Tuesday, November 27, 2007

வில்லடிச்சான் 1: கேரக்டர் 5

மனசுக்குள்ளேயே படிச்சுப் பாத்துக்கிடுவாம். ஆனா, தங்கணுமில்ல. வீட்டுக்கு வந்ததுமே மறந்துரும். அம்மனுக்கு பாடுனதை பட்றையனுக்குள்ளதா நெனச்சுக்கிடுவாம். இந்த தொல்லை, நாளைக்கு வில்லங்கத்துலலா விட்டுரும்னு நினைச்சாம். அந்தாப்ல, தங்கிடு பயதாம் ஐடியா கொடுத்தாம். அண்ணே கேசட்டுல பதிவு பண்ணிரலாம்ணேனு. அது என்னல கேசட்டு?ன்னான்.

அப்பலாம் அது ரொம்ப பேருக்கு தெரியாது. ரேடியோ பொட்டித்தாம் ஊருபூராம். கோவங்கொளத்துக்காரன் ஒருத்தம் பம்பாய்க்கு போய்ட்டு வந்திருந்தாம். அவன் வீட்டுலதாம் டேப் ரெக்கார்டரு இருந்துச்சு. ரெண்டு ஸ்பீக்கரை வாசல்ல வச்சு ஊருக்கே கேக்குத மாதிரி பாட்டு போட்டுட்டு இருப்பாம். அங்க இருக்கத இருவது வீடுதாம். அது ஒரு ஊரு.தங்கிடு பய அவங்கிட்ட கூட்டுட்டு போனாம் கிட்னனை. டேப் ரெக்கார்டரை மேலும் கீழும் பாத்தான்.

‘இதுக்கு எம்புட்டு ஆவும்டே’ன்னான்.‘எல்லா ரேட்டுக்கும் இருக்குண்ணே’

‘கொறஞ்ச வெலக்கு’

‘ஆயிரம் ரூவா’

‘அவ்ளவு ஆவுமோ’

‘அதே கொறச்சலு’

‘அப்டியா...ஒரு மாசம் போவட்டும். சொல்லுதேன், வாங்கித்தாடே’ன்னுட்டு, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டுவோ அஞ்சாறை கேட்டுட்டு வந்துட்டாம்.

வந்துட்டானே ஒழிய அதை எப்படி வாங்குததன்னுட்டு கொழம்பிட்டு இருந்தாம். பொண்டாட்டிக்காரிட்ட கேட்டா, ‘ஆமா, இதுமட்டுந்தான் கொற’ம்பா. இப்படி யோசனையோட அக்கம் பக்கத்தூர்கள்ல வில்லு நடந்ததுன்னா போயிருவாம்.அதே வேகத்துல வீட்டுக்கு வருவாம்.

ஒரு கிலோ கருப்பட்டியையும் வாங்கிட்டு வந்துருவாம். கருப்பட்டி எதுக்குன்னா மூணு, மூன்றரை மணி நேரம் வில்லு பாடும் போது, நாக்கு வரண்டு போவும். அதுக்கு இதைக் கொஞ்சம் கொஞ்சம் பிச்சு வாயில போட்டுக்கிடுவாவோ. மைக் இருந்தா நாக்கு வரளும். இங்க வீட்ல இருந்து பாடுததுக்கு கருப்பட்டி எதுக்கு? ஆனாலும் வாங்கிட்டு வந்துருவாம் இந்த பய. பழகணுமாம்.

எதுத்த வீட்டு அடுக்கூட்டா மவனை கூட கூட்டிட்டு, இவன் பாட, அவன் பக்கப்பாட்டுப் பாடன்னு இருந்தான். பக்கப்பாட்டு எல்லாராலயும் பாடிர முடியாது. பொலவரு, ‘சட்ட நாதன் சங்கிலி பூ...’ன்னு அரையுங்கொறயுமா முடிச்சு இழுப்பாரு. உடனே பக்கப்பாட்டு பாடுதவன் ‘‘பூ....த...ம்.’னு இழுத்து முடிக்கணும். அடுக்கூட்டா மவன் கொஞ்சம் கூறுள்ள பய. பக்கப்பாட்ட நல்லாதான் பாடுனான். இவனுக்குதான் இழுவ சரியா வரல.

என்னதான் கர்ர்புர்ருனு படிச்சாலும் பாட்டுல கெத்து இருக்கணும்லா. கொரலு கம்பீரமா இருக்காண்டாமா? இருந்தாலும் விடாப்பிடியா இருந்தான் பய. பொலவருங்க மாதிரி கழுத்துல பெரிய சங்கிலிய வாங்கி போட்டாம். பத்து வெரலுக்கும் பத்து வெதமான மோதரம். ரெண்டு பட்டு வேட்டி. நாலஞ்சு ஜிப்பானு வாங்கி வச்சுக்கிட்டாம். மைனரு மாதிரி மினுக்கிட்டி வந்துட்டிருந்தான். இதுக்கு, மேலபத்து வயக்காடு காலியாச்சு.

இதோட அந்த டேப்பையும் வாங்கிட்டாம். அஞ்சாறு கேசட்டையும் வாங்கிட்டு வந்துட்டாம். சுத்துபட்டுல எந்த கோயிலா இருந்தாலும் போயி, ரெக்கார்டு பண்ணிட்டு வந்துட்டு இருந்தாம். ஏதோ யாவத்துல பெருமா கோயிலு திருவிழாவுக்குலாம் டேப்பை தூக்கிட்டு போயிட்டாம் பய. பெருமா கோயில்ல யாராவது வில்லு பாடுவாவோலா? அது ஐயருமாரு கோயிலு. இப்படி கொஞ்ச கூத்தா பண்ணியிருக்காம்?

திடீர்னு எந்த பய கொடுத்த ஐடியாவோ தெரியல. கார்சாண்ட்ல தொரயப்பா கடை பக்கத்துல, சின்ன போர்டு வச்சாம். ‘வில்லு பொலவரு, அண்ணாவி கிட்னன். இங்கே தொடர்பு கொள்ளவும்’னு அதுல எழுதியிருந்தது. ஏற்கனவே இடைகாலுல இப்படியரு பொலவரு போடு வச்சிருந்தாரு. அதுல, ‘ரேடியோ புகழ் அண்ணாவி மாடசாமி’ன்னு இருந்ததைப் பாத்து இருக்க முடியல இவனுக்கு. நாமளும் எப்படியாவது ரேடியோ புகழ்னு போட்டுரணும்னு துடியா துடிச்சாம். அது என்ன லேசுபட்ட காரியமாய்யா? இதுவரைக்கும் ஒரு கோயில்ல கூட வில்லு பாடல. அதுக்குள்ள இந்த அலப்பறை.

அங்க இங்கன்னு போயி ரேடியோல பாட என்ன செய்யணும்னு கேட்டுட்டு இருந்தாம். காசி வாத்யாருட்ட கேளுன்னு ஒருத்தன் சொன்னாம். அவரு சும்மா ஏதாவதுன்னாலே, பொசுக்குனு பொடதில அடிச்சுருவாரு. அவருட்ட போய் எப்படி கேக்க?ன்னு யோசிச்சுட்டு இருந்தாம். காசி வாத்தியாரு கூட வேல பாக்குத மாடசாமி வாத்தியார்ட்ட கெஞ்சி கூத்தாடி, அவரையும் கூட்டி போனாம். அவரு இவனோட ஆர்வத்தை பாத்துட்டு, ‘நல்ல பயடா நீ’ன்னாரு. பெறவு, ‘ஏய்... கண்ணகி கதைய வில்லு பாட்டுக்கு ஏத்த மாதிரி பண்ணிட்டு வா. நான் பாத்துக்கிடுதேன்’னாரு.

இந்த அர்தலி திரு திருன்னு முழிச்சாம். அந்தானி, ஒரு கேள்வி கேட்டாம் பாருங்கோ, வாத்தியாருக்கு கோவம் வந்துட்டு.

‘கண்ணகின்னா யாரு சார்வாள்?’

சொல்லுதேன்

4 comments:

இலவசக்கொத்தனார் said...

//‘கண்ணகின்னா யாரு சார்வாள்?’//

:))

☼ வெயிலான் said...

இந்த வில்லடிச்சான் ஆ....ட்....ட....ம் தாங்க முடியலியே அண்ணாச்சி!

ஆடுமாடு said...

இலவசம் வணக்கம்.

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, இன்னும் ஆட்டம் இருக்குலா...