Monday, November 5, 2007

வம்பளந்தான் -கேரக்டர் - 2

உடலு பூராவும் நச நசன்னு ஆவுத மாதிரி வெக்கை, வேனலு. செத்த நேரத்துல மஞ்ச வெயிலு அடிச்சுட்டு இருந்தது. சுள்ளுனு அடிச்ச வெயிலு, நெறம் மாறுனதுமே புரிஞ்சிருக்கணும். அந்தாப்ல, சட சடன்னு விழுந்தது பாருங்கோ மழை. கன்னா பின்னானு பின்னியெடுத்துட்டு. ஒரு பக்கமும் ஒதுங்க முடியாது. நடு ரோடு. இந்தப் பக்கம் கதிரடிப்பு. அந்தப் பக்கம் சூடடிப்பு நடக்கு. அடுத்தாப்ல புனையலு. கதிறு கட்டை, தூக்கிட்டும் போய்ட்டும் இருக்காவோ.

கீழ்ப்பக்கமும் மேல்பக்கமும் தண்ணி ஓடை. குட்டி குட்டி மீனுவோ துள்ளிக்கிட்டு பளிங்கு தரை மாதிரியான ஓடை. ஓடைக்கரை மேல தென்ன மரங்களா இருக்கு. அந்தாப்லயும் இந்தாப்லயும் பச்சைப்பசேல்னு வயக்காடுவோ. எங்க போயி ஒதுங்க? அடிக்கிற மழையும் கல் மழை மாதிரி தும் தும்முனு உடலுல விழுது. இந்தேறு இந்தா அடி அடிக்குன்னுட்டு அறுப்படிச்சுட்டு இருந்தவோயெல்லாம் அஞ்சாறு சாக்கை எடுத்து நெல்லை மூடிட்டு ஓடியாராவோ.

பிணையல் மாட்டை அடிச்சுட்டு இருந்தவோ, மாட்டை அவுத்துவிட்டுட்டு ஓடியாராவோ. எல்லாரும் ஓடியாந்தது அறுப்புக்கடைக்கு. அந்த எடத்தை தவிர அங்க ஒதுங்கதுக்கு வேற எடம் இல்லை.

கடைய வம்பளந்தான் போட்டிருந்தான். சின்ன வயசுக்கார பயதாம். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணம் முடிச்சாம். ஒவ்வொரு அறுப்புக்கும் களத்துமேடு பக்கத்துல கடை போட ஏலம் நடக்கும். ஊரை விட்டு ரெண்டு ரெண்டரை மைல்லதான் களத்துமேடுங்கறதால சுக்காப்பி, பீடி வாங்கணும்னா கூட போயிட்டு வர முடியாது. அதுவும் ராத்திரி பூரா சூடடிடப்பு, பிணையல், வைக்கப்படப்பு காவல்னு ஏகப்பட்ட வேலை இருக்கு. ராத்திரி, பகல்னு பாராம ஆளுவோ வந்துட்டும் போய்ட்டும் இருப்பாவோ. அவங்களுக்காகத்தான் இந்தக் கடை.


ஊர்ல அஞ்சு அறுப்புக்கடைக்கு ஏலம் நடக்கும். ரைஸ் மில் களம். மேல ரைஸ் மில் களம். கோவங்குளம் வெதப்பாட்டுக் களம். காக்கநல்லூரு முக்கு களம். கடனாநதி ஆத்து களம்னு அஞ்சு களம் இருக்கு. இங்கல்லாம் அறுப்புக் கடை போடணும். கடனாநதி ஆத்துக்கு மேக்க ஆழ்வார்க்குறிச்சிக்குப் போற வழியில இந்த கடை. இங்கதான் அறுப்படி அதிகமா நடக்கதால, இந்த கடைய ஏலத்துல எடுக்க சரியான போட்டி. போன தடவையும் வம்பளந்தான்தான் ஏலத்துல எடுத்திருந்தான்.

ஒரு பூவுக்கு ஏலத்துல எடுத்தா, அடுத்த பூவுக்கு சும்மா கடை வச்சிக்கிடலாம். அதுக்கு ஏல நெல் அளவை உண்டு. நீர்ப்பாசன கமிட்டிக்கு கொடுக்கணும். சில பேரு, கடைய எடுத்தாம்னா,‘சரியா யாவாரம் நடக்கலை, நெல்லே கெடைக்கலை’ன்னு மூக்கால அழுதுட்டு நீர்ப்பாசனக் கமிட்டிக்குக் கொஞ்சமா நெல் கொடுப்பானுவோ. இவன் அப்டிலாம் இல்ல. சொன்னா சொன்ன மாதிரி நடந்துகிடுவாம்.

ஒன்னரை மாசம் கதிரடிப்பு நடக்கும். அதுவரை ஜகஜோதிதான். கூத்து, கும்மாளம்னு வம்பளந்தானுக்கு சந்தோஷம் பொங்கும். இதுக்கு காரணமில்லாம இல்ல. கதிரறுக்க வார அசலூர்க்கார பொம்பளைலுவோ இவங் கடையிலதான் கடனு வைப்பாவோ. வேறு யாருக்கும் கடங் கொடுக்காத இந்தப் பய, அவளுவோளுக்கு மட்டும் வாமடை மாதிரி வாய தொறந்துகிட்டு கொடுப்பான். அங்கங்க சின்ன சின்ன தொடுப்பும் உண்டு. இந்த தொடுப்புக்காகத்தான் அவன், இந்த கடைய போட்டி போட்டு ஏலத்துக்கு எடுக்காம்னு ஊர்ல பேசிக்கிடுவாவோ.

கடைன்னா பெரிசா எதுவும்னு நெனச்சுக்கிடாதீங்க. தென்னங்குச்சிலுதான். அதுக்குள்ள அஞ்சு பேரு உக்காரலாம். பத்து பேரு நிக்கலாம். ஒன்றரை மாசம் வரைக்கும் அவனுக்கு இதுதான் வீடு. உள்ளயே ஒரு மூலையில வேட்டி, சட்டைய தொங்க போட்டுருப்பாம். எல்லா சாமானையும் நெல்லுக்குத்தான் கொடுக்கதால அந்த நெல்லை, ரெண்டு மூணு சாக்குல சேர்த்து வச்சிருவான். நாலஞ்சு சாக்கு சேர்ந்ததும் வீட்டுக்குப் போயிரும் மூட்டை. இந்த நெல்லுக்காக நாலஞ்சு எலி அங்கன இங்கனன்னு அலைஞ்சுட்டே இருக்கும். மழை வந்துட்டா சிக்கலுதான். கடை இருக்கறது எறக்கத்துல. தண்ணி பூரா கடைக்குள்ள வந்துரும். சாக்கை விரிச்சு தூங்க முடியாது. இப்படியாவும்னு தெரிஞ்சே, ஒரு மர கட்டுலு கொண்டு வந்து போட்டுருந்தாம். அது கடையோட பாதி இடத்தை அடைச்சுக்கிட்டு அய்யோன்னு கெடந்தது. ரெண்டு மூணு சட்டியில சுண்டலு, வெள்ளப் பயிறு, சீனி கிழங்கு, அவலுன்னு வச்சிருந்தாம்.

ஆறிப்போன இட்லியும், தோசையும் அடுக்கி வச்சிருந்தாம். நாலஞ்சு பாட்டில்ல ஆரஞ்சுவில்ல, கடலமிட்டாயி, பிஸ்கட்டு. சுக்காப்பி அடிக்க மண்ணெண்ண ஸ்டவ்வு. அது பாதி நேரம் ரிப்பேராயிரும்.
மழைன்னு எல்லாரும் இங்க ஓடியாந்து நின்னாவோ. பத்து பதினஞ்சு பேருக்கு மேல கடையில நிக்க முடியல. ஒடுங்கிகிட்டு நிக்காவோ.

கூட்டத்தைப் பாத்ததும் வம்பளந்தானுக்கும் ஒண்ணும் சொல்ல முடியல. ஆளுவோ வாரத பாத்ததும் அவனாலயும் உக்கார முடியல. வந்தவோளும் சும்மா நிக்காம ஆளாளுக்கு சுக்காப்பிய கொடு, பீடிய கொடுன்னு கேக்காவோ. சுக்காப்பி போட்டுட்டுடிருந்த அவன் பொண்டாட்டிக்கு வேசடையா இருந்துச்சு. கூரைக்கு மேப்பக்கம் கொஞ்ச பேரு நின்னாவோ. மேக்க பாத்து அடிக்க மழைதான்னாலும் அவ்வோ மேல தண்ணி விழாம இல்ல. ஒதுங்க முடியாம எல்லாம் நனைஞ்சு போய், வேற வழியில்லாம நிக்கவேண்டியதா போச்சு. அரை மணிநேரம் உண்டு, இல்லைன்னு பண்ணிட்டு மழை.

செத்த நேரத்துல மழை தண்ணி, ஓடை மாதிரி கடைக்குள்ள வந்துட்டு. நெல் வச்சிருக்குத சாக்கு மூட்டைலாம் வம்பா போயிரும்னு கவலையில இருந்தாம். இருந்தாலும் அங்ஙன ஒண்ணும் செய்ய முடியாது. இந்த வேசடை வேற.

மழைய வச்சு கொஞ்சம் யாவாரமும் ஆச்சு. லேசா மழை உட்டதும், எல்லாரும் மூஞ்சிய சேலை, வேட்டியால துடைச்சுக்கிட்டு போனாவோ. தற்செயலா வம்பளந்தான் வாசல்ல பாத்தான். முந்தா நாளு ராத்திரி சுக்காப்பி வாங்க வந்த அதே பொம்பளை நின்னு சிரிச்சுட்டிருந்தது.

இவனுக்கு குபுக்குனு ரெத்தம் ஏறி இறங்குச்சு.

பக்கத்துல வீட்டுக்காரி இருந்தாலும் கேட்டான்.

‘என்னம்மா எப்படி இருக்க?’

அவ வெட்கமா சிரிச்சுட்டிருந்தா. பயலுக்கு கெறக்கம் ஜாஸ்தியாயிட்டு.

‘ஒனக்கு இடகாலுதான?’

‘ம்...தெரியாத மாரி கேக்கேளே’

‘அதான, உன்னய எப்படி மறப்போம். போன அறுப்புக்கு வந்திருக்கலா...?’ன்னு சொல்லிட்டு கண்ணடிச்சாம்.

அவா, அவன் வீட்டுக்காரிய கோஸ் கண்ணு போட்டு பாத்துட்டு கீழ பாத்து சிரிச்சா.

பயலுக்கு பழைய யாவம் வந்துட்டு.

‘ போன அறுப்புக்கு ஆத்துக்குள்ள குடிச போட்டிருந்தியோ. இப்ப எங்க?’கேட்டான்.

‘இன்னா ஒங்க கடைக்கு எதுதாப்ல. அந்தா தெரியுதுலா ஒத்தை தென்னம்புள்ள அதுக்கு கீழ.’

‘அதானா...செரி செரி... உங்கம்மா வந்திருக்காளா?’

‘இல்ல... அவ நாளைக்குதான் வாரா... தங்கச்சியும் நானுந்தாம் இருக்கோம்’

வம்பளந்தான் வீட்டுக்காரி இந்த பேச்சை கேட்டுட்டு கண்டுக்காம இருந்தா.

இன்னும் மழை முழுசா விடல. தூறிகிட்டுதான் இருந்தது.

‘சுக்காபி குடிக்கியா?’

‘வேண்டாம், பெறவு வாரன்'

வம்பளந்தானுக்கு கொஞ்சம் மீசை துடிச்சுட்டிருந்தது. லேசா சிரிச்சுக்கிட்டாம்.

போன அறுப்புக்கு அவா வந்திருந்தா. பேரு மரகதம்னு சொன்னா. நல்ல புள்ள. இதே போல திடீர் மழை. கடையில அவன் மட்டும்தான் இருந்தாம். ராத்திரி போல சுக்காபி வாங்க வந்தா அவா. இவனும் ஒரு நெனப்பும் இல்லாமத்தான் பேச்சுக்கொடுத்தாம். அவளப் பத்தி வெவரத்தையெல்லாம் சொன்னா. ஆத்தோரமா குடிசை போட்டிருக்கதையும் சொன்னா. சொன்னவா அதோடலா போயிருக்கணும். ‘என்னமோ தைரியமா வந்துட்டேன். போவதுக்கு பயமா இருக்கு. துணைக்கு வாருமே...’ன்னா. அந்தானிக்குத்தான் அவனுக்கு வயித்துக்குள்ள என்னமோ செஞ்சுது. கடைய லேசா சாச்சுவச்சுட்டு ராத்திரி போல கார்த்திகை மாச நாயி மாதிரி, பின்னாலயே போனாம். பச்சத்தி மாடன் கோயிலை தாண்டுனதும் அவ சொன்னா.

‘காப்பிய கொஞ்சம் நெறயதாம் தந்தான்னா.. நாங்க குடிச்சுருவோம்னா கிண்ணத்துல கொடுக்குத மாதிரி கொடுக்குயோ’ன்னா.

‘ஒனக்கு இல்லாததான்னு பேசிகிட்டிருக்கும்போதே பொசுக்குனு அவ கைய புடிச்சுட்டாம். அந்த புள்ள, ‘ச்சீ... விடுங்க யாராது பாத்திர போறாவோ’ன்னா. பயலுக்கு போதாதா?

இது ரெண்டு மூணு நாளா தொடர்ந்தது... இதே போல அவா ராத்திரி சுக்காபி வேங்க வருவா. ரெண்டு பேரும் போவாவோ.

பெறவு அறுப்படிப்பு முடிஞ்சதும் அவ அவ ஊருக்கு போயிட்டா. போன அறுப்பு இவ வரலை. இந்தா இப்பம் வந்திருக்கா. பயலுக்கு ஒண்ணுன்னா யாவம் இருக்கும். இதே போல எத்தனையோ?

களத்துல நெல் கெட்டை தூக்கிட்டு வந்தவோயெல்லாம் ஓரமா உக்காந்து சாப்டுட்டு இருக்காவோ. அந்த புள்ள கடைக்கு வந்துட்டு. பயலுக்கு சிரிப்பாணி. இளிச்சு இளிச்சுப் பேசிக்கிட்டிருந்தாம். மேல் பக்கம் ஆளுவோ இருந்ததால பேச்சோட நிறுத்திக்கிட்டிருந்தாம். இருந்தாலும் மனசு கேக்கலை. கையை லேசா அவ தோள்ல போட்டுட்டு நிக்கும் போது வந்து தொலைச்சா அவன் வீட்டுக்காரி. கறிக்குழம்பு வச்சு எடுத்துட்டு வந்திருந்தா. இதை பார்த்ததும் வம்பளந்தானுக்கு என்ன செய்யன்னு தெரியல. கையில வச்சிருந்த பித்தளை தூக்குச்சட்டியை அந்த புள்ள மேல தூக்கி எறிஞ்சா. ‘எடுபட்ட செரிக்கி என் தாலி அறுக்க வந்தியோ...கண்ட நாயிட்டலாம் முந்தானைய விரிச்சுட்டு இப்ப இவரா கெடச்சாரு’ன்னு கீழ கெடந்த மரக்கட்டையை தூக்கிட்டு விரட்டுனா. அவ வெளிய தெரிஞ்சா கேவலம்னு ஒரே ஓட்டம். அதுக்குள்ள அக்கம் பக்கத்துல சாப்டுட்டு இருந்தவோயெல்லாம் என்ன என்னன்னு வந்துட்டாவோ.

இந்த பய, ‘ஒண்ணும் இல்லை; ஒண்ணும் இல்லை; சின்ன பிரச்னை’ன்னு அவ்வோளை போவ சொல்லிட்டாம். ஆனா, இவ அவனை எரிக்கது மாதிரி பாத்துட்டு, இனும என் மூஞ்சியில முழிக்காண்டாம்னு போனா. அன்னைக்கு போனவதாம் இன்னும் இங்க வந்து எட்டிப்பாக்கலை. கல்யாணமும் பண்ணாம பத்தையில அவ அண்ணன் வீட்ல இருக்கான்னு பேச்சு.
வம்பளந்தானுக்கு என்ன? ஒவ்வொரு பூவுக்கும் ஏலத்துல கடைய எடுக்காம். அந்தானி, மரகதம் பிள்ளைய மாதிரி எத்தனையோ வந்து மாட்டுது. வாழ்க்கை அவனுக்கும் ஓடிக்க்கிட்டிருக்கு.

2 comments:

துளசி கோபால் said...

'வம்பளந்தான்' பேருக்கேத்த ஒரு கேரக்டர்.

நல்லா எழுதறீங்க ஆடுமாடு.

நானும் 'எவ்ரி டே மனிதர்கள்' என்ற தலைப்பில் ஒரு 26 பதிவுகள் முந்திப் போட்டுருக்கேன்.

ஆடுமாடு said...

வணக்கம் டீச்சர். உங்க பழைய பதிவை படிக்கலை. தேடுறேன். அப்புறம் தீபாவளி வாழ்த்துகள்.