Tuesday, October 30, 2012

குளத்தில் முளைக்கும் மரங்கள்

ஒவ்வொரு ஊரிலும் அனாதையாக கிடக்கிறது எப்போதோ வாழ்ந்த தெப்பக்குளங்கள். அலைகளாக வந்து கரை மோதிய அந்த தெப்பக்குள தண்ணீரையும் வீடுவரை ஒலிக்கும் அதன் இரைச்சலையும் ஞாபகமாகப் பாதுகாக்கிறார்கள் ஊர் பெரியவர்கள். கரும்பச்சை நிறத் தண்ணீருடன் இருக்கும் எங்கள் ஊர் தெப்பக்குளத்துக்கும் அதன் ஆலமரத்துக்கும் ஆழமான கதைகள் உண்டு. இந்த கதைகளை வரலாறுகளில் இருந்து சொல்ல முற்படும் தாத்தாக்களின் வார்த்தையில், உண்மையின் அளவு தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தல விருட்ச கதைகள் மாதிரி தெப்பக்குளக் கரையில் வளர்ந்திருக்கிற ஆல மரத்துக்கும் கதைகள் இருக்கலாம்தான். ஒன்றில் ஆரம்பித்து ஏதோ ஒன்றில் முடிப்பதுதான் கதை என்றால் இங்கு எல்லாவற்றுக்கும் கதைகள் உண்டு.

தெப்பம் ஓடியதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இப்படியொரு குளம் எப்படி வந்திருக்கும் என்பதற்கான விவாதத்தை ஆலமரத்திண்டில் அமர்ந்து, கல்லூரி படிக்கும் அண்ணன்கள் ஆரம்பித்து வைத்ததில் இருந்து தெப்பக்குளப் பாசம் எனக்கும் பிடித்துக்கொண்டது. ஊரின் மேற்கே இருக்கிற சிவன் கோவிலுக்கான குளமாக இது இருந்ததாகவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு தெப்பம் ஓடியதாகவும் பேசப்பட்டது. இப்போதே கிராமமாக இருக்கிற ஊர், சில நூற்றாண்டுகளுக்கு முன், ஒரே ஒரு குடும்பமாக மட்டுமே இருந்திருக்கும் என்றும் தோன்றியது. கூடவே ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தெப்பம் ஓடியிருக்குமா என்ற சந்தேகமும். பக்கத்து ஊரான ஆழ்வார்க்குறிச்சியில் ஒவ்வொரு வருடமும் தெப்பம் ஓடுகிறது. அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து அந்த தெப்பத்தை பார்ப்பதையும் அதன் பொருட்டு நடக்கிற திருவிழா தடல்புல்களும் தெப்பக்குள திண்டு, திருமண மண்டபம் போல மக்கள் கூடியிருக்கும் அரங்கமாகி இருப்பதும் மகிழ்ச்சி பிரவாகமாக இருக்கிறது. அப்படி ஒரு தெப்பம் இந்த குளத்தில் ஓடியதை யாரும் பார்த்ததில்லை. ஆனால், குளத்தை பார்க்கும்போது, தெப்பமும் திருவிழாவும் மனதுள் வந்துபோவது தானாக நடந்துவிடுகிறது.

மழை, வெள்ளம் வருகிற காலங்களில் தெப்பக்குளத்தின் கீழ்முக்கில், ஒதுங்கி கிடக்கிற பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ, அல்லது அதில் தலை தூக்கி அசைந்து கிடக்கிற பாம்புகள் மீது கல்லெறிந்து கொண்டோ அலையும் டவுசர் காலத்தில், இந்த குளம் மாடுகள் குளிப்பதற்காகத்தான் என்பதாகவே நினைத்தேன். ரெண்டாத்து முக்கிற்கு மாடுகள் பத்தி செல்கிற புனமாலை அண்ணன், குளத்தின் இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு மாடுகளை பத்திவிட்டு ஏதாவது ஒரு மாட்டின் மீதமர்ந்து நடு குளத்தில் பொத்தென்று குதித்து எழும்போது மனிதர்களும் குளிக்கலாம் என உணர்ந்தேன். நீச்சல் தெரியாத சிறு பயல்கள் பயந்துகொண்டு கரையில் நிற்க, அவர்களை தண்ணீருக்குள் தள்ளிவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள் அண்ணன்கள். தத்தக்கா பித்தக்கா என்று முங்கி, மோதி, தவித்து, தண்ணீர் குடித்து அவர்கள் தானாக நீச்சல் கற்றுக்கொள்ளும் இடமும் தெப்பம் ஓடாத இந்த குளம்தான்.


இந்த குளத்தின் வடபக்கப் படித்துறை ஒன்று சிதைந்து மாடுகளை குளத்துக்குள் இறக்க, ஊர்க்காரர்கள் தடுமாறியபோது பஞ்சாயத்து சார்பாகச் சாய்வுதளம் ஒன்று கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வேர்களைப் பிதுக்கி திமிறிக்கொண்டிருக்கிற ஆலமரத்தை சுற்றி திண்டு ஒன்றும் கட்டப்பட்டது. அதுவரை வேரில் அமர்ந்து கதை பேசியவர்கள், திண்டுக்கு மாறினார்கள். எப்போதாவது தெப்பக்குளத்துக்கு வந்து போய்கொண்டிருந்த & திருட்டுத்தனமாகப் புகைப்பிடிக்கிற அண்ணன்களுக்கு இப்போது இது நிரந்தர இடமாகிவிட்டது. அண்ணன்கள் மாலையிலும் மாடுமேய்ப்பவர்கள் மற்றும் வயலுக்கு செல்பவர்கள் காலையிலும் என பரப்பரப்பாகிவிட்டது திண்டு. இதற்கு இன்னொரு சிறப்பும் இருப்பதாக, காபி கடைகளில் பேசிக்கொண்டார்கள்.

‘வீட்டுல உருண்டு உருண்டு படுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குடே. தெப்பக்குளத் திண்டுல துண்டை விரிச்சு சும்மா படுத்துப் பாரேன். எப்ப தூங்குனம்னே தெரியாது. எந்துச்சு பாத்தாதான் தூங்கிருக்கோம்னு தெரியும்’& என்றார்கள். கோடைகாலங்களில் நண்பகல் நேரத்தில் திண்டில் தூங்க இடம் கிடைப்பது அரிது. தூங்கிக்கொண்டிருப்பவர்களின் கால்களை ஒதுக்கிவிட்டு கொஞ்சம் உட்கார்ந்து கொள்ள வாய்ப்பிருக்கும்.

ஊரில் இருந்து தனியாக இருக்கிற இந்தத் திண்டு, தூங்கவும் கதைகள் அல்லது பொரணி பேசும் இடமாகவும் மாறிப்போனதில் தெப்பக்குளத்துக்கும் வருத்தம் இருந்திருக்கலாம். அவளை, அவன் வைத்துக்கொண்டிருக்கிறான் என்கிற கிளு கிளு கதையில் இருந்து சொந்தக்கார குடும்பத்துக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்கிற கொடுரம் வரை அலசப்படும் இடமாக மாறிப்போன திண்டும் அதன் தோழன் தெப்பக்குளமும் பேசத் தொடங்கினால், என்ன பேசியிருக்கும்? தினமும் வந்தமர்கிறவர்களுடன் அவையும் ஒன்றாக, தங்கள் கருத்தை சொல்லி இருக்கலாம். அல்லது, ‘இங்க உட்கார்ந்து இதையெல்லாம் பேசாத’ என்கிற ஆட்சேபத்தையும் எழுப்பி இருக்கலாம். அல்லது மவுனமாகச் சிரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

ஊரில், கல்யாணம் மற்றும் கோயில் கொடை காலங்களில் இந்த தெப்பக்குளத் திண்டுதான் சாராயம் குடிப்பதற்கான இடமாகவும் இருக்கும். இருட்டில் திருட்டுத்தனமாகப் பாட்டில்களை கொண்டு வந்து குடிக்கவும் பேசவுமாக, திண்டு மாறிபோனதின் தடதடப்பு, மறுநாள் தலைவலியில் தெரியும்.

இப்படி பரபரப்பாக இருக்கும் தெப்பக்குளமும் திண்டும் தென்னரசுவின் அக்கா, குளத்தில் பிணமாக மிதந்ததில் இருந்து வெறிச்சோடிப்போனது. துறுதுறுவென்று இருக்கும் தென்னரசுவின் அக்காவுக்கு ஊரில் அழகி என்றும் பெயர். காதல் சமாசாரங்கள் கெட்டவார்த்தையாகப் பார்க்கப்பட்ட ஊரில் பிறந்தது அவளது குற்றம். விஷயம் வீட்டுக்குத் தெரிந்து அவசரம் அவசரமாக, மாமன் மகன் மாப்பிள்ளையாக நிச்சயிக்கப்பட்டான். பெரியவர்களின் கவுரவம் சிறுசுகளின் ஆசையை எப்போதும் கொலை செய்யத்தான் துடித்துக்கொண்டிருக்கிறது. தனது காதல் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தெப்பக்குளத்தில் விழுந்து பிணமானாள். வீட்டில் ஆளைக் காணோமென்று விடிய விடிய தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் பக்கத்து ஊருக்கு பால் விற்கப்போகும் கணேசன், தற்செயலாக குளத்தை பார்க்க, விஷயம் ஊருக்குப் போனது. மொத்த ஊரும் குளத்தில் கூடி கண்ணீர் சிந்திய பின், குளத்துக்கு இன்னொரு பெயரும் வைக்கப்பட்டது. கொலைகார குளம்! தண்ணீரும் கொலைக்கான ஆயுதமானது ஆச்சர்யம்தான்.

காலங்கள் வேகமாக ஓடுகிறது. பிழைப்பின் பொருட்டு பெருநகருக்கு புலம்பெயர்ந்தாலும் எப்போதும் உள்ளுக்குள் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது ஊர். ரகளையும் ரசனையுமாக இருந்த தெப்பக்குளத்தை சமீபத்தில் எட்டிப்பார்க்கிறேன். தென்னரசுவின் அக்காள் பிணமாக மிதந்த வடக்கு முக்கில், குளத்தின் சுவரோடு மரமொன்று முளைத்திருக்கிறது. அவள் அணிந்திருந்த பச்சைத் தாவணியாய் கிளைபரப்பி பார்க்கிறது மரம். குப்பைகள் சுமக்கும் குளத்து தண்ணீர், குட்டையாகி இருக்கிறது. பாசி படர்ந்திருக்கிற படித்துறை, செடிகளால் மூடப்பட்டிருக்கிறது. எப்போதும் ஆட்களோடு இருக்கும் திண்டு, பாம்பு சட்டைகள் படர்ந்திருக்க, பேச்சுத் துணையின்றி மூச்சற்றுக் கிடக்கிறது. குளத்தை பார்க்கப் போனவன், குறைகளை எழுத தொடங்குகிறேன்

3 comments:

துபாய் ராஜா said...

கிராமத்துல பிறந்த பொம்பளைக்கு நீச்சல் தெரியாம இருக்குமா அண்ணாச்சி....அதுவும் நம்ம ஊரு புள்ளையோ சடங்காகுற வரைக்கும் பயல்வோ கூட போட்டி போட்டுல்லா ஆத்துலயும், கிணத்துலயும் குதிச்சு எதிர்நீச்சல் போடுவா...குளத்துல விழுந்து செத்தாங்கிறது உறுத்துதே..

ஆடுமாடு said...

நீங்க சொல்லுதது சர்தான் அண்ணாச்சோ. ஒண்ணு ரெண்டு பேரு இப்படியும்
இருக்கத்தானெ செய்யுதாவோ.

துபாய் ராஜா said...

அதுவும் சரிதான்.உங்க ஊரு பொம்பளையவுளப் பத்தி உங்களுக்குதானே தெரியும் அண்ணாச்சி...