Monday, October 31, 2011

காதலுக்கு கண் இருந்தது

காதல் பற்றி எழுதும்போது, எழுத்து தானாகவே தன்னை விரித்துக்கொள்கிறது. நித்தமும் ஏராளமான காதல் கவிதைகள் எங்காவது பிறந்து எங்காவது வாழ்ந்துகொண்டே இருக்கிறது, காதலர்களைப் போல. ஏழை, பணக்கார காதல், மாறுபட்ட ஜாதி/மதத்துக்கிடையேயான காதல், கிராமத்து/நகரத்து காதல், ஹீரோயிச காதல், கண்டதும் காதல், முன் ஜென்மக் காதல் உட்பட பல்வேறு வகைகளை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது சினிமா காதல்.


கீழே விழுந்துவிடுகிற பேனாவை எடுத்துக் கொடுத்ததற்காகவெல்லாம் காதல் வந்து விடுகிற இன்றைய சூழலில், நாற்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில், காதல் எப்படி நடந்திருக்கும் என நினைப்பதே அலாதியானது. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கொண்ட கிராமம் அப்படி சீக்கிரமாக காதலையும் காதலர்களையும் விட்டுவிடுமா என்ன? இப்படியான யோசனையின் போதுதான் நண்பன் சேவியர் சொன்னான். 'எங்கப்பா அந்த காலத்துலயே லவ் மேரேஜ் பண்ணவர்லா' என்று. நண்பன் சொன்ன அந்த காலம் அறுபதுகளின் ஆரம்பம்.

எல்லாவற்றையும் தவறாகவே பார்ப்பதும் பொறாமையாக கொள்வதுமான ஆட்கள் எங்கும் எப்போதும் உண்டு. தன்னால் முடியாத அல்லது தனக்கு நடக்காத ஒரு விஷயம் மற்றொருவரின் பால் நடந்து அதுபற்றி தெரியவருகிற போது தாங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. இந்த 'தாங்கிக்கொள்ள' முடியாததுதான் 'ஊர்க்கட்டுப்பாடு' என்ற பெயரில் கடுமையை உத்தரவாகிவிடுகிறது. ஊர்களின் உத்தரவுகள் சாமிகளின் நேரடி வார்த்தைகளாக வந்து விழுவதாக கருதப்பட்ட காலத்தில், நண்பனின் அப்பா ஹீரோவாக காணப்பட்டார். பெண்ணின் மனதில் இடம்பிடித்ததை தவிர வேறெந்த போராட்டத்தையும் அவனது தந்தை நடத்தியதில்லை. ஆனால் காதல் நடந்தது. தூர தூர ஊர்களில் இருந்துகொண்டு தெரியாமல் வந்துவிழுகிற கடிதங்களின் வழி நடந்த காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது.

எனக்கு சொல்லப்பட்ட அல்லது நான் கேள்விபட்ட, கிராமத்து காதல்கள் எல்லாம் கொடுமையானதாகவே இருந்தன. இப்போது நினைத்தாலும் அந்த வன்முறைக்கு அவர்களது வம்சத்தில் யாரையாவது சிறையிலடைக்கச் சொல்லலாம் எனத் தோன்றும். விஷயம் இதுதான்: தெரு முனை பிள்ளையார் கோயிலில் கரகாட்டம். பகலில் வெளியில் முகம் காட்டாத தாவணிப் பெண்களுக்கு கருக்கலும் இரவும்தான் சுகங்களின் காற்றடிக்கும் பொழுது. மூன்றாவது வீட்டு பையனுக்கும் இவளுக்கும் காதல் என்று அறியப்படாத ஏதோ ஒன்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. இது அரசல் புரசலாக அங்கங்கே பரவ, பகலில் காட்டுக்கு வேலைக்குப் போய்விட்டு மாலையில் வருகிற உழைப்பாளிகளுக்கு இது கவுரவப் பிரச்னை. அண்ணன்காரனும் தம்பிகாரனும் திட்டம் போட்டுவிட்டார்கள்.

கரகாட்டம் நடக்கும் கோயில் வாசலுக்கு அவளும் வந்திருந்தாள். அவளது கண்கள் வழக்கம் போலவே அவனைத் தேடிக்கொண்டிருந்தன. இதுபற்றிய பேச்சு, கரகாட்டத்தின் போது இளக்காரமாக அண்ணன்- தம்பி காதுக்குப் போனது. வீட்டுக்குப் போனார்கள் அண்ணனும் தம்பியும். அடுக்களைக்குப் பின்பக்கம் குழி தோண்டினார்கள். ஆட்டம் முடிந்து வந்த தங்கையை, 'வாம்மா வந்து இறங்கு'என்றார்கள். ஏன் எதற்கு என்ற அவளின் கேள்வியை புறந்தள்ளிவிட்டு அவளை அப்படியே உள்ளே தள்ளி, குழியை மூடிவிட்டார்கள் உயிரோடு!

இப்படியொரு கதையை கேட்டபிறகு அந்த பெண்ணின் கதறல் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அவள் செய்த பாவம் என்ன? அவளுக்கு தண்டனை என்றால் இவர்களுக்கு? அதற்கு வேறொரு கதை சொன்னார்கள். அவர்கள் சொன்ன காதல் கதைகளில் எல்லாம் தாங்க முடியாத வன்முறை. இப்படியாக கேள்விபட்ட காலங்களில் நண்பனின் தந்தை காதலில் ஜெயித்தாரென்றால் அது பெரிய விஷயம்தானே. இதிலிருந்து இரண்டு விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. காதலர்களை சேர்த்து வைப்பதும், சேர்த்தே புதைத்திருப்பதும் அந்த காலத்தில் நடந்திருக்கிறது. இதையடுத்த காலகட்டங்களில் ஊரில், காதலின் வளர்ச்சி கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் தைரியம் என்றளவிலேயே இருந்ததாகச் சொல்வார் மூர்த்தி அத்தான்.

''ஏலே... நாங்கலாம் வேலை பாத்தாதான் சோறு. என்னதான் பேண்ட், சட்டையை போட்டுட்டு போனாலும் வேலையை தாண்டி வேற சிந்தனை வராதுலா. அப்படியும் கொஞ்சம் கொஞ்சம் வரும் பாத்துக்கோ... நம்ம கெடக்குத கெடப்புக்கு இது தேவையான்னு இருந்துக்கிட வேண்டியதான்" -அத்தான்களின் காதல்கள் எழுந்து அடங்கியதை போல எல்லாருக்கும் இருந்திருக்குமா என்ன?

சித்தப்பாவின் காதல் பற்றி கேள்விபட்ட போது, சொந்தங்களுக்குள் நடக்கும் காதல் அதிகம் வென்றிருப்பதாக உணர முடிந்தது. பெருங்கூட்டம் கொண்ட குடும்பங்களில் நடக்கும் காதலில் ஈகோவே பிரதானமாக இருந்திருக்கிறது. சித்தப்பா பியூசி முடித்த கம்யூனிஸ்ட் பேச்சாளர். அவரது பேச்சுக்காகவே கிருஷ்ணம்மா சித்தி காதலில் விழுந்தாள் என்று சொல்வது அதிகப்படியானதல்ல. இதை அவளே சொன்னாள் என்று தெருக்காரிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர் மேடையில் பேசுகிறார் என்றால், சித்தியின் வீடிருக்கும் தெருவுக்கு குழாயை திருப்ப சொல்லுவாராம் சித்தப்பா. குழாய்களின் வழி வந்த குரலில் காதல் வளர்த்திருக்கிறார்கள். சித்தப்பாவின் வறுமையை அதிகம் செழிப்பாக்கியது சித்தியின் சிரிப்பாக மட்டும்தான் இருந்திருக்கும். சித்தியின் வயதை கொண்ட அவளது தோழியிடம், எப்போதோ ஒரு தருணத்தில், காதல் பற்றி கேட்டபோது சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 'எனக்கு அப்படிலாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லடே... நான்லாம் சங்க இலக்கியத்துல வர்றாளா தோழி... அவளை மாதிரின்னு வச்சுக்கோயேன்' என்றதும், அவள் இதை சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

இப்படியான காலகட்டத்தில்தான் அக்ரஹாரத்து தேவியக்காள், அம்பாசமுத்திரம் வாலிபனோடு ஓடிவிட்டாள் என்ற செய்தி ஊருக்குள் பரவி, முக்குக்கு முக்கு பேசும் பொருளாகியிருந்தது. அந்த தேவி, அம்பை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். பெரும் வசதிகொண்ட, ஏகப்பட்ட சொந்தங்களை கொண்டிருந்த தேவிக்கு அதைத்தாண்டி அந்த வாலிபனிடம் என்ன கவர்ந்திருக்கும்? ஏதோ ஒன்று. அந்த ஏதோ ஒன்றை காதல் என்றும் கொள்ளலாம். அப்போது தண்ணீர் பிடிக்கும் பைப்படியில் குடங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண்களிடம், 'பொட்ட புள்ளைல படிக்க வைக்கணுமா? அதும் அம்பாசமுத்ரத்துல போயி... இப்படித்தான் ஆவும்' என்ற பேச்சுகளை அதிகம் கேட்க முடிந்தது. சில பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஜோடியாக பஸ்-ஸ்டாண்ட்டில் வந்திறங்கியபோது எல்லோர் கண்ணும் அவர்கள் மேல் இருந்தன. முதல் குழந்தைக்குப் பிறகு அக்ரஹாரம் தேவியக்காவை ஏற்றுக்கொண்டது.

ட்யூஷன் சொல்லிக்கொடுத்த அக்காள்களின் காதல் கதைகள் எந்தவித திருப்பங்களும் இன்றி நேரிடையாக கல்யாணத்தில் முடிந்ததற்கு ஒரே ஜாதி என்பது பிரதானமாக இருந்தது. கல்லூரியில் படித்த அக்காள்கள் ஜாதி பார்த்து காதலித்திருப்பார்களோ என்னவோ? வெவ்வேறு ஊர்களில் நடந்த இவர்களின் காதலுக்கு ஊரில் எந்த சாட்சியும் இல்லாதது ஆச்சரியம்தான். எப்போதும் திண்ணையில் அமர்ந்துகொண்டு பொரணி பேசுபவர்களுக்கு இவர்களது திருமணத்துக்குப் பிறகுதான் காதலித்த கதை தெரிந்து, அதிர்ந்தார்கள். 'இவ்வளவு கமுக்கமாவா பண்ணியிருக்காவோ' என்பதாக இருந்தது பொரணி பேச்சு. இம்மாதிரியான எந்த சம்பவங்களும் இல்லையென்றால் பொரணி பேசுபவர்களின் பாடுகளும் திண்டாட்டம்தான்.

வெவ்வேறு ஜாதியினருக்கான காதல்கள் பெரும்பாலும் ஊரில் நொடிந்து சின்னா பின்னமானதை பார்த்திருக்கிறேன். இப்படியான விஷயங்களும் வெற்றிகரமாக ஓடிய சினிமாக்களும் காதல் அறிவை தந்துபோனதிலிருந்து ஊரில் பலரும் காதலிப்பதை கடமையாக கொண்டிருந்தனர். இதற்காகவே வந்துவிடுகிற திருவிழாக்களும் கொடைகளும் காதலை ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தது/ கொண்டிருக்கி றது.

படித்து முடித்துவிட்டு டெல்லிக்கு வேலைக்குப் போன கருப்பசாமி அண்ணனி்ன் காதல் பற்றி, மேலத்தெரு முழுவதும் போஸ்டர் ஒட்டாத குறையாக இருந்தது.

'இனும எங்கடா அவன் ஊருக்கு வரப்போறான்? அத்தை மவ, மாவன் மவளை அவன் எப்படி கெட்டுவான்? இவளுவோ என்னத்தை படிச்சிருக்காவோ?' என்கிற பேச்சுகள் ஒவ்வொரு வாசல் படியிலும் நடந்துகொண்டிருந்தன. டெல்லியில் இருந்து வருகிற அண்ணனின் கடிதங்களில் காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ எதுவும் இருக்காது. ஆனால், அவனுடன் வேலைக்கு சென்றுவிட்டு பாதியில் ஊரைத்தேடி வந்துவிட்ட நல்லமுத்து சொன்ன பிறகுதான் விஷயம் தெரிந்தது.

'அது என்னமோ சேட்டு புள்ளைன்னு சொல்லுதாவோ?' என்று நல்லமுத்து சொன்னான்.

'அது என்னல ஜாதி? நம்மள விட கொறச்சலா கூடுதலா?' என்ற பெரிசுகளிடம், 'ச்சீ... அவளுவோ என்ன கலரா இருக்காவோ... கண்டிப்பா நம்மள விட ஒசத்தியாதான் இருக்கும்' என்றான்.

'அவன் படிச்ச பய.. அவனுக்கு தெரியாத வெவரமாடா?' என்று பேச்சு தொடர்ந்துகொண்டிருந்தது. யாரோ, எங்கோ யாரையோ காதலித்துக்கொண்டிருக்க, இவர்கள் ஒரு கதையை இங்கு உருவாக்கியிருந்தார்கள். முதல் குழந்தை பிறந்த மூன்று வருடத்துக்கு பிறகு குலதெய்வ கோயிலில் மொட்டை அடிக்க, குடும்பத்தை கூட்டி வந்திருந்தான் கருப்பசாமி அண்ணன்.

அவனது அம்மா, 'ஏட்டி ஆச்சிய பாரு' என்று பெண்குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தை புதிய முகத்தைப் பார்த்து மிரண்டு கொண்டிருந்தது. கருப்பசாமி அண்ணனின் மனைவியானவளுக்கு மொழி பிரச்னை. மருமகளும் மாமியாரும் செய்கையால் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு கருப்பசாமியோடு ஊரே சிரித்துக்கொண்டிருந்தது.

'ஒம் மருமவ என்ன சொல்லுதா?'

'ஆங்... என்னமோ கியா கியாங்கா... மாட்டை பத்துத மாதிரி' என்றாள் அவனது அம்மா.

ராணுவ வேலைக்குப் போன செவனு, நாசிக்கிலிருந்து ஒரு பெண்ணை காதலித்து அங்கேயே திருமணம் முடித்துக்கொண்டு வந்திருந்தார். அந்த காதல் ஆச்சரியமாக இருந்தது. அவளுடன் நான்கு வயது மகனும் வந்திருந்தான். 'காதலிச்ச பிறகுதான் அவ வீட்டுக்காரன் செத்துபோயிட்டான்னு தெரிஞ்சது... ஒத்த புள்ளைய வச்சுகிட்டு என்ன செய்வா? அதான் தாலி கட்டி கூட்டியாந்துட்டேன்..." என்றார் செவனு.

இவளுக்கும் மொழி பிரச்னை. இந்தப் பிரச்னையிலும் கூட மாமியாருக்கும் மருமகளுக்குமான சண்டை தொடர்ந்ததுதான் ஆச்சரியம்.

'எழவெடுத்தவா... என்னைக்குன்னு வந்தாளோ... அன்னைலயிருந்து போச்சு, நிம்மதி'

'பாகல் ஹோகயி கியா... ஹைசா மத் பாத் கர்னா... ஆப் கி பேட்டாஸே பாத் கரோ... முஜே நஹி '

இப்படியான காதல்களின் வழி எனக்கும் வந்து தொலைத்தது ஒரு தலையான காதல். முதல் மூன்று நாட்கள் நெஞ்சுக்குள் கிளர்ந்த அந்த காதலை விட்டுவிட்டு, வெறொருத்தியுடன் இணைத்து பேசப்பட்டதிலிருந்து நொறுங்கி போனேன் நான். முளைக்கும் முன்பே கருகிவிட்ட அந்த காதலுக்கு கண்டிப்பாக 'கண்' இருந்திருக்க வேண்டும்.

2 comments:

சித்திரவீதிக்காரன் said...

நமக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம். மதுரை, தமிழ், இயற்கை மீது கொண்ட காதலால் தனியாக பெண்கள் மீது காதல் வருவதில்லை. வேறு மாதிரி சொல்வதென்றால் பயம் அதிகம். அடி வாங்குற அளவுக்கு உடம்பு கிடையாதுன்றதாலயும் காதல் வராமல் இருந்திருக்கலாம். பகிர்வுக்கு நன்றி.

ஆடுமாடு said...

நன்றி சித்திரவீதிக்காரன்.

/தனியாக பெண்கள் மீது காதல் வருவதில்லை//
இதுக்கு என்ன பதில் என தெரியவில்லை.