Friday, October 10, 2014

புதிய வடிவமைப்பில் கெடை காடு

'கெடை காடு' அடுத்த பதிப்பு வெளியாக இருக்கிறது. முதலில் காவ்யா வெளியிட்டது. இப்போது டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வெளியிடுகிறார். முந்தையை அட்டைப்படம் அழகாக இருந்தும், அடுத்தப் பதிப்புக்கு மாற்றிவிட்டேன்.


'அருமையா இருந்தது. இது வழக்கமான நாவல் இல்லை. வேறு நாவல் வகை' என்று சொன்ன  ஐயா, பா.செயப்பிரகாசம், 'எடுத்து ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. அந்த ஏரியாவுக்கு நானும் வந்து போயிருக்கிறேன்ங்கறதால இன்வால்மென்டோட வாசிக்க முடிஞ்சது' என்று தட்டிக்கொடுத்த நாஞ்சில் நாடன் அவர்கள், 'அப்பா முடியாமல் இருந்த நேரம் அது. உங்கள் பிரதியைப் படித்து, எதை எதைச் சொல்ல வேண்டும் என்ற குறிப்புகளையும் எடுத்து எழுதிவைத்திருந்த நிலையில், மடிக்கணினியில் உட்காரும் நேரம் வராமலே போய்விட்டது' என்று அஞ்சல் செய்த பிரியத்துக்குரிய வண்ணதாசன் அண்ணாச்சி, 'இந்த நாவலின் கதைகளம் தமிழுக்கு மிகவும் புதியது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்புற மேய்ச்சல் மாடுகளின் வாழ்வியலை  சிறந்த நாவலாக்கியிருக்கிறார்' என்று எழுதிய, பாராட்டிய, எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள், 'வீட்டுக்கு வந்த உச்சியை, தேக்கி வைத்திருந்த சந்தோஷச் சிரிப்புடன் வரவேற்கும் அவன் அம்மா, புண்ணியத்தாயி, ‘காட்டுல என்னத்தல கண்ட?’ என்று கேட்கும் போது, அவிழ்ந்து விழுந்த சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்ட உச்சிமகாளி சொல்கிறானே, ‘காட்டையே பாத்தாச்சு. வேற என்னத்த பாத்தியான்னு கேக்கே?’ என்று. அந்த ஒரு பதிலுக்குள், நாவல் அடங்கி விடுகிறது' என்று வாழ்த்திய இயக்குனர் சுகா, 'அருந்ததிராயின் 'தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்' எனக்கு நேற்றைய இன்றைய கேரளாவை காட்டியது போல, தமிழர்களின் ஆதிபண்பான மேய்ச்சல் நிலம் சார்ந்த வாழ்வை தம்பி ஏக்நாத் வனங்களின் பச்சை வாடையோடு கொடுத்திருக்கிறார்' என்ற அண்ணாச்சி கவிஞர் வித்யாஷங்கர், 'மேய்ச்சல் வாழ்க்கை என்பது, மனித இனத்துடன் ஒன்றிப்போன ஒன்று. அந்த வாழ்க்கையை மனித இனம் படிப்படியாக இழந்து வரும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை, கொடை காடு மீண்டும் நமக்கு உயிர்ப்பித்து தருகிறது' என்ற நண்பர் நா.முத்துகுமார், 'முடிவை வேற மாதிரி வச்சிருக்கலாம்' என்று போன் வழி வாழ்த்திய நண்பர் க.சீ.சிவகுமார், 'பழந்தமிழ் வாழ்வின் சாரங்களை ஒவ்வொன்றாக தமிழகம் இழந்துவருகிறது. நவீனம் என்று அதற்குப் பெயர் வைத்து பெருமைப்படுகிறோம். பொருளாதாரம் பெருகுகிறது. வாழ்வாதாரம் உயர்கிறது. அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில் மலையும் காடும் மயங்கும் மலங்காட்டை அணு அணுவாக அனுபவிக்க வைத்திருக்கிறார் ஏக்நாத்' என்ற நண்பர் புத்தன், இன்னும் நாவலை வாசித்துவிட்டு பேசப்போகிற எழுதப்போகிற அனைவரையும் இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

முதல் நாவல் இப்படியொரு கவனிப்புக்கு வந்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு அடுத்த நாவலை எழுத ஆயத்தமாகிவிட்டேன்.
...................

நாவல் பற்றி நண்பர் பாலு சத்யா, குங்குமம் தோழி டாட் காமில்...


‘இந்த நாவலின் கதைக் களம் தமிழுக்கு மிகவும் புதியது’ என்று புகழ்ந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

‘காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், மேய்ச்சல், காதல், காமம் என மேய்ச்சல் காடுகளின் கசப்பும் இனிப்புமான தனித்துவமான இனத்தின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதன்மையான புதினங்களில் ‘கெடை காடு’க்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது…’ என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சுந்தர புத்தன்.

-இந்த நூல் குறித்த அறிமுகத்துக்கு இவையெல்லாம் அவசியமாக இருக்கின்றன. எழுத்தில் கொங்கு வட்டார வழக்கை முன்னிறுத்திய ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி கரிசல் பூமி வட்டார வழக்கை வெகு லாவகமாகக் கையாண்ட கி.ராஜநாராயணன் வரை தமிழகத்தின் கிராமங்களும் மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையும் எத்தனையோ படைப்புகளில் மிளிர்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘கெடை காடு’ நாவலுக்கு மிக முக்கியமான, அதே நேரத்தில் தனித்துவமான இடமுண்டு. வழக்கம் போல ஒரு கிராமம், அதில் ஏதோ ஓர் ஆண் அல்லது பெண்ணை மையப்படுத்தி, ஏதோ ஒரு பிரச்னையை முன்னிலைப்படுத்தியபடி நகரும் நாவலாக ‘கெடை காடு’ இல்லை. ஒவ்வொரு மலருக்கும் ஓர் வடிவம், மணம் என்று தனித்தன்மை இருப்பது போல இந்நாவலில் காட்சிப்படுத்தப்படும் மனிதர்களும் அவரவர்களுக்கான இயல்புகளுடனும் குணங்களுடனும் வலம் வருகிறார்கள்.

கணவன், இன்னொருத்தியின் வீட்டில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாலும், அவன் வெளியே வரும் வரை காத்திருந்து, ‘‘ஆம்பள யோக்கியம் தெரியாண்டாமா? அதான். இன்னையோட முடிஞ்சாச்சு. இனி ஒட்டும் இல்ல. உறவும் இல்ல’’ என்று உதறிவிட்டுப் போகிற புண்ணியத்தாயி…
‘‘இவங்க நினைச்சா சேர்க்கதுக்கும் நீக்கதுக்கும் நான் என்ன இவ்வோ வீட்டு மாடா, ஆடா? எனக்கு சங்கமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்’’ என படபடக்கிற தனித்து வாழும் கல்யாணி…

எதிர்ப்பாலினத்தின் மேல் எழும் வேட்கையும் பார்க்கிற பெண்ணின் மேலேல்லாம் காதல் வயப்படத் தூண்டுகிற பருவத்திலிருக்கும் உச்சிமகாளி என நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் நேரில் சந்தித்துப் பேசும் எத்தனையோபேரின் சாயலைக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரப் படைப்புகளின் யதார்த்த தன்மை நாவலின் போக்குக்கு பெரும் பலம்.
குள்ராட்டிக்கு மேய்ச்சலுக்குப் போன இடத்தில் அட்டளையில் தொங்கும் பாம்புச் சட்டைகள்… அநாமதேயமாக நடு வழியில் நிற்கும் பட்றையன் கோயில்… அமைதி சூழ் மலைப் பகுதியில் அவ்வப்போது கேட்கும் ஓநாய்களின் இரைச்சல்… இவற்றுக்கு மத்தியில் மாடுகளையும் காபந்து பண்ணி, தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மேய்ச்சலுக்கு வந்த மனிதர்களின் வாழ்க்கை… என இந்த நாவல் பதிவு செய்யும் விஷயங்கள் ஏராளம்.

மனித வாழ்வின் வசீகரத்தையும் அவலத்தையும் வலிந்து திணிக்காமல், போகிற போக்கில் யதார்த்தமாக கோடிட்டுக் காட்டுகிறது ஏக்நாத்தின் எழுத்து நடை. கால்நடை மேய்த்தல் தொடர்பாக தமிழில் பூமணியின் ‘ரீதி’ சிறுகதை போல வெகு சில படைப்புகளே வெளியாகியுள்ளன. அதையே முக்கியக் களமாகக் கொண்டு வெளியான முதல் நாவல் ‘கெடை காடு’ என்று தோன்றுகிறது. தங்கு தடை இல்லாத எழுத்து நடை, திடீர் திருப்பங்கள் என்று சலிப்பூட்டாத இயல்பான நிகழ்வுகள், இது வரை பார்த்தும் கேட்டும் அறியாத புதிய அனுபவத்தை தரும் கதைக் களம் என விரிகிற இந்நாவல் ஒரு வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கிறது. அது ஒவ்வொருவரும் படித்து, அனுபவிக்க வேண்டிய வாழ்வியல்!

கெடை காடு
விலை: 170
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
முகவரி: எண் 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்).
போன்: 044-65157525. செல்: 9940446650.


No comments: