Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Sunday, August 8, 2010

செலாமத் ததாங்கும் தெரிமா காஷிஹ்மும்

எந்திரன் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியா சென்றிருந்தேன். பாங்கியில் உள்ள ஹோட்டல் ஈக்கிடோரியலில் அறை. விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வந்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஹோட்டல் அறையில் சிகரெட்டுகளாக கழிந்துகொண்டிருந்தது முதல் நாள். மாலையில் டீக்குடித்துவிட்டு எங்காவது வெளியில் கிளம்பலாம் என்று நினைத்தால், 'பக்கத்துல எதுவும் இல்லை. ஒரு டாக்ஸியை பிடிச்சு, 20 மினிட்ஸ் போனா... அங்க ஒரு ஷாப்பிங் மால் இருக்கு" என்றார் ரிஷப்சனிஸ்ட்.


ஹோட்டலை சுற்றி கோல்ஃப் கிரவுண்ட். வெளியில் செல்லும் ஆசையை விட்டுவிட்டு கிரவுண்டை சுற்றி வந்தேன். அருகில் நீச்சல் குளம். 'நீச்சலடிச்சு நாளேச்சே' என்று குளிக்கும் மூடுக்கு வந்தேன். நான்கைந்து வெள்ளைக்கார பெண்மணிகள் சேரில் சாய்ந்துகொண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். டவல் ஒன்றை வாங்கிக்கொண்டு நானும் ஒரு சேரை தேர்ந்தெடுத்து வைத்து விட்டு, பொத்தென்று குதித்தேன் தண்ணீருக்குள். தண்ணீர் வெள்ளைக்கார பெண்மணிகளின் மீது தெறிக்க, குனிந்து என் மூஞ்சுக்கு நேராக, கூட்டாக விட்டார்கள் லுக். ஸாரி என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஸ்மைலினேன்.

தொடையில் தெறித்த தண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தாள் ஒருத்தி. இன்னும் அதிகம் அங்கு குளிக்க எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. வேறு யாரும் நீச்சல் குளத்தில் இல்லாததது மட்டுமல்ல, அவர்களுக்கு ஏதோ தீங்கு செய்துவிட்ட மாதிரி குற்ற உணர்வு. எழுந்து துவட்டிவிட்டு அறை.

ரிகர்சல் முடிந்து வந்திருந்தார்கள் கலா மாஸ்டரின் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். வரும்போதே ஏர்போர்ட்டில் வாங்கி வந்திருந்த ரெமி மார்டின் (ஒரு பாஸ்போர்டுக்கு ஒரு பாட்டில்தான் தருவாங்களாம்) என்னை குடித்துத்தொலையேன் என்றது. பக்கத்து அறையில் இருந்த ஒளிப்பதிவாள நண்பர் கம்பெனி கொடுக்க, ரெமி அதிகாலை வரை (மலேசிய நேரம் 3.30 வரை) தாக்குப் பிடித்தது. ஹோட்டலில் இருந்து புத்ரஜெயா நகரை இரவில் பார்க்க இதமாக இருந்தது. இங்கு, இன்னென்ன இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட நகரம் என்றார்கள்.

இண்டர்நேஷனல் கன்வன்ஷன் செண்ட்ரும் அதன் அருகில் இருக்கிற ஏரி (?)யும் கொள்ளை அழகு.

இரவு போதையில் கழிய, கிறக்கத்தில் உதித்தது காலை. இன்னைக்கு எங்கயாவது போயே ஆகணும் என்று மலேசிய நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். வந்தார். அவரது காரில் மறுநாள் கோலாலம்பூரை சுற்ற கிளம்பினோம். கடந்த வருடம் வந்த இடம்தான் என்பதால் எதை பார்க்க, எங்க போக என்பது நண்பரின் விருப்பதில் விடப்பட்டது.

சாலைகளில் தொடங்கி சாலைகளில் முடியும் பயணங்கள் அற்புதமானது. அதிலும் காரும் காரோட்டும் நண்பரும் அமைந்துவிட்டால் பயணங்கள், சுகங்களாகும் சாத்தியமிருக்கிறது.

மீண்டும் பத்துகேவ், ட்வின் டவர், சாக்லேட் பேக்டரி, புத்தர் கோவில் என சுற்றிவிட்டு ரிட்டர்ன் ஆனோம். கெண்டிங் போகலாம் என்றால் நேரமில்லை. நள்ளிரவு பார்ட்டிக்கு தேடுவார்களே.

இரவு சாப்பாடு பஃபே சிஸ்டம். வந்திருக்கிற எந்திரன் டீமுக்காக, வேலை பார்க்கும் தமிழர்களை மொத்தமாக இங்கே இறக்கியிருந்தார்கள். 'அண்ணே... நீங்க எந்த ஊரு'வில் ஆரம்பித்து ஏஜெண்ட் ஏமாற்றியது வரை கதை கதையாக வந்தது. பிரபலங்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்கள். 'ரஜினி சார் எந்த ஹோட்டல்' என்று அவரையும் தேடிக்கொண்டிருந்தார்கள்.

வைத்திருந்த சாப்பாடு ஐட்டங்களில் நம்ம ஊர் டேஸ்ட் எதுவுமில்லை. நான்வெஜ் வகையறாக்களை அரைகுறையாக வேக வைத்திருந்தார்கள். நானும் நண்பரும் பழவகைகளை மொத்தமாக அள்ளி, பசி போக்கிக்கொண்டோம். ஆனால், நம்ம ஊர் நடிகர்கள், நடிகைகள், ரொம்ப டேஸ்டாக இருப்பது மாதிரி அள்ளி அள்ளி முழுங்கியது எப்படி என்றுதான் தெரியவில்லை.

மறுநாள் விழா. காலையிலேயே செண்டருக்கு வந்துவிட்டோம். படிப்படியாக ஏறி உள்ளே சென்றால் ஆடிட்டோரியம் பிரமாண்டமாக இருந்தது. அதற்கடுத்து நடந்த விழா நிகழ்ச்சிகள்தான் உங்களுக்கு தெரியுமே?

மலேசியாவில், இம்முறை நான் கற்றுக்கொண்ட இரண்டு மலாய் வார்த்தை :

செலாமத் ததாங், தெரிமா காஷிஹ்.