத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்தான். அப்போதுதான், அவனுடன் படித்த ராஜேந்திரன் வந்திருந்தான் வீட்டுக்கு.

பரமசிவத்துக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒரு நிமிடம் அவனால் நம்ப முடியவில்லை. பல வருடங்களுக்கு பிறகு தன்னை ஞாபகம் வைத்து சரியாகத் தேடி வந்திருக்கிறானே என்கிற ஆச்சரியம் அது. அவனுக்குத் திருச்சி பக்கம் ஏதோ ஒரு ஊர். இவனோடு கிறிஸ்தவ போர்டிங் பள்ளியில் ஒன்றாகப் படித்து, ஒன்றாக வளரந்தவன். படிப்பு முடிந்து பிரிந்த பின், சில மாதங்கள் கடிதத் தொடர்பில் இருந்தான். பிறகு காணாமல் போய்விட்டான். இப்போதுதான் வந்திருக்கிறான். 

'வி.கே.புரத்துக்கு வேல விஷயமா வர வேண்டியிருந்தது. அப்படியே விசாரிச்சு உன்னைப் பாக்கலாம்னு வந்தேன்' என்றான் ராஜேந்திரன். பிறகு இருவரும் பழங்கதைகளைப் பேசிக்கொண்டார்கள். கிருஷ்ணவேணி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு, பொரியலுடன் சமைத்திருந்தாள். சாப்பிட்டு முடிந்தபின், ராஜேந்திரன் தான் அந்த ஐடி யாவை சொன்னான்.

'வேலை இல்லன்னு கவலைப் படாதடெ. உங்க ஊர்ல இருக்க டீ கடை, பெட்டி கடை, பலசரக்கு கடை, பீடி சுத்துத பொம்பளை பிள்ளைலுவோ, கொத்த வேலை பாக்கவங்கன்னு எல்லாருமே  சம்பாதிக்வோ. அவங்க எல்லாருக்கும் காசை சேத்து வைக்கணுன்னு ஆசை இருக்கும். பீடி சுத்துத பிள்ளேலு எத்தனை பேரு பேங்ல அக்கவுன்ட் வச்சிருக்குவோ? அதனால நீ வாரச் சீட்டு நடத்து. அதாவது சிட்டை போட்டு வசூலிக்கணும் பாத்துக்கோ. நூறு ரூபா சேர்ந்தா ஒனக்கு ஒரு கமிஷன். நாங்கூட கோயமுத்தூர்ல சைடு பிசினசா இதைப் பண்ணிட்டிருக்கேன். அட்டைய பாக்கியா?' என்று எடுத்துக் காண்பித்தான். 

முதல் போடாமல் ஒரு வியாபாரம். அதுவும் பணம் புழங்கும் வாழ்க்கை. பரமசிவத்துக்குத் திடீரென உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவனை விட கிருஷ்ணவேணிக்கு அதிக மகிழ்ச்சி. இப்போதே பணத்தில் புழங்குவது போல கனவு காண ஆரம்பித்தாள். 

'ஆனா ஒண்ணுடே' என்று நிறுத்திய ராஜேந்திரன், 'கணக்கு வழக்குல  சரியா இருக்கணும். பொதுத் துட்டுப் பாத்தியா?. ஆத்திர அவசரத்துக்கு அதுல கை வைக்கத் தோணும். தல போற காரியமா இருந்தாலும் அதுல இருந்து துட்டை எடுக்கக் கூடாது. அதே போல இந்தத் தொழில் பண்ணுனா கண்டிப்பா கடன் கேப்பானுவோ. சொந்த அண்ணன் தம்பியா இருந்தாலும் கறாரா இருந்தாதாம் அடுத்தக்கட்டமா நடத்த முடியும். இல்லன்னு வையி, முங்கிட்டன்னா, மீளுதது கஷ்டம். நிறைய பேர் அப்படி வீணா போயிருக்காவோ?' என்று எச்சரிக்கை செய்தான்.

'இது நமக்கு சரிபட்டு வருமா?' என யோசிக்கத் தொடங்கினான் பரம்சம். இருந்தாலும் அவனிடம் அட்டையை வாங்கிக்கொண்டான்.

ராஜேந்திரன் சொல்லிவிட்டுப் போன, அடுத்த மாதத்திலேயே அவனது ஆலோசனையின் படி, அவன் வைத்திருந்தது போலவே சிட்டை அச்சடிக்கப்பட்டது. கடைக்காரர்களை விட்டுவிட்டு பீடி சுற்றும் பெண் ளிடம் வார வசூல் செய்ய முடிவெடுத்தான். கிருஷ்ணவேணியும் சொன்னதால் நிறைய பேர் இதில் சேர்ந்தார்கள். அவன் எதிர்பார்த்ததுக்கு மேல் அதிகமானவர்கள் சேர்ந்தார்கள். அதில் ஒருத்தி, ஆனந்த வள்ளி டீச்சர். 

ஆழ்வார்க்குறிச்சி வங்கியில் கணக்குத் தொடங்கினான். வசூலாகும் தொகையை அதில் டெபாசிட் செய்தான். காசு விஷயத்தில் கறாராக இருந்தான். இருந்தாலும் கடன் என்று கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்ல மனசு வரவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடித்தான்.

கிருஷ்ணவேணியின் முகத்தில் இப்போது புது மலர்ச்சி. பரமசிவம் வித விதமான சட்டைகள் தைத்தான். பழைய ஹெர்குலீஸ் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கினான். ஆளே மாறியிருந்தான். ஏற்கனவே அறிமுகமான கட்சிக்காரர்கள் அடிக்கடிச் சந்தித்தார்கள். அரசியல் பேசினானே தவிர, மேடைகளில் பேச்சைக் குறைத்திருந்தான். 

சில மாதங்களில் எல்லாமே மாறிவிட்டது. நம்பியார் கடையில் வைக்கப்பட்டிருந்த சில்லரை கடன் அடைக்கப்பட்டு விட்டது. அதுவே தெம்பாக இருந்தது. எப்போதும் கை பையில் பணம் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படியொரு பணப் புழக்கம் கொண்ட வாழ்வை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தப் பணம் சந்தோஷத்தைத் தருகிறது, மரியாதையைத் தருகிறது. 

அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகி இருந்தார். முருகையா பாண்டியன், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ ஆகியிருந்தார். 'வேணா சொல்லுடெ. நம்ம எம்.எல்.ஏ தங்கமான மனுஷன் பாத்துக்கெ. நாளைக்கே போயி பாப்போம். கட்சியில சேர்ந்திரு. சொல்லி சோலிக்கு ஏதாது ஏற்பாடு பண்ணுவோம்' என்றார்கள் சில நண்பர்கள். அது தேவையில்லை எனப் பட்டது.
ஆழ்வார்க்குறிச்சி வங்கிக்குச் சென்றுவிட்டு எதிரில் இருக்கிற கடை யில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது பார்த்தான், ஆனந்த வள்ளி டீச்சரை. மஞ்சள் வண்ண பார்டர் போட்ட ராமர் பச்சைச் சேலையில் மின்னிக்கொண்டி ருந்தாள். கைகளைப் பிதுக்கிக்கொண்டிருந்த அதே இளம் பச்சை நிற ஜாக்கெட்டும் தலையை அலங்கரிக்கும் பூவுமென தேவதையாகத் தெரிந்தாள்.

டீச்சர், இன்னொரு பெண்ணுடன் பேசியபடி, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். பரமசிவத்துக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டிப் போனது. டீச்சர் தன்னைப் பார்த்திருப்பாளா? இல்லை, எதேச்சையாக வருகிறாளா என்ற குழப்பம். தேநீர் கடையின் கூரை மறைவில் ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டு டீச்சரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நெருக்கி வந்துகொண்டி ருந்தார்கள். டீச்சர் தன்னைப் பார்க்கவில்லை என நினைத்தான். தன்னைப் பார்த்தால், அவர் முகத் தில் வெளிப்படுகிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது இல்லை. 

பரமசிவம் திடீரெனத் திரும்பி நின்றுகொண்டான். டீச்சரும் அவருடன் வந்தவரும், அதே கடையில் தேநீர் வாங்கிக்கொண்டு குடித்துக் கொண்டி ருந்தார்கள். அவர்களின் பேச்சு, வேறு ஏதோ ஒரு வாத்தி யாரைப் பற்றியதாக இருந்தது. பரமசிவத்துக்கு அதுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திரும்பினான். டீச்சர் அவனைப் பார்த்து விட்டார். பார்த்ததும் வந்துவிடுகிற அதே புன்னகையும் வெட்கமும் திடுப்பென வந்து டீச்சரின் முகத்தை மாற்றியது. 

பரமசிவன் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து, 'எப்படியிருக்கீங்க?' என்று ஆரம்பித்தான்.

'ஆங். நல்லாயிருக்கென்' என்ற ஆனந்தவள்ளி டீச்சர், 'நீங்க?' என்று இழுத்தாள்.
'எனக்கென்ன நல்லாருக்கேன்'

'தூரமா?'

'பேங்குக்கு... நீங்க'

'நாங்களும் அதுக்குத்தான்' என்ற ஆனந்தவள்ளி டீச்சர், பக்கத்தில் நின்ற டீச்சரிடம் திரும்பி, 'இவங்க தான் பரம்சம். பேச்சாளரு. நல்லா பேசு வாங்க. கம்னீஸ்ட் கட்சில இருந்தாங்க. ஒங்க ஊருக்கு கூட வந்திருப்பாங்க' என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

இரண்டு கைகளையும் ஒன்றிணைத்துக் கும்பிட்டான் பரமசிவம். பதி லுக்கு டீச்சரும் கும்பிட்டார். அவர் பக்கத்து ஊரான பாப்பாங்குளத்தில் வேலைப் பார்ப்பவராம். 

டீச்சர், பேக்கில் இருந்து காசைக் கொடுத்துவிட்டு, புன்னகைத்தாள். பரமசிவம் டீச்சரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் எப்போதும் இருக்கிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது வெளிப்படுவதை ரசித்தான். டீச்சரின் முகத்தில் இருந்து இன்னும் மாறாமல் இருக்கிறது புன்னகை. அந்தப் புன்னகை பரமசிவத்தை ஏதோ செய்கிறது. அதெப்படி? அந்தப் பார்வைப் பட்டதும் அடுத்த நொடியே, தொட்டா சிணுங்கி செடி மாதிரி, உயிர் மூடி விரிகிறது என்கிற கேள்வி இப்போது அவனுக்குள் எழுந்தது. அவன் தனது நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை டீச்சருக்கு.

'வாரோம்' என்ற சென்று கொண்டிருந்த டீச்சர், சிறுது தூரம் சென்ற பிறகு எப்போதும் போல பரமசிவத்தைத் திரும்பிப் பார்த்தாள். அதை அவனும் எதிர்பார்த்தான். ஏதேதோ சொல்லிப் போகும் அந்தப் பார்வை சிலிர்ப்பாக இருந்தது பரமசிவத்துக்கு. 

-தொடர்கிறேன்.

ஆதலால் தோழர்களே 18

மத்தியானம் பொத்தையொன்றின் கீழே வெண்மணற்பரப்பில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கொடுக்காப்புலி, சாப் பாட்டுச் சட்டிகளைக் கொடுத்தான். கணேசனும் பழனியும் வாங்கிக் கொண்டார்கள். இரண்டு பெரிய தூக்குச் சட்டிகளில் சோறும் ஒரு சட்டியில் கருவாட்டுக் குழம்பும் இருந்தன. இன்னும் சூடு குறையாமல் இருந்தது. வெயில் சூடாகவும் இருக்கலாம்.
அவன் தம்பி, 'பேப்பர் கொண்டாந்தேன். எங்க போட்டம்னு தெரிய லயே' என்று அங்கேயே தேடிப் பார்த்தான்.

'ஏல நல்லா பாருல. எங்ஙன போட்டெ?' என்று கேட்டான் பரமசிவம்.

'இப்பம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பாத்தேன். சைக்கிள் சீட்டுக்கு கீழே சொருவி வச்சிருந்தேன். அப்பம் இங்ஙனதான் எங்கயோ விழுந்திருக்கும்' என்று சைக்கிளைத் திருப்பித் தேடப் போனான்.

அவன் வர தாமதமானதால், சாப்பிட தயாரானார்கள். தேக்கிலை விரிப்பில் கருவாட்டுக் குழம்புடன் சோறு பரிமாறப்பட்டது.

கிருஷ்ணவேணிதான் சமைத்து அனுப்ப நினைத்தாள். அதற்காக, காலையில் விறகை ஒடித்துக் கொண்டிருந்தாள்.  ஆனால், முந்திக் கொண்டாள் கணேசனின் அம்மா.

பெரிய வாய்க்காலில் குளித்துவிட்டு இடுப்பில் குடத்தோடு வந்த அவனின் அம்மா, வழியில் பரமசிவத்தின் வீட்டுக்கு வெளியில் இருந்து எட்டிப்பார்த்தபோது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருவைக் கம்புகளை எடுத்து வெட்டிக்கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

ஊர் முழுவதும் ராஜீவ்காந்தி படுகொலைதான் பேச்சாகி இருந்தது. ஏதோ ஒரு அமைதி மொத்தமாக ஊரைச் சூழ்ந்திருந்தது. பேரூந்து நிறுத்தம் அருகில் வரிசையாக நிற்கும் கட்சிக்கொடி கம்பங்கள் அனைத்தும் நள்ளிரவில் வெட்டிச் சாய்க்கப்பட்டிருந்தன. நடு ரோட்டில் நின்றுகொண்டு சாய்க்கப்பட்ட அந்தக் கம்பங்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் பட்டன். பிறகு வழக்கம்போல மேலே பார்த்தான். கைகளால் ஏதோ செய்கை செய்துக் காற்றோடு பேசி கொண்டிருந்தான்.

சூரியன் உதிக்கும் முன், துரையப்பா டீ கடையில் கூடும் பெரியவர்களுடன் அதிகமானவர்கள் இருந்தனர். ஒவ்வொரு தெரு முக்கிலும் நான்கைந்து பேர் குத்த வைத்துக்கொண்டு இதையே பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் விஷயம் தெரியாமல், விழுந்து கிடக்கும் கட்சிக் கொடிக் கம்பங்களைப் பார்த்துவிட்டு, 'யார்டே இப்படி பண்ணிருக்கா?' என அப்பாவியாகக் கேட்டவர்களை, 'ஆங். ஈரமண்ணு, மொதல்ல இங்க வா' என்று அழைத்து துரையப்பா, சம்பவத்தை நேரில் பார்த்தது போல விளக்கிக் கொண்டிருந்தார்.

நாளிதழ்களின் வருகைக்காகக் காத்திருக்கும் ஏஜென்ட், பேப்பர் ராம சாமியைச் சுற்றி ஏழெட்டு பேர் கூடி மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு போலீஸ் வேன்கள் தென்காசி நோக்கி, வேகமாகச் சென்றன. இவர்களைப் பார்த்ததும், கொஞ்சம் தூரம் சென்று வண்டி நின்றது. அதற்குள் பேப்பர் ராமசாமியைச் சுற்றி நின்றவர்கள், மெதுவாகக் கீழ்ப்பக்கம் இருக்கும் பனங்காட்டுக்கு நடக்கத் தொடங்கினர்.

'கூட்டம் போடாதே. நீ எதுக்கு நிக்கே?' -போலீஸ்காரர் ஒருவர் கேட்டார்.

'பேப்பர்'

'செரி' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

அம்மன் கோயில் வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த, கல்கத்தா ஐயரும், அவர் மாமனாரும் ராஜீவ் படுகொலைச் சம்பவத்தை இன்னும் அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துதான் வயலுக்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது.

'அப்டியா சாமி?'

'ஆமாமா. குண்டு போட்டு கொன்னுருக்கா, படுபாவிகள்' என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்பே, நேற்று நள்ளிரவே தனக்குச் செய்தி தெரிந்துவிட்டது என்ற பெருமையோடு குளித்துவிட்டு, வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள் கணேசனின் அம்மா. வழியில்தான் பரமசிவத்தின் வீட்டை எட்டிப்பார்த்தாள்.

'ஏட்டி கிட்டு. என்ன செய்யுத?'- சத்தம் கேட்டுத் திரும்பிய கிருஷ்ணவேணி வெளியே வந்து, 'எல்லாத்துக்கும் சோறு பொங்க போறேன்' என்று மெதுவாக அவளிடம் சொன்னாள்.

'நான்  பொங்கிருதேன் எல்லாத்துக்கும். நீ ஒங்களுக்கு மட்டும் பாத்துக்கோ' என்றாள்.

'ஏம், பெரிம்ம?'

'ஏம்னா. இந்தப் பய கருவாடு வேணும் வேணும்னு துடிச்சுட்டு இருந்தாம். வாங்கிட்டு வந்து மூணு நாளாச்சு. இன்னைக்கு வச்சுக் கொடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்டியாயி போச்சு. செரி, எல்லாத்துக்கும் சேத்து வச்சிருதேன்' என்றாள் மெதுவாகச் சிரித்துக் கொண்டே.

'யாருக்கு கிடைக்கணும்னு இருக்கோ. அவங்களுக்குத்தாம் கெடைக்கும்'

'ஆமாட்டி. இதுயென்ன, வைரமும் வைடூரியமும்லா?'

'எதா இருந்தாயென்ன?

'செரிட்டீ. கொடுக்காப்புலிபய வந்தாம்னா வரச்சொல்லு' என்று கூறி விட்டு, சென்றவள், பிறகு சமைத்து அனுப்பி வைத்தாள்.

 சிதறடிக்கப்பட்ட வெளிச்சம் காட்டில் பரவிக்கிடந்தது. வெயில் கடினமாக இருந்தாலும் வெக்கைத் தெரியவில்லை.

'பழைய சோறா இருந்தா கருவாட்டுக்குத் தீயா இருக்கும்' என்றான் பழனி.

'காலைலயே எந்திரிச்சு இப்படியொருத்தி பண்ணிக் கொடுத்திருக்காளேன்னு சந்தோஷப்படுவியா, அது இதுன்னு புலம்புத' என்றார் ஆறுமுகம்.

'நா என்ன கொறயாவாடே சொன்னேன்?'

'காட்டுக்குள்ள வெறும் கஞ்சி தண்ணியக் குடிச்சாக்கூட ருசிதாம்ல' என்றான் கணேசன்.

'அப்பன்னா, போ. எறங்கி ஆத்துக்குள்ள பச்சைத் தண்ணிய குடிச்சுட்டு வாயேன்' என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது சைக்கிளில் திரும்பினான் கொடுக்காப்புலி தம்பி.

'நம்மட்ட தப்புமா? இங்ஙனதான் கெடந்தது' என்று நாளிதழைக் கொடுத்தான்.
அதை அப்படியே ஒரு கையால் வாங்கி முதல் பக்கத்தைத் தரையில் விரித்தான் பரமசிவம்.

உடல்சிதறி கிடந்த ராஜீவ் காந்தியின் புகைப்படத்தைப் பார்த்து எல் லோருக்கும் பரிதாபம் ஏற்பட்டது.

'ச்சே' என்றான் பரமசிவம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லோரும் கொலைச் சம்பவம் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

- தொடர்கிறேன்.

Tuesday, January 17, 2017

ஆதலால் தோழர்களே 17


ராஜீவ்காந்தி படுகொலைச் செய்யப்பட்டிருந்தார். நள்ளிரவில் செய்தி  தீயாகப் பரவியிருந்தது. எப்போதும் சீக்கிரமே தூங்கிவிடும் ஊர், விழித்துக்கொண்டது. 

பிள்ளையார் கோயில் அருகில் தெருவிளக்கின் கீழ், காங்கிரஸ்காரர் கள் கூடி யிருந்தார்கள். ஆளாளுக்கு ஏதோ, மெதுவாகக் கதை சொல்லிக் கொண்டி ருந்தார்கள். 

வழக்கமாக தனது மளிகைக் கடையை ஒன்பது மணிக்கெல்லாம் அடைத்து விட்டு அருணாச்சலம் கடையில் சுக்காப்பி குடிக்கும், தீவிர காங்கிரஸ் காரரானவரும் உள்ளூர் கட்சி செயலாளருமான கடைக்காரர், இன்று ஏதோ கணக்கெழுதும் பொருட்டு, பத்து மணிவரை கடையைத் திறந்து வைத்தி ருந்தார். அதை மூடிவிட்டு கொப்பரையானுடன் வாய்க் காலுக்குப் போய் விட்டு வந்து, இப்போதுதான் தூங்குவதற்குச் சென்றார். வீட்டின் வெளியே திண்ணையில்தான் அவர் படுத்திருப்பார். அதற்குள் இந்தச் செய்தி அவரைக் கலவரப்படுத்தியது. முதலில் அவரிடம் இதைச் சொன்னது, ஈஸ்வரன். அவரது, கையாள் மாதிரி இருப்பவன். அவரால் நம்ப முடியவில்லை. அதற்கு பிறகுதான் அவர் வீடடின் ஃபோன் மணி ஒலித்தது. செய்தி உண்மை என்பதை உணர்ந்துவிட்டார். 

பொல பொலவென்று கண்ணீர் கொட்டியது. 'என் தலைவனை கொன் னு போட்டானுவளே' என்று விம்மி விம்மி அழுதார். ஈஸ்வரன் அவ ரைச் சமாதானப்படுத்தினான். திடீரென்று ஆவேசம் வந்தவாராக, 'ஏல நம்ம கட்சிக் காரன் எல்லாரையும் எழுப்புங்கல. ஒரு திமுககாரனையும் உயிரோட விட க்கூடாது' என்று எழுந்தார்.

வீட்டுக்குள்ளிருந்து ஒரு அரிவாளையும், ஒரு கம்பையும் எடுத்துக் கொ ண்டார். கம்பை ஈஸ்வரனிடம் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்தார். அவர் பொண்டாட்டியும், பிள்ளைகளும் என்னவென்று வந்தார்கள். 'ஒண்ணு மில்ல, தூங்குங்கெ' என்று விருட்டென வெளியேறினார். ஹாண்டில்பாரில் அரிவாளைத் தொங்கவிட்டுவிட்டு அழுத்தினார். 

ஊரெங்கும் திடீர்ப் பதட்டம் தொற்றிக்கொண்டது.  காங்கிரஸ்காரர்கள், திமுககாரர்களைத் தேடத் தொடங்கி விட்டார்கள். முக்கியமாக பரமசிவத்தை. பரமசிவத்தின் வீட்டின் முன், சிலர் கத்திக் கொண்டிருந்தனர். 

'ஏல பரம்சம் வெளிய வால, எங்கையாலதான் உனக்கு சாவு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள் நான்கைந்து பேர். வெளிக் கதவில் கல்லால் எறிந்தார்கள். கிருஷ்ணவேணி பயந்துவிட்டாள். குழந்தைகள் தூங்கிக் கொண் டிருந்தன.

பரமசிவம் அவளின் தோளைத் தட்டி, 'பேசாம தூங்கு' என்று சொல்லிவிட்டு ஜன்னல் கதவின் ஓட்டை வழியே, யார் நிற்கிறார்கள் என்பதைப் பார்க்கப் போனான். கிருஷ்ணவேணி, போக வேண்டாம் என்று தடுத்தாள். 

மற்ற நாட்களில் என்றால் இதற்குள் தெருக்காரார்கள் கூடி, அடி தடியில் இறங் கியிருப்பார்கள். ஆனால், பரமசிவம், கட்சி மாறியதில் இருந்தே சொந்த ங்களுக்குள் கரைச்சல் இருந்ததால் தெரு அமைதி காத்தது. 

வெளியே சத்தம் அதிகமாக இருந்தது. கெட்ட வார்த்தை, கேவலமாக வந்து விழுந்தது. குரலை வைத்தே அது யார் என்பதையும் கூட யார், யார் நிற்பார்கள் என்பதையும் அனுமானித்தான் பரமசிவம். 

எதற்காக இந்த கொலைவெறி கோபம் என்பது பரமசிவத்துக்குத் தெரியவி ல்லை. ஆனால், ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. என்னவென்பதில் குழப்பம்.

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. திடீரென்று எழுந்து,  வாசலி ன் மேலே, ஓட்டுக்குள் சொருகியிருந்த அரிவாளை உருவிவிட்டு கத வைத் திற க்க முயற்சிக்கையில், ஒரு சத்தம்.

'ஏல, யாரு எங்க வந்து அவயம் போடுதியோ, செரிக்குள்ளேலா' என்று. அது பக்கத்து வீட்டில் இருக்கும் பரமசிவத்தின் இரண்டாவது அண்ணன் கிட்டிண னின் குரல். சண்டைச் சச்சரவுகளுக்கும் வெட்டுக் குத்துவுக்கும் பேர் போன வர்.

'நில்லுங்கல, இன்னா வாரேன்' என்று அவர் சத்தமாகச் சொன்னதும் இன்னும் சிலர், கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. வெளியே கத்திக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள் ஓடினார்கள்.

'இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காது காங்கிரஸ்காரன் கையால தாம் ஒனக்கு சாவு' என்று மிரட்டல் குரலை விட்டுவிட்டு ஓடினான் ஒருவன். அந்தக் குரல் ராஜாமணியுடையது என்பது பரமசிவத்துக்குத் தெரிந்தது. 

வெளியே பரமசிவம் கையில் அரிவாளுடன் வந்தான். தெருக்காரர்கள் இப் போது ஒவ்வொருவராக மெதுவாக வெளியே வந்தார்கள். 

'எல்லாம் உன்னாலதாம்ல, அன்னைக்கே சிரிச்சானை சோலிய முடிச் சிருந்தா, எந்த நாயாவது அவயம் போட்டிருக்குமா, இப்படி. எல்லா பயலுக்கும் பயம் விட்டு போச்சு, பாத்துக்கெ' என்றார் கிட்டிணன்.   பதில் சொல்லவில்லை பரமசிவம். அருகில் இருந்தவர்கள், 'செரி, விடும். நாளைக்குப் பேசிக்கிடு வோம்' என்று சொல்லிவிட்டுக் கலைந்தார்கள்.

சத்தம் கேட்டு டெய்லரும் கதவைத் திறந்து வெளியே வந்திருந்தார். பரமசி வத்துக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. டெய்லரைப் பார்த்துவிட்டு புன்ன கைத்தான். அவரின் அருகில் ஜெயதேவி நிற்கிறாளா என்று தேடியது கண். இல்லை என்று தெரிந்ததும், சும்மா ஒரு சிரிப்பு சிரித்தான்.

அதற்குள் பரமசிவம் வீட்டருகே வந்த பழனி மெதுவாக, 'ஏய், ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்' என்றான்.

இந்த அவயமும் மிரட்டலும் இதற்குத்தானா என்பது இப்போதுதான் புரிந்தது, பரமசிவத்துக்கு. 

'ஏல, என்ன சொல்லுத?'

'ஆமா. வெடிகுண்டாம்'

'குண்டு போட்டுக் கொன்னுட்டாவளாம்?'

'நெசமாவால?'

'பின்ன, இதுல வெளாடுவாவோளா, யாராது?'

'அதாம் ஏசிட்டுப் போறானுவளோ?' என்ற பரமசிவத்திடம், 'அதுக்கு நம்மள ஏம்ல ஏசணும்?' என்று கேட்டான் பழனி.

'நாம, திமுகால்லா'

கணேசன், ஆறுமுகம், சுப்பையா என எல்லாரும் எதிர்சுவரில் உட்கார் ந்தார்கள். நிலா வெளிச்சம் பரவி இருந்தது. ஊரில் ஆங்காங்கே ஏதோ, பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கிழக்கில் இருந்து, 'ஏலே பிடிங்கல' என்ற சத்தம் வந்துகொண்டிருந்தது.

அப்போதுதான் ஒழக்கு வேகமாக வந்தான். 'கெழக்க காசிப்பாண்டியை யாரோ அடிச்சு தொவச்சுட்டாங்களாம். இன்னும் ரெண்டு நாளு கரைச் சலுதாம். தேவையில்லாம பிரச்னை வரும். பேசாம அணைக்கு போயிருங்கெங்காரு மூக்க மூப்பனாரு' என்றான் ஒழக்கு. 

'அவரும் முழிச்சுட்டாரா?' 

'தெருவுல இப்படி காட்டுக் கத்து, கத்திட்டு போறானுவோ, காது கேக் காதா யாருக்கும்? அதூம் ராச்சத்தம், ராக்கெட்டு மாரிலா கேக்கும். அது மட்டுமி ல்லாம வெஷயம் அவருக்குத்தாம் மொதல்ல தெரிஞ்சு ருக்கு. கம்னீஸ்ட் கட்சி ஆபீஸ்ல தூங்குனவரு, பெறவு வீட்டுக்குப் போயிருக்காரு' என்று கிசு கிசுத்தான் ஒழக்கு.

'அவரு சொல்லுதது சரிதாம், பரம்சம்' என்றார் ஆறுமுகம்.

'என்ன சரிதாம்? அவனுவளுக்குப் பயந்து ஓட சொல்லுதீரோ' என்றான் பழனி.
'பயந்து இல்லடே. ஏம் தேவையில்லாம பிரச்னைய இழுக்கணும்?'

'அவனுவலாம் எம்மாத்திர பயலுவோ. அவனுவள சொட்டைய நொறிக்கத விடாம, ஒளிய சொல்லுதீரு' என்றான் பழனி.

'ஒங்க அண்ணன் மட்டும் இப்பம் சத்தம் கொடுக்கலைன்னு வையும். ஓடி வந்து குறுக்குல வெட்டிருப்பேன், அவயம் போட்ட நாயை' என்றான் கணேசன்.

வெளியே இறுமிக்கொண்டே வந்த கிருஷ்ணவேணி, 'மூக்க மாமா சொல்லு ததுதாம் சரி, எல்லாரும் ரெண்டு நாளு தோணியாறு போயிட்டு வாங்கெ' என்றாள் மெதுவாக.  

பிறகு சில நிமிட விவாதத்துக்குப் பிறகு ஒரு மனதாக அதை ஏற்றுக் கொண் டார்கள். மத்தியானமாக, கொடுக்காபுளி பயலும் அவன் தம்பி யும் சாப்பாடு கொண்டு வருவார்கள் என்றும் பேசப்பட்டது. எல்லாரும் அவரவர் வீட்டில் ஒரு சட்டி நீத்தண்ணியை வயிறு முட்டக் குடித்து விட்டு வடக்குத் தெரு வழியாகப் புறப்பட்டார்கள், மூன்று சைக்கிள் களில் ஆறு பேர். 

நிலா வெளிச்சத்தில் இருட்டு மங்கலாக இருந்தது. சைக்கிளை எடுக் கும் முன், பழனி சொன்னான்.

'போற வழியில ஆளுக்கு ரெண்டு இளநீய பறிச்சுட்டுப் போவோம். இல்லனா பசி தாங்காது'

'யாரு மரத்துல?' என்றார் ஆறுமுகம்.

'நீரு இருக்கும் போது, வேற யாரு மரத்துல பறிக்கச் சொல்லுதீரு' என்றான் பழனி.

'செரி, போவும்' 

பெத்தான் பிள்ளைக் குடியிருப்பை அடுத்து, மேற்கு மலைத் தொடர்ச்சியின் காட்டுக்கு அடியில் இருக்கிறது கடனாநதி அணை. மரங்களும் வயல்களும் சூழ்ந்த வனப் பகுதி. அணையைச் சுற்றி நடந்து காட்டுக்குள் ஏறினால் துண்டு துண்டான பாறைகள் இருக்கிறது. ஒவ்வொரு பாறையின் அடியில் மணல்கள் விரிந்து கிடக்கும். அருகில் சூரிய வெளிச்சத்தை உள்ளே விடாதபடி அடர்ந்த மரங்கள். காட்டின் உயர்ந்த, வளைந்த பல வருட மரங்கள். 

எப்போதாவது குடிகார நண்பர்கள் ஒன்று கூடுகிற நேரங்களில் அங்கே யே கோழி அடித்து, மீன் பிடித்து சமைத்துத் தின்பது வழக்கம். கூட சாராயமும் சேர்ந்துகொள்ள இனிமையாக இருக்கும். பதுங்கிக் கொள்வதற்கு தோதான இடம். சைக்கிளை மிதித்துக்கொண்டே, கேட்டான் கணேசன்.

'பரம்சம், ராஜீவ்காந்திய யாருடே கொன்னுருப்பா?'

'எவனுக்குத் தெரியும்?'

'அதுக்கு நம்மள தேடி, ஏம் வாரானுவோ, காங்கிரஸ்காரனுவோ'

'அவனுவளுக்கு யாரு எதிரியோ, அவனைத் தேடிதாம் வருவாம்'
'இது கடைக்காரரு வேலதாம்ல'

'பண்ணட்டும், பண்ணட்டும், கம்னீஸ்ட் கட்சில இருக்கும்போது நாம பண்ணலையா?'

'ஆமா, பெறவு. தராசையே சீரா புடிக்க முடியாதவரு, அரிவாள தூக் குனா கோவம் வராதா? நான்தான் மூஞ்சியில குத்துனேன். ரெண்டு பல்லு ஒடைஞ்சு போச்சு. வாயெல்லாம் ரத்தம்' என்றான் ஒழக்கு சிரித்துக்கொண்டே.

'அதுக்கு, பதிலு கொடுக்காண்டாமா? அதான் தேடியிருப்பாம்'

'மயிரப் புடுங்குனாம்? சரி, நீங்கலாம் பிரச்னை வேண்டாம்னு சொன் னதால வந்தேன். வீட்டுல இருந்தம்னு வையி, அந்த நாயி வந்தாம்னா, கரண்டை காலை வெட்டிருப்பேன்' 

'செரிடே விடு,  நீ சூரப்புலிதாம்.  இப்பவே வயிறு பசிக்க ஆரம்பிச்சுட் டெ. அவம் வார வரை வயிறு தாங்குமான்னு தெரியலயே' என்றான் பரமசிவம்.

'அப்பம் இன்னொரு எளநிய குடிச்சிருக்க வேண்டியதானெ?'

மூன்று சைக்கிள்களின் ஹேண்டில்பரிலும் நான்கு, நான்கு இளநீர்கள் தொங் கிக் கொண்டிருந்தன. 

'பசிக்க மாதிரி இருக்கு. பாத்துக்கிடலாம்' என்ற பரமசிவம், இப்போது கணேச னிடம் இருந்து சைக்கிளை வாங்கி, தான் அழுத்தினான். 

கருத்தப்பிள்ளையூர் ரோட்டைக் கடக்கும்போது, சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு வெளியே, சிலர் நின்று பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட விஷயத்தைத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டதும், 'யாரு சைக்கிள்ல...' என்று சத்தம் வந்தது.

'யாரா? யோவ். சிவலிங்க நாடாரே, நான்தான் பழனி. என்னய்யா தூங்காம பேசிட்டிருக்கியோ?' என்றான் சத்தமாக.

'பழனியா, செரி, செரி. ஊருக்குள்ள போற ஆளு யாருன்னு தெரிய ணும்லா... அதாம் கேட்டேன்'

'ஊருக்குள்ளதாம்யா போறோம். யாரு வீட்டுக்குள்ளயும் போவல'

'ம்ம். அதுவேறயா? அப்படிலாம் போயிருவேரா என்ன?'

'அந்த அளவுக்கு கூறுகெட்டாவே இருக்கோம்'

'அதான பாத்தேன். வெவாரம் என்னன்னு தெரியும்லா'

'தெரியும், தெரியும்'

'தூரமா போறியோ, ராத்திரி போல'

'இனனா சிவசைலம் கோயிலுக்கு. காலைல மொத வேலை கெடக்கு. அதாம்'

'செரி போயிட்டு வாங்கய்யா'

சைக்கிள்கள் கிளம்பின.

'இவரு நம்மூர் காங்கிரஸ்காரனுவட்ட சொல்லிட்டாருன்னு வையேன்' என்றான் கணேசன்.

'எல்லாரும் ஒன்ன மாரி இருப்பாவுளாடே கணேசா? அதெல்லாம் தங்கமான மனுஷன். எதையும் சொல்லமாட்டாரு' என்றான் பழனி.

'அதாம் கோயிலுக்குன்னு பொய் சொல்லியாச்சே' என்றான் சுப்பையா.

'இல்லன்னாலும் அவருக்குத் தெரியாது பாரு' என்றான் ஒழக்கு.

ஆறுமுகம் பீடியைப் பற்ற வைத்துவிட்டு, 'அப்படியே சொன்னாதாம் என்னல? இங்க வந்து அடிச்சுட்டு, உயிரோட போயிருவனுவளா, நம்மள மீறி' என்றார் புகையை விட்டபடி. வீசிக்கொண்டிருந்த ஈரக் காற்று குளிர் தந்து போனது. 

ஒற்றையடி பாதையில் மாட்டுச் சாணங்கள் கிடந்தது. நேற்று மாலை யோ, இரவோ, மாடுகள் போட்டிருக்கும் சாணங்கள் இவை. அப்படியென்றால் யாரோ, கெடைக்காரர்கள் சென்றிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டா ர்கள். செடி, செத்தைகளில் நடந்து சத்தம் கொடுத்துக் கொண்டே போனார்கள். 

இன்னும் நன்றாக விடியவில்லை. காட்டுக்குள் கும்மிருட்டாக இருந்தது. ஆறுமுகத்தின் கையில் டார்ச் லைட் இருந்தது. எல் லோரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். செத்தைகளில் இருந்து சர் புர் சத்தமும், ஏதோ பூச்சிகள் தாவும், பறக்கும் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. ஏதோ ஒரு விலங்கு எதையோ விரட்டிப் போவது போன்ற சத்தமும் உள்ளே கேட்டது. விலங்குகள் ஏதும் நின்றால் விலகும் என்ற நம்பிக்கையில் இவர்களும் சத்தமாகப் பேசிக்கொண்டே போனார்கள். 

அணையில் தண்ணீர் அதிகமாக இல்லை. குளிர்ந்த காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது.

(தொடர்கிறேன்)

Sunday, January 8, 2017

ஆதலால் தோழர்களே 16

'சும்மா கட்சிக்காக பேசுதம் பேசுதம்ங்கெ. என்னடே பிரயோஜனம்? ஊர்ல மத்தவனுவோ இருக்கானுவன்னா, அவனுவளுக்கு வசதி இருக்கு, வீட்டுல ஒக்காந்து திங்கதுக்கு. ஒனக்கு? ரெண்டு பொட்டபுள்ளல வேற வச்சிருக்கெ? நாளைக்கு என்னத்த பண்ணி கெட்டிக் கொடுப்ப? இப்பம் ஒங்க ஆட்சிதானல நடக்கு. கடையம் யூனியன்ல என்னமோ ரெண்டு மூணு வேலை காலி இருக்குன்னானுவோ. நீதாம் படிச்சிருக்கியெ. யாரையாது புடிச்சு அதுல ஒரு வேலைய வாங்க பாரு. இல்லன்னா கைய நக்கிட்டு இருக்க வேண்டியதாம்'
- மூக்க மூப்பனார் சில மாதங்களுக்கு முன் இப்படிச் சொன்னது திடீரென்று ஞாபகத்துக்கு வந்து போனது.

அவர் சொன்னது வாஸ்தவம்தான். வயலைப் பார்க்க முடியவில்லை. அண்ணனிடம், 'நீ பயிறு வச்சுக்கோ. என்னமும் மிஞ்சுனா கொடு' என்று சொல்லியாகிவிட்டது. இப்போது கிடைக்கின்ற அஞ்சு, பத்து என்பது நிரந் தரமான வருமானம் இல்லை. கிருஷ்ணவேணியின் கழுத்தில், காதில் கிடப்பது ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க சென்று விடுகிறது. திடீ ரென்று கவலை ஆட்டியது. நியாயமான கவலை. நிஜமாகவே பிள்ளை களைக் கட்டிக்கொடுக்கும் காலத்தில் ஒன்றுமில்லாமல் போய் விடு வோமோ என்ற கவலை பயமுறுத்தியது. 'மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டானாடா?' என்கிற விளக்கமும் அதற்குச் சமாதானமாக வந்தது. 'நான் பேச்சாளர், நான் எப்படி போய் ஒரு இடத்துல வேலை பார்க்க? பாக்குறவன் என்னமும் நெனய்க்க மாட்டானா?' என்பதாக மனம் ஒரு கதை சொன்னது. பிறகு பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேலைக்குச் சென்று விடுவது என்று ஒரு மனதாக முடிவெடுத்தான்.

ஆனால், 'கவருமெண்ட்டு வேலைக்குப் போயிட்டேன்னு வையி. பெறவு கட்சிக் கூட்டங்கள்ல பேச முடியாதுடே?' என்று ஒழக்குச் சொன்னதும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். கட்சியா, மேடையா, வேலையா என்று பட்டிமனறத் தலைப்பு போல மனதுக்குள் பெரும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஒன்றைப் பெற, ஒன்றை இழக்க வேண்டியதுதான். குடும்பம்தான் முக்கியம். அதுக்காக, மேடையை விட்டு விடலாம் என்று தடுமாற்றத்துடன் முடிவு செய்தான். கடினம் தான் அது. மேடைப் பேச்சால் வளர்ந்த வாழ்வு அவனுடையது. அதுதான் நான்கு பெரிய மனிதர் களைப் பழக்கப்படுத்தியது. தன்னை அக்கம் பக்கத்து ஊர்களில் பிரபல படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை வரை தன்னை அடை யாளப்படுத்தியது. இப்போது திமுகவில் பலரை அறிமுகப்படுத்தியிருக் கிறது. இன்னும் இன் னுமாக அந்தப் பேச்சு அவனை செய்திருக்கிறது. அந்தப் பேச்செனும் போதைதான் கஷ்டத்தையும் கொடுத்திருக்கிறது.

'இருக்கட்டும்டே. ஏம் நம்ம குச்சுலுக்கு பெரியப்பா அன்பரசன், கல்லி டைக்குறிச்சுல வாத்தியாரு வேலை பாக்காரு. கட்சிக் கூட்டத்துல பேசா மயா இருக்காரு?' என்றான் பழனி.

'ஏல, அவரு பேரு முனியப்பன். அன்பரசம்னு பேரை மாத்திட்டுலா பேசுதாரு. அப்படி பேசலாமாம்லா' என்றான் கணேசன்.

'இதுக்காவ பரம்சம் எப்படிடே இனும பேரை மாத்த முடியும்?'

'இங்கரு பரம்சம், குடும்பம்தான் முக்கியம். கட்சிய ஓரங்கட்டிட்டு வேலைல சேரப்பாரு. அதுக்காவ ஒரேடியா ஓரங்கட்ட சொல்லல. அப்பப்பம் ஊர்ல நடக்குத கூட்டங்கள்ல கலந்துக்கோ' என்ற கருத்தை ஏற்றுக்கொண்டான் பரமசிவம்.

 கடையம் ஒன்றிய செயலாளருடன் மாவட்ட செயலாளரைச் சந்தித் தான், வேலைக்காக. ஒன்றிய செயலாளரும் பரமசிவமும் தூரத்துச் சொந்தம் என்பதால் நெருக்கம் அதிகமாக இருந்தது. கண்டிப்பாக அந்த வேலையை பரமசிவத்துக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மாவட்டக் கழகத்திடம் சொன்னார் கிளைக் கழகம். இரண்டு மாத கடும் அலைச்சலுக்குப் பிறகு கிடைத்தது வேலை.

கிருஷ்ணவேணியின் முகத்தில் இப்போது புது மலர்ச்சி. பரமசிவம் வித விதமான சட்டைகள் தைத்தான். அரசு வேலைக்குச் செல்கிறவனுக்கு நல்ல சட்டை, பேன்ட் வேண்டாமா? புது சைக்கிள் ஒன்றை வாங்கி னான். ஆளே மாறியிருந்தான். கடையத்தில், ஏற்கனவே அறிமுகமான கட்சிக்காரர்கள் அடிக்கடிச் சந்தித்தார்கள். வேலை முடிந்ததும் ஊரில் நண்பர்களுடன் சந்திப்பு. பிறகு வீடு என்று பொழுது இனிமையாகச் சென்று கொண்டிருந்தது.

அலுவலகத்தின் எதிரில் இருக்கிற கடையில் தேனீர் குடித்துவிட்டு, திரும்பிய போது பார்த்தான், ஆனந்தவள்ளி டீச்சரை. அவர், இன்னொரு பெண்ணுடன் பேசியபடி, அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். பரமசி வத்துக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டிப் போனது. டீச்சர் தன்னைப் பார்த்திருப்பாளா? இல்லை, எதேச்சையாக வருகிறாளா என்ற குழப்பம்.

அவர்கள் மாதம் ஒரு முறை இங்கு ஏதோ ஓர் அதிகாரியைச் சந்திக்க வருவார்கள் என்பது தெரியும். இப்போதும் சந்தித்துவிட்டுதான் வருகி றார்கள். பரமசிவம், டீச்சரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் நெருக்கி வந்துகொண்டிருந்தார்கள். டீச்சர் தன்னைப் பார்க்கவில்லை என நினைத்தான். ஏனென்றால் தன்னைப் பார்த்தால், அவர் முகத்தில் வெளிப்படுகிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது இல்லை.

பரமசிவம் திடீரெனத் திரும்பி நின்றுகொண்டான். டீச்சரும் அவருடன் வந்தவரும், அதே கடையில் தேனீர் வாங்கிக்கொண்டு குடித்துக்கொண் டிருந்தார்கள். அவர்களின் பேச்சு, வேறு ஏதோ ஒரு வாத்தியாரைப் பற்றியதாக இருந்தது. பரமசிவத்துக்கு அதுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இப்போது தானும் அரசு அலுவலக த்தில் வேலை பார்ப் பவன் தானே என்று நினைத்துக்கொண்டு, டக்கென்று திரும்பினான். டீச்சர் அவனைப் பார்த்துவிட்டார். பார்த்ததும் வந்துவிடுகிற அதே புன்ன கையும் வெட்கமும் திடுப்பென வந்து டீச்சரின் முகத்தை மாற்றியது.

பரமசிவன் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து, 'எப்படியிருக்கீங்க?' என்று ஆரம்பித்தான்.

'ஆங். நல்லாயிருக்கென்' என்ற ஆனந்த வள்ளி டீச்சர், 'நீங்க இங்க தாம் வேலை பாக்கதா கேள்விபட்டேன்' என்றார்.

'ஆமாமா'

'நாங்க, இங்க மாசத்துல ஒரு நாளு, டிஓவ பாக்க வருவோம்' என்ற ஆனந்த வள்ளி டீச்சர், பக்கத்தில் நின்ற டீச்சரிடம் திரும்பி, 'இவங்க தான் பரம்சம். பேச்சாளரு. நல்லா பேசுவாங்க. கம்னீஸ்ட் கட்சில இருந்தாங்க. ஒங்க ஊருக்கு கூட வந்திருப்பாங்க' என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
இரண்டு கைகளையும் ஒன்றிணைத்துக் கும்பிட்டான் பரமசிவம். பதிலுக்கு டீச்சரும் கும்பிட்டார். அவர் பக்கத்து ஊரான பாப்பான் குளத்தில் வேலைப் பார்ப்பவராம்.

டீச்சர், பேக்கில் இருந்து தேனீருக்கான காசைக் கொடுத்துவிட்டு, புன்ன கைத்தாள். பரமசிவம் டீச்சரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் எப்போதும் இருக்கிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது வெளிப்படுவதை ரசித்தான். டீச்சரின் முகத்தில் இருந்து இன்னும் மாறாமல் இருக்கிறது புன்னகை. அந்தப் புன்னகை பரமசிவத்தை ஏதோ செய்கிறது. அதெப்படி? அந்தப் பார்வைப் பட்டதும் அடுத்த நொடியே, தொட்டா சிணுங்கி செடி மாதிரி, உயிர் மூடி விரிகிறது என்கிற கேள்வி இப்போது அவனுக்குள் எழுந்தது. அவன் தனது நடுக்கத்தை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை டீச்சருக்கு.

'வாரோம். அடுத்த மாசம் இங்க வருவேன்' என்ற சென்று கொண்டி ருந்த டீச்சர், சிறுது தூரம் சென்ற பிறகு இளம் காதலியைப் போல, ஓரக்க ண்ணால் பரமசிவத்தைத் திரும்பிப் பார்த்தாள். அதை அவனும் எதிர் பார்த்தான். அந்தப் பார்வை சிலிர்ப்பாக இருந்தது பரமசிவத்துக்கு.

Wednesday, November 30, 2016

ஆதலால் தோழர்களே 15


இப்போது பரபரப்பாகி இருந்தார் பரமசிவம். அவருடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தோழர்கள், பரமசிவத்தின் பரபரப்பை கிண்டலுடன்தான் பார்த்தார்கள். 
'என்னடே எப்பவும் வெள்ளையும் சுள்ளையுமாவே அலையுதெ' என்று தோழ ர்கள் யாராவது கேட்டால், ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகப் பெற முடிகிறது பரமசிவத்திடம் இருந்து. வேறு ஏதும் பேச்சில்லை.

'முந்தா நாளு, விகேபுரத்துல ஆர்ப்பாட்டம். போனா, ஒங்கதைதான் நடக்கு. மலையனும், அவங்கூட  வந்தவங்களும், பரம்சம் ஏம் கட்சி மாறிட் டாருன்னுதாம் கேக்காவோ. நாங்க என்ன சொல்ல முடியும்? அவரு வந்து பேசுனாலே ஒரு இது இருக்கும்லான்னு அங்கயே சொல்லுதாவோ ன்னா பாரேன்' என்றான் பச்சைமுத்து, ஒரு நாள்.

'அதை விடு. முடிஞ்சதை போட்டு ஏம் இன்னும் பேசிட்டு' என்று முறித்தார் பரமசிவம்.

உள்ளூர் தோழர்களுடனான நெருக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சித்தார். இந்த சின்ன கிராமத்தில் முடிகிற காரியமா அது? யாராவது வந்து ஞாபகத்தைக் கிளறி விட்டுப் போனார்கள். தலைவரை எதிரில் சந்திக்க நேர்ந்தால், ஏதோ சிந்தனையில் செல்வது போல, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிச் செல்லப் பழகியி ருந்தார் பரமசிவம்.

ஊரில் எப்போதும் ஒரு கலவரம் வெடித்துவிடும் நிலையிலேயே எதிர் எதிர் குடும்பங்கள் முறைத்துக்கொண்டிருந்தன. மாதம் தோறும் நடக்கும் ஊர் க்கூட்டத்தில் சந்தா தொகையை சத்தம் போடாமல் கொடுத்து கொண் டிருந் தார்கள் பரமசிவம் வகையறா. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஏதாவது சின்ன கங்கு விழுந்தாலும் அதை ஊதி எரிய விட ஒரு கும்பல் தயா ராகவே இருந்தது. 

இந்தச் சிக்கலுக்கு இடையே ஜெயதேவிக்கும் பரமசிவத்துக்குமான நெரு க்கம் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அந்த நெருக்கம் பரமசிவ த்தின் மன இறுக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருந்தது. 

பரமசிவம் வாசலில் நின்றுகொண்டு இறுமினால் அதே தெருவில் வல பக்க மாக நான்கைந்து வீடுகள் தள்ளி இருக்கும், நாழி ஓடு போட்ட வீட்டில் இருந்து, தலையை மட்டும் நீட்டிப் புன்னகைப்பாள் ஜெயதேவி. எப்போதாவது பவுடரும் முகமுமாக இருக்கும் அவள், பரமசிவத்தைக் காணும் பொருட்டு, எப்போதும் பவுடரும் முகமுமாக இருக்கலானாள். அவளருகே புதிதாகச் சடங்கான சின்னப் பிள்ளைகள் பீடியும் தட்டுமாக உட்கார்ந்துகொண்டு அவள் அழகை ரசித்துக்கொண்டிருப்பார்கள். 

'இது என்ன பவுடர்க்கா. நல்லா மணக்கெ'

'பாண்ட்ஸ்லா. எங்கப்பா திருநவேலியில இருந்து வாங்கிட்டு வந்தா வோ. கொஞ்சம் போட்டுங்கிடுங்கட்டீ' என்று கொடுப்பாள் அவர்களுக்கு. அவர்களும் முகத்தில் பூசிக்கொண்டு தங்களை உலக அழகியாக நினைத்துக்கொள் வார்கள்.

'நீ ஏம்க்கா, இப்டி டைட்டா பாடி போட்டிருக்கெ?'

'ஏம்ட்டீ, இதுக்கென்ன, இப்டி போட்டாதாம் எடுப்பா இருக்கும்'

'நீ வேற அலசலா ஜாக்கெட் போட்டிருக்கெ. உள்ள இருக்க பாடி, அப்படி யே கண்ணாடி மாரி தெரியுது'

'தெரிஞ்சா என்னட்டீ? என்னய இன்னொரு கெமரனா வந்து கெட்டப் போறாம்?'
'யாரும் பாத்தா என்ன நெனப்பாவோ'

'என்ன நெனப்பாவோட்டீ..?'

'ஆங். இவளுக்கு மட்டும் எப்டி, இவ்ளவு பெருசா இருக்குன்னு நெனய்க் க மாட்டாவளா?' என்றவள் மற்றப் பிள்ளைகளைப் பார்த்து கண்ணடித்துக் கொள்வாள்.

'ஏட்டீ, நீங்களே போதும்போலுக்கெ. மொதல்ல ஒங்க கண்ண திருப்புங் க' என்று சொல்லிவிட்டு முந்தானையை இழுத்துவிட்டுக் கொள்வாள் ஜெய தேவி. பிறகு அவர்கள் சொன்னதைத் தனக்குள் நினைத்து ரசித்துப் புன்னகைப் பாள். 

முந்தா நாள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாள். பாவாடையை முந்தா னை போல் கட்டிக்கொண்டு முங்கி எழுந்து சோப்புப் போட்டுக் கொண் டிருந்தாள். எதிரில் உள்ள கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்த நான்கைந்து வெளி யூர்க்காரப் பையன்கள், அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதும் இவள்தான், 'என்னக்கா இப்டி நஞ்சுபோன, பாவாடைய கெட்டிருக்கெ. உள்ள இருக் கது, அப்படியே தெரியுது' என்ற பிறகுதான் தன்னைப் பார்த்தாள். அவளு க்கு வெட்கமாக இருந்தது. இதைத் தான் எதிரில் குளிக்கும் பயல்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ, என்ற உணர்வு வந்ததும் திரும்பி நின்று, சேலையால் மேனியை மூடினாள். அது அவளுக்கு ஒரு நொடியில் மூளைக்கு வந்து போனது.  

பிள்ளைகள் அவளையே பார்த்துக்கொண்டும் ரேடியோவில் ஓடும் பாடல் களைக் கேட்டுக்கொண்டும் அமர்ந்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடல் முடிந் ததும் அந்தப் பாடலின் பல்லவியை மெதுவாகப் பாடத் தொடங்குவாள் ஜெய தேவி.

'ஒன் கொரலு அப்டியே இருக்குக்கா. நல்லா பாடுத' என்பார்கள். இந்த மாதிரியான பாராட்டுகளில் உச்சி குளிர்ந்து போகும் ஜெயதேவி, 'படிக்கு ம்போது ஸ்கூல்ல போட்டி வைப்பாங்கள்லா, அதுல எனக்குத் தாம்டி ரெண்டாது பிரைசு கிடைக்கும்' என்பாள்.

'மொத பிரைசு?'

'சுபஸ்ரீன்னு ஒரு ஐயமாரு பிள்ள. நல்லா பாட்டுப் படிக்கும். அதுக்கு  கொடுத்திருவாவோ' என்பாள்.

இந்த பேச்சுகளுக்கிடையே, ஓரக்கண்ணால் பரமசிவம் தெருவைக் கடக் கிறாரா என்கிற கவனிப்பும் அவள் கண்களில் அனிச்சையாக இருக்கும். அப்படி அவர் கடந்தால், ஜெயதேவிக்குள், மின்னலடிப்பது போல ஒரு சிலிர்ப்பு வந்து போவதை எதிரில் இருப்பவர்களால் பார்க்க முடியும்.

இதற்காகவே, பரமசிவமும் அந்தப் பகுதியைத் தாண்டும்போது வேண்டு மென்றே மெதுவாக நடந்து, ஜெயதேவியைப் பார்த்து ஒரு சிரிப்பை உதறிவிட்டுச் செல்வது வழக்கம். இப்படியான பார்வை காதல், கொஞ் சம் அதிகரித்ததன் விளைவாக, பரமசிவம் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறினார்.

பரமசிவம் வீட்டுக்கு எதிரில் இருக்கிற தொழுவத்தில் இருந்து, பின்பக் கமாக கருவை முடிகள் அடர்ந்து இருக்கிற பாதையை கடந்து சென்றால் ஜெயதேவியின் வீட்டு அடுக்களை. ஆனால் அடுக்களைக் கதவை எப்போதும் மூடியேதான் வைத்திருப்பாள் ஜெயதேவி. கருக்கல் நேரம் அந்த வழியாகக் அவள் வீட்டுக்குள் சென்றுவிட  முடி வெடுத் திருந்தார். இதுபற்றி முன் கூட்டியே அவளுக்குச் சொல்லிவிட்டால் காரியம் எளிதில் முடிந்துவிடும் என நினைத்தாள். ஆனால் அதற்கான நேரம் வரவில்லை. இன்று, நாளை என நாட்கள் அதிகரித்ததுதான் மிச் சம். அவள் மீதான தவிப்பு அதிகரித்ததன் காரணமாக, அவளிடம் சொல்லாமலேயே அடுக்களைக்குச் சென்று அவளிடம் பேசினால் என்ன என நினைத்தார். அப்படிச் சென்று, அங்கு வேறு யாரும் தன்னைப் பார்த்துவிட்டால், 'இங்க என்ன பண்ணுத?' என்று கேட்டால், என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்பதையும் முன்னேற்பாடாய் வைத்திருந்தார். 

அப்படித்தான் காங்கிரஸ் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்த ஒரு நாளில், பரமசிவம், சாரமும் கருப்பு பனியனும் அணிந்துகொண்டு, அடுக்களை அருகே சென்றுவிட்டாள். வீட்டுக்குள் யாரோ அலையும் சத்தம் கேட்க, க தவை மெதுவாகத் தட்டினார் பரமசிவம்.

உள்ளிருந்து, 'யாரு, கதவ தட்டுதா?' என்று சத்தமாகக் குரல் வந்தது. அது ஜெயதேவியின் குரல்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆனால் அவளுக்கு அது, பரமசிவம் என்பது தெரியவில்லை. 

'நான் தான் கதவை தொற' என்று கீச்சுக்குரலில் பரமசிவம் சொல்ல, அவளுக்கு பயம் தொற்றிக்கொண்டது.

'ஏங்க இங்க வாங்க. யாரோ திருட்டு பய நிய்க்காம்' என்று கத்தித் தொலைக்க, வாசலில் இருந்து டெய்லரும், பக்கத்து வீட்டு ஆட்களும் ஓடி வர, தாவி ஓடினார் பரமசிவம். கருவை முட்கள் அவரின் கால்களை, தொடைகளை கிழித்து இழுத்தது. இந்த நேரத்தில் அதைப் பார்த்துக்கொண்டிருந்தால், மானம் மரியாதை போய்விடும் என ஓடினார். 

அதற்குள் தெருவே கூடி, அவள் வீட்டு அடுக்களைக்குப் பின் பக்கம் வந்து நின்றது. வீட்டில் முகத்தைக் கழுவி, துண்டால் தொடையை துடைத்தால், காந்தியது. முட்களில் வேலை அது என நினைத்துக் கொண்டார். வேறி சாரத் தையும் சட்டையையும் மாட்டிக்கொண்டு, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணவேணி, வெளியில் இருந்து வந்து சொன்னாள்.

'டெய்லரு வீட்டுக்கு திருட்டுப் பய வந்துட்டானாம். நாலஞ்சுபேரு தேடி வெரட்டியிருக்காவோ, ஓடிட்டானாம்' என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

'அப்படியா. எனக்கு தெரியாம போச்சே, இன்னா போய், பார்த்துட்டு வாரம்' என்று அவளிடம் சொல்லிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல ஜெயதேவியின் வீட்டுக்குப் போய் விசாரித்தார்.

அங்கு படபடப்பில் இருந்தாள் ஜெய தேவி. 'அங்கணக்குழியில தட்டைப் போட்டுட்டு நின்னேன். கதவ யாரோ தட்டுனாவோ. யாருன்னு கேட்டேன். மரியாதையா கதவைத் தொறன்னு ஒரு மிரட்டல். பயந்து அவ்வோள கூப்டேன். அதுக்குள்ள ஓடிட்டாம்' என்று ஜெயதேவி விவரித்துக் கொண்டி ருந்தாள்.

தான் சொன்னதை, இன்னும் கொஞ்சமாக சேர்த்து அவள் சொன்னதை ரசித் தார் பரமசிவம். பிறகு, அவர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு திரும்பினார். 

'அது நான் தான்' என்பதை ஒரு நாள் அவளைத் தனியாக சந்திக்கும் போது சொல்ல வேண்டும் என நினைத்தார் பரமசிவம். ஆனால் சொல்லவில்லை.
ஆழ்வார்க்குறிச்சியில் தேரோட்டம். ஊரே அங்கு கூடியிருந்தது. புதுத்துணி அணிந்து மாட்டு வண்டியிலும் பேரூந்துகளிலும் காலையி லேயே பயணித்து க்கொண்டிருந்தார்கள் ஊர்க்காரர்கள். வயக்காட்டு வழியாகவும் நடந்து செல்ல ஒரு கூட்டம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கூட்டம் மதியத்திற்கு மேல்தான் ஊர் திரும்பும்.  பரமசிவம் எப்போதும் தேரோட்டத்துக்குச் செல்வதில்லை. வீட்டில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள் கிருஷ்ண வேணி. ஏற்கனவே சொல்லி வைத்த தால், ஜெயதேவியும் தேரோட்டத்துக்குச் செல்லவில் லை. 

பரமசிவம் குளித்து முடித்து வெளுத்த வேட்டிச் சட்டையில் வீட்டு வாச லுக்கு வந்தார். தெரு, வெறிச்சோடி கிடந்தது. திருட்டு ருசிக்கு ஏங்கும் மனம், ஆனந்தக் கூத்தாட்டத்தில் இருந்தது. கூடவே கொஞ்சம் பதட் டமும் இருந்தது. ஏதோ ஒரு தவறைச் செய்யப் போகிறோம் என்கிற படப்படப்பு அது. தவறெ ன்று தெரிந்தும் அது வேண்டுமானதாக இருக் கிறது. கதவைச் சாத்திவிட்டு இறங்கி நடந்தார். இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.  தூரத்தில் ஒரு துணி வியாபாரி, 'சேலை சேலை' என்று சத்தம் கொடுத்துக்கொண்டு சைக்கிளில் வந்து கொண்டி ருந்தான்.

ஜெயதேவி வீட்டுக்குள் ஓரமாக நின்று பரமசிவத்தை எதிர்பார்த்தாள். யாரு மற்ற தெருவில் நாய் ஒன்று எலும்புத் துண்டைக் கவ்விக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. திடீரென, பொந்துக்குள் பாயும் பாம்பென, அவளின் வீட்டுக் குள் நுழைந்தார் பரமசிவம். 

(தொடர்கிறேன்)

Saturday, November 5, 2016

ஆதலால் தோழர்களே 14



செருப்படி விவகாரத்தில் உறைந்து கிடந்த மனதை கொஞ்சம் கொஞ் சமாக வெளியில் கொண்டு வந்திருந்தார் பரமசிவம். இன்னும் எத்த னை நாள்தான் அதையே நினைத்து உழன்றுகொண்டிருப்பது. நடந்தது நடந்து போச்சு என்று மூக்காண்டியை அழைத்து, தாடியை சிரைத்தார். மீசையை கொஞ்சம் மேல் நோக்கி இருப்பது போல, திருக்கிவிட்டு மாற்றினார்.

'மீசைய திருக்குனா, சொள்ளமாடம் சாமி மாரிலாய்யா இருக்கு' என்றார் மூக்காண்டி.

'அப்படியாடே இருக்கு'

'ஆமா. திருக்குன மீசை எல்லாருக்கும் அமையுமா? ஒங்களுக்கு நல்ல அமைஞ்சிட்டே' என்றான்.

'அப்படியே சொல்லுத. யாராது ஏதாது சொன்னா, நீதான் வெட்டணும்'
'அதெல்லாம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டோவோ. நல்லாருக்கு ன்னுதான் சொல்லுவாவோ' என்ற மூக்காண்டி, வீட்டில் காபியை குடித்து விட்டு, 'வாரம்யா' என்று நடந்தான்.

கொஞ்ச நேரம் மீசையைத் திருக்கியபடி கண்ணாடியையே பார்த்துக் கொண்டி ருந்தார் பரமசிவம். குடத்தில் தண்ணீர் சுமந்து வந்த கிருஷ் ணவேணி, 'ரவுடி மாரிலா இருக்கு' என்றாள்.

'இருந்துட்டு போட்டும்' என்ற பரமசிவம் மீசையை இன்னும் திருக்கிக் கொண்டிருந்தார். 

 ஊர், பழையபடி பழங்கதை மறந்து அதன் இயக்கத்தைத் தொடங்கியி ருந்தது. பரமசிவம் இப்போதெல்லாம் கட்சி அபீசுக்கும் போவதில்லை. காலையில் எழுந்ததும் சுடலை கடையில் டீ குடித்துவிட்டு அங்கேயே பேப்பர் வாசித்து, சிகரெட்டை பற்ற வைத்து ஆற்றுக்கு சைக்கிளில் ஓர் அழுத்து. நிம்மதியான குளியல். பிறகு வீடு. இருப்பதைத் தின்றுவிட்டு தெப்பக்குளத் திண்டில் உட்கார்ந்து, அங்கு வருபவர்களுடன் அரசியல் விவாதம். இல்லையென்றால் இலக்கிய பேச்சு. ஒரு பயனுமில்லாத அரட்டை. இதுதான் இப்போது வழக்க மாகி இருக்கிறது. கூடவே கணே சன், பழனி. ஒழக்கு.. இவர்கள் இல்லை யென்றால் யாரேனும் ஒருவன் துணைக்கு வந்து விடுகிறான்.

கடன் கேட்க கூச்சப்பட்ட மனசு, இப்போது அதற்கு பழகிவிட்டிருந்தது. யாரிடமும் எதற்காகவும் கை நீட்டுவது வழக்கமாகிவிட்டது. வாழ்க்கையும் சூழலும் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்து விடுகிறது. லட்சுமண நம்பியார் கடையில் சிட்டை போட்டு கடன் வைக்கும் வழக்கத்துக்கு வந்தாகிவிட்டது. கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், 'என்ன பரம்சம், அந்த பாக்கி என் னாச்சுடே?' என்று சத்தமாக, ரோட்டில் போகும் பரமசிவத்திடம் கேட்கத் தொடங்கியிருக்கிறார் லட்சுமண நம்பி யார்.  முதலில் அவமானமாக, கூச்ச மாக இருந்ததெல்லாம் இப்போது பழகிவிட்டிருந்தது. 'அடுத்த வாரம் தந்தி ருதேன்' என்று சொல்லலானார் இவரும். 

அடிக்கடிக் கோபம் கொண்டு சிவந்த கிருஷ்ணவேணி, இப்போது அப் படியே தலைகீழாக மாறிப்போனாள். மனம் மொத்தமாக அமைதியா கிவிட்டது. எதற்கும் கோபப்படுவதில்லை. அதிர்ந்து பேசுவது கூட இல்லை. 'என்னாச்சு இவளுக்கு உடம்பு சரியில்லாம இருக்குமோ' என்று அக்கம் பக்கத்துப் பெண்கள் மூக்கில் விரல் வைத்தார்கள். எப்போதும் எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்கும் கிருஷ்ணவேணி, இப்போது மொத்தமாக முடங்கினால் ஆச்சரியம் இருக்காதா என்ன?

பெரிய மகள் ஜான்சி, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பு சேர்ந் திருக்கிறாள். புத்தகத்தைத் தரையில் விரித்து அவள் படம் பார்த்து, பேசும் அழகை பரமசிவமும் கிருஷ்ணவேணியின் ரசித்துக் கொண்டிருந்தார்கள். 

ஏழூட்டு வளவில் இவளும் ஒரு பீடி தட்டுடன் உட்கார்ந்தாள். பரமசி வத்தை நம்பி இனி பயனில்லை என முழுவதுமாக பீடி, இலை, தூளுடன் வாழத் தொடங்கிவிட்டாள்.

'என்னட்டி கிட்டு, என்னத்த பொங்குன காலைல' என்று கேட்டபடி வந்த கீரைத்தோட்ட ஆச்சியைச் சூழ்ந்துகொண்டார்கள் பீடி சுற்றும் பிள்ளை கள்.
'ஏ கெழவி, கதை சொல்லி எவ்வளவு நாளாச்சு? இன்னைக்கு நல்ல கதையா சொல்லு' என்று ஆரம்பித்தார்கள்.

'சொல்லுவோம் மொதல்ல பொறுங்கட்டியளா' என்ற ஆச்சி, திண்டில் காலை நீட்டி உட்கார்ந்தாள். இடுப்பு மடிப்பில் வைத்திருந்த சிறிய தட்டு அளவில் இருந்த இரண்டு அரிசி முறுக்குகளில் ஒன்றை எடுத்தாள்.

'இந்தாங்கட்டி எல்லாரும் பிச்சிக்கிடுங்க' என்று சொல்லிவிட்டு மற்ற முறுக்கை, 'இந்தா கிட்டு, பிள்ளைலுவோட்ட கொடு' என்று நீட்டினாள்.
'ஏது இது. ருசியா இருக்கே'

'நம்ம புளியமரத்து ஐயரு பொண்டாட்டி, திடீர்னு வீட்டுக்கு கூப்ட்டா. என்ன நெனச்சாளோ. இதை கொடுத்தா'

'அதான பாத்தேன்' என்று கடிக்கத் தொடங்கினார்கள். சிறுது நேரம் ஊர் வம்பு நடந்தது. பிறகு கதைச் சொல்லத் தொடங்கினாள் ஆச்சி.

'சுந்தரி சுந்தரின்னு ஒருத்தி. அவளுக்கு எதுத்த வீட்டுல பேசியம்மான்னு ஒருத்தி. ரெண்டு பேரும் சேக்காளியோ. எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவாவோ. ஒண்ணுக்கு போனாலும் ஒண்ணாத்தான் போவாவோன்னா பாரேன். அப்படியொரு இது. ஊர்ல வம்பு கதை பேசுததுல இருந்து அரை குறையா எவனும் வேட்டிக்கட்டுட்டு போனாம்னா, கேலி பேசுதது வரை எல்லா எக்காளத்தையும் செய்வாவோ.

'அப்படி என்னதாம்டி பேசுவியோ, ரெண்டு பேரும். எப்பம் பாரு  பேசிட் டும் சிரிச்சுட்டும் இருக்கேளே'ன்னு பேச்சியோட மைனிகாரி கேப்பா. ஏம்னா, வீட்டுல ஏகப்பட்ட வேலை கெடக்கும் போது, இவா சுந்தரி கூட பல்லைக் காட்டிட்டு இருந்தா பொறுக்குமா? அதனால ரெண்டு பேரையும் எப்படியாது பிரிக்கணும்னு நினைககா, மைனிக் காரி. அதுக்காவ பல வேலையளை செய்தா. ஒண்ணும் நடக்கல. இவள பத்தி அவாட்டயும் அவளப் பத்தி இவாட்டயும் கோள் சொல்லிப் பார்க்கா. வேலைக்காவல. பெறவு ஊருக்குள்ள  இவளுவள பத்தி இல்லாததையும் பொல்லாததை யும் சொ ல்லுதா. அதுல ஒண்ணு, 'வீட்டுக்குத் தீட்டு கூட ரெண்டு பேருக்கும் ஒரே நாள்லதாம் வருதாம்'னு சொல்லுதா. அதுக்கும் ஒண்ணும் நடக்கல.

கெழவியல்லாம், 'ஏட்டி ஒங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாப்பிள்ளைய பாத்து கெட்டி வச்சாதாம் நீங்க சும்மாயிருப்பியோ'ன்னு எடக்கு பண் ணுதாவோ. இவளுவோ சும்மாயிருப்பாவளோ, 'செரி கெழவி இருந்துட்டு போட்டும். அவனும் சந்தோஷப்படுவாம்'னு சொல்லுவாவோ. ரெண்டு பேரும் எதை பத்தியும் கவலப் படல. 

காலையில எந்திரிச்சதும் சுந்தரி வாசல் தெளிக்கும் போது பேச்சியும் வந்துருவா. சாணித் தெளிச்சு, தூத்து கோலம்போட்டுட்ட்டு ஆத்துக்கு குளிக்கp போவாவோ. பக்கத்துல வாய்க்கா இருந்தாலும் தூரத்துல இருக்க ஆத்துல போயிதாம் ரெண்டு பேரும் முங்குவாவோ கூறுகெட்ட செரிக்கியோ. சூரியன் உதிக்கதுக்கு முன்னால ஆத்துக்குப் போயி, நீச்சலடிச்சு குளிச்சாதான் மூதியளுக்கு நிம்மதி. சமஞ்ச பிள்ளைலு எல்லாரும் அப்படித்தாம்னு வையி.
ஆத்துல படித்துறைக்கு பக்கத்துல ஆழம் நெறய. ஓடுத தண்ணியில எதிர் நீச்சலடிக்கது கஷ்டம். அங்க தண்ணி கண்டமேனிக்கு இழுக்கும். படித்து றையில மேல இருநது நாலாது படியில மஞ்சள் இருக்கும். யார் மஞ்ச கொண்டு வந்தாலும் அங்ஙன வச்சுட்டுப் போயிருவாவோ. யாரு வேணாலும் எடுத்துக்கிடலாம். அப்படி இழுவி இழுவி அந்த நாலுவது படி மட்டும் மஞ்ச மஞ்சேன்னு இருக்கும். குளிச்சு முழிவிட்டு ரெண்டு பேரும் ஒரு கொடம் தண்ணியோட வீட்டுக்கு போவாவோ.

ஒரு செவ்வாய்க்கெழமை அன்னைக்கு சுந்தரி புள்ள நல்லா தூங்கிட்டு இருந் திருக்கு. பேச்சி போய், 'ஏட்டி இன்னுமா தூங்கிட்டிருக்கே. எந்திரிட்டீ'ன்னு சத்தம் கொடுத்திருக்கா.

'இன்னை எப்டி இவ்வளவு நேரம் தூங்கிட்டம்னு தெரியலயே'ன்னு அடிச்சுப் புடிச்சு எழுந்திரிச்சு, கொடத்தை தூக்கிட்டு வந்துட்டா. ரெண்டு பேரும் வழக்கம் போல சிரிச்சுப் பேசிக்கிட்டு ஆத்துக்குப் போறாவோ. ஆனா வழியெல்லாம் மையிருட்டா இருக்கு.

'ஏட்டி சீக்கிரம் வந்துட்டமா'ன்னு சந்தேகத்துல சுந்தரி கேக்கா. 

'இல்லட்டி இருட்டா இருக்கதால அப்படி தெரியுது. வழக்கமா நாம வார நேரம்தா'ன்னு பேச்சி சொல்லுதா.

ஆத்துக்கு வந்ததும் சேலையை அவிழ்த்துட்டு, பாவாடையால மாராப்பை கட்டுதாவோ. சுத்தி இருட்டு. தூரத்துல ஒரு டார்ச் லைட்டு வெளிச்சம் தெரியுது. காத்து வேற வேகமா வீசுது. குளிரு கடுமையா இருக்கு.

'என்ன சுந்தரி இன்னைக்கு இப்டி குளிருது'ன்னு கேட்டுட்டே தண்ணிக்குள்ள இறங்குதா சுந்தரி.

பேச்சி படித்துறையில சேலையை மூட்டிட்டு உக்கார்ந்திருக்கா.

'என்னட்டி உக்காந்துட்டெ. ஆத்துக்குள்ள எறங்கு'ங்கா சுந்தரி. பெறவு, 'மொத முங்க போட்டாதான் குளுரு தெரியாது'ன்னு சொல்லிட்டே முங்குதா. எழுந்திரிச்சு மூஞ்சியில விழுந்த தலைமுடியை பின்னால தள்ளிவிட்டுட்டு, 'ஏட்டி நீயும் தண்ணிக்குள்ள இறங்கு'ன்னு சொல்லுதா. அவாகிட்ட இருந்து சத்தம் வரலை. என்னன்னு திரும்பிப்பாத்தா, பேச்சிய காணல.

'ஏட்டி பேச்சி, எங்க போயி தொலைஞ்ச'ன்னு கேக்கா. ஆளையும் காணல. பதிலும் வரலை. திடீர்னு சிரிப்பு சத்தம் மட்டும் வருது. சத்தம் கேட்டு கெதி கலங்கி போவுது அவளுக்கு. ஏம்னா, இப்பதாம் சுந்தரி பிள் ளைக்கு ஞாபக த்துக்கு வருது. பாளையங்கோட்டையில அவ்வோ சித்தப்பா மவன் கல்யாண த்துக்கு அவா நேத்தே போயிட்டாங்கது.

'அப்பம் நம்ம கூட வந்தது யாரு?'ன்னு நினைக்கவும் அவளுக்கு மூச்சு பேச்சு இல்லாம போச்சு. பெறவு எப்படி அவா வீட்டுக்கு வந்தான்னு தெரியல. நாலு மாசமா படுக்கையிலதாம் கெடந்து, கேரள மந்திரவாதி வந்து மீட்டானாம் பிள்ளைய'' என்று ஆச்சி கதையை முடிக்கவும் பிரேமா, 'ஆமா. பேய்க் கதைய சொல்லிட்டியா? இனும நாங்க ஆத்துக்கு குளிக்க போனாப்லதான்' என்றாள்.
'ஏய் கெழவி, பேய் அப்படிலாம் கூட்டிட்டு போவுமா?'

'போவாது. ஒங்கிட்ட கொஞ்சி குளாவி, நக்கிட்டுப் போவும், கேக்கா பாரேன் கேள்வி'

'எப்படின்னு சொல்லு கெழவி, தெரியாமத்தான கேக்கோம்'

'நம்ம கண்ணுத்தேவரு மவன் எப்படிச் செத்தாம்ங்கெ?' 

'தெரியலயே'

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வந்தன் ஒழக்கு.

'ஏ கெழவி, இங்க ஒங்காந்து சவுரியமா கதையளந்துட்டிருக்கியாங்கும். ஒம் ஆடுவோ பூரா, கல்யாணி ஐயன் தோட்டத்துல விழுந்துட்டுவோ. அவரு வெரட்டி வெரட்டி கல்ல கொண்டி எறிஞ்சிட்டிருக்காரு. சீக்கிரம் போயி மறி. இல்லனா,எறிஞ்சே கொன்னு போட போறாவோ' என்றான் கோவமாக.

'ஐயையோ, எந்த எழவுவோ, அவரு தோட்டத்துக்கு ஏம் போச்சு' என்று பதறி யடித்து ஓடினாள் ஆச்சி.

(தொடர்கிறேன்)



Monday, October 24, 2016

ஆதலால் தோழர்களே 13

இதை எதிர்பார்க்கவில்லை கிருஷ்ணவேணி. தன் மீது பரமசிவம் வைத் திருக்கும் காதல், பொய்தானா என்று யோசிக்கத் தொடங்கியிருந்தாள். காதலித்த காலங்களில், அவன் கொடுத்த கடிதங்களில் எழுதப்பட்டி ருந்த கவிதை வரிகள் கண்முன் வந்து போயின. தன்னை வர்ணித்து,  தனக்காக எதையும் இழப்பேன் என்று சொன்ன வாய், வார்த்தை எல்லாம் பொய்யனெ உணரத் தொடங்கினாள்.

பாப்பாக்குடியில் இருந்து கிருஷ்ணவேணியைப் பெண் பார்த்துவிட்டு போனது தாமதமாகத் தெரிந்து, அவன் அம்மாவுடன் வீட்டுக்குள் வந்து பேசிய பேச்சுகள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. 'இஙகருங்க கிட்டுவ என்னைத்தவிர எவன் கெட்டுனாலும் உயிரோட வாழ முடியாது ஆமா. அவா எனக்குத்தான். என் பொண்டாட்டித்தான் அவா. கேட்டேளா எல்லாரும். சொல்லிட்டேன். எங்க ளுக்குத் தெரியாம, சொந்தக்காரனுக்கு கொடுக்கப்போறேன், அவனுக்கு கெட்டி வைக்கப் போறேன், இவனுக்கு கெட்டப்போறேன்னு சொன்னியோ, பெறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது' என்று வீராவேசம் பேசிய பரமசிவத்தின் வாக்கு இன்று எப்படிப் பொய்யானது? 

வீட்டு காம்பவுண்டுக்கு, கிழக்கு ஓரத்தில் வளர்ந்திருக்கும் முருங்கை மரத்தினடியில் குத்த வைத்து யோசிக்கத் தொடங்கினாள். அவள் முன் வெண்ணிற முருங்கைப் பூக்கள் சிதறிக் கிடந்தன. சாணம் பூசிய வெண் தரை முற்றம் அது. மரத்தின் மூட்டில் சிதறிக்கிடக்கிற குருணையைக் கொத்திக் கொண்டிருந்த கோழியைச் சுற்றி, குஞ்சுகள் தலையைத் தூக்கிப் பார்த்தும் குனிந்தும் சென்றுகொண்டிருந்தன. சிறகை அடிக்கிற அந்தக் குஞ்சுக் கோ ழிகளின் அழகை இப்போது அவளால் ரசிக்க முடி யாது. பொதுவாக இப்படிக் கோழிக்குஞ்சுகள் போனால், ஏதாவது ஒரு குஞ்சைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளங்கையில் குருணை யை வைத்து கொத்தித்திங்கக் கொடுப் பாள் கிருஷ்ணவேணி. இப்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தாள். முகம் திடீரென சிறுத்து கருத்து விட்டது போல பிரமை அவளுக்கு. எல்லாமே முடிந்துவிட்டதாகவும் தோன்றியது. பின்னர், அவளையறியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. அது கோபமாகவும் மாறியது. 

சிரிச்சான் பொண்டாட்டியை வெட்டிவிட வேண்டும், அவளது தலை முடியை அறுத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த வைராக்கியம் மொத்தமாகக் குலைந்துப் போயிற்று. அவள் மீது பொறாமை வந்தது. பரமசிவத்தைக் கவர்ந்திழுக்கும் விஷயம், தன்னை விட அவளிடம் என்னவாக இருக்கும் என யோசிககத் தொடங்கினாள். 

தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் அழுகை, அவள் நினை வைக் கலைத்தது. போய் பார்த்தாள். சிறுநீர் கழித்திருந்தாள் அவள். தொட்டிலின் கீழே சிறுநீர் தேங்கியிருந்தது. குழந்தையைத் தூக்கினாள். அம்மாவின் முகம் பார்த்ததும் சிரித்தது. ஏதோ ஒரு சத்தத்தைக் கொடு த்தது. மெதுவாகக் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கியவள், ஜட்டியை கழற்றித் துடைத்துவிட்டு வேறு ஜட்டியை மாற்றிவிட்டாள். பிறகு தேங் கிய சிறுநீரை வாரியலால் தள்ளி, தண்ணீர் விட்டுப் பெருக்கினாள். பிறகு கொஞ்சம் தள்ளி கோரைப் பாயையும் அதன் மேல் சேலையையும் மடித்து விரித்து குழந்தையைக் கிடத்தினாள். அது கால்களை மேலும் கீழும் ஆட்டி சிரித்தபடி சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் கையில் ஒரு கிழுகிழுப்பையைக் கொடுத் துவிட்டு அதன் அருகில் சுவற்றில் சாய்ந்து குத்த வைத்து உட்கார்ந்தாள். 

அவள் கண்முன், சிரிச்சான் பொண்டாட்டி அடிக்கடி வந்து நின்று சிரித் தாள். அவளை மறக்க நினைத்து வேறொன்றின் மீது கவனம் செலுத்த முயன்றாள். முடியவில்லை. பரமசிவம் உடல் நலமில்லாமல் வீட்டில் படுத்திருந்தபோது, சிரிச்சான் பொண்டாட்டி வந்தது, சும்மாதான் வந் தேன் என்று அவள் சொன்னது எல்லாம் கணக்கு வழக்காக அவளுக்குத் தோன்றியது. இந்த நொடியில் தன் மீதே அவளுக்கு வெறுப்பாக வந்தது. 

சிமிழ் பெருத்த கோயில் மாடாக, கிருஷ்ணவேணி தெருவில் அலைந் ததென்ன, எதிரில் இவள் வருகிறாளென்றால், 'ஆத்தாடி இவாட்ட வா யை கொடுக்கக் கூடாது' என கண்டுகொள்ளாமல் போகிற பெண்களெல்லாம் முக த்துக்கு நேராக காறித் துப்புவது போல தோன்றியது. 

'தெருவுல என்னா பேச்சு பேசின, எல்லாரையும். ஒன் நெலமைய பாத்தி யாட்டி' என்று ஏளனம் பேசுவதாக இருந்தது. மீண்டும் அவளையறியா மலேயே கண்ணீர் வடிந்தது.

'ஏட்டி கிட்டு...' என்று வெளியில் இருந்து யாரோ அழைத்தார்கள். இவள் சத்தம் கொடுக்கவில்லை.

'ஏட்டி, .எங்க போயிட்டா இவா' என்று மீண்டும் அந்தக் குரல் வந்ததும் அது பரமசிவத்தின் அம்மா என்பது புரிந்தது. அவளுடன் இருந்த பெரிய மகள் ஜான்சி, வீட்டுக்குள் ஓடி வந்து, 'அம்மா ஆச்சி கூப்பிடுதா' என்று அவள் சேலையை இழுத்தது.

உணர்வு வந்தவளாக எழுந்த கிருஷ்ணவேணி, 'என்ன?' என்று வெறுப் பாக கேட்டுவிட்டு எழுந்து வாசலுக்குப் போனாள்.

'கூப்ட்டா பதிலு பேச மாட்டியோ'

'பேசணும். சொல்லுங்க என்னன்னு?'

'அவன எங்கெ?'

'தெரியல'

'தெரியலயா"

'ஆமா. ஒங்க மவன் எங்கிட்ட எழுதிட்டுத்தான போறாவோ?'

'செரி, வந்தாம்னா. வீட்டுக்கு வரச்சொல்லு'

'ஏம்?'

'அவன் அத்தான் வந்திருக்காரு'

'ஏன், இங்க வர மாட்டோரோ அவரு'

'ஆங்... கேட்டுட்டு வந்து சொல்ந்தம்ட்டி, வருவாரா மாட்டாரான்னு... சொன்ன தை கேப்பியா, எதித்தெதுத்து பேசிட்டு கொழுப்பெடுத்தச் செரிக்கி...'

'வந்தா சொல்லுதேம்' என்று கூறிவிட்டு வீட்டுக்குள் வந்தாள்.

ஜான்சி, 'ஆச்சி எனக்கு முட்டாயி வாங்கித் தந்தாளே' என்று கையில் வைத்தி ருந்த இரண்டு தேன் முட்டாயை அம்மாவிடம் காட்டிச் சிரித்தது.

அதற்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு மீண்டும் போய் உட்கார்ந்தாள் கிருஷ் ணவேணி. 

நடந்த சம்பவம் தாமதமாகத்தான், பரமசிவத்தின் அம்பாசமுத்திரம் அத்தானுக் குத் தெரிந்திருக்கும் என நினைத்துக்கொண்டாள் கிருஷ்ணவேணி. கடந்த சில வருடங்களாக ஊருக்கு வருவதை குறைத்துக் கொண்டார் அவர். அதற்கு காரணம் பரமசிவம்தான் என்பது கிருஷ் ணவேணிக்கும் தெரியும்.

'என்னய நம்ப வச்சு ஏமாத்திட்டிய. ஒன்னய எங்க வச்சி பாக்கணும்னு நெனச்சேன். இப்படி கட்சியில சேருதம், கூட்டத்துல பேசுதமனு என்னைய மட்டுமல்லாம, ஒன்னையும்லா ஏமாத்திட்டிருக்கே. ஒம் மூஞ்சில முழிக்கக் கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தேன். சரி, கல்யாணத்துக்கு வரலன்னா, நல் லாருக்காதுன்னு வந்தேன்'

-பரமசிவம்- கிருஷ்ணவேணி திருமணத்தின்போது, அவரது அத்தான் பேசிய வார்த்தைகள் இது. அதற்கு பிறகு இப்போதுதான் ஊருக்கு வந்திருக்கிறார்.

செருப்படிபட்ட விஷயம் கேள்விபட்டுத்தான் அவர் வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாள், அவள். இந்தப் போதை நிலையில் பரமசிவத்தைப் பார்த்தால், அவரது கோபம் இன்னும் அதிகமாகும் என நினைத்தாள். 

'ஊருல செருப்படிபட்டது போதாதுன்னு இப்ப குடிகார பயலாவும் ஆயிட் டியோல. ச்சீ ஒம் மூஞ்யில முழிக்க வந்தேன் பாரு. ஆக்கங்கெட்ட நாயி. த்தூ' என்று துப்பிவிட்டு கோபத்தில் அவர் செல்லலாம் என நினைத்தாள். இது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு மேலும்  நடக்கலாம். போதையில் பரமசிவமும் அவரைத் திட்டவும் வாய்ப்பிருக்கிறது. 

வெளியூர் போயிருக்கிறார் என பொய்ச் சொல்லியிருக்கலாமோ என தோன்றியது அவளுக்கு. 

பிறகு திடீரென எழுந்து தொழுவுக்கு நடந்தாள். பரமசிவம் உள்ளிட்ட மூன்று பேரும் வேட்டி விலகி, அலங்கோலமாக போதையில் தூங்கிக் கொண்டிரு ந்தார்கள். பழனி பெரும் சத்தமாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். பரமசிவத்தின் கால், ஆறுமுகத்தில் முதுகில் கிடந்தது. இவள் கொடுத்திருந்த மீன் துண்டுகளை பூனை ஒன்று மெதுவாகத் தின்று கொண்டிருந்தது.

அவர்கள் இப்போது எழுவதற்கு வாய்ப்பில்லை. தொழுவத்தின் கதவை இழுத்து வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டாள். அப்போதுதான் கீரைத் தோட்ட ஆச்சி, அம்பாசமுத்திரம் அத்தானுடன் வந்துகொண்டிருந்தாள். இதை எதிர்பார்க்கவில்லை கிருஷ்ணவேணி.

தொழுவத்துக்குள் இருந்தபடி குடித்துக்கொண்டிருந்ததைச் சொல்லியிருப் பாளோ என நினைத்தாள். சொல்லியிருந்தால் இன்று ஏதும் நடக்கலாம் என உடல் படபடக்கும்போதே அருகில் வந்துவிட்டார்கள் ஆச்சியும் அம்பை அத் தானும்.

'வாங்க. நல்லாருக்கேளா?' என்றாள் கிருஷ்ணவேணி. உடலில் சின்ன பதட்டம் அவளுக்கு.

'ம்ம். இருக்கேன். எங்கெ அவன?'

'வெளியூர் போறன்னு சொல்லிட்டு போனாவோ'

'எந்தூருக்கு?'

'தெரியல. யாரோ, ரெண்டு பேரு கூட்டிட்டு போனாவோ'

'எப்பம் வருவாம்?'

'பொழுதடைஞ்சுதான் வருவாவோன்னு நெனக்கேன்'

'நான் வந்து, ஏசிட்டு போனம்னு சொல்லு' என்று சொல்லிவிட்டு 'வாரம் மா' என்று கீரைத் தோட்ட ஆச்சியைப் பார்த்தார். 

'செரிய்யா' என்று கீரைத்தோட்ட ஆச்சி சொன்னதும் பேரூந்து நிறுத்தம் நோக்கி நடக்கத் தொடங்கினார் அவர். ஆச்சி, தொழுவத்தைப் பார்த்தாள். அது வெளிபக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. 

(தொடர்கிறேன்)

Monday, September 19, 2016

ஆதலால் தோழர்களே 12

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார் பரமசிவம். எப்போதும் அங்கேயே கிடந்து பேப்பர் வாசித்து, சுவரொட்டி ஒட்டி, அரசியல் பேசி, கதையளந்து, புத்தகம படித்து விவாதித்து, லேபிள் ஒட்டி, நண்பர்களைச் சந்தித்து, தூங்கி எழுந்து வந்த பரமசிவம் அங்கு போகாதது அவருக்கே ஒரு மாதி ரியாகத்தான் இருந்தது. காலை எழுந்ததும் கால்கள் அதுவாகவே கட்சி அலுவலகத்துக்குத்தான் போகும். இப்போது அந்தக் கால் களை மாற்றி நடக்கத் தொடங்கியிருந்தார் பரமசிவம். இது ஏதோ போலதான் இருந்தது. என்ன வைராக்கியம்? திரும்பவும் கட்சி ஆபிசுக்கு போனால்தான் என்ன? இதற்கும் கட்சி ஆபீசுக்கும் என்னதான் தொடர்பு என நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்தது. எதற்கு போக வேண்டும் என தோன்றியது.

சிரிச்சான் செருப்பால் அடித்த பிறகு தலைவர், 'இபடிலாம் நடந் துரக் கூடாது ன்னுதான் மொதல்லயே சொன்னேன். பொம்பள சவகாசம் எங்கெல்லாம் கொண்டு போயி விடும்னு தெரியாதா? இன்னா நடந்து போச்சுல்லா. ஒனக்கு இருந்த பேரு, புகழு போச்சுல் லாடா. இனும மதிப்பானா எவனாது? எதிர்ல வந்தா கைய தூக்கி கும்புடுதவன், இனும செய்வானா அப்படி?' என்று ஆரம் பித்து நீண்டதொரு அறிவுரையைச் சொன்னார் தலைவர். பரமசிவம் இதைக் கேட்கும் நிலையில் இல்லை என்றாலும் தலையை கவிழ்ந்து கொண்டு நின் றிருந்தார். மனம் முழுவதும் வேறு சிந்தனையில் இருந்தது.

பிறகு, 'இனும என்ன செய்யலாம்னு சொல்லுத?' என்று கேட்ட தற்கு, 'இல்ல ஒண்ணும் செய்யாண்டாம். நான் பாத்துக்கிடுதென்?' என்றார் பரமசிவம். 

'நான் பாத்துக்கிடுதம்னா, என்ன செய்ய போறே?' என்றார்.

'ஒண்ணும் செய்யல' என்று சொல்லிவிட்டு வந்ததுதான், கடைசியாகக் கட்சி அலுவலகத்தில் இருந்து. பிறகு அங்கு போகவில்லை. கல்யாணசுந்தரமும் பச்சைமுத்துவும் இதுபற்றி அங்கு அரசல் புரசலாகப் பேசிக் கொண்டிருந்தன ர். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகான நான்கைந்து நாள் பரமசிவம், ஊரில் எங்கும் நடமாடவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். வளர்ந்த தாடி, முகத் தை சோகம் அப்பி இருப்பதாகக் காட்டியது. எப்போதும் சிரித்துக் கொண் டிருக் கிற முகம் இப்போது, அதை இழந்திருந்தது. இந்த தாடி அந்த முகத்துக்கு எடு படவில்லை. பெரும் பீடை அப்பி இருப்பது மாதிரி, சூன்யத்தின் ஆன்மா குடி வந்த மாதிரி, அவமானத்தின் முகமாக மாறி இருந்தது. நான்கைந்து நாள் நோ யில் கிடந்து எழுந்து வந்தவனின் முகமாகவும் அது இருந்தது.

இது பெரிய விலைதான். சேகரித்து வைத்த புகழை, ஒரு செருப்படி ஒர நாளில் சிதைத்துவிட்டது என்கிற வருத்தம் அவருக்கு அதிகமாக இருந்தது. ஊருக்குள் எந்த திசையில் நடந்தாலும் யாரை சந்தித்தாலும் அது பற்றியே கேட்பார்கள் என நினைத்தார். அதனால் யாரையும் சந்திக்கவில்லை. சிரிச்சான் பொண்டாட் டிக்கும் பரமசிவத்துக்குமான உறவு, ஊர் முழுவதும் தெரிந்திருக்கும் என்கிற கவலையும் இருந்தது. இதன் காரணமாக ஆனந்தவள்ளி டீச்சரும் ஜெயாவும் தன்னை என்ன நினைப்பார்கள் என்கிற பதட்டமும் அவரிடம் அதிகமாக இருந் தது.

கிருஷ்ணவேணிதான் அடிக்கடி, கத்திக்கொண்டிருந்தாள். சிரிச்சான் பொண் டாட்டியை கண்ணில் கண்டால், வெட்டி விடுவதாகச் சொல்லிக் கொண்ட லைந்தாள். அவளின் பேச்சைப் பார்த்தால், சொன்னதை செய்து விடுபவளா கவே தெரிந்தாள். காதல் கணவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை அப்படி.

பழனி, ஒரு மஞ்சள் பைக்குள் இரண்டு பாட்டில்களை மறைத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். பரமசிவத்துக்குப் புரிந்து விட்டது. ஏதும் பேச வில்லை. சமையல் கட்டில் இருந்த ஈராய்ங் கத்தில் சிலவற்றை இரண்டு பேரும் உரித்தார்கள். நான்கைந்து பச்சை மிளகாயையும் எடுத்துக் கொண் டார்கள். சிறு தோண்டித் தண்ணீரை தூக்கினார்கள். நார்த்தங்காய் ஊறுகயை ஒரு கிண்ணத்திலும் மூன்று சில்வர் கிளாஸ்களையும் எடுத்து பையில் வைத் துக்கொண்டு எதிரில் இருந்த செல்லையாவின் மாட்டுத் தொழுவுக்குச் சென் றார்கள். 

அப்பா, போவதைப் பார்த்து பெரிய மகள், நானும் வாரேன் என்று எழுந்தாள். 'இல்ல செல்லம், அப்பா, இப்ப வந்திருவேன்' என்று எழுந்த பரமசிவத்தை இதற்கு முன், சாராயம் குடித்துப் பார்த்த தில்லை கிருஷ்ணவேணி. அவன் அவளைப் பார்த்து, 'வந்திரு தேன்' என்று சொல்லிவிட்டு வாசலுக்குப் போனா ன். அவளது கண்களில் இருந்து லேசாகக் கண்ணீர் வடியத் தொடங்கியது. முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றிருந்ததால் தொழுவைத் தூத்து துப்புரவாக்கி கோலம் போட்டிருந்தார்கள். இருந்தாலும் மூத்திர வாடையும் சாண வாடையும் வீசிக்கொண்டுதான் இருந்தது. அடுத்தப் பக்கம் இருந்த வைக் கோல்போரில் இருந்து கொஞ்சம் எடுத்து வந்து இரண்டு பேரும் உட்கார் வதற்காகப் போட்டான் பழனி. சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு, உட்கார் ந்தார்கள். கருவாட்டுத் துண்டு ஒன்றைக் கவ்விக்கொண்டு போகும், வெண் மையும் செந்நிறமும் கலந்த பூனை ஒன்று இவர்களைப் பார்த்து பயந்து ஓடி யது. 

பாட்டில்களை எடுத்தான் பழனி. வடிக்கும் இடத்தில் இருந்து வாங்கிவிட்டு வந்த சாராயம், இளஞ்சூட்டோடு இருந்தது.

ஈராய்ங்கம், நார்த்தங்காய் ஊறுகாய், மிளகாய் எல்லாவற்றையும் நடுவில் வைத்தான். தோண்டியில் இருந்து தண்ணீரைக் கலந்து குடித்தார்கள். முதல் கிளாசைக் குடித்து முடித்ததும் ஆறுமுகம் தொழுவுக்குள் வந்தார். அவருக் கான கிளாசை எடுத்து ஊற்றினார். வேட்டி மடிப்பில் வைத்திருந்த, முறுக்கு களை எடுத்து கீழே வைத்தார். 

சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார்கள். என்ன நினைத்தாளோ, கிருஷ் ணவேணி. சமையலுக்கு வாங்கி வைத்திருந்த மீன்களை மசாலா கலந்து பொரித்தாள். உரைப்பு அதிகமாகக் கொண் ட மசாலா அது. சிறிது நேரத்துக்குப் பிறகு தொழுவத்தின் வெளி யே நின்று, 'ஏல பழனி இங்க வா' என்றாள். வந்தவனிடம் சத்தமில்லாமல், பொரித்த மீன்களை கொடுத்துவிட்டு வந்தாள்.

பரமசிவம், இதை எதிர்பார்க்கவில்லை. இன்னொரு கிளாசை ஒரே இழுவில் குடித்துவிட்டு, மீனைக் கடித்தார். கூடவே ஊறுகாயை யும் நக்கிக்கொண்டார். பிறகு சிகரெட்டை பற்ற வைத்தார். 

பரமசிவம் அதிகமாகக் குடிப்பதில்லை. இதற்கு முன் எப்போதோ ஒரு மு றையோ, இரண்டு முறையோதான் குடித்திருக்கிறார். அது வும் தவிர்க்க மு டியாத நண்பனின் மரணத்துக்காக குடித்த குடி. அந்த சாராய கசப்பு பரம சிவத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. குடிப்பது, கொலையை விட பெருங் குற்றம் என சொந்த பந்தம் நினைக்கும் என்பதால் அதன் பக்கம் அவர் போவதி ல்லை.

'குடிகார பய, மூஞ்சில முழிக்காதல' என்று ஏசிவிடுவார்கள் என்ப தாலேயே அதிகமாகக் குடித்ததில்லை அவர். இன்று நிலமை வேறு மாதிரி ஆகிவிட்டது. மனம் முழுவதும், காய்ந்த கருவை முட்களாக நிறைந்திருக்கிறது. பாளம் பாளமாக வெடித்து பிளந் திருக்கும் அந்த மனதுக்குத் தண்ணீர் தேவை என நினைத்தான். அது போதை என்பதை பழனி முடிவு செய்தான். எப்போதும் மறுத் துவிடும் பரமசிவம், இப்போது மறுக்கவில்லை. தேவையாக இருந்தது. அடங் கி எழும் மனதை ஆற்றுப்படுத்தவோ, அல்லது இன் னும் கொதிக்க விடவோ, ஏதோ ஒரு போதை தேவைப்படுகிறது, இந்த சாராய போதை போல.

'செரிக்குள்ள சிரிச்சானை சொட்டைய உரிச்சிருக்கலாம். வேண்டான்னுட் டெ?' என்று பழனி ஆரம்பித்தான். 

'அதை பேசாண்டாம்ல. அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிப் பியா, அதை யே பேசிட்டிருக்கெ?' என்றார் ஆறுமுகம்.

'அடுத்த வாரம் கடையத்துல திமுக கூட்டம் இருக்கு. தமிழ்க்குடி மகன் வாராராம். அவர் முன்னிலையில சேர்ந்துரலாமா சொல்லு. நம்ம மாமாதான் ஒன்றிய செயலாளரு' என்றான் பழனி.

'கொஞ்ச நாள் பொறுடே. எடுத்தோம் கவுத்தோம்னு அவசரமா பண்ணிறக் கூடாது' என்றார் ஆறுமுகம்.

பரமசிவம், எதிரில் உடைந்திருக்கிற வீட்டின் ஜன்னல் கம்பிகளை யே பார்த் துக்கொண்டிருந்தான். அதற்கு வெளியே கீரைத்தோட்ட ஆச்சி, ஆடுகளைப் பத்திக்கொண்டிருந்தது. அவள் நெருங்கி நெரு ங்கி வர வர ஜன்னலின் வழியே யதேச்சையாக இவர்களைப் பார்த்துவிட்டாள். யார் யார் இருக்கிறார்கள் என்று நோட்டமிட்டாள். பிறகு ஆடுகளை மேயவிட்டுவிட்டு, இவர்கள் அருகில் வந் தாள்.

'ம் ஆரம்பிச்சாச்சா... நல்ல பழக்கம்தான். ஏ பழனி, நீதாம் இந்த வேலைய பண் ணுதியோல?'

அவளை அங்கு எதிர்பார்க்காத ஆறுமுகம், 'நீ எங்க வந்து என்ன பேசுத. போ, ஆடுவள பாரு' என்றான்.

'ஏம்ல ஒங்கள இப்டி பாத்திட்டம்னா, அவயம் போடுத?' என்றவள், பழனியை கையை காட்டி, 'பரம்சம் இந்த மூதி கூட சேராத, அவன் இப்படிதான் சாராய த்தைக் கொண்டு வருவாம்' என்று சொல்லிவிட்டு, அவர்கள் வைத்திருந்த ஈராய்ங்கத்தில் ஒன்றை எடுத்து வாயில் போட்டாள்.

'இங்க கெடக்க கெடயில, இவா வேற' என்ற பழனி, 'நீ போத்தா' என்று விர ட்டினான் அவளை.

'பரம்சம் ஒண்ணும் கவலப்படாதடா. எல்லாம் தி(ருஷ்)ட்டின்னு நெனச்சுக்கோ. ஊராங்கண்ணு கொள்ளிக் கண்ணு. அந்த கண்ணு பட்டதாலதான் இப்படி நடந்திருக்கு. பொறாமையில புழுங்குத பயலுவதாம் ஊர்க்காரனுவோ. அடுத் தவன் நல்ல சோறு திங்கக் கூடாது, நல்ல துணி மணி போடக்கூடாது, நிமிர் ந்து நிய்க்கக் கூடாதுன்னு தெனமும் வயிறு எரியுதவனுவதாம் இவனுவ. இந்த சம்பவத்தோட திட்டி கழிஞ்சுதுன்னு நெனச்சுக்கோ. மத்தப்படி எந்த நாயை பத்தியும் நெனக்காத. ஒன்னய பத்தி எங்களுக்குத் தெரியும்டே. தைரியமா இரு. நாங்க இருக்கோம்' என்று ஒரு பேரூரையை நிகழ்த்தினாள் ஆச்சி. ஒரு பேச் சாளரின் முன் இன்னொரு பேச்சாளரின் சிற்றுரை போல இருந்தது அது.

ஆச்சி, தன் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை மெச்சிக் கொண்டார் பரமசிவம். தான் தவறேதும் செய்ய மாட்டேன் என் கிற நம்பிக்கை அது. சிரிச்சான் பொண்டாட்டியை எல்லாம் ஏறெ டுத்து பார்க்கமாட்டேன் என்கிற அவளது நம்பிக்கை எங்கிருந்து தொடங்கியிருக்கும் என நினைத்தார்.

அதற்குள் ஆறுமுகம், 'இங்கரு ஒனக்கெல்லாம் வெவஸ்த கெடையாது போ லுக்கு. நாங்க என்ன செஞ்சிட்டிருக்கோம், நீ எங்க வந்து என்ன சொல்லிட் டிருக்கே. போ. போயித்தொல, சாவ மாட்டாம இங்க வந்துல கரைச் சல கொடுக்கா?'

'ஏல ஆறுமுவம், ஒன் துறுத்திய நிறுத்துல. நான் அவன்ட்ட சொல்லிட் டிருந்தா, ஒனக்கு என்னல செய்யுது' என்ற ஆச்சி, இன் னொரு ஈராய்ங்கத்தை எடுத்து வாயில் வைத்து அரைத்துக் கொண்டு நடந்தாள். போகும்போது இன்னுமொரு முறை சொல்லிவிட்டுப் போனாள்: 'பரம்சம் எதை பத்தியும் கவலப்படாதடா. எல்லாம் தி(ருஷ்)ட்டியாங்கும்' என்று.  

'அவா சொல்லுததுலயும் ஒரு இது இருக்கத்தாம் செய்யுது. எல் லா பயலு வளும் ஒன்னய பொறாமைலதாம் பாத்தானுவோ. ஏம், ஒங்கூட பேச வாரனு வளே பச்சைமுத்தும் கல்யாணியும். அவனுவ கூட பொறாமை புடிச்சவனு தாம்' என்ற பழனி, இன்னொரு கிளாசில் கொஞ்சம் ஊற்றினான்.

பரமசிவம், 'எனக்கு போதும்' என்றார். அவர் வாய் குழறத் தொடங்கியது. ஆறு முகமும், பழனியும் போதையாகிவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சு மாறியது. பழனி சிரிக்கத் தொடங் கியிருந்தான். அவன் அப்படித்தான் அதிக மாகக் குடித்தால் அழுவான். அதற்கு முன் சிரிப்பான். பெரும் சிரிப்பாணியாக இருந்தது அது. ஆறுமுகம் பாட்டிலில் மிச்சமிருந்ததை இரண்டு கிளாசில் ஊற் றினார்.

'இந்தா பரம்சம். இது நான் தாரது. நீ குடிச்சுதாம் ஆவணும். மறுக் கக் கூடாதுடா. இந்த கிளாஸ் எனக்கு, இது ஒனக்கு' என்று நீட்டி னார். பரமசிவம் அதை வாங்கி க்கொண்டார். ஒரே இழுப்பாக இழுத் தார். முகமெல்லாம் வியர்த்து வடிந்தது. மண்டைக்குள் யாரோ உட்கார்ந்துகொண்டு, தலையை அங்கும் இங்கும் ஆட் டுவது போல இருந்தது. சட்டையை கழற்றி தூரத்தில் வைத்தார். வியர்வை தலை, உடல் என வடியத் தொடங்கியது. காற்று சுத்தமாக வரவில்லை. சட்டை பையில் இருந்து சிகரெட்டை எடுக்கும் போது, தடுமாறியது பரமசிவத் துக்கு. சட்டை பையை விட்டுவிட்டு தரையில் சிகரெட்டை தேடத் தொடங் கினார். 

பழனி சிரித்துக்கொண்டே, சிகரெட்டை எடுத்து அவர் வாயில் வைத்தான். அவனும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். போதையில் மிதக்கத் தொடங்கினார்கள். பழனியும், ஆறுமுகமும் ஓர் அளவுக்கு மேல் முடியாமல், அங்கேயே படுத்து விட்டனர். 

பரமசிவம் கண்ணில் இருந்து தண்ணீர் வடியத் தொடங்கியது.

 'மன்னிச்சிரும்மா. நீ எம்மேல வச்சிருக்கிற காதல் எவ்வளவு பெருசுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். ஒனக்காகத்தான் சிரிச்சானை விட்டேன். இல்ல ன்னு வையி, அன்னைக்கே அவனை அறுத்திருப்பேன்' என்று இரண்டு கைக ளையும் சேர்த்து அறுப்பதை போல செய்கை செய்துவிட்டு, பின் பக்கச் சுவரில் சாய்ந்தவாறு பரமசிவம் அழத் தொடங்கினார். 

கிருஷ்ணவேணி அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

(தொடர்கிறேன்)

Sunday, August 28, 2016

ஆதலால் தோழர்களே 11


'சும்மா மத்த கட்சியோ ஊருக்குள்ள வந்த மாதிரி கம்னீஸ் கட்சியும் வந்ததுன் னு நெனச்சிராத? அதுக்கு பெரிய கதை இருக்கு. கட்சி மாறுத துன்னு முடிவு பண்ணிட்டெ. இருந்தாலும் சொல்லுதன் தெரிஞ்சுக்கெ. தெரிஞ்சுக்கிடணும் லா?' 

-பெரிய வாய்க்கால் அம்மன் கோயிலின் எதிரே உள்ள அரசமரத் திண்டில் உட்கார்நதுகொண்டு சொன்னார், அருணாச்சல மூப்பனார்.  அவரது ஆடுகள் தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. வாயில் கிடந்த வெற்றிலையைத் துப்பிவிட்டு வாய்க்காலில் கொப்பளித்துவிட்டு வந்து உட்காந்தார். பரமசிவம் தோளில் கிடந்த துண்டை எடுத்து திண்டில் உதறினான். சிதறிக்கிடந்த இலைக ளும் செத்தைகளும் பறந்தன. பிறகு சவுகரியமாக உட்கார்ந்து கொண்டான். ஒழக்கு, ஏதோ பெருங்கதைக் கேட்கும் ஆர்வத்துடன் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தான்.

'அழ்வாரிச்சுல பண்ணையாரு ஆயாம் பிள்ளைன்னு ஒருத்தர் இருந் தாரு. அவருக்குத்தான் நம்மூரு பக்கம் இருக்க, செட்டிகுளம், கல்யாணி புரம், சிவசைலம், பாப்பாங்குளம், பறம்புன்னு எல்லா பக்கமும் ஏகப்பட்ட வயக்காடுவோ. நம்மூர்ல, அந்தா பாரு, வடக்க பொத்த இருக்குலா, பொத்தை. அதுக்கு அடுத்தால இருக்க மாத்ராங்குளத்தை ஒங்களுக்கு கொளமாதான் தெரியும். அந்தக் கொளத்து பாசானம் முழுதும் பண்ணையார் ராமசாமி ஐயருக்கு. அந்தப் பக்கத்துல இருந்து இன்னா, இங்க ஒக்காந்திருக்கம்லா, இது வரை அவரு வயலுவோதான். நம்மூர்ல மொத்தம் நாலு பண்ணையாரு. இது, பண்ணை ராமசாமிக்கா, மேக்க கோவங்குளம் இருக்கு பாரு. அந்த பாசனம் பூரா, பண்ணையாரு ராசா ஐயருக்கு. அதுக்கு மேக்க பூங்குறிச்சு போற வழியில சிங்கப்பூராங்குளம்னு இருக்கு. இங்க வடக்கு கிராமத்துல சிங்கப்பூ ரய்யன்னு ஒரு பண்ணையாரு இருந்தாரு. அவரு வெவசாயம் எல்லாம் அந்தப் பக்கம். மேல பத்து வய பூரா பண்ணையாரு கொண்டை ஐயருக்கு. நம்ம ஊரு சுத்துபட்டு பூரா அவங்க ராஜ்ஜியம்தான். எங்க தாத்தா, உங்க தாத்தா எல்லாருமே அவங்ககிட்ட வேலை பாத்தவங்கதான். அவங்க கொடுக்கதுதான் கூலி. ஏன்னு ஒரு வார்த்தை கேக்க முடியாது.

பண்ணையாருவோ வீட்டு வாச முன்னால போயி நிய்க்க முடியாது. எல்லாரும் வில்லு வண்டியிலதான் போவாவோ. போற வழியில இடுப்புல துண்டைக் கட்டிட்டு எஜமான்னு கையெடுத்து கும்பிடணும். அவ்வோளு க்குன்னு ஏதும் தோணுச்சுன்னா, 'என்ன வேணும்?'னு கேப் பாவோ. இல்லன் னா, ஒரு பார்வையோட சரி, போயிருவாவோ. பிள்ளைலுக்கு ஒடம்பு சரியில்ல, பேர்காலம், கல்யாணம் காட்சின்னா, ஏதும் கொடுப்பாவோ, பிச் சைக்காரனுக்கு போடுத மாதிரி. வாங்கிட்டு வந்துதான் பண்ணணும். எதுத்து எவம் கேள்வி கேட்டலும் ஒவ்வொரு பண்ணையாரும் அடியாளு வச்சிரு ப்பாவோ. ஆழ்வாரிச்சு ஆயாம் பிள்ளைக்கு பாப்பாங்குளத்துக்கு ஆளுவோ. நம்ம ராமசாமி பண் ணையாருக்கு யாருன்னா, பாலையாதேவன் குடும்பம். சிங்கப் பூரய்யனுக்கு காசித்தேவன்... இப்படி ஒவ்வொரு பண்ணை யாருக்கும் ஒவ்வொரு ஆளு. இப்படி போயிட்டிருக்கும்போது, உழுதவனுக்கு நிலம் சொந்தங்கற விவகாரம் பூதாகரமா வெடிச்சுச்சு. அதுக்கு ஆதரவா போராட் டத்துல இறங்குன ஆளுவோளுக்கெல்லாம் வெட்டு குத்துதான். 

கெங்கமுத்துன்னு ஒருத்தன், குத்துப்பட்டு செத்தே போயிட்டாம். பெறவுதான் எல்லாரும் பொங்கி, பண்ணையார்வோளுக்கு எதிரா கொடி புடிச்சாவோ. நம் மூரு சொள்ளமுத்து நம்பியாரு, காக்கநல்லூரு மலை யரசு, வீகேபுரம் ஆர்.வி.ஆனந்தகிருஷ்ணன், பிரம்ம தேசம் நல்லசிவம்னு எல்லாரும் முன்ன நின்னு போராடுனாவோ. அப்டி கொடி புடிச்சவோ எல்லாரும் நம்மூர்ல கம்னீஸ் கட்சியை ஆரம்பிச்சாவோ. ஆரம்பிச்சது மட்டுமல்ல, பண்ணை யாரு வோகிட்ட இருந்து பாதிக்கு பாதி வயக்காடுவோள நமக்கு வாங்கிக் கொடுத்த வங்களும் அவங்கதான். அப்படி ஊரையும் மக்களையும் காக்க வந்த கட்சிதான் அது. 

இன்னைக்கு பண்ணையாருவோ, வயக்காட்டை எல்லாம் நம்மட்டயே வித்துட்டு தூராந்தேசம் எங்கயோ போயிட்டாவோ. அதுக்கு காரணமும் இந்தக் கட்சிதான். பண்ணையாருவோ சொந்தக்காரனுவ கூட எங்க இருக்காங்கன்னு தெரியல. நம்ம கல்யாணி-சைலப்பர் திருவிழாவுக்கு யாராவது வந்தா, 'இவருதான் சிங்கப்பூரய்யன் பேரன், ராசாய்யரு பேரன்'னு சொல்லுவாவோ. அப்டியான்னு கேட்டுக் கிடதுதான்' என்ற மூப்பனார், பீடியைப் பற்ற வைத்தார். 
பிறகு, 'இப்படி வளந்தக் கட்சிதான் இது. நம்ம ஊர் நன்மைக்காக ஏகப்பட்ட போராட்டங்களை நடத்தி, வெட்டுக்குத்தைப் பார்த்து வளர்ந்தக் கட்சி. இன்னைக்கு அந்த கட்சி, இந்தக் கட்சின்னு ஆயிரம் கட்சியோ இருக்கலாம். ஒவ்வொரு தெருவுல கம்னீஸ் கொடிகம்பம் இருக்கு. அதுக்கு கீழ, தோழர், தியாகி சுப்பையா நினைவுக்கம்பம், சொடலை நினைவு கம்பனு எழுதியிருக்கு. இதெல்லாம் சும்மா எழுதல. ஒரு காலத்துல தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதா இருந்துச்சு. நம்ம கீரைத்தோட்ட கெணறு இருக்கு பாரு. ஏழு நாளு அரவமில்லாம, போலீசுக்கு பயந்து அதுக்குள்ள வாழ்ந்தவங்கதான் நம்மாளுவோ. அந்த வரலாறெல்லாம் ஒங்களுக்கெங்கடா தெரிய போவுது?' என்றவர், 'செரி, இதுல நா சொல்லுததுக்கு ஒண்ணுமில்ல. எது நல்லது எது கெட்டதுன்னு நீ முடிவு பண்ணிக்கோ. நீ என்ன ஒண்ணும் தெரியாதவனா? பேச்சாளரு வேற?' என்ற மூப்பனார் ஒழக்கு தூங்கிவிட்டதைப் பார்த்தார். அவனது செவுட்டில் லேசாகத் தட்டி, 'ஏறு கோட்டிக்காரப் பயல, நான் என்ன கதையால சொல்லிட்டிருக்கேன். இப்டித் தூங்கிட்டே?' என்றார்.

திடுமென எழுந்த ஒழக்கு, 'ச்சே எப்டி தூங்குனம்ணே தெரியல, பாரேன்' என்று சொல்லிவிட்டு பெரியதாகக் கொட்டாவி விட்டான். பிறகு வாய்க்காலில் போய் மூஞ்சைக் கழுவிவிட்டு வந்தான்.

'எந்தக் கட்சில சேரப்போற?' என்று கேட்ட மூப்பனாரிடம், 'நீரு யார்ட் டயும் சொல்லாண்டாம், சின்னயா. இன்னும் முடிவு பண்ணல' என்று சொல்லிவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான் பரமசிவம். மனம் முழுவதும் தலை வர் சொன்னதுதான் நின்றிருந்தது. எப்படியாவது வேறு கட்சியில் சேர்ந்து அவர் முன் தன்னை பெரிதாக நிரூபிக்க வேண்டும் என நினைத்தான்.

'இவரு கட்சியில்லனா, வேற கட்சியா இல்லை நாட்டுல. நீக்கிரு வாராம்லா? இவரு யாரு ஒன்ன நீக்கதுக்கு, சொல்லென்? நம்ம நீக்கிட்டு போவோம் அவரை' என்ற ஒழக்கு, இன்னும் தூபம் போட்டுக் கொண்டிருந்தான். பரமசிவ த்தின் மனதுக்குள் அனல் கழன்றுக்கொண்டிருந்தது.



கிழக்கே காச்மூச்சென்று சத்தம். பள்ளிக்கூடம் அருகில் இருந்து தான் வந்துகொண்டிருந்தது அந்தச் சண்டைச் சத்தம். ஆடுகளைப் பத்திக்கொண்டு போகும் கீரைத் தோட்ட ஆச்சி, சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொம் பையாவிடம், 'அங்கென்னல அவயம்?' என்று கேட்டாள்.

'ஒண்ணுமில்ல, போ போ' என்று சொல்லிவிட்டு அவன் சைக் கிளை மிதித்தான். 'ஏ மூதி' என்ற ஆச்சி, ஆடுகளை மேற்கு நோக்கி பத்திவிட்டு சத்தம் வரும் பள்ளிக்கூடம் நோக்கி நடந்தாள். அருகே நெருங்க நெருங்க சத்தம் தெளிவாகக் கேட்டது. யாரோ, யாரையோ செருப்பால் அடித்துவிட்டதாக அந்த தகவல் முதலில் தெரிவித்தது. கண்களைக் கசக்கிவிட்டு கிழக்கே பார்த் தாள். கரைச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இன்னாரென்று தெரியவில்லை. யாரோ, யாரையோ இழுத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள்.

'நீ போடே, போன்னு சொல்லுதம்லா' என்ற குரல் கீழத் தெரு பசுங் கிளியின் குரலாகத் தெரிகிறது. 

'பசுங்கிளி யாரை வெரட்டுதாம்?' என்று நினைத்துக்கொண்ட ஆச்சி, நடையை வேகமாக்கினாள். எதிரில் வந்த சுப்பையா சார் வாள், 'அங்க எங்க போற, வேகவேகமா?' என்றார் ஆச்சியிடம்.

'சத்தமா இருக்கேன்னு போறேன்'

'சண்டை முடிஞ்சு போச்சு, திரும்பு' என்ற சார்வாளிடம், 'என்ன சண்டை, யாருக்கு என்ன?' என்று கேட்டாள்.

'பரம்சத்தை, சிரிச்சான் செருப்பைக்கொண்டி அடிச்சுட்டாம்'

'அடப் பாவிப்பயல' என்ற ஆச்சரியம் ஆச்சிக்கு. அவன் ஏன் பரம் சத்தை அடிக்கணும்? ரெண்டேரும் கழுத்தக் கட்டிட்டு அலைவானுவோ. அவனுவளுக் குள்ள என்ன சண்ட?'

'யாரு கண்டா? இனுமதாம் தெரியும்?

'இந்தக் கூத்த எங்க போயி சொல்ல? செருப்பை கொண்டு அடிக்க வரை என்ன நடந்து போச்சு, ரெண்டு பேருக்குள்ள?'

'தெரியலங்கேன். அதையே கேட்டுட்டு இருக்கெ?' என்ற சார் வாளுடன் மேற்கு நோக்கி நடந்தாள் ஆச்சி.

ஊரில் எங்காவது உட்கார்ந்து பேச இன்று ஒரு கதை கிடைத்து விட்டது ஆச்சிக்கு. இருந்தாலும் அவளுக்குப் பிடித்த அல்லது வேண்டிய பரமசிவம் பற்றிய கதை என்பதால் ஏன் இந்த சண்டை, எதற்கு இந்தச் சண்டை என்பதை அறியும் ஆவல் அதிக மாக இருந்தது.

ஆச்சியும் சார்வாளும் நடந்துகொண்டிருக்கும்போது, சைக்கிளில் அரிவா ளைத் தொங்கப் போட்டுக்கொண்டு, வேகவேகமாக வந்து கொண்டிருந்தார் பரமசிவத்தின் மூத்த அண்ணன். சைக்கிளின் மிதியில் கோபம் தெரிந்து கொண்டிருந்தது. அவரை மறித்தார் வாத்தியார் சுப்பையா.

'நில்லுப்பா. எங்க போற. எல்லாரும் போயிட்டாவோ. நீ திரும்பு. கட்சி ஆபிஸ்ல வெவாரமாம்?'

'என்ன மயிரு வெவாரம். செரிக்குள்ள செருப்பை கழத்தி அடிச்சி ருக்காம். அவன் தலைய எடுத்துட்டுலா வெவாரம்' என்றவர் சார்வாளின் பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு, சைக்கிளை அழுத்தினார்.

'இதெல்லாம் திருந்துத ஜென்மமா? என்னன்னு போட்டும் எனக் கென்ன மயிரு வந்திருக்கு' என்ற சார்வாள், டப்பியில் இருந்து கொஞ்சம் பட்டணம் பொடியை ஆட்காட்டி விரலையும் பெரு விரலையும் ஒன்றாக்கி அள்ளி, உதறிவிட்டு மூக்குக்குள் திணித்தார். உதறிய பொடி காற்றில் கலந்து ஆச்சிக்குத் தும் மலைத் தந்தது. 

சிறிது நேரத்துக்குப் பிறகு, 'என்ன சார்வாளு, எதுக்கு அடிச்சா னாம்?' என்று மீண்டும் கேட்டாள் ஆச்சி. அவருக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்பதால்தான் திரும்பவும் கேட்டாள்.

'நீ யாருட்டயும் நா சொன்னேன்னு சொல்லிராத... சிரிச்சாம் பொண்டாட்டிட்ட என்னமோ எடக்கு பண்ணியிருக்காம் பரம்சம். அதை யாரோ அவன்ட சொல் லிருக்காவோ. அதுக்குத்தாம் இப்படி அடிச்சானாம்?'

'இது என்ன கொடுமயா இருக்கு? அவன் பொண்டாட்டி என்ன அப் படி பேரழவியா? கொடுக்கு மாரி அலைஞ்சுட்டிருக்கவ. அவாட்ட போயி இவன் என்னத்த எடக்குப் பண்ணியிருப்பான்?' என்ற ஆச்சி யிடம் தனது மூக்கின் மேல் விரல் வைத்துக் காட்டி, 'நான் சொன் னேன்னு மூச்சுவிடக் கூடாது, சொல்லிட்டேன். அந்தப் பேச்சை அப்டியே விட்டுரு' என்றார் சார்வாள்.

'நா ஏம் சொல்லப் போறேன்?' என்ற ஆச்சிக்கு, அது பற்றிய சிந்த னையே அதிகமாக இருந்தது.

'பரம்சம் பேசுத பேச்சுக்கு ஊரு, ஒலகத்துல பொம்பளயா இல்லை, இந்த கேணச் செரிக்கிட்ட எடக்கு பண்ணுனாம்னு சொல்லுதியல' என்று திரும்பவும் கேட்டுக்கொண்டே வந்தாள் ஆச்சி. அவளுக்கு நம்ப முடியவில்லை. 

'இது இப்டியே முடிஞ்சு போவும்னா நெனக்க?'

'அதெப்படி முடியும். இன்னா, அண்ணங்காரன் அருவாளைத் தூக்கிட்டாம். சின்ன அண்ணன்காரன் சும்மாவே கொலகாரப் பய. அவனுக்கு தெரிஞ்சு என்ன நெல நிக்க போறானோன்னு தெரிய லயே?' என்றார் சார்வாள்.

'என்னத்த இருந்தாலும் செருப்ப கழத்தியா அடிப்பான்?' என்ற ஆச்சியிடம், அங்கும் இங்கும் பார்த்துவிட்டு சொன்னார் சார்வாள். 'அவனாது செருப்பை கழத்தி அடிச்சான். இன்னொருத்தம்னா, ரெண்டு பேரையும் வெட்டிருப் பானாங்கும்'

'எடக்கு பண்ணுததுக்கா வெட்டுவாங்கெ?'

'ஒனக்கு எல்லாத்தையும் வெவரமா எழுதணும்' என்ற வாத்தியார், 'கிட்ட வா' என்று அழைத்து அவளின் காதில், 'அவளைதான் பரம்ச ம் வச்சிட்டி ருக்கானாம். சிரிச்சானோட அண்ணன் தம்பியோ சொ ல்லியும் அவன் கேக்கல யாம். அதாம் இந்த அடி, போதுமா?' என்றவர், 'இங்கரு நான் சொன்னம்னு யார்ட்டயும் சொல்லிராத. சண்டை நடக்கும்போது அங்ஙன கேள்வி பட்டதாங்கும் இது' என் றாள் சார்வாள்.

சேலையை இழுத்து வாயில் வைத்துக்கொண்டு, ஆச்சரியப்பட் டாள் ஆச்சி. இது அநேகமாக சாதி சண்டையை இழுத்துவிடுமோ என்று பயந்தாள் ஆச்சி. 

தெருக் கடந்து பரமசிவனின் வீடு இருக்கும் பகுதிக்குள் ஆச்சி வந்ததும் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தாள். கிருஷ்ண வேணி காளியாகி கத்திக் கொண்டிருந்தாள்.

'செரிக்கி முண்ட, எங்கண்ணுல காணட்டும் அவள. தலைய மொட்டைய டிக்கணா இல்லையான்னு மட்டும் பாரு' என்று ஏசிக் கொண்டிருந்தாள்.

ஒழக்குவின் சைக்கிளில் வந்து இறங்கிய பரமசிவன், வீட்டுக்குள் போனான். பொண்டாட்டியை, நாக்கைத் துறுத்தி, 'வாயை பொத் திட்டு இருக்கணும்' என்று கோபமாகச் சொன்னான். ஒழக் குவின் பின்னால் இன்னும் நான்கைந்து சைக்கிள்கள் வந்திருந்தன. எல்லரும் வீட்டுக்குள் வந்தனர்.

'கண்ட நாயி, என்புருஷனை அடிச்சிருக்காம். நீங்கள்லாம் வெர லை சூம்பிட்டு இருந்தேளோ?' என்று கிருஷ்ணவேணி, அவர்க ளைப் பாத்து கோபமாகக் கேட்டாள். 

'ஏய், வாயப் பொத்திட்டுப் போ. இவளுக்குத் தெரியும் அஞ்சாறு மயிறு. அவயம் போடுதா' என்றார் ஆறுமுகம். அவள் மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். பரம்சிவம் வெளியே வந்து, 'வா ரிய பிஞ்சிரும். போட்டி. கோட்டிக்காரச் செரிக்கி' என்றான் அவ ளைப் பார்த்து. அவன் அவளை இப்படிப் பேசியதில்லை இதற்கு முன்.

விஷயம் கேள்விபட்டு, அவனது அம்மா, 'எம்புள்ளய எந்த பரதேசி பய அடிச்சாம்? அவன சுமமவால விட்டுட்டு வந்தே பரம்சம்?. எவம்னு சொல்லு, நாம் போயி அவன் சங்கை அறுத்துட்டு வா ரேன்' என்று சத்தம் போட ஆரம்பித்தள். வெளியே வந்த ஒழக்கும் பழனியும், 'கொஞ்சம் சும்மா இருக்கியாத்தா. உள்ள பேசிட்டிருக் கோம்லா. போ, இங்க ஒரு மயிரும் நடக்கலை' என்றனர்.

'ஒரு மயிரும் நடக்காமயால செருப்ப கழத்தி அடிச்சானாம்?'

'போன்னா போ. சொன்னா கேளு பெறவு பேசுவோம்' என்றதும் சத்தத்தைக் குறைத்தாள். இருந்தாலும் ஊருக்குள் கொந்தளிப்பு மனநிலை இருந்தது. ஒரு சின்ன தெறிப்பில் சாதி கலவரம் வெடிக்கவும் ஏராளமாக வாய்ப்புகள் இருந்தன. பலர், பல முன் பகைகளை மனதில் வைத்து இதில் குளிர் காய நினைத்தார்கள். இதற்காக இங்கு பரமசிவத்தையும் அங்கு சிரிச்சானையும் தூண் டும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. 

பிள்ளையார் கோவில் எதிரில் இருக்கும் அரசமரத்திண்டு, பஞ்சா யத்துப் போர்டு வாசல், கருவேலப்பிறை வாசல், மேலப் பிள்ளை யார் கோயில் சின்ன வாய்க்கால் பாலத்து சுவர், அம்மன் கோயி ல் படித்துறை என வழக்கமாக மாலையில் அங்கங்கு கூடும் கோஷ்டியினர் இந்தச் சம்பவத்தின் பொருட்டு, இப்போதே கூடி இந்த செருப்படிப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். 

போலீசில் புகார், கம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸில் நடக்க இருந்த பஞ்சாயத்து என அனைத்தையும் நிராகரித்துவிட்டார் பரமசிவம்.

'இந்தப் பிரச்னையை இத்தோட விட்டுருங்க. இதப் பத்தி வேற எதுவும் பேசாண்டாம். நான் எப்படி பாத்துக்கிடணுமோ, அப்படிப் பாத்துக்கிடுதென்' என்றான்.

'ஏய் ஒன்னய அடிச்சிருக்காம். சும்மா விட்ருவோங்கெ. பின்ன செரிக்குள் ளேலுக்கு குளிருலா விட்டுப் போவும். ரெண்டு பேரு கைய, கால எடுத்தா லாடா, நம்ம மேல பயம் வரும்' என்று சிலர் தூபம் போட்டுக் கொண்டி ருந்தனர். இதற்கு கிருஷ்ணவேணியும் ஆதரவுத் தெரிவித்துக் கொண்டிருந் தாள்.

ஆனால் பரமசிவம் மறுத்துவிட்டார். அண்ணன்களிடம், 'இது எம் பிரச்னை, நீங்க ஒங்க வேலைய பார்த்துட்டு போங்கெ. நான் பாத் துக்கிடுதென்' என்று ஒரே வார்த்தையாகச் சொன்னான். 

'அப்படிலாம் சும்மா விட்டுர முடியாதுல. கண்ட நாயிவோ அடிச்சுட்டுப் போவதுக்காக, நீ என்ன ரோட்டுல நிக்க மாடா, ஆடா ல? அவனுவ சொட்டைய மொறிக்கனா இல்லையான்னு மட்டும் பாரு' என்று பெரியண்ணன் மீசை முறுக்கினார். 

'நீ பேசாம போன்னா போ' என்றான் அவரிடம்.

ஊரே ஒரு வித பரபரப்பில் இருந்தது. அங்கே சிரிச்சானை ஊரை விட்டு வெளியூருக்கு அனுப்பும் முயற்சி நடந்துகொண்டிருந்தது. அவன் மறுத்தாலும் அவனது அண்ணன் தம்பிகள், ரயிலில் தென் காசிக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமாக இருந்தார்கள். அவனது சொந்த பந்தங்கள் அவன் வீட்டின் முன் கூடியிருந்தார்கள். அவனது பொண்டாட்டியின் பத்தினி தன்மை குறித்து, அங்கு மெதுவாக கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள் பெண்கள். அதில் அப்ப டிலா, இப்படிலா என சில பல புதுக்கதைகளும் கலந்திருந் தன. 

ஊரில் இவ்வளவு களேபரம் நடந்துகொண்டிருக்க, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தாள் சிரிச்சா னின் பொண்டாட்டி. 

(தொடர்கிறேன்)