Thursday, August 16, 2007

பொங்கல் போர்

மாடுகளின் உலகத்தில் இன்னும் தொலைந்து, அதன் உலகத்தில் வாழுவதன வாழ்க்கை எனக்கு அதிகம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. பிழைப்பின் பொருட்டு நகரத்தின் நகக் கால்களின் சிக்கி சின்னாபின்னமானாலும் அவற்றின் மீதான மரியாதையும், மனதுக்குள் எழும் கரிசனமும் இன்னும் போய்விடவில்லை. பிடுங்கி நடும் நாற்று தழைக்கும் என்பது போல என் நினைவுகளைப் பிடுங்கி இங்கே நடுகிறேன். இந்த வயலில் நீங்கள் மேய்வீர்களா? மிதிப்பீர்களா என்பது பற்றிய கவலை எனக்கில்லை.
கனவுகளின் மூலமான மாடுகளின் கண்ணீரும், அதன் பிரதிபலிப்பும் எனக்குள் ஏதேதோ சொல்லுகின்றன. எல்லாவற்றையும் சொல்லிவிடத்தான் இந்த ப்ளாக்கை ஆரம்பித்திருக்கிறேன்.
அப்போது படித்துக்கொண்டிருந்தேன். பொங்கல் திருநாளன்று மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் நான்கு பனங்கிழங்கு, கரும்பு மற்றும் பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்த போர் தெருவெங்கும் நடந்துகொண்டிருந்தது. மதுரையில் நடக்கும் மாடு பிடித்தலுக்கும் இந்த பிடித்தலுக்கும் நிறைய வித்தியாசம். எங்கள் வீட்டில் நான்கு பசுக்கள் இருந்தன. அவற்றில் எனக்கு இரண்டும். என் அக்காவுக்கு இரண்டுமாக பிரிக்கப்பட்டிருந்தன. எனக்கென ஒதுக்கப்பட்ட பசுவில் ஒன்று கோபம் கொண்டது. நீண்ட அதன் கொம்புகள்தான் எனக்குள் பயத்தை ஏற்படுத்தின. பிறகு நான் சும்மா நின்றால் கூட ஏதோ கொலை செய்ய வந்தவன் மாதிரி கொம்பை கோபமாக ஆட்டும். கிட்டே சென்றால் விரட்டி விரட்டி அடிக்கும். இப்படியான அதிக சினேகம் கொண்ட அந்த பசு, லட்சுமி என்று அழைக்கப்பட்டாள்.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களின் கொம்புகளுக்கு விதவிதமான கலர்கள் பூசப்பட்டன. அவரவர்கள் கட்சி வண்ணத்தையும் மாடுகளின் கொம்புகள் சுமந்துகொண்டிருந்தன. கம்யூனிஸ்ட் குடும்பம் என்பதால் எங்கள் பசுக்கள் சிவப்பு மற்றும் வெள்ளையைக் கொண்டிருந்தன. அவற்றின் கழுத்துகளில் எண்ணி, நான்கு பனங்கிழங்குகள், கரும்பு, ஒவ்வொரு மாடுக்கும் பத்து ரூபாய் வீதம் கட்டப்பட்டன. வீட்டுக்கு வெளியே பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இதற்கே இவ்வளவு கூட்டமா? என வியந்தேன். கதவு திறக்கப்பட்டதும் நான் சேண்டி அடிக்க, மாடுகள் ஒவ்வொன்றாக வெளியேறின. ஒவ்வொரு மாட்டின் கழுத்தையும் பிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்தன. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

No comments: