Tuesday, November 3, 2009

காடு-4

முதல் டவுஸ் பஸ் வந்துவிட்டது. வழக்கமாக ஒன்பது, பத்து மணிக்கு மேல்தான் சாலையை அடைத்துக்கொண்டு மாடுகள் போகும். என்னதான் ஹாரன் என்கிற கருவியை அழுத்தினாலும் மாடுகள் சவகாசமாகத்தான் நகரும். லேசாக மாட்டின் முதுகில் பேருந்தை கொண்டு முட்டி, பிறகு கொஞ்சம் மாடுகள் கலைந்து செல்வதற்குள் வாகன ஓட்டியின் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். ‘இந்த ஊருக்கு வண்டியை எடுத்துட்டு வந்தா, இதான் ரோதனை... சனியம்புடிச்சதுவோ. மாட்டை பத்துதவனுவளாது தூர வெரட்டுதானுவளா... எனக்கென்னன்னு போறானுவோ’ என்பது கன்டக்டரின் எரிச்சல்.

இன்று, காலையிலேயே எரிச்சல் ஆரம்பமாகிவிட்டது. சாலை என்பது ஒரு பேரூந்து மட்டுமே செல்லக்கூடிய அளவிலான செம்மண் தரை. அதில் இருக்கின்ற குண்டு குழிகள், சாலை என்கிற பெயரை மாற்றியிருந்தன. இரண்டு பக்கமும் ஆங்காங்கே இருக்கிற சுமை தாங்கி கற்களுக்கு அருகில் வேம்பு, புளியமரங்கள் நிழல் கொடுத்துக்கொண்டு நிற்கின்றன. பொத்தாம் பொதுவாக இந்த வழியாக பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் செல்லக்கூடிய பேருந்துகள் குறைவுதான். சைக்கிளில் குடும்ப பயணங்கள் நடந்து விடுவதால் பேருந்துகள், அதிகக் கூட்டத்தை கொண்டிருக்க இயலாது. திருமணம், காதுகுத்து, திருவிழா உள்ளிட்ட நாட்களில் மட்டுமே பிதுங்கிகொண்டு செல்லும். இன்னொன்று பக்கத்தூர் துஷ்டி.

மந்தை தாண்டி இருக்கிற செல்லையா டீக்கடையில், கொம்பனும், சடச்சானும் நின்றிருந்தார்கள். ஓலை வேயப்பட்ட குடிசை கடை. மாடுகளை பார்த்துவிட்டு, ‘ஏல காபி குடிச்சுட்டு போறேளா?’ என்றான் கொம்பன்.

‘ஒனக்கு வேல இல்ல. நாங்க இன்னும் எவ்வளவு வழி போவ வேண்டியிருக்கு? என்னைக்கு டீயை குடிச்சு, எப்ப போவ?’

‘ஆமா, நீங்கதான் அலூவசமா போறியோ. நாங்களாம் போவல பாரு’.

‘வேண்டாம் மாமா. அந்தானி, கருத்தப்பிள்ளையூர் பக்கத்துல போயி குடிச்சுக்கிடுதோம்’

உச்சிமகாளிக்கு கொம்பனை பார்த்தபோதுதான் ராம லட்சுமியானவள் மனதுக்குள் குதித்தாள். தண்ணீர் டேங்கிற்கு பின்பக்கம் இருக்கிற மூங்கில் காட்டுக்கு செல்லும் வழியில்தான் அவளது வீடு. கொம்பையா அவளது தந்தையென ஊரில் நம்பப்பட்டான். முங்கில் குச்சி வெட்ட, அருகில் இருக்கிற சுப்புத்தேவனின் மாமரங்களில் கிளி மூக்கு மாங்கா பறிக்க என்று அந்தப் பகுதிக்கு செல்லும் போது ராமலட்சுமி அறிமுகமானாள் அவனுக்கு. தூரத்து உறவென்பது கூடுதல் வசதியாக இருந்தாலும் ஊரில் இருக்கிற, சிவப்புதோல் குமரிகளில் அவளும் ஒருத்தி என்பதே அவனுக்கு முக்கியமானதாகப் பட்டது. சமீபத்தில் அவன் பார்த்த சினிமா நடிகையின் சாயலை கொண்டிருந்தாள் அவனுக்கு அவள் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு அதிகமாயிருந்தது.

தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டோ, மாட்டுச் சாணக் கூடையை தலையில் வைத்துக்கொண்டோ சென்ற நேரங்களில் இப்படியான உரையாடல்கள் அவனுக்கும் அவளுக்குமிடையில் நடந்திருக்கிறது.

‘என்ன, இந்த பக்கம்லாம் ஆளு வந்திருக்கு’

‘உன்னய பாக்கதாம்...’

‘சொல்லியிருந்தா உங்க வீட்டுக்கு வந்திருப்பம்லா’

‘தேடியாந்து பாத்ததான அது இருக்கும்’

‘அதுன்னா?’

‘அதுன்னா, அதாண்டி... செவப்பி’

-இப்படியான உரையாடல்கள் சிலருக்கு கிறக்கத்தையும், சிலருக்கு காதலையும் கொடுத்திருக்கிறது. அவளது பேச்சில், அவனோடு மாடு மேய்க்கும் சிலரும் காதலாகி கனிந்துருகியிருக்கின்றனர். உ.மகாளிக்கு அவளது பேச்சும் பிடித்திருந்தது. எப்போதுதாவது மூங்கில் காட்டுக்கு போகிறவன், இவளுக்காக கொஞ்ச காலம், ரெண்டு நாளுக்கொருமுறை அங்கு சென்று வந்தான். அவளோடு பேச வாய்ப்பில்லாத நேரங்களில் அர்த்த சிரிப்புகளோடும் கண்களாலும் காதல் வளர்த்தான்.

சில மாதங்களுக்கு முன் அவளுக்கு அம்மை போட்டிருந்தது. முகம் உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு புள்ளிகளை தோற்றுவித்து, அவள் அழகை குறைத்திருந்தாள் அம்மன். இதன் பொருட்டு, அவள் வெளியில் வருவதை குறைத்துக்கொண்டாள் என்பதும், உ.மகாளியை விசாரித்தாள் என்பதும் அவள் வீட்டருகே இருக்கும் இவனது சேக்காளி மூலமாக அறிய வந்தது. ரெண்டு மாத காலம் இந்தப் பக்கம் வருவதை தவிர்த்ததன் காரணமாகத்தான் அடுத்து மூக்கம்மாளை காதலிக்க ஆரம்பித்தான் என்பது முன் கதை.

குள்ராட்டிக்கு செல்லும் வழியில் கொம்பனை பார்த்ததும் அவளது ஞாபகம் வந்தது. இப்போது அவள் உடல் குணமாகியிருக்கலாம் என்று நினைத்தான். ஆனால், இன்னும் சில வாரங்களுக்கு குள்ராட்டியிலிருந்து ஊருக்குள் இறங்க கூடாது என்கிற முடிவோடு போகிற உ.மகாளி, இவள் பொருட்டு ஒரே வாரத்தில் வரும் ஆசையை கொண்டான். ஆசைகள் ஆளும் சக்தி கொண்டவை.

பூவன்குறிச்சி தாண்டி, கோயில்பிள்ளை நாடார் தோப்பருகில் செல்லும்போது நான்கு எருமைகள் வயல்களுக்குள் குதித்தது. அங்கு, ஈராய்ங்கம் மற்றும் உளுந்து விதைக்கப்பட்டிருந்தன. நொடிஞ்சானும், தவிட்டானும் அதை விரட்டப்போக, நடு வயலுக்குள் அங்கும் இங்கும் ஓடி வயலை சிதைத்துவிட்டன. தவிட்டான், கப்பை கொம்பு மாட்டின் முதுகில் கம்பால் ஓங்கி அடித்தான். அடி தாங்காமல் அது ரோட்டுக்கு வந்தது. அதை பார்த்து மற்றதும். வயல்காரர்கள் அங்கு யாரும் இல்லாததால் தப்பித்தார்கள்.

கருத்தப்பிள்ளையூரிலிருந்து கீழாம்பூர் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பால் சாமுவேல் வாத்தியார், சைக்கிளில் லேட்டாக வந்துகொண்டிருந்தார். உ.மகாளி அவரிடம்தான் மூன்றாம் வகுப்பு வரை படித்தான். அந்த வகுப்பில்தான் ஏபிசிடி ஆரம்பமாகியது. அவன் மண்டைக்குள் அது ஏற மறுக்க, பள்ளிக்கூடத்தை முழுவதுமாக நிராகரித்திருந்தான் அவன். அதற்காக சாமுவேல் வாத்தியாருடனான அவனது நட்பு வேறுவிதமாக வளர்ந்திருந்தது.

‘என்ன சார்வாள்... லேட்டா போறியோ’

‘ஏல உச்சி, எங்கடா போற இங்க’

‘குள்ராட்டிக்கு’

‘அப்டியா, எள்நீ குடிச்சுட்டு போறியா... எந்தோப்புதான், இந்தா எதுத்தாப்ல இருக்கது’

‘இல்ல சார்வாள். இன்னோரு நாளு பாப்போம்.. ஆமா, ஏம் லேட்டு?’

‘இன்னைக்கு கடையம் வரை போவணும். யூனியனு மீட்டிங்கு’

‘சரி சரி...வரட்டா’

கடனாநதி ஆற்றுக்குள் தண்ணீர் குடிப்பதற்காக மாடுகள் இறக்கி விடப்பட்டிருந்தன. கேசரியும் கந்தையாவும் இரண்டு தூக்கு வாளியில் பழையை சோறை கஞ்சியோடு எடுத்து வந்திருந்தார்கள். தொட்டுக்கொள்ள சுண்டக்கறியும் மாங்காய் ஊறுகாயும்.

நால்வரும் அமர்ந்து சாப்பிடும்போது ஆற்றுக்குள் மாடுகள் கணைக்கும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தார்கள். திக்கென்றிருந்தது அவர்களுக்கு.

(தொடரும்).

8 comments:

அ.மு.செய்யது said...

இந்த பகுதி சுவார‌ஸ்யம்..கடைசியில் என்ன அது "திக்".....

நீங்க விட்ற கேப்புக்கு இன்னும் எத்தன மாசம் வெயிட் பண்ணனுமோ ?!?!?!

ஆடுமாடு said...

//கடைசியில் என்ன அது "திக்"...//

நாங்களும் சஸ்பென்ஸ் வைப்போம்ல!

//நீங்க விட்ற கேப்புக்கு இன்னும் எத்தன மாசம் வெயிட் பண்ணனுமோ//


மாடுமேய்க்கிற வேலை இருக்குலா பாஸு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுவாரஸ்யம், அஞ்சு எப்ப வரும்?

ஆடுமாடு said...

அமிர்தவர்ஷினி அம்மா, சீக்கிரமா போஸ்ட் பண்ணிடறேன்.

நன்றி

பாலகுமார் said...

நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

நன்றி பாலகுமார் .

தமயந்தி said...

அடுத்ததுஎன்ன ? அடுத்தது என்ன மிஸ்டர் திக்

ஆடுமாடு said...

//அடுத்தது என்ன மிஸ்டர் திக்//


தமயந்தி அக்கா, 5-ல தெரிஞ்சுரும்.


நன்றி.