Monday, September 12, 2011

கொடலு

''நீ கேட்டா கேளு , கேக்கலைன்னா போடா பேராண்டி. ஆனா, சொல்லாம இருக்கமாட்டேன். இப்ப எழுவத்தஞ்சுன்னு வச்சுக்கோ, ஒங்க தாத்தன், மேல போயி என்னா, பதினைஞ்சு வருஷம் இருக்குமா? அப்பன்னா எனக்கு அறுவது வயசு. மில்லு வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்தேன். ஷிப்டுக்கு எந்திரிக்கணும், மயிரு, மம்பட்டிங்கதையெல்லாம் போயி, நிம்மதியா இருந்த நேரம். அப்பதாண்டா, என் கடைகுட்டி மவன் பெறந்தான். மூத்த மவன் பொண்டாட்டிக்கும் அப்பதான் பேர்காலம். ‘பேரனை கொஞ்ச வேண்டிய வயசுல, பிள்ளைய பெத்திருக்கான் பாரு'ன்னு காதுபடவே கேலி பண்ணுனாவோ. எனக்கு மொதல்ல ஒரு மாதிரியாதான் இருந்துச்சு. ஆனா, என் மூணாவது பொண்டாட்டிக்கு வயசு என்னங்க அப்ப? முப்பத்தஞ்சுதான். அந்த வயசுல அவா பிள்ளை பெக்கதுக்கு என்ன இருக்குங்க? அந்தானி கண்டுக்கல.

அந்த காலத்துலலாம் எப்படியிருப்பேம்னு நெனைக்கே. உடம்பு, இன்னா இப்படி இருக்குத மாதிரி ஒல்லியாதான் இருக்கும். நல்லெண்ணயை குளுர குளுர தலைக்கு தடவி, பாகவதரு மாதிரி முடிய வழிச்சு சீவி விட்டுட்டு, மீசைக்கும் எண்ணெய் தடவி லேசா மேல பாத்து திருக்கி, கை காலெல்லாம் தேங்காய் எண்ணெய்யை தடவிட்டு, சட்டையை போட்டு, வேட்டியை மடிச்சுக்கெட்டி தெருவுக்குள்ள நடந்தா... அத்தை மவளுவோலாம், கெறங்கி போயி நிப்பளுவோடா. பார்த்தாளுவோன்னு வையி, சலங்கை சத்தம் மாதிரி, க்ளுகுன்னு ஒரு சிரிப்பு வரும் பாரு... ச்சே உடம்பு நடுங்கி போயிரும்லா. இந்தா கைய பாரு, சொல்லும்போதே சிலுக்குதுடே.

வடக்கு தெருவுல, கெழக்க இருந்து மேக்க வரை, கலக்க கலக்கமா வீடுவோ, தொழுவத்தோட இருக்கும். இப்ப இருக்குத தட்டடி வீடுவோள்லாம் அப்பம் இல்ல. எல்லா வீட்டுலயும் கொறஞ்சது பத்து இருவது மாடுவோளும், இருவது இருவத்தஞ்சு ஆடுவோளும் இருக்கும். எங்க வீட்டுலயே எத்தன மாடுவோங்க, எழுவத்தைஞ்சு செம்மறி. எட்டு காளைலு. பன்னெண்டு  பசு. இப்பம் என் வீடு இருக்கு பாரு. மூணு பயலுவோளுக்கும் நான் பிரிச்சு கொடுத்த வீடுவோ இருக்குல்லா, அதெல்லாம் சேர்த்தா எவ்வளவு பெரிய தொழுவுன்னு பாத்துக்கோ. அப்படியிருக்கும் எல்லா வீடும்.

எங்கம்மய்க்கு ஏழு அண்ணனுவோ. தெருவுல நடந்தா, பாதி வீடுவோ என் மாமன் வீடுதான். சின்ன மாமன், பெரிய மாமன்னு பொண்ணுவோளா வேற பெத்து வச்சிருந்தானுவோ. நமக்கும் கொண்டாட்டம்தான் பாத்துக்கோ.

இப்பம், இந்தா வடக்கு வீட்டுல இருக்காம்லா, சொள்ளமுத்து கோன், அவன் அம்ம யாருங்க... நான் கெட்ட வேண்டியவா? எனக்குதாம்னு பேசி முடிச்சுட்டாவோ. ஆழ்வாருச்சுல தண்ணி பாய்ச்சுத தகராறு. நம்ம ஊருக்கு தண்ணிய திருப்ப கூடாதுன்னானுவோ. பெரிய மனுசனுவோ பேசிட்டிருக்கும்போது ரொம்ப முண்டுனான் ஒரு நாயி. பொசுக்குன்னு கோவம் தலைக்கேறிட்டு எனக்கு. பொட்டுன்னு கையை வெட்டிட்டேன். மணிகட்டு துண்டாயிப்போச்சு. பெறவு போலீஸ், கேஸுன்னு ஆனதால, நம்மள கேவலமா பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. நான் என்ன எனக்காவவா போயி அவன வெட்டுனேன். ஊருக்காவதான? எங்க மாமன், பெரிய இவன் மாதிரி சொள்ளமுத்துகோன் அப்பனுக்கு கெட்டி வச்சுட்டாம். அவளும் என்னயதான் கெட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னான்னு கேட்டதும் ரொம்ப துடிச்சுப்போயிட்டேண்டா.


பெறவு பல சந்தர்ப்பத்துல மனசுக்குள்ள ஒரு மாதிரி இருக்கும். சரி, இன்னொருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா. அவனும் என்ன யாரோ ஒருத்தனா? சொக்கார பயதானேன்னு, எதிர்ல அவா வந்தா கூட பார்க்க மாட்டேன். அவளும் கீழ குனிஞ்சுகிட்டு இறுமுத மாதிரி, ஜாடையில பேசுவா. இனும பேசி எதுக்குன்னு கண்டுக்கிடமாட்டேன். அவா சாவுத வரை ஒரு வார்த்தை பேசலடே பேராண்டி. இது ஊர்ல இப்பவரை யாருக்கும் தெரியாது. யாருகிட்டயும் நானும் போய் சொல்லலை. இதை ஏன் போய் சொல்லணும்? இருந்தாலும் மவராசி செத்த பெறவுதான் சொல்லுதேன்.

ஆமா... நீ கூட கேட்டுட்டே இருந்தியே கொடலு கதைய சொல்லுன்னு. பெறவு சொல்லுதேன்னு நானும் தள்ளிப்போட்டுட்டேன். அது ஒண்ணுமில்லலேடே. கருத்தப்பிள்ளையூருக்கு கள்ளு குடிக்கப் போயிருந்தோம் நாலஞ்சு பேரு சைக்கிள்ல. சிவசைலத்துல இருந்தும் நாலஞ்சு பேரு குடிக்க வந்திருந்தானுவோ.

கள்ளை இறக்க இறக்க, ஒவ்வொரு கலயத்தையா நாங்க காலி பண்ணிட்டுருக்கோம். சிவசைலத்துக்காரனுவோ, இந்தா தருவாரு, அந்தா தருவான்னு நிக்கானுவோ. அந்தானி, சண்டையாயி போச்சு. 'அதுல ஒரு பய, கொடலு மாதிரி இருந்துட்டு நீயெல்லாம் பேச வந்துட்டியோ"ன்னாம் என்ன பாத்து. 'நான் என்ன கொடலு கனக்காவா இருக்கேன்"ன்னு பொறுக்க முடியல. உள்ள வேற வெஷம் போயிருக்கா. ஓங்கி ஒரு மிதி, வயித்துல. பின்னால கல்லு. நங்குன்னு முதுவுல குத்தி, படுத்துட்டாம் மூச்சு பேச்சு இல்லாம. அவனுவ கூட நினன்வனுவோ, அருவாளை எடுக்க, கள்ளு தந்தவன் வச்சிருந்த பாளை அறுவாளை தூக்கி நாங்க வெட்டப் போவன்னு சண்டை பாத்துக்க. சரி, அசலூர்ல போயி, கள்ளுக்குடிக்க வந்த இடத்துல அப்படி வீம்புக்கு நின்னுற முடியுமா? அவனுவோ, 'இன்னா ஊர்ல இருந்து ஆளை கூட்டியாரோம்"னு போயிட்டானுவோ. நாங்க கள்ளுக்கு துட்டு கூட கொடுக்காம, சைக்கிளை திருப்பிட்டோம் ஊருக்கு.

பெறவு எங்கூட வந்த மூதி ஒண்ணு, அந்த 'கொடலு'ங்குத வார்த்தைய புடிச்சுட்டாம். ஊரு பூரா அதையே சொல்லி நாறடிச்சுட்டாம். நானும் அப்படித்தானடே இருப்பேன். ஆனாலும் தெரியாத பய எவனாவது சொன்னாம்னா தாங்க முடியாது. தெருவுக்குள்ள மாமன் , மச்சாம்னு இருந்துக்கிடுவோம். அதுக்காவ, இன்னொரு பயல கேலி பேச உடலாமாடெ?

இப்படித்தாம் ஆத்துக்குள்ள இருக்குல்லா பட்றையன் கோயிலு. அதுக்கு ஒரு நாள் கொடை. பூங்குறிச்சு, பாப்பாங்கொளம், ஆழ்வாரிச்சுல இருந்துலாம் ஆட்கள் வந்திருக்காவோ. ராத்திரி கெடா வெட்டு நடந்தது. வெட்டி முடிஞ்சதும் நேந்துக்கிட்டவனுவோ, கெடாவ இழுத்துட்டு உரிக்கப் போறானுவோ. ஒரு பய, 'ஏய்...கொடலு'ன்னு சிரிச்சாம். பக்கத்துல பொட்டபிள்ளைலுவோ வேற நின்னுச்சு. எனக்கு மண்டைல சூடு ஏறிட்டு. சத்தம் மட்டும் வருது. எவம்னு தெரியல. இடுப்புல மடக்கு (கத்தி) வச்சிருந்தேன். திரும்ப திரும்ப அங்க இங்கன்னு இருந்து 'கொடலு"ன்னு சத்தம் வருது. அந்தானி ஒரு பயல பாத்துட்டேன். கெவனிக்காத மாதிரி, அவன் பக்கத்துல இருக்குத சாமிய, கும்புடுதாப்ல நின்னுக்கிட்டேன். பாப்பாங்கொளத்துக்காரன். பெறவு அந்த பய புளியமரத்துக்கிட்ட போனாம். கொஞ்சம் இருட்டா இருந்தது. பின்னால பிட்டத்துல ஓங்கி ஒரு குத்து. யம்மான்னு கத்துனாம். அந்த பய திரும்பி பாக்கதுக்குள்ள மடக்கை உருவிட்டு ஓடிட்டேன். கொஞ்ச பேரு வெரட்டிட்டு வந்தானுவோ. நம்மளை எங்கடா புடிக்க முடியும் பேரா?

காலைல வெவாரம். நான்தாம்னு எவனோ சொல்லிட்டாம். நானும் ரொம்ப இதுலாம் பண்ணல. ஆமாய்யா. நாந்தான் குத்துனேன். எல்லாரு முன்னாலயும் கிண்டல் பண்ணுனா,பொத்திட்டிருக்க முடியுமான்னு கேட்டேன். 'சரி அவனே ஒத்துக்கிட்டாம். போத்தி கோயிலுக்கு மூணு லிட்டர் எண்ணெய் ஊத்தணு"ம்னு தீர்ப்பு சொன்னாவோ. எங்கய்யா, நாலு மிதி மிதிச்சாரு, என்னை. பெறவு, காசக் கொடுத்தாரு. செட்டியார் வீட்டுல போயி எண்ணெய வாங்கி ஊத்தி வெவாரம் முடிஞ்சுப் போச்சு. வெவாரம் முடிஞ்சாலும் 'கொடலு'ங்கத பட்டப்பேர்ல கூப்பிடுததை ஊர்க்காரனுவ விடல. இன்னும் கொடலுதான். பார்க்கதாண்டே இப்பவும் அப்படியிருக்கேன். ஆனா, வைரம் பாய்ஞ்ச ஒடம்பு. இப்பவும் எங்கூட எவம் கம்பு (சிலம்பு) சுத்த வருவாங்க?. நம்ம துரையப்பா, நல்லா வீடு கட்டுவாம். ஆனா, நாலாவது வீடுக்கு கால் வரிசை போவும் போது மேல ஒரு பல்டி அடிச்சு குதிக்க சொல்லு பார்ப்போம்? முடியாதுடே. ஆனா, இன்னைக்கும் நான் சாதிக்கம்லா. இந்த கிருஷ்ண பெறப்பு விழாவுல நானும் கம்பு சுத்துதம்னு கேட்டேன், வன்னிய நம்பிகிட்ட. 'சின்ன பயலுவோளுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நானே கம்பு சுத்தலை"ன்னாம். அதும் சரின்னுட்டு வந்துட்டேம். ஆனா, அடுத்த வருஷம் விட மாட்டன்டே.

என் இரண்டாவது மவன் புள்ள இருக்காம்லா, அதாண்டே மந்திரப் பய. 'ஏய் கெழவா, ஏன் அங்க இங்கன்னு லாந்திட்டிருக்கே... ஒரு இடத்துல கெடக்காம?"ன்னு ரோட்ல வச்சு ஏளனமா பேசுதாண்டே. இவனுவோளுக்கு என்ன தெரியுங்க. ரெண்டு மூட்டை நெல்லை தூக்கிட்டு நடப்பானா இவன்? என்னால இப்பவும் முடியும்டெ. எம்மாத்திர பயலுவோ இவனுவலாம் என்னைய கேள்விக் கேக்காம்? நான் கெழமாம்.  என்னமோ  சொன்னானாம்   கதையில எலி லவுக்கை கேட்டதாம் சபையிலங்கத மாதிரி...   என்னத்த சொல்ல?

நம்ம பரம்சம் இருக்காம்லா, அவன், 'கோயில்ல அன்னதானம் போடுதம்யா. நேத்திக்கடனு. பூசை பண்ணுதோம்.வந்து கும்புட்டுட்டு போரும்"ன்னான் எங்கிட்டே. ஒரு பெரிய மனுஷன்னு மதிச்சு கூப்புடுதாம். போவாம இருக்க முடியுமாடா? போயிட்டேன். போயி சாமி கும்புட்டுட்டு இருக்கும்போது, பரம்சம், பந்திக்கு கூட்டிட்டு போயிட்டாம். பந்தில ஊரே இருக்கு. நான் உக்கார்ந்தா என்னடே? சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு இருக்கேன். சைக்கிள்ள வந்த இந்த மந்திர பய, 'இங்கலாம் வந்து சாப்ட்டு குடும்பத்தை கேவலப்படுத்துதியே'ங்காம். இதுல என்னடே கேவலம் இருக்கு? என்னமோ போங்கப்பா... நாங்கலாம் பார்க்காததா? செய்யாததா?

ஏப்பா, ஏண்டா பேரா, பின்னால என் மூணாவது மவன் சத்தம் மாதிரி கேக்குதே... அவனான்னு பாத்து சொல்லு. நான் தலைல துண்டை போட்டுக்கிடுதேம். ஏன்னா, இப்பலாம் மோசமா ஏசுதாம்பா. 'சின்ன பயலுவோள கூட்டிட்டு வந்து டாஸ்மாக்ல ஏன் கூத்தடிக்க'ன்னு அடிக்க வாராண்டே.
......................

10 comments:

Anonymous said...

Nice one..

Suresh

துபாய் ராஜா said...

வெட்டு,குத்துக்கு பயப்படாத நம்ம 'கொடலு' பாட்டையா இப்படி வெறும்பயலுவ ஏச்சுக்கும், பேச்சுக்கும் பம்முற மாதிரி ஆயிப்போச்சே....

ஆடுமாடு said...

Thanks Suresh.
.............


//வெட்டு,குத்துக்கு பயப்படாத நம்ம 'கொடலு' பாட்டையா இப்படி வெறும்பயலுவ ஏச்சுக்கும், பேச்சுக்கும் பம்முற மாதிரி ஆயிப்போச்சே...//

நேரங்,காலம்னு இருக்குல்லா ராஜா.
நன்றி.

க. சீ. சிவக்குமார் said...

தாத்தன் ஸ்டேட்மெண்டுக்குள்ள நியூமரிக்கல் வர்ற அளவு அலுப்பா உங்களுக்கு.
தாத்தாவைப் பத்து வருஷம் கட் பண்ண வேண்டியிருக்கு... கதை சொல்லியப் பத்து வருசம் கரெக்ட் பண்ண வேண்டியிருக்கு...

அடுத்த தொகுப்பை அச்சாகறதுக்கு முன்னால பத்து நாள் கொடுங்க.

க.பாலாசி said...

முதல் பத்திய படிச்சொன்ன உங்களோட ஒரு கவிதை ஞாபகம் வந்தது..

//அப்பன் போனான்
பேத்தியை பார்க்க
மகன் போனான்
தம்பியை பார்க்க.//

போக போக அதுபாட்டுக்கு முகங்களை இழுத்து காட்டுகிறது.. பாக்கப்போக அந்தளவுக்கு வலுவில்லனாலும் நானும் நீங்களும் கொடலுதான் போல...உடம்பளவில்..

ஆடுமாடு said...

க.சீ.ஜி மாத்திட்டேன். நன்றி.

தொகுப்புக்கு லேட் ஆகும்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னால வேறொண்ணு வருது. சொல்றேன்.

ஆடுமாடு said...

நன்றி பாலாசி.

SiSulthan said...

மக்கா, ஒங்கதையாடே இது? நாங் எங்கேயோ இதை படிச்சிட்டு அதுல வந்த படத்தைகூட காப்பி பண்னி என் பிளாக்குல போட்டுட்டேன். ஆனாலும் அசத்தலான கதைடே.

PPattian said...

ரொம்ப ஜாலியா போகுது கதை... Cool

கே.ஜே.அசோக்குமார் said...

வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!