Showing posts with label சாமி. Show all posts
Showing posts with label சாமி. Show all posts

Wednesday, October 27, 2010

சாமிகள் பற்றிய குறிப்புகள்

0 ஆக்ரோஷமாக ஆடும்

ஆயுதங்கள் கொண்ட குலசாமிகளின்
கண்களில் தெரிவது
அருளா? கொலைவெறியா?
.....................

0 கொடையில்லா நாளில்
கோயில் மரத்தில்
இலை தின்னும் ஆடுக்கு தெரியாது
நேர்ந்துவிட்டதும்
நேர்த்திக் கடனானதும்

........................
0 வேப்ப மரத்துக்கு
ஆத்தா வந்ததிலிருந்து
பால் குடிக்க பழகிவிட்டது வேர்
..........................

0 சாமி சொன்னதாக
குறி சொல்கிறாள் அம்மா
சாமிக்கு யார் சொல்லுவார்?
.......................

0 ஏழு கெடா வெட்டி
சாமிக்கு படைக்கப்படும் சோறில்
களவாடப்படுவது
கறிதுண்டுகள்.

...................

0 வேட்டைக்கு போகும் சாமியின்
எதிரில் சென்றால் அடித்துவிடும்
மனிதனை அடிப்பது
சாமியாகுமா?
.............

0 பெரியசாமிக்கு யாராடுவது
என்கிற சண்டையில்
நடக்கிறது வெட்டு குத்து.
வேடிக்கை பார்க்கிறது
காக்கும் சாமி.


நன்றி: தினகரன் தீபாவளி மலர்

Monday, June 15, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி-3

மந்தரக்கோன் கைய புடிச்சதும் திமிருனாரு. 'எம் மேலயால கையை வக்கியோ'ன்னு வேட்டிய மடிச்சு கெட்டுனாரு. அதுக்குள்ள நாலஞ்சு இளவட்ட பயலு்வோ வந்து தர தரன்னு இழுத்துட்டு வந்துடானுவோ. அந்தானி, ஊர்ல முடிவு பண்ணுனாவோ. இனும பெரியசாமிக்கு இந்த திருட்டு பய ஆடக்கூடாதுன்னு. இந்த வெவாரத்தை வச்சு, சங்க பணத்து கணக்கு வழக்கையெல்லாம் மோவப்பயகிட்ட கொடுத்தாவோ. 'அடுத்த கொடை வாரதுக்குள்ள எவன் பெரியசாமிக்கு ஆடுதானோ அவன் ரெத்தம் கக்கி சாவறதை பாக்கத்தான் போறியோ"ன்னு சாபத்தை கொடுத்துட்டு போனாரு மந்தரக்கோன்.

இப்படியொரு தப்பை பண்ணிட்டோமே; எவனும் மதிக்கமாட்டானுவோளேங்க கவலையெல்லாம் மந்தரக்கோனுக்கு இல்லை. இன்னும் அவனை பெரியசாமிகொண்டாடின்னு சொல்லிக்கிட்டிருக்காவோ.அவனும் அதே கெத்தோட மானங்கெட்ட பொழப்பு நடத்திக்கிட்டிருதான் இருக்காம்.

அடுத்த கொடைக்கு கால் நாட்டுன ராத்திரி, வீட்டுக்குள்ள இருந்து மந்தரக்கோனுக்கு சாமி வந்துட்டு, 'ஓய் ஓய்"னு சத்தம் போடுதாரு. அவரு வீட்டு முன்னால சாமியாடிட்டு அவரு போடுத சத்தம் கீழத் தெரு வரைக்கும் கேட்டுது.
'என்னையவாடா எதுக்குயோ. பாருங்க என்ன பண்ணுதன்னு" -சத்தமா இதை சொன்னதும் அடுத்தாபல புதுசா பெரியசாமிக்கு ஆடப்போற செல்லையாவுக்கு பயம் வந்துச்சு.
செத்த நேரம் அப்படி இப்படின்னு சத்தம் போட்டுட்டு போயிட்டாரு மந்தரக்கோன்.

சூச்சமடையாரு தாத்தாகிட்ட போனான் செல்லையா., இவன் இப்படி சொல்லிட்டானேன்னு.
'ஏல இதுக்கால பயப்படுத;சாமிங்கது எல்லாரையும் காப்பத்ததான். அழிக்க இல்லைல. நீ போய் வேலைய பாரு. நானிருக்கேன்"ன்னாரு.
அந்தானி வந்துட்டான் செல்லையா.

கொடை வந்துட்டு. திங்ககிழமை சாமி ஆத்துல போயி தண்ணி எடுத்துட்டு வருவாரு. வந்ததும் ராத்திரிக்கு சாமக்கொடை ஆரம்பிக்கும். புது பெரிய சாமி கொண்டாடி ஆத்துல போயி தண்ணியெடுத்துட்டு, பெரிய சாமி கொண்டாடிக்குன்னு, சாமி பூடத்துக்கு கீழ இருக்குத பலகையில உக்காந்துட்டாரு. ராத்திரிக்கு கொட்டு அடிச்சதும் கோயில்ல செல்லையா ஆடுதாரு.... வீட்டுல மந்தரக்கோன் சந்தம் போட்டுட்டு ஆடிக்கிட்டிருக்காரு. ஆனா, கோயிலு பக்கமே அவரு வரலை.

கொடையெல்லாம் முடிஞ்சு போச்சு. அவரு சொன்ன மாதிரி எதுவும் நடக்கலை. ஆனாலும் இன்னைக்கும் தாந்தான் பெரிய சாமி கொண்டாடிங்கத மாதிரி மீசை திருவிகிட்டு தெனாவட்டா அலைஞ்சுகிட்டிருக்கான் மந்தரக்கோன். எந்த கேவலமும் அவனை ஒண்ணும் செய்யலை.

முற்றும்

Monday, June 1, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி-2

மந்திரக்கோனுக்கு, இவன் ஏன் வர்றாம்னு ஒண்ணும் பிடிபடல. மொகத்தை வேறபக்கம் திருப்பிட்டு, யோசிக்குத மாதிரி உக்காந்திருந்தாரு.
என்னைக்கும் வராத சம்முவக்கோனை,'வாரும்யா, இங்ஙன உக்காரும்'னு சொன்னாரு சின்ன சுப்பையா. துண்டை உதறிட்டு உக்காந்தாரு.

வெவாரம் ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும்னு பாத்துட்டு இருந்த சம்முவக்கோனுக்கு சப்புனு போச்சு. சும்மா அவங்கவங்க அங்கங்க உக்காந்து பேசிக்கிட்டிருக்காவோ. எதுக்கு இப்டி இருக்காவோன்னு அவருக்கு பிடிபடல.

அந்தானி, சின்ன சுப்பையாவை கூப்டு, 'இப்ப யாரு வரணும்னு காத்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதானே"ன்னு சொன்னாரு. இவரு பேசிக்கிட்டிருக்கதை, மந்திரக்கோன் கோஸ்கண்ணு போட்டு பாத்துட்டு, சண்முவக்கோன் ஏதோ வில்லங்கத்தோட தான் வந்திருக்கான்னு நெனச்சிக்கிட்டாரு.

சின்ன சுப்பையா, சத்தம் போட்டு, ஏம் இப்டி உக்காந்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதான'ன்னு சொன்னாரு.
'இரும்யா. வெவாரத்துக்கு வர வேண்டிய மோவப்பயல காணுமே"ன்னு சத்தம் வந்ததும், எதுத்தாப்ல சம்முவக்கோன் மவன் கண்ணனும், மோகப்பயலும் வந்தாவோ.

மந்திரக்கோனுக்கு திக்குனு ஆயிப்போச்சு. ''சரிப்பா. வந்துட்டாம். ஏல மோவா, நீ பெரியசாமி கொண்டாடிய, எச்சிக்கையால கன்னத்துல அடிச்சிருக்கே. இது உம்மையா இல்லையா" ன்னு மந்தரக்கோனுக்கு சிங்கி அடிக்கத, கசமுத்து கேட்டாம்.
மோகப்பய சம்முவக்கோனை பாத்தாம்.

'மொதல்ல எனக்கொரு பஞ்சாயத்து இருக்கு. அதை பேசிட்டு, பெறவு இதை பேசுவோம்"னு ஆரம்பிச்சாரு சம்முவக்கோன்.

கூட்டம் புரா, இதென்ன கதைன்னு பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. மந்தரக்கோன் மீசையை தடவிட்டு தரையை பாத்துக்கிட்டு இருந்தாரு.
''வெஷயம் என்னன்னு சொல்லு சம்முவம். பாப்போம்" ன்னாரு சின்ன சுப்பையா.

'இங்க, பெரிய மனுஷன்னு இருக்குத சாமிகொண்டாடி இதுவரைக்கு கோயிலுக்கு வரியே கொடுக்காம ஏமாத்திருக்காரு. நாமலாம் என்ன கேணப்பயலுவோலா"ன்னு ஆரம்பிச்சாரு.

'யோவ் அஞ்சாரு தெரியுமோ உமக்கு. யாரை பாத்து என்ன சொல்லுத. நாங்கென்ன கஞ்சிக்கு வழியில்லாமயா அலையுதோம்"ன்னாம் மந்தரக்கோன் மவன். அவனுக்கு கூட மாட அவனுவ சொக்காரனுவோ வந்துட்டானுவோ.

மோகப்பய, அவரு மவனை பாத்து, ';நீ ஏம்ல குதிக்க, உங்கப்பந்தானல இதை சொன்னாரு"னு சொன்னதும் கூட்டத்துல சல சலன்னு பேச்சு.
இதுக்கு வெவாரத்தை பேசிட்டு மத்ததை பேசுவோம்னாவோ.

ஒரே காச்சு மூச்சுன்னு சத்தம். மந்தரக்கோன் போதையில சொன்னதை மோவனும், சம்முவக்கோன் மவனும் கூட்டதுல சொன்னதும் ஆதாரமா போச்சு. அங்ஙனயே புது தலைவரை தேர்ந்தெடுக்கணும்னு, மந்தரக்கோனை ஊரை விட்டு ஒதுக்கணும்னு பேச்சி. செல பேரு, ஊரைவிட்டு ஒதுக்காண்டாம், அம்மன் கோயிலுக்கு நாலுலிட்டரு எண்ணையையும், அஞ்சாயிரம் ரூபா தண்டம் (அபராதம்) கட்டச்சொல்லுங்கன்னாவோ.

இவ்வளவு நடக்கும்போது, திடீர்னு துண்டை உதறிட்டு, 'என்ன மயி்ரைல பேசுதியோ; எம்மேலயே குத்தம் சொல்ல வந்தேட்டேளா"ன்னுட்டு எழுந்திரிச்சு போவ போனாரு மந்தரக்கோன்.

யாரும் விடலை. ரொம்ப நாளா இருந்த கொஞ்ச நஞ்ச கோவத்தையும் இப்ப கொட்டி, 'உன்னையபத்திதான் பேசிட்டிருக்கு. எங்க அவசரமா வெளிய போற. உள்ள உக்காரு"ன்னுட்டாவோ. அவருக்கு அவமானமா போச்சு. மூச்சு, மேலயும் கிழயும் ஏறி ஏறி இறங்குது. சங்காபீசை சுத்தி நிக்குத ஆளுவோலாம் சுவத்துல எட்டி நின்னும, இங்க வேடிக்கை பாக்காவோ. அதுல நாலஞ்சு பொம்பளைலுவோலும் உண்டு. கோவம் கோவமாவும் வருது. இந்த நேரத்துல என்ன செய்ய முடியும்?.

மோவப்பய சொன்னதை இந்தாளு மறுத்துலாம் பேசல. அப்டின்னா ஒத்துக்கிடுதாருய்யா, அடுத்த முடிவை எடுங்கங்காவோ. ஆளாளுக்கு பேசி, பேசி கடைசில, வீட்டுல தூங்கிட்டிருந்த சூச்சமடையன் தாத்தாவை கூட்டிட்டு வந்தாவோ. இந்த மாதிரி தலைவரு, பெரியசாமிகொண்டாடிக்கெல்லாம் வெவாரம் சொல்லணும்னா பெரிய மனுஷங்க வேணும்.

உடம்பு சரியில்லைன்னு படுத்துக்கிடந்த சூச்சமடைய தாத்தா இருமிகிட்டே வந்தாரு. ஊருல பாதி சொத்து அவருக்குங்கதால அவரு பேச்சுக்கு கொஞ்சம் மரியாதையும் உண்டு. இவருக்குன்னு அவரு வீட்டுல இருந்து கயித்து கட்டுலையும் தூக்கிட்டு வந்தாவோ. அதுல வந்து உக்காந்தாரு. 'அதாவது வெவாரம் என்னனனா'ன்னு சம்முவக்கோன் ஆரம்பிச்சாரு.

எல்லாம் தெரியுங்கத மாதிரி கையை காண்பிச்சாரு தாத்தா. செத்த நேரம் அமைதியா இருந்தாரு. அவரு பேரன் சுருட்டை கொண்டு வந்து கொடுத்ததும் பத்த வச்சுட்டு, புகைய இழுத்தாரு.

'இங்க பாருங்க, கோயிலுக்கு வரி கொடுக்காம ஏமாத்திருக்கது, நம்மள மட்டுமில்லை, சாமியையும்தான் ஏமாத்திருக்கான். அதனால இனும அவன் பெரியசாமிக்கு ஆட கூடாது. இதுதான் நான் சொல்லுதது"ன்னாரு பாருங்க, கூட்டத்துல குசு குசுன்னு பேசுதானுவோ. ஓரமா செவத்துல சாஞ்சிட்டிருந்த மந்தரக்கோன், உர்ருனு பாத்துக்கிட்டிருக்கான். அவங்கூட நாலஞ்சு பேரு உக்காந்துட்டுருக்கான்.

சம்முவக்கோன், 'இதுதான் சரி;அவன் என்ன சொல்லுதான்னு கேளுங்க. அடுத்த பெரிய சாமியை தேர்தெடுப்போம்"ன்னாரு பாருங்க.

மந்தரக்கோன் வேகமா எந்திரிச்சாரு, 'நீங்க ஆட்டுததுக்கெல்லாம் நானும் என் சொக்காரப் பயலுவோலும் ஆடமாட்டோம். என்ன வேணாலும் பண்ணிக்கிங்க. அடுத்த கொடைக்கு என்னைய தவிர எந்த சாமி ஆடிடுதாம்னு பாக்கேன்"ன்னு சொல்லிட்டு போனாரு.
சூச்சமடைய தாத்தாவுக்கு சுள்ளுனு கோவம் வந்துட்டு.
'ஏல அவனை புடிச்சு இழுங்களே"ன்னாரு.

நாளைக்கு சொல்றேன்.

Sunday, March 29, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி-1

சைக்கிளு மோகனுக்கு மோந்து பாத்தாலே போதை ஏறிரும். இன்னைக்கு வேற கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டான். பயலுக்கு நடக்க முடியலை. ஆத்து மணல்ல அங்கயும் இங்கயுமா அலைஞ்சுகிட்டு வந்தவன், பெரிய தாழைகிட்ட வந்ததும் பொத்துன்னு விழுந்துட்டான். இந்த தாழைக்கு பக்கத்துல வரப்பு மேல ஏறி கல்யாண வீட்டு போவணும். அதுக்குள்ள இந்தப் பய இப்படி விழுந்துதொலைச்சுட்டான். கூட வந்தவனுவோல்ல கொஞ்சம் பேரு, முன்னாலயே போயிட்டானுவோ.

மந்திரக்கோன் நெலமையும் கொஞ்சம் சரியில்லை. வரப்புக்கிட்ட போனதும் குபுக்குனு வாயால எடுத்துட்டாரு. குத்தவச்சுகிட்டு 'ஆங்.. ஆங்" தரையை பார்த்து துப்பிக்கிட்டிருந்தாரு. வெயிலு வேற சுள்ளுனு அடிக்கு. ஆத்துல தண்ணி, ஓடை மாதிரி ஓடிட்டு இருக்கு. என்னதான் வெயிலடிச்சாலும் லேசான குளிரு இருந்துகிட்டுதானிருக்கு.

இவங்களை கூட்டிட்டு வந்த உள்ளூர்க்கார பயலுக்கு வேசடையா போச்சு. இப்படி விழுந்துட்டானுவளேன்னுதான். மோகனை கைய புடிச்சு இழுத்து இழுத்து பாத்தான். அங்க திரும்புதான் , இங்க திரும்புதான ஒழிய எழ்ந்திருக்க வழிய காணோம். அந்தானி, துண்டை தண்ணியில நனைச்சுக் கொண்டு வந்து, அவன் மூஞ்சில புழிஞ்சான். மோகன் கண்ணை தொறந்துட்டு, 'எனக்கு என்னாச்சு?'ன்னு எழுந்திரிச்சு முட்டியை கெட்டிக்கிட்டு உக்கார்ந்தாம். வேட்டி ஒரு பக்கம் கெடந்தது. சட்டை பையில பாத்தான். வச்சிருந்த ரூவா அப்டியே இருந்தது.

'ஏண்ணே... எந்திரு... சாப்டுத நேரமாச்சு"'

அவன் கையை பிடிச்சு இழுத்தான். கூட்டிட்டு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப்போச்சு. வரப்பு கிட்ட வந்தா மந்திரக்கோன் மல்லாந்துக்கிடக்காரு... வேட்டி சட்டையெல்லாம சவதி கரை.

பேச்சு மட்டு்ம் அன்னா இன்னான்னு பேசுதானுவோ. ஒரு பாட்டிலுக்கு தாங்கமாட்டக்கானுவளேன்னு நெனச்ச உள்ளூக்காரன், அண்ணாச்சோ.. அண்ணாச்சோ...ன்னு உசுப்பி உசுப்பி பாத்தான். பொரண்டு பொரண்டு படுத்தவரை அதே போல ஈரத்துண்டை எடுத்து மூஞ்சியில பிழிஞ்சு..., கண்ணை தொறந்து பாத்தாரு... எப்படி இங்ஙன விழுந்தேன்னு மொணங்கிட்டு நடக்க போனாரு, காலு ஆடுது. பின்னால வந்த மோகனை புடிச்சுக்கிட்டாரு... அவன் ஒருபக்கம் லம்புதாம்... இவரு ஒருபக்கம் லம்புதாரு... அப்டியே நடந்து வந்துட்டிருக்காவோ. இவ்வோ தண்ணியடிச்ச லெச்சனம், கல்யாண வீடு பூரா தெரிஞ்சு, மோகன் பொண்டாட்டி வந்து ஏசுனா.

'ஏய் ச்சீ கேவலப்படுத்தாத.. போட்டி"ன்னான் அவன்.

மந்திரக்கோன் பொண்டாட்டி, இந்த மாதிரி நேரத்துல கிட்ட வரமாட்டா. வந்தா எட்டிக்கிட்டு மிதிச்சிருவாரு. இதே போல பலமுறை அனுபவ பட்டுருக்கதால, அந்த வீட்டுல வேற சட்டையை வாங்கிட்டு வந்து, 'ஏல தம்பி, அவரு சட்டையை மாத்தி விடுய்யா"ன்னு கொடுத்தா.

அந்தாப்ல பந்தியில எல்லாரும் மத்தியானம் சாப்டுட்டு இருந்தாவோ. ஏழு வவை கூட்டு பொறியலு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோருன்னு வரிசையா வச்சிருந்தாவோ. சைக்கிளு மோகன், பேச்சு வாக்குல சொன்னான், 'என்னதாம் சொல்லும்யா, தென்காசியில நடந்த எங்க அக்கா மவன் கல்யாணத்துக்கு வச்ச சாப்பாடு மாதிரி வேற எங்கயும் நான் இன்னைக்கு வர சாப்டதில்லை... என்ன சொல்லிதீரு"ன்னான்.

மந்திரக்கோன் இதை சாதாரணமா விட்டிருக்கலாம். போதை வேற உள்ள போயிருக்கா.

'எங்க வந்து சாப்டுட்டு என்னல சொல்லுத... இந்த சாப்பாடை கேவலமாவால பேசுத" ன்னுட்டு டமார்னு அவன் கன்னத்துல அடிச்சுட்டாரு. கூட சாப்ட்டுட்டு இருந்தவளோலாம் இவரை பிடிக்க, மோகனுக்கு சுள்ளுனு கோவம். எலயில இருந்து கைய எடுத்து எச்சிக் கையோட மொகத்துல வேகமா விட்டாம் பாருங்க... கிர்ருனு ஆயிப்போச்சு மந்தரக்கோனுக்கு. கல்யாண வீடு கலவர வீடா போச்சு. மோகனுக்கு கொஞ்சம் பேரு, மந்தரக்கோனுக்கு கொஞ்சபேருன்னு சத்தம் போட்டுட்டு இருக்காவோ.

''பெரியசாமிகொண்டாடிய எப்படி அந்தப் பய அடிக்கலாம்"

''சாமி கொண்டாடியா இருந்தா அவர் யாரையும் கை நீட்டலாமோ"

இப்படியே பேச்சு, போயி போயி ஊர்ல வெவராம் வச்சாச்சு. மந்தரக்கோனுக்கு இது மானப் பிரச்னையா போச்சு. இதுக்கு மட்டும் தண்டனை கொடுக்கலன்னா ஊருல ஒரு பய மதிக்கமாட்டாம்னு நெனச்சாரு. இதுக்காக சொக்கார பயலுவோல, தனக்கு சாதகமா என்ன பண்ணணுமோ அதை பண்ணி ரெடி பண்ணிவச்சிட்டாரு... அந்தானி, பஞ்சாயத்து கதவு தெறக்குத சத்தம் கேட்டது. மந்திரக்கோன் திரும்பி பாத்தாரு...கொஞ்ச காலமா பஞ்சாயத்து பக்கம் வாராத சம்முவக்கோன் மீசையை தடவிகிட்டு உள்ள வந்துகிட்டிருந்தாரு.

நாளைக்கு...

Tuesday, March 24, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி

பூதத்தாரு கோயில்ல மந்திரக்கோன்தான் பெரியசாமி கொண்டாடி. அவருக்கு முன்னால பலவேசக்கோன் ஆடிக்கிட்டிருந்தாரு. 25 வருஷத்துக்கு முன்னால மாட்டு வண்டி ஆத்துல உருண்டு தண்ணில முங்கி அவரு செத்த பெறவு, மந்திரக்கோனை பெரியசாமியா ஆக்குனாவோ. அவரும் ஆளு கம்பீரமா இருப்பாருல்லா. மீசையை திருக்கிட்டு, 'ஏல'ன்னாருன்னா எல்லா பயலுவோலும் பயந்துருவானுவோ. அதட்டலா இருக்கும். பெரியசாமிகொண்டாடி வேறயா. ஊருல அவருக்கு முக்கியத்துவம் ஜாஸ்தியாபோச்சு. வயக்காட்டு பிரச்னை, தண்ணி பிரச்னைன்னா அவரைதான் கூட்டியாந்து வெவாரம் பேசுவாவோ. இவரும் நியாயம், தர்மம் பாத்துல்லாம் சொல்லமாட்டாரு. எவன் அவருக்கு வேண்டியவன்னு பாத்து அவனுக்கு ஏத்தாப்ல வெவாரத்தை முடிப்பாரு. அவருக்கு சிங்கி அடிக்க, கூட மாட அஞ்சாரு பேரு இருப்பானுவோ. பெறவு கேக்கணுமா? அவரு சொல்லுததுதான் சட்டம்.

கோயில்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொட. மூணுநாளு கொட நடக்கும். கொட செலவுக்கு தல கட்டுக்கு இவ்வளவுன்னு வரி வைப்பாவோ. கொஞ்சம் ஏழைபாழை கொடுக்கமுடியலன்னா கூட விடமாட்டாவோ. கடனை வாங்கியாவது குடுக்கணும். சில பேருக்கு அது மான பிரச்னை. வரி கொடுக்காத பயன்னு கேவலமா பேசிருவாவோன்னுட்டு, பொண்டாட்டி தாலியை கூட அடவு வச்சு கொடுத்துருவானுவோ. கோயிலு செலவயெல்லாம் பெரியசாமிகொண்டாடி மவந்தான் பாத்துக்கிடுததால, அவரு வரியை கொடுக்க மாட்டாரு. ஆனா, கொடுத்த மாதிரி கணக்கை காண்பிச்சி, செலவுல அதுஇதுன்னு எழுதிக்கிடுவானுவோ. இது பலவருஷ கோயில் கொடையில நடந்திருக்கு. சனி வாயில இருக்குன்னு சொன்ன மாதிரி, ஒரு நாளு தன்னோட வாயாலயே மாட்டிக்கிட்டாரு மந்திரக்கோன்.

பாப்பாக்குடி பக்கத்துல இருக்குத நந்தந்தட்டையில, அவரு தங்கச்சி மவ கல்யாணம். ஊர்க்காரங்க எல்லாரும் போயிருந்தாவோ. இந்த கல்யாணம் காய்ச்சின்னா தண்ணி இல்லாமயா. தாலிகட்டி முடிஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு, மந்தரக்கோன் மச்சான், 'யோவ், நம்ம மருமவ பய இப்பம் வருவாம். கூட வந்த ஆளுவோளை கூட்டிட்டு ஆத்து வரைக்கும் போயிட்டு வந்திரும்'னு சொன்னாரு. ஆத்துக்குள்ள ஒரு தாழக்குப் பின்னால வடிப்பு (சாராயம்).

மந்திரக்கோன், ஊர்க்காரன்ல குடிக்குதவனையெல்லாம் கூட்டிட்டு போயிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணப்பயயலும் கல்யாணத்துக்கு வந்திருக்காம். இந்தப்பய குடிக்க மாட்டான். மந்திரக்கோனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் ஆவாது. சொக்காரனுவோன்னாலும் சொத்து தகராறு. வந்த ப்யல கூப்டாம இருக்க முடியுமா? அந்தானி, மந்திரக்கோனுக்கு ஒத்து ஊதுத பயலை கூப்டு, 'ஏல அந்தப் பயலை கூப்டுக்கோ. இல்லன்னா, அதை வேற கொறயா சொல்லுவானுவோ"ன்னாரு. சரின்னு அவனும் கூப்டான். வேட்டிய மடிச்சு கெட்டிட்டு போயிட்டாம். மொத்தம் 12 பேரு.

போய் ஆத்து மணல்ல, தென்னம்பிள்ளை நெழல்ல உக்காந்தாச்சு. ஆளாளுக்கு ஒருபாட்டுல சாராயமுப். கொஞ்சம் ஊறுகாயும். வெறுவாகெட்ட பயலுவோ கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணுங்கறதெல்லாம் கெடயாது. அந்தானி, பாட்டிலை கையில புடிச்சு, கண்ணை பொத்திட்டு சடசடன்னு உள்ள இறக்கிட்டானுவோ. அந்தானி, செத்த நேரத்துல உச்சிக்கு ஜிவ்வுனு தூக்குச்சி பாருங்க, எல்லா பயலுவோலுக்கும் வாய் உளறலு. சைக்கிளு கடை மோகனனுக்கு தண்ணி ஒவரா ஆயிட்டுன்னா, பய அழுது தொலைச்சுருவாம். அந்தானி, கவலையை எல்லாம் பொலம்பவும் ஆரம்பிச்சிருவாம்.

ஊருகாயை பூராம் நக்கிட்டு, வேட்டியில மடிச்சி வந்திருந்த கதலி பழத்தை எடுத்து தின்னான் மோகன். 'ஏலே.. இதை எப்பம்ல வாங்குன. அரவமில்லாம எடுக்க"ன்னாவோ.
'ஆமா, குடிக்கன்னு போறோம். திங்கதுக்கு எதும்னு வேண்டாமான்னுதான் வாங்குனேன்"ன்னுட்டு புலம்ப ஆரம்பிச்சிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணன், குடிக்கலைன்னாலும் ஊறுகாயை நக்கிட்டு, இவங்களை வேடிக்கைப்பாத்துட்டு இருந்தாம்.

மோகன், 'ஏண்ணே இன்னும் கோயிலு வரிக்கு வாங்குன கடனை அடைக்கலண்ணே. தெனமும் வீட்டுலவேற சண்டை"ன்னு அழ ஆரம்பிச்சாம் பாருங்க... மந்திரக்கோன் மத்த பயலுவோளை பாத்தான். எல்லாம் தலையை தொங்கப்போட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருந்துச்சு. அந்தானி, மோகன் காதுகிட்ட வந்து சொன்னாரு மந்திரக்கோன் .'ஏ ஆக்கங் கெட்ட பயல. இதை மொதல்லயே சொல்லிருந்தனா... வரி கட்டாமயா கட்டுனமாதிரி காட்டிருக்கலாம்ல"ன்னான்.
'எப்டி மாமா"
அந்தானி வெவரத்தை பூரா மந்திரக்கோன் சொன்னாம் பாருங்க, கண்ணப்பயலுக்கு திக்குனு ஆயிபோச்சு. இவனுவோ தடுமாறி வாரதுக்கு முன்னால, நடந்து போனான் கண்ணன்.

நாளைக்கு சொல்லுதேன்