Tuesday, October 8, 2019

பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்

பெருங்கற்கள் சுமக்கும் குளம்

’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும் எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை.



இன்னும் வற்றாமல் இருக்கிறது என் குளம். அலையில் ஆடி ஆடி, தளும்பி நிற்கிற குளம் அது. நினைத்தால் முங்கலாம், நீந்தலாம். கரையில் அமர்ந்து ரசிக்கலாம். இல்லையெனில் குளிக்காமலும் நடக்கலாம். குளத்துக்குக் கோபமில்லை. இந்தக் குளத்தில் பெருங்கல் எறிந்தவர்கள் பலர். அந்தக் கற்கள் நிரம்பி நிரம்பி மேலே எவ்வி நிற்கிறது நீர். அந்த நீரில் இருந்துதான் என் வயல்கள் விளைகின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகை பயிர். கெடைகாடும் ஆங்காரமும் மேப்படியான் புழங்கும் சாலையும் குச்சூட்டானும் ஆடுமாடு மற்றும் மனிதர்களும் பூடமும் அவயமும் இங்கிருந்துதான் விளைந்தன. இப்போது, வேசடையாகி நிற்கிற பனஞ்சாடியும் இங்கிருந்து விளைந்தவர்தான்.

வாழ்க்கையின் பேரனுபவங்களைச் சுமந்து நிற்கிற ஆடு மேய்த்த பெரியவர், தான் உருண்டு புரண்ட மந்தையில் வீடொன்றைக் கட்டிக்கொண்டு, பட்டாவுக்கு அலைகிற ’வேசடை’தான் இந்நாவல். புறம்போக்கு நிலமான பொத்தை, வீடுகள் நிறைந்தத் தெருவான பிறகு அந்தப் பெரியவரின் அனுபவமும் அவஸ்தையும் கதையாகி இருக்கிறது. ஊரின் அனுபவங்களைச் சுமந்து வைத்துக்கொண்டு அலைகிற இதுபோன்ற பனஞ்சாடியை எந்த ஊரிலும் காண முடியும். இங்கு பனஞ்சாடியாக இருக்கிறவர், உங்கள் ஊரில் சுடலையாகவோ, சுப்பையாவாகவோ, பரமசிவமாகவோ ஏதாவது ஒரு பெயரில் தள்ளாடி நடந்தபடி இருக்கலாம்.


வேசடை என்கிற வார்த்தை எரிச்சல், தொல்லை என்கிற பொருள்பட, நெல்லை மாவட்டத்தில் புழங்கப்பட்டு வருகிறது. '’இந்த சனியனால ஒரே வேசடையா இருக்கு பாத்துக்கோ’’ என்றோ, ’’ரொம்ப வேசடையா இருக்குடே’’ என்றோ பேசப்பட்டு வருகிறது. பனஞ்சாடியின் எரிச்சலை, தொந்தரவை, அவஸ்தையை சொல்லும் நாவல் என்பதால் இதைத் தலைப்பாக வைத்திருக்கிறேன்.

இந்நாவலை வெளியிடும் நண்பர் தமிழ்வெளி கலாபனுக்கு நன்றி.

ஏக்நாத்
egnathr@gmail.com

புத்தகங்கள் பெற: 
வேசடை. விலை 100/-

தமிழ்வெளி
9094005600

No comments: