Sunday, July 6, 2008

தலை மலை அய்யன்

ஊர்ல மழைதான் முக்கியம். வெவசாயத்துக்கு அதுதான உயிரு. எட்டு மாச கோடையில மழை வாரது கஷ்டம்தான். வெவசாயிவோ திக்குமுக்காடி போவாவோ. ‘இப்ப மழை வந்தா பயிருலாம் பொழச்சுக்கிடுமே’ங்குத நெலமை வந்தா, ஊருல இருக்குத ஐயமாருவோ வூட்டுக்கு வெஷயம் போவும்.

அவங்கலாம் ஒண்ணு கூடி, ராமநதி அணைக்குள்ள இருக்குத தலை மலை அய்யன் (அய்யனாரு) கோயிலுக்கு போயி, பந்தலை போட்டு உக்காந்திருவாவோ. கூடவே ஒரு கூடையில பச்சை மௌகாயும் இருக்கும். அஞ்சு நாளு யாகம் நடக்கும். அஞ்சு நாளும் ஊரு பூரா இங்கதான் கூடி இருக்கும். சாப்பாடெல்லாம் இங்ஙனதான். விருந்து மாதிரி, தலை வாழை எலை போட்டு தடாபுடால்னு நடக்கும்.

நாலாவது நாளுலேயே சில சமயத்துல மழை பெஞ்சுரும். அஞ்சு நாளு வரைக்கும் மழை பெய்யலைன்னு வையுங்கோ. கோயிலுக்கு வெளியில இருக்குத சாமி செல மேல ( கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில வந்தாருங்கதுக்கு கதை இருக்கு) அந்த பச்ச மௌகாயை அரைச்சு, சாமி செல மேல பூரா பூசிருவாவோ. அந்தானி, எல்லாரும் அவ்வவ்வோ வூட்டுக்கு போயிருவாவோ. மௌகா பூசுன 24 மணி நேரத்துல மழையை கொண்டு வந்திருவாரு சாமி.
இதனால தலை மலை அய்யன்னு சாமிக்கு பேரு.

கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில இருக்காரு? அந்த கதைய கேளுங்க.
கோடையிலயெல்லாம் ராமநதில தண்ணி வத்திபோவும். அணையில கொஞ்சமாத்தான் தேங்கி கெடக்கும். அணைக்குள்ள இறங்கி மேற்காப்ல போனா மலை. அந்த வழியாதான் எல்லாரும் வெறவு வெட்டிட்டு வருவாவோ.

ஒரு நாளு, புள்ளதாச்சி பொம்பளை ஒருத்தி வெறவு வெட்ட போயிருக்கா. போற வழியிலேயே அவளுக்கு வயித்து வலி வந்துட்டு. என்ன பண்ணன்னு தெரியாம, உக்காந்து வயித்தை புடிச்சுட்டு அழுதிருக்கா. பின்னால வந்த இன்னொருத்தி, இங்ஙன இருந்து இவளுக்கு எப்படி பெரசவம் பார்க்கன்னு யோசிச்சிருக்கா. அந்தானி, ஆபத்துக்கு பாவமில்லைன்னு கோயிலுக்குள்ள அவளை கூட்டிட்டு போயிட்டா. அங்ஙனயே பெரசவம் நடந்திருக்கு.

இதை பாத்துக்கிட்டு சாமி அங்க இருக்க முடியுமா? சாமி வெளியில வந்து உக்காந்துட்டாரு. பெரசவம் நல்லபடியா நடந்து அவளும் பிள்ளைய தூக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா. ஆனா சாமி மட்டும் உள்ள போவாம வெளியிலயே உக்காந்திகிட்டாரு.
இதுதான் சாமி கோயில விட்டு வெளிய வந்த கதை.
கடையம் பக்கம் போனீங்கன்னா, ராமநதிக்குள்ள இருக்குத, இந்த தலை மலை அய்யனை பார்த்துட்டு வாங்க.

16 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்லா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... சாமிய எப்படி சாதரணமா மனுசன் மாதிரியே ட்ரீட் பண்ணி இருக்காங்க. குடுஇல்லாட்டி அடிப்பேன் மாதிரி.. :)

ஆடுமாடு said...

சாமான்யன் நன்றி.

ambi said...

ராம நதிகுள்ள இருக்கா? நீங்க எந்த கோவில சொல்லுதிய அண்ணாச்சி?
காரயார் அணையா?

ஆடுமாடு said...

//குடுஇல்லாட்டி அடிப்பேன் மாதிரி.. :)//

இதுக்குமொரு கதை இருக்குதாம். ஏன் சாமி மேல மிளகாயை பூசணுங்கறதுக்கு. அதையும் எழுதினா ரொம்ப பெருசா போயிருமேன்னுதான்.

நன்றி முத்துலட்சுமி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

சொரிமுத்தய்யன் வேறயா.. அவியளும் காட்டுக்குள்ளயும் ஆத்துக்குள்ளாரயும்தானே இருப்பாக அவியளையும் பிரசவம் பார்த்த அய்யன்னும், சடவுடையாருன்னும் சொல்லுவாக தானே... நீங்க சொல்லுதியளே அவியளும் இவியளும் ஒன்னுதானே இல்ல வேற வேறயா...

Anonymous said...

ரொம்ப துடியான அய்யனார் போல! இப்படி கோச்சுக்கிட்டார்.

anujanya said...

நல்லா போய்கிட்டிருக்கு. தொடருங்கள்.

அனுஜன்யா

கிருஷ்ணா said...

நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். மணிமுத்தாறு அருகில் எங்கள் குலதெய்வத்திற்கும் இதுபோல் வாய்மொழி கதை உள்ளது.

ஆடுமாடு said...

கிருத்திகா,

சொரிமுத்து அய்யனாரு காரையாருல இருக்காரு. அவருக்கு வேற கதை இருக்கு. இது சடைவுடையாரும் இல்லை. இவரும் வேற சாமி.
இதை பத்தியும் எழுதலாம்னு இருக்கேன்.

நன்றி

ஆடுமாடு said...

அம்பி, வருகைக்கு நன்றி.

நீங்க ஊரை விட்டு வந்து ரொம்ப வருஷமாச்சுன்னு நினைக்கிறேன்.
காரையார்ல இருக்கறது சொரிமுத்து அய்யனார் கோயில்.

ஆடுமாடு said...

அனுஜன்யா, கிருஷ்ணா நன்றி.

தருமி said...

கடையத்துக்கு ஒரே ஒருவாட்டி வந்திருக்கேன்.

ஆடுமாடு said...

அது பக்கம்தான் எங்க கிராமம் தருமி சார்.

சித்திரவீதிக்காரன் said...

வாய்மொழி கதைகள் எல்லாம் வாசித்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. அதுவும் அதை வாசிக்கும் பொழுது ஒரு கதைசொல்லி சொல்லச்சொல்ல கேட்பது போலவே இருந்தது. சென்னையில் வசிக்க வேண்டிய நிர்பந்தத்திலும் நெல்லையின் வட்டாரவழக்கு மாறாமல் கதைகளை நீங்கள் எழுதியிருப்பது அருமை. 'ஒரு ஊரில் மழை பெய்யாவிட்டால் பிள்ளையாரை தூக்கி ஆத்துக்குள் குழியை தோண்டி மூடிவிடுவார்களாம்,பிறகு தானா மழை வந்துடுமாம்' நம்ம மக்கள் இது போல பல விசயங்களை மழை வேண்டி செய்து கொண்டுதானிருக்கிறார்கள். நன்றி.

ஆடுமாடு said...

//சென்னையில் வசிக்க வேண்டிய நிர்பந்தத்திலும் நெல்லையின் வட்டாரவழக்கு மாறாமல் கதைகளை நீங்கள் எழுதியிருப்பது அருமை//

சித்திரவீதிக்காரன் நன்றி.

வெறுமையான நாட்களில் ஊரும் ஊர் ஞாபகங்களுமே உயிர் வாழ வைக்கிறது.