Thursday, August 30, 2007

விரிசல் விழுந்த குத்து

மாடுகளின் கொம்புகள் கத்திகளை விட பதமானவை. ஒட்டங்காளைகளின் கொம்புகள் அடிக்கடி எண்ணெய் தடவி ஊசி போல சீவப்படும். நன்றாக வளர்ந்திருக்கும் அம்மாடுகளின் அருகில் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் செல்ல வேண்டும். மாட்டின் ஓனராக இருந்தால் கூட. எப்போது அவ்வகை மாடுகளுக்கு மதம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் என் வீட்டு மாடுகளின் கொம்புகள் அவ்வளவு கூர்மையானதல்ல. பொங்கலை முன்னிட்டு கொஞ்சமாக எண்ணெய் மட்டும் தடவப் பட்டிருந்தது.
மாடுகள் வீட்டை விட்டு வெளியேறியதும் தெக்கூட்டு பரமசிவன் ஓடி வந்து அதன் கழுத்தைப் பிடித்தான். மேலத்தெரு பொந்தனும், வயித்துப் பாப்பாவும் அவனுடனேயே கழுத்தில் கரும்பை இழுக்க முற்பட்டுக்கொண்டிருந்தனர். எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் பசு அமைதியாக நின்று கொண்டிருந்தது. இது எனக்கு பெரும் கோபத்தை தந்தது. சும்மாவே என்னையெல்லாம் அருகிலேயே அண்ட விடாத இப்பசு, வெளியே யாரோ ஒருவன் தொடுகிறான். 'இந்தா புடுங்கிக்கோ என்பது போல அமைதியாக இருக்கிறதே என்ற என் கோபம் கொப்பளிக்க, பின்பக்கமாய் கம்பால் ஒரு போடு பேட்டேன். சட்டென்று திரும்பிய பசு கொம்பை இலேசாக ஆட்ட, அது என் வாயில் செல்லமாக நுழைந்து கிழித்தது. ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டி... அதன்பிறகான அலப்பறைகளுக்குப் பிறகு ஒரு நன்மை நடந்தது. எனது சிறு வயது குரல் அப்போதே கரகரவாகி கிழட்டுக் குரலைத் தந்துகொண்டிருந்தது. ஆறு ஏழு வருடங்களுக்குப் பிறகுதான் அது சரியானது என்பது வேறு விஷயம்.
இதன் பிறகு அப்பசுவிற்கும் எனக்குமான உறவில் நீண்ட விரிசல்.

No comments: